பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 1

நேரிசையாசிரியப்பா

 
   
5
  அமுதமுந் யூஸவூம் பணிவரப் படைத்த
உடலக் கண்ண ணுலகுவர்ந் துண்ட
களவுடை நெடுஞ்சூர்க் கிளைகளம் விட்டொளித்த
அருணிறைந் தமைந்த கல்விய ருளமெனத்
தேக்கிய தேனுட னிறான்மதி கிடக்கும்
10
  எழுமலை பொடித்த கதிரிலை நெடுவேல்
வள்ளிதுணைக் கேள்வன் புள்ளுடன் மகிழ்ந்த
கறங்குலா லருவிப் பரங்குன் றுடுத்த
பொன்னகர்க் கூடற் சென்னியம் பிறையோன்
பொதியப் பொருப்பன் மதியக் கருத்தினைக்
15
  கொங்குதேர் வாழ்க்கைச் செந்தமிழ்க் கூறிப்
பொற்குவை தருமிக் கற்புட னுதவி
எண்ணுளங் குடிகொண் டிரும்பய னளிக்கும்
கள்ளவிழ் குழல்சேர் கருணையெம் பெருமான்
மலர்ப்பத நீங்கா வுளப்பெருஞ் சிலம்ப
20
  கல்லாக் கயவர்க் கருநூற் கிளைமறை
சொல்லினர் தோமெனத் துணைமுலை பெருத்தன
பலவுடம் பழிக்கும் பழியி னுணவினர்
தவமெனத் தேய்ந்தது துடியெனு நுசுப்பே
கடவுட் கூறா ருளமெனக் குழலும்
25
  கொன்றைபுற வகற்றி நின்றவிருள் காட்டின
கரும்புபடிந் துண்ணுங் கழுநீர் போலக்
கறுத்துச் செவந்தன கண்ணிணை மலரே
ஈங்கிவை நிற்க சீறூர் பெருந்தமர்
இல்லிற் செறிக்குஞ் சொல்லுனுட் சின்மொழி
30
  விள்ளுந் தமியி கூறினர்
உள்ளங் கறுத்துக் கண்செவந் துருத்தே.        ( 1 )

(உரை)

கைகோள், களவு, தோழிகூற்று

துறை: தமர் நினைவுரைத்து வரைவு கடாதல்.

(இலக்கணம்) இதற்கு, “களனும்............வரைதல் வேண்டினும்”
(தொல். கள. 23) என்னும் விதிகொள்க,

1 - 3: அமுதம்........................ஒளித்த

     (இ-ள்) அமுதமும் தருவும்-அமிழ்தும் கற்பகத்தருவும்; படைத்த உடலக் கண்ணன்-சிறப்பாகப் பெற்றுள்ள இந்திரன்; பணிவர-தன் ஏவலின்கண் நின்றொழுகாநிற்ப; உலகுகவர்ந்து உண்ட-அவனுடைய வானுலகத்தின் வளங்களை யெல்லாம் தன் ஆற்றலால் கவர்ந்து நுகர்ந்த; களவு உடை நெடுஞ்சுவர் கிளை-வஞ்சகமுடைய நெடிய சூரனுடைய தம்பி; களம்விட்டு ஒளித்த-போர்க்களத்தினை விட்டு ஓடி ஒளிந்துகொண்ட என்க.

     (வி-ம்.) இந்திரனுடைய செல்வங்களுள் வைத்துத் தலைசிறந்தனவாகலின் அவற்றையே விதந்தோதினார். உடலைக்கண்ணன்-உடலெங்கும் கண்களை யுடையோன் என்றது, தேவேந்திரனை. அவன் அகலிகை காரணமாகக் கௌதம முனிவன் சாபத்திற்கு ஆளாய் உடல் முழுவதும் கண்களை யுடையன் ஆயினன் என்பர். இதனை “தூயவன் அவனை...................ஆயிர மாதர்க்குள்ள அறிகுறி உனக்குண்டா கென்று, ஏயினன், அவை யெல்லாம் வந்து இயைந்தன.....................அந்த இந்திரனைக் கண்ட அமரர்கள் பிரமன் முன்னா, வந்து கோதமனை வேண்ட மற்றவை தவிர்த்து மாறாச் சிந்தையின் முனிவு தீர்ந்து சிறந்த ஆயிரங் கண்ணாக்க” எனவரும் இராமாவதாரத்தானும் (அகலி. 78 . 81) உணர்க. உலகு: ஆகுபெயர் உண்ணல்-ஈண்டு நுகர்தல் என்னும் பொருள் குறித்து நின்றது. களவு-வஞ்சம். கிளை-தம்பி. அவன் தாரகாசுரன் என்க. ஒளித்தமலை என மேலே சென்று இயையும்.

4 - 6: அருள்................................வேல்

     (இ-ள்) அருள் நிறைந்து அமைந்த கல்வியர் உளம் என-அருளால் நிரம்பப் பெற்று அமைதியுற்ற மெய்க்கல்வியினையுடைய சான்றோருடைய உள்ளம் போல; தேக்கிய தேனுடன் இறால் மதிகிடக்கும்-நிரம்பப் பெற்ற தேனோடு கூடிய இறால் திங்கள் போன்று யாண்டும் கிடைத்தற்குக் காரணமான; எழுமலை பொடித்த கதிர்இலை நெடுவேல்-எழுச்சியையுடைய மலையை நீறுசெய்த ஒளிமிக இலையினையுடைய நெடிய வேற்படையினை ஏந்திய என்க.

     (வி-ம்.) அருள் தேனுக்கும் அது நிரம்பிய சான்றோர்கள் தேனிறாலுக்கும் உவமைகள். மதி கிடக்கும்-மதிபோலக் கிடக்கும் உவம உருபு வருவித்தோதுக. இனி இறாலும் மதியும் கிடக்குமாம் எனினுமாம். அமைந்த கல்வி-அமைதற்குக் காரணமான கல்வி. அமைதல்-புலன்களிற் செல்லாது அடங்குதல். எழுமலை: தொகை. சூரனுடைய தம்பி ஒளித்த மலையைப் பொடித்த வேல்கள் இயைபு காண்க.

7 - 9: வள்ளி.........................பிறையோன்

     (இ-ள்) வள்ளிதுணைக் கேள்வன் வள்ளிநாய்ச்சியாருக்கு ஒப்பாகிய கணவனாகிய முருகவேள்; புள்ளுடன் மகிழ்ந்த-தன்னுடைய ஊர்தியாகிய மயிலோடும் கொடியாகிய சேவலோடும் மகிழ்ந்து வீற்றிருத்தற்கிடமான; கரங்கு கால் அருவி பரங்குன்று உடுத்த-ஒலிக்கின்ற கால்களையுடைய அருவிகளையுடைய திருப்பரங்குன்றத்தை ஒருபால் அணிந்துள்ள; பொன்நகர்கூடல்-பொன்னாலியன்ற மாடங்கலையுடைய நான்மாடக்கூடலாகிய மதுரையின்கண் எழுந்தருளிய; சென்னி அம்பிறையோன்-திருமுடியின்கண் அழகிய பிறையுடையோனும் என்க.

     (வி-ம்.) துணை-ஒப்பு.

“பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு
உருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே”
 (தொல். மெய்ப்பா - 25)

என்பன. இவை பத்தும் வள்ளிக்கும் முருகவேளுக்கு ஒப்பாதல் கூர்ந்துணர்க. புள்-மயிலும் கோழிச்சேவலும். கறங்கு-முழங்குகின்ற. கால்-நீர்க்கால். இனி காலருவி வினைத்தொகையுமாம். நீர்காலும் அருவி என்க. உடுத்த-ஈண்டு அணிந்த என்பதுபட நின்றது. திருப்பரங்குன்றம் மதுரையோடு ஒட்டி அதற்கு அணிசெய்து நிற்றலின் பரங்குன்றுடுத்த கூடல் என்றார்.

10 - 14: பொதியப்..............................பெருமான்

     (இ-ள்) பொதியப் பொருப்பன்-பொதியமலையினை யுடைய பாண்டிய மன்னன்; மதி அக்கருத்தினை-தன் உள்ளத்தே கருதுகின்ற அந்தக் கருத்தினைத் தெரிவிக்கும் பொருட்டு; ‘கொங்குதேர் வாழ்க்கை’ எனத் தொடங்கும். செந்தமிழ் கூறி-செவ்விய தமிழ்ப்பாவினை இயற்றிக் கொடுத்து, பொற்குவை அப்பாட்டிற்குப் பரிசிலாகிய பொற்குவியலை, தருமிக்கு-தருமி என்னும் அன்பனுக்கு அற்புடன் உதவி-அன்போடு வழங்கு வித்து; என்உளம் குடிகொண்டு-எளியோனுடைய நெஞ்சிலே எழுந்த்ருளி இருந்து; இரும்பயன் அளிக்கும்-பெரிய பயன்களை வழங்காநின்ற; கள்அவிழ் குழல்சேர் கருணை எம்பெருமான்-தேன் ஒழுகுகின்ற மலர்மாலையணிந்த உமையம்மையாரைத் தன்னொரு கூற்றிலே சேர்த்த திருவருட் பிழம்பாகிய எம்பெருமானும் ஆகிய இறைவனுடைய என்க.

     (வி-ம்.) பொதியப் பொருப்பன்-பொதிய மலையையுடைய பாண்டியன், மதியக் கருத்தினை என்பதற்கு மதியம் எனக் கண்ணழித்து அம் சாரியை எனலுமாம். மதி-உள்ளம் என்க. கொங்குதேர் வாழ்க்கை என்னும் தொடக்கத்தையுடைய செந்தமிழ்ப் பாடல் என்க. அப்பாடல் வருமாறு:

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே”
(குறுந். 2)

என்பதாம். பாண்டியன் மனக்கருத்தாவது-மகளிர் கூந்தலுக்குச் செயற்கையானன்றி இயற்கையின் மணம் உளதோ இலதோ என்னும் ஐயம். இவ்வாறு ஐயுற்ற பாண்டியன் தன் உள்ளக் கருத்தினை அறிந்து செய்யுள் செய்யும் புலவர்க்கு ஆயிரம் செம்பொன் வழங்குவேன் என்று அறிவித்து ஆயிரம்பொன் பொதிந்த பொதியினைப் புலவர் முன்னே தூக்கினான். சங்கப் புலவர்கள் பெரிதும் ஆராய்ந்தும் அவன் கருத்துணர்ந்து செய்யு செய்யும் மதுகை இலராயினர். அப்பொழுது ஆலவாய் எம்பெருமான் தருமி என்னும் ஓர் அன்பன் வேண்டுகோட் கிணங்கிக் கொங்குதேர் வாழ்க்கை என்னும் இச் செய்யுளைப் பாடி அத்தருமியின்பாற் கொடுத்து அப்பொற்கிழியைப் பெற்றுக்கொள்ளும்படி திருவருள் புரிந்தார் என்பது வரலாறு. இவ் வரலாற்றினைத் திருவிளையாடற் புராணத்தில் 52. தருமிக்குப் பொற்கிழியளித்த படலத்தில் விரிவாக உணரலாம். என் உள்ளம் என்பது எளியோனாகிய என் உள்ளம் என்பதுபடநின்றது. இரும்பயன்-பெரும்பயன். கள்ளவிழ் குழல்: பன்மொழித்தொகை. உமையம்மையார் என்க.

15: மலர்ப்...............................சிலம்ப

     (இ-ள்) மலர்ப்பதம் நீங்கா-செந்தாமரைமலர் போலும் திருவடிகளை நீங்காத; உளம் பெருஞ்சிலம்ப-நெஞ்சினையுடைய பெரிய மலைநாட்டுத் தலைவனே என்க.

     (வி-ம்.) பிறையோனும் எம்பெருமானும் ஆகிய இறைவனுடைய பதம் நீங்காத உளத்தையுமடைய சிலம்பனே என இயைத்துக்கொள்க. மலர். ஈண்டு சிறப்பால் தாமரை மலரைக்குறித்து நின்றது. சிலம்பன்-குறிஞ்சித்திணைத்தலைவங் எனவே இச்செய்யுட்குத் திணை குறிஞ்சி என்க.

16 - 17: கல்லா................................பெருத்தன

     (இ-ள்) துணைமுலை-எம்பெருமாட்டியினுடைய கொங்கைகளிரண்டும்; கல்லாக் கயவர்க்கு-கற்றிலாத கீழ்மக்களுக்கு; அருநூல் கிளைமறை சொல்லினர் தோம் எனப் பெருத்தன-உணர்தற்கரிய நூலாகிய கிளைகளையுடைய மறைகளின் பொருளை அறிவுறுத்திய ஆசிரியர்பால் குற்றம் பெருத்தாற்போல பெருத்தன என்க.

     (வி-ம்.) இஃதென் சொல்லியவாறோ வெனின் கயவர்களுக்கு மெய்ந்நூல் உணர்த்துதல் பெருங்குற்றமாம் என்பது பற்றித் தலைவியின் கொங்கையின் பெருமையை உணர்த்துதற்குக் கயவருக்கு மறைப்பொருளை உணர்த்திய ஆசிரியன்பால் குற்றம் பெருகினாற் போலே என உவமையாக்கி உரைத்தபடியாம். இனி இங்ஙனமே,

உசாவி னன்ன நுண்ணிடை யுசாவினைப்
பேதைக் குரைப்போன் பிழைப்பிற் றாகிய
பொற்பமை கணங்கிற் பொம்மல் வெம்முலைப்
பட்டத் தேவியை” (பெருங். 5. 6. 5-8)

எனவும்,

அவாப்போ லகன்றத னல்குற்றமேற் சான்றோர்
உசாப்போல வுண்டே மருங்குல்-உசாவினைப்
பேதைக் குறைப்பான் பிழைப்பிற் பெருகினவே
கோதைக்கொம் பன்னாள் குயம்” (யா-கா. ஒழிபு. 8)

எனவும் பிற சான்றோரும் உவமை கூறுதல் உணர்க. அருநூல்-உணர்தற்கரிய நூல் என்க. கிளை-நூலின் உட்பகுதிகள்.

18-19: பலவுடம்பு............................துசுப்பே

     (இ-ள்) துடிஎனும் நுசுப்பு-பண்டு உடுக்கை என்று உவமிக்கப்படும் அவளது சிற்றிடை; பல உடம்பு அழிக்கும் பழி ஊன் உணவினர்-பலவாகிய உயிரினங்களின் உடல்களை அழிக்கின்ற சான்றோராற் பழிக்கப்பட்ட ஊன் உணவினையுடைய கீழ் மக்கள் மேற்கொண்ட; தவம் எனத் தோய்ந்தது-தவம் அறத் தோய்ந்தாற்போலத் தேய்ந்தது என்க.

     (வி-ம்.) ஊன் உணவினருடைய தவம் தேய்ந்தாற்போல இடைதேய்ந்தது என்றவாறு. பலவுடம்பு-மாவும் புள்ளும் ஆகிய பலவேறு உயிரினங்களின் உடம்புகள் என்க. ஊன் உண்பாரிடத்து அருள் இல்லை யாகவே தவமு இலதாயிற்று. இதனை,

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பா
னெங்ஙன மாளு மருள்”                (திருக். 251)

எனவும்,

 
பொருளாட்சி போற்றாதார்க் கில்லை யருளாட்சி
யாங்கில்லை யூன்றின் பவர்க்கு”         (திருக். 252)

எனவும் வரும் திருக்குறள்களானும் உணர்க. சான்றோராற் பழிக்கப்படுதலின் பழிஊன் உணவு என்றார்.

 
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின்”             (திருக். 258)

என ஊனுணவு பழிக்கப்படுதல் உணர்க.

20 - 21: கடவுள்...........................காட்டின

     (இ-ள்) குழலும் கொன்றை புறவு அகற்றி-அவள் கூந்தலும் தானும் நிறத்தால் தோற்கும்படி செய்து கொன்றைப் பழங்களை முல்லை நிலத்தினின்றும் அகற்றி; கடவுள் கூறார் உளம் என-இறைவனை நினைந்து வாழ்த்தாத மடவோருடைய நெஞ்சத்தின்கண் நிலபெற்ற அறியாமை இருளை ஒத்த; நின்ற இருள் காட்டின-நிலபெற்ற இருளைத் தம்பாற் காட்டின என்க.

     (வி-ம்.) பண்டு நிறத்தால் கொன்றைப் பழத்தை வென்ற கூந்தல் இப்பொழுது மடவோருடைய நெஞ்சம்போல இருண்டு தோன்றிற்று என்பது கருத்து. எனவே தலைவியின் கூந்தல் பருவ முதிர்ச்சியால் மிகவும் கருமையுடைத்தாயிற்று என்றவாறு. அறியாமை இருள் எனப்படுதலின் அதனையே ஈண்டு உவமையாக்கினார். இது பன்புவமை; “புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியா ருடைத்து” என்புழிப்போல, கொன்றை புறவகற்றி என்றது தற்குறிப்பேற்றம். கூந்தலை ஐம்பால் என்பது பற்றி இருள் காட்டின எனப் பன்மையாற் கூறினர். புறவிருள் கதிரவனுக்கு அழிதல்போல இக்கூந்தல் இருள் அழியாது நிலை நிற்றலின் நின்ற இருள் என்றார்.

22-23: சுரும்பு............................மலரே

     (இ-ள்) கண் இணை மலர்-பெருமானே கண்களாகிய இரண்டு மலர்களும்; சுரும்பு படிந்து உண்ணும் கழுநீர்போல-வண்டுகள் மொய்த்துத் தேன் பருகுவதற்கு இடமான ஆம்பல் மலர் போன்று; கறுத்துச் செவந்தன-கறுத்துச் சிவப்பெய்தின என்க.

     (வி-ம்.) இயற்கையிலேயே கறுப்பும் சிவப்புமுடைய கஃண்கள் இப்பொழுது மிகவு கறுத்து மிகவும் சிவந்தன என்றவாறு. சுரும்பு-வண்டுகள். தலைவியின் கண்கள் பண்டுபோல் வெள்ளை நோக்கு உடைய ஆகாமல் காமக்குறிப்புடையன ஆயின என்பாள், வாளா கழுநீர் என்னாது சுரும்பு படிந்துண்ணும் கழுநீர் என்று உவமைக்கு அடை புணர்ந்தாள்: என்னை? இப்பொழுது காதலன் கண்கள் அவள் கண்ணின்கட் காமக்குறிப்பினை நுகர்தல் உண்மையின் என்க. கறுத்துச் செவந்தன என்புழிச் செய்யுளின்பமுணர்க.

24-7: சங்கு.............................உருத்தே

     (இ-ள்) சங்கு இவைநிற்க பெருமானே! எம்பெருமாட்டியின் இம்மாறுபாடுகள் ஒருபுறமிருக்க; பெருந்தமர்-இவளை ஈன்ற தாயும் தந்தையுமாகிய இருமுதுகுரவர்களும் இம்மாறுபாட்டினைக் கண்டு ஐயுற்று; தமியில்-தமியராயிருந்து; உள்ளம் கறுத்து கண் செவந்து உருத்து-நெஞ்சம் கொதித்துக் கண்கள் சிவந்து வெகுண்டு; இல்லில் செறிக்குஞ் சொல்லுடன் கூறினர்-எம்பெருமாட்டியை இற்செறித்தற்குக் காரணமான மொழிகளோடே பிறவும் பேசலாயினர்; சீறூர் சில்மொழி விள்ளும்-அதுவேயுமன்றி இச்சீறூரில் வாழும் ஏதிலாரும் அவள் திறத்தே சில சொற்களை வெளிப்படுப்பர் என்க.

     (வி-ம்.) துணைமுலை பெருத்தன: நுசுப்புத் தேய்ந்தது; கூந்தல் இருண்டது; கண்கள் கறுத்துச் சிவந்தன என்பன தலைவியின் மெய் வேறு பட்டமைகூறி வரைவு கடாவியபடியாம். தமர் இல்லிற் செறிக்கும் சொல்லுடன் கூறினர் என்றது, தமர் நினைவுரைத்து வரைவு கடாவியபடியாம். சீறூர் சின்மொழி விள்ளும் என்றது. பிறர் வரைவுகூறி வரைவு கடாவியபடியாம். மேலும் அதுவே அலரறிவுறுத்து வரைவு கடாவியதூஉம் ஆதல் உணர்க.

     இனி இதனைச் சிலம்ப! பெருத்தன; தேய்ந்தது; காட்டின; செவந்தன; இவைநிற்க; தமர் இல்லிற் செறிக்குஞ் சொல்லுடன் பேசிக்கொண்டனராதலால்; இனி இற்செறிப்பார்; அதுவேயுமன்றிச் சீறூர் சின்மொழி விள்ளும் என வினைமுடிவு செய்க.

     மெய்ப்பாடும் பயனும் அவை.