பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 14

நேரிசையாசிரியப்பா

 
   
5
  சலியாப் பராரைத் தமனியப் பொருப்பெணு
மொருகால் சுமந்த விண்படர் பந்தரின்
மூடிய நாற்றிசை முகிற்றுகில் விரித்துப்
பொற்சிலை வளைத்து வாயில் போக்கிச்
கருப்பணி நிரைத்த கடுக்கையம் பொலந்தார்
10
  நிரைநிரை நாற்றி நெடுங்காய் மயிரமைத்
தூதையி லலகிட் டுறைப்புய றெளித்துப்
போற்றுறு திருவ நாற்றிசை பொலிய
மரகதத் தண்டிற் றோன்விளக் கெடுப்பக்
குடத்திய ரிழுக்கிய வளைசித றியபோற்
15
  கிடந்தன வாம்பி பரந்தன மறைப்பப்
பிடவலர் பரப்பிப் பூவைப் பூவிட்
டுறவிணை நட்புக் கிளைவியப் பெய்த
முகின்முழ வதிர வேழிசை முகக்கு
முல்லை யாழொடு சுருதிவண் டலம்பக்
20
  களவலர் சுடிப் புறவுபாட் டெடுப்பப்
பசுந்தழை பரப்பிக் கணமயி லால
முல்லையந் திருமகள் கோபவாய் மலர்ந்து
நன்மண மெடுத்து நாளமைத் தழைக்க
வரிவலை முன்கை வரவர விறப்பப்
25
  போனநந் தனிநமர் புள்ளியன் மான்றேர்
கடுவிசை துரந்த கான்யாற் றெயிலி
னெள்ளின ருட்க வள்ளின மடக்கிமுன்
றோன்றின ராகலி னீயே மடமகண்
முன்னொரு காலத் தடுகொலைக் கணைந்த
  முகிலுருப் பெறுமோர் கொடுமரக் கிராத
னருமறைத் தாபத் னமைத்திடு செம்மலர்
செருப்புடைத் தாளால் விருப்புடன் றள்ளி
வாயெனுங் குடத்தில் வரம்பற வெடுத்த
30
  அமுதங் கடத்தள்ளு மணிநீ ராட்டிப்
பின்னல்விட் டமைத்த தன்றலை மலரிணைஇத்
தருமலர் விண்புக மணிமுடி நிறைத்து
வெள்வாய் குதட்டிய விழுதுடைக் கருந்தடி
வைத்தமை யாமுன் மகிழ்ந்துண வுண்டவன்
35
  மிச்சிலுக் கின்னு மிச்சைசெய் பெருமான்
கூடனின் றேத்தினர் குலக்கிளை போலத்
துணர்பெறு கோதையு மாரமும் புனைக
புதையிரு டுரக்கும் வெயின்மணித் திருவுந்
தண்ணம் பிறையுந் தலைபெற நிறுத்துக
40
  விறையிருந் துதவா நிரைவளைக் குலனும்
பெருஞ்சூ டகமு மொருங்குபெற் றணிக
நட்டுட் பகையின் ருட்குடி போல
வுறவுசெய் தொன்றானகைதரு முளத்தையுங்
கொலையினர் நெஞ்சங் கூண்டவல் லிருளென
45
  மைம்பாற் குழலையு மணிநிலை கூட்டுக
விருந்துகொண் டுண்ணும் பெருந்தவர் போல
நீங்காத் திருவுடை நலனும்
பாங்கிற் கூட்டுக வின்பத்திற் பொலிந்தே.

(உரை)
கைகோள்: கற்பு. தோழிக்கூற்று

துறை: வரவெடுத்துரைத்தல்.

     (இ-ம்) இதனை, ‘பெறற்கரும் பெரும்பொருள்’ (தொல். கற்பி. 9) எனவரும் நூற்பாவின்கண் ‘வகைபட வந்தகிளவி’ என்பதன்கண் அமைத்துக் கொள்க.

1-4: சலியா....................................போக்கி

     (இ-ள்) சலியாப் பாரரைத் தமனியப் பொருப்பு எனும்-அசையாத பரிய அடிப்பகுதியையுடைய பொன்மலை என்று கூறப்படும் மேருவாகிய; ஒருகால் சுமந்த படர்விண் பந்தரின்- ஒற்றைக் காலாலே தாங்கப்பட்ட பரந்த வானமாகிய பந்தரின்கண்; நால்திசை மூடிய-நான்கு திக்குகளையும் மூடும்படி; முகில் துகில் விரித்து-முகிலாகிய சீலையை விரித்து; பொன்சிலை வளைத்து வாயில் போக்கிய-அழகிய இந்திரவில்லை வளைத்து வாயில் செய்து என்க.

     (வி-ம்.) பராரை-பருத்த அடி. தமனியப் பொருப்பு-பொன் மலை. அஃதாவது மேரு. பந்தர் என்பதற்கேற்பக் கால் என்றார். மூடிய: செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். முகிலாகிய துகில் என்க. பொன்-அழகு. சிலை-வில், ஈண்டு இந்திரவில் என்க.

5-9: சுருப்பணி........................................எடுப்ப

     (இ-ள்) சுருப்பு அணி நிரைத்த கடுக்கைஅம் பொலம்தார்-வண்டாகிய நீலமணியை நிரலாகக் கத்க்கப்பட்ட கொனை மலராகிய அழகிய பொன்மலைகளை; நிரைநிரை நாற்றி-அணிஅணியாகத் தூங்கவிட்டு; நெடுங்காய் மயிர் அமைத்து-அக்கொன்றையின் நெடிய காய்களாகிய கவரிகளை யாண்டுந் தூக்கி; ஊதையில் அலகு இட்டு-காற்றாகிய சிலதியாலே அலகிட்டு விளக்கி; புயல் உறை தெளித்து-முகிலாகிய சிலதியால் நீர்தெளித்து; நாற்றிசை போற்றுறு திருவம் பொலிய-நான்கு திக்குகளினும் பேணுதலுற்ற பல்வேறு வகைச் செல்வங்களும் பொலிவுற்றுக் கிடப்ப; தோன்றி மரகதத் தண்டில் விளக்கு எடுப்ப-காந்தளாகிய பெண் தன் மரகதமணித் தண்டின்கண் யாண்டும் மலராகிய விளக்குகளை ஏந்தா நிற்ப என்க.

     (வி-ம்.) சுருப்பணி-சுரும்பு அணி. கடுக்கை-கொன்றை. பொலம்-பொன். நாற்றி-தூங்கவிட்டு. மயிர்-கவரிமயிர். எனவே சாமரை ஆயிற்று. ஊதை-காற்று. புயல்-முகில். இவற்றை அலகிட்டுத் தெளித்து என்னுந் தொழிகளுக் கேற்பச் சிலதி என்க. சிலதி-குற்றேவன் மகள். திருவம்-செல்வம். அம்: சாரியை. தோன்றி-காந்தள். தோன்றியாகிய பெண் விளக்கெடுப்ப என்க.

10-14: குடத்திய............................எடுப்ப

     (இ-ள்) இழுக்கிய குடத்தியர் சிதறிய அளைபோல்-வழுக்கி வீழ்ந்த இடைக்குல மகளிர் சிதறிய தயிர்போல; பரந்தன கிடந்தன ஆம்பி-யாண்டும் பரவிக்கிடந்த காளான்கள்; மறைப்ப-தன்னை மறைப்பவும்; பிடவு அலர் பரப்பிப் பூவைப் பூவிட்டு-பிடவமலரைப் பரப்பியும காயாம்பூவைச் சிதறியும்; உறவு இணை நட்பு கிளை வியப்பு எய்த ஏழு இசைமுகக்கும்-பகை நரம்பின்றி உறவாம் நரம்பும், இணையாம் நரம்பும், ந்ட்பாம் நரம்பும், கிளையாம் நரம்பும் கேட்டோர் வியக்கும்படி ஏழிசைகளையு பொருந்தும்; முல்லையாழொடு- முல்லை யாழிசைக்கு வண்டு சுருதி அலம்ப- வண்டுகள் சுருதியாக முரலா நிற்ப; புறவு பாட்டு எடுப்ப-முல்லைப் பாட்டைப் பாடாநிற்பவும்; முகில் முழவு அதிர-மேகங்களாகிய முழவங்கள் முழங்காநிற்பவும் என்க.

     (வி-ம்.) குடத்தியர்-முல்லைநில மகளிர். அளை-தயிர். கிடந்தன, பரந்தன: முற்றெச்சங்கள். ஆம்பி-காளான். காலானுக்குச் சிதறிக் கிடக்கும் தயிருக்கு உவமை. பூவை-காயா. உறவு நரம்பு, நட்பு நரம்பு, இணை நரம்பு, கிளை நரம்பு என்க. கேட்போர் வியப்பெய்த என்க. முல்லையாழ்ப்பன் என்க. வண்டு சுருதி அலம்ப என்க. முகிலாகிய முழவு என்க.

14-19; களவு...............................அழைக்க

     (இ-ள்) களவு அலர்சூடி-தான் களாமலரைச் சூடிக்கொண்டு; மயில்கணம் பசுந்தழை பரப்பி ஆல-மயிற்கூட்டங்களாகிய கணிகையர் பசிய தொகையை விரித்துக் கூத்தாடா நிற்பவும்; முல்லை அம் திருமகள்-முல்லைத்திணை என்னும் அழகிய செல்வமகள்; கோபவாய் மலர்ந்து-இந்திரகோபமாகிய தன்னுடைய வாயைத் திறந்து; நல்மணம் எடுத்து நாள் அமைத்து அழைக்க-நல்ல திருமணச் சடங்கினை மேற்கொண்டு நல்லநாள் குறித்து விரும்பி அழைத்தலாலே என்க.

     (வி-ம்.) களவு-களா. பசுந்தழை-பசிய தோகை. மயிலாகிய கணிகையர் என்க. முல்லைத் திணையாகிய அழகிய செல்வமகள் என்க. கோபம்-இந்திரகோபம். நாள்-நல்லநாள். அழைக்க என்றது விரும்பியழைக்க என்பதுபட நின்றது.

20-21: வரிவளை....................................மடமகள்

     (இ-ள்) முன்கை வரிவளை வரவர இறப்ப-உன்னுடைய முன்கையில் வரியினையுடைய வளையலை இடுந்தொறும் இடுந்தொறும் அவை கழலும்படி; போன நம் தனிநமர்-உன்னைப் பிரிந்துபோன நம்முடைய ஒப்பற்ற கேள்வர்; ஒலியின் கான்யாற்று கடுவிசை துறந்த-முழக்கத்தையுடைய காட்டியாற்றின் கடிய வேகத்தையும் தொலைத்த வேகமுடைய; புள்ளியல் மான் தேர்-பறவை போன்று நிலந்தீண்டாது செல்லும் குதிரைகள் பூட்டிய தமது தேரின்கண்; எள்ளினர் உட்க-தம் பகைவர் அஞ்சும்படி; வள்ளினம் முன்மடக்கி-தம்மைப் பணியு மன்னர் அளந்த வலவிய திறைப்பொருளினத்தைத் தன்தேர் முன்னாகக் கொண்டு; தோன்றினர்-உதோவந்து தோன்றினர்; ஆகலின் ஆதலாலே; மடமகள் நீ-மடப்பமுடையோய்! இனி நீதானும் என்க.

     (வி-ம்.) வரவர-இடுந்தொறும் இடுந்தொறும். கணவனில் சிறந்த கேளிர் இல்லையாகலின் நந்தனிநமர் என்றாள். ஒலியின் கான் யாற்றுக் கடுவிசை துறந்த தேர் என மாறுக, தேரின் விரைவுக்குக் கான்யாற்றின் விரைவு உவமை. “கடுவரை நீரில் கடுத்து வரக்கண்டும்” என்றார் வெண்பா மாலையினும். புள்ளியல் கலிமா என்றார் தொல்காப்பியனாரும். எள்ளினர்-பகைவர். உட்க-அஞ்சு. வள்ளினம்-வளவிய பொருளினம். வள்ளினம் மான்றொர் முன்மடக்கித் தோன்றினர் என மாறுக.

25-30: முன்னொரு.....................................ஆட்டி

     (இ-ள்) முன் ஒரு காலத்து அடுகொலைக்கு அணைந்த-பண்டொரு காலத்திலே அடாநின்ற கொலைத் தொழிலுக்குப் பொருந்திய; முகில் உருப்பெறும் ஓர் கொடுமரக் கிராதன்-கரிய முகில்போன்ற நிறமுடைய ஒப்பற்ற வில்லினையுடைய திண்ணன் என்னும் வேடன்; அருமறை தாபதன் அமைத்திடு செம்மலர் தன்முடிமேல்-உணர்தற்கரிய வேதங்களையுடைய அந்தணராகிய சிவகோசரியார் தன் முடிமேல் சாத்திய சிவந்த மலர்களை; செருப்புடைத் தாளால் தள்ளி-செருப்பணிந்த தன்னுடைய காலால் தள்ளிவிட்டு; விருப்புடன் வாயெனுங்குடத்தில் வரம்புஅற எடுத்த-விருப்பத்தோடு தன்னுடைய வாயாகிய குடத்திலே முறையின்றி எடுத்த; அமுதம்-நீரால்; கடத்து அள்ளும் மணிநீர் ஆட்டி-குடத்திலே முகர்ந்து கொணர்ந்த அழகிய நீரால் திருமுழுக் காட்டுதல் போலத்திருமுழுக்காட்டி என்க.

     (வி-ம்.) அடுகொலைக்கு அணைந்த-விலங்குகளைக் கொல்லும் கொலைத்தொழிலாகிய வேட்டைமேல் வந்த கிராதகன் என்க. கொடுமரம்-வில். கிராதகன்-வேடங் தாபதன்: சிவகோசரியார். வரம்பு-வரையறை, அஃதாவது இறைவனுக்கு ஆட்டும் நீர் எச்சினீராதல் கூடாது என்னும் வரையறை என்க. கடற்றள்ளும் என்றும் பாடம்.

31-35: பின்னல்................................பெருமான்

     (இ-ள்) பின்னல் விட்டு அமைத்த தன்தலை மலர்-கட்டின பின்னலை அவிழ்த்துத் தனது தலையினிடத்து அமைத்துக் கொணர்ந்த மலரினை; தருமலர் இணைஇ-கற்பகத்தருவின் மலரை ஒப்ப; விண்புக மண்முடி நிறைத்து-விண்ணிடத்துச் செல்லும்படி அழகிய தன் முடியிடத்தே சூட்டி; கொள்வாய் குதட்டிய விழுதுடைக் கருந்தடி-தன்னுடைய வெள்ளிய வாயில் இட்டுத் தின்று சுவைபார்த்த நிணமுடைய கரிய தசையை; வைத்து அமையாமுன் மகிழ்ந்து உணவு உண்டு-திருமுன்பு வைத்து வழிபடுதற்கு முன்னரே மகிழ்ந்து அத்தசையினை அமுது செய்தருளி; இன்னும் அவன் மிச்சிலுக்கு இச்சைசெய் பெருமான்-பின்னரும் அவ்வேடனுடைய எச்சிலை உண்பதற்கு விரும்பி இருக்கின்ற சிவபெருமானுடைய என்க.

     (வி-ம்.) மலர்கள் நிரம்பக் கொள்ளுதற்குப் பின்னலை அவிழ்த்துவிட்டு அமைத்த என்றவாறு. இனி தன் தலைமலரோடு செருகித் தந்த மலர்களை எனினுமாம். இணைஇ-ஒப்பக்கருதி. குதட்டுதல்-மென்று தின்னல், விழுது-நிணம். கருந்தடி-வலிய தசையுமாம். அவன்-அவ்வேடங் மிசில்-உண்டெஞ்சியது.

36: கூடல்..............................போல

     (இ-ள்) கூடல் நின்று ஏத்தினர்-மதுரைமாநகரத்தை நன்னெறியில் நின்று புகழ்ந்து வணங்கினவருடைய; குலக்கிளை போல-குலத்திலே கிளைத்த மாந்தர் போன்று என்க.

     (வி-ம்.) நின்று-நன்னெறியில் நின்று. குலக்கிளை-குலத்தில் கிளைத்த கிளை என்க.

37-41: துணர்.....................................அணிக

     (இ-ள்) துணர்பெறு கோதையும் ஆரமும் புனைக-பூங்கொத்தால் புனையப்பட்ட மாலையையும் முத்த மாலையையும் அணிந்து கொள்வாயாக; புதை இருள் துரக்கும் வெயில்மணி திருவும்-செறிந்த இருளையும் அகற்றுகின்ற ஒளியினையுடைய மணிகளிழைத்த சீதேவி என்னும் அணிகலனையும்; தண்ணம் பிறையும் தலைபெற நிறுத்துக-குளிர்ந்த பிறை என்னும் அணிகலனையும் நின் கூந்தலினிடத்து அணிந்து கொள்வாயாக; இறை இருந்து உதவா நிறைவளைக் குலனும் பெருஞ்சூடகமும் ஒருங்கு பெற்று அணிக-நம்பெருமான் பிரிந்துறைந்த காலமெல்லாம் நின்கையில் அணிய அணியச் சிறிது பொழுதேனும் இருந்து நமக்கு உதவிசெய்யாத நிரல்பட்ட அவ்வளையல் இனங்களையும் தோள் வளையல்களையும் ஒருங்கே பெற்று அணிந்து கொள்வாயாக என்க.

     (வி-ம்.) துணர்-கொத்து. கோதை-மலர்மாலை. ஆரம்-முத்துமாலை. புதை இருள்-செறிந்த இருள். வெயில்மணி- ஒளிமணி. திரு, பிறை என்பன தலையணிகலன்கள். அவற்றுள் திருவென்பது சீதேவி எனவும் படும். இதனைத் தெய்வவுத்தி என்றும் கூறுப. இதனைத் ‘தெய்வயுத்தியொடு’ (சிலப். 6-106) என்னுந் தொடருக்கு, ‘சீதேவியார் என்னும் பணி’ எனவரும் அடியார்க்கு நல்லார் உரையினும் காண்க. தண்ணம்பிறை என்றது முதலுக்கேற்ற அடையடுத்து நின்றது. தலை: கூந்தலுக்கு ஆகுபெயர். பிரிவாற்றாமையால் இதுகாறும் இடுந்தோறும் கழன்று வீழ்ந்த வலையற் கூட்டங்களையும் சூடகங்களையும் இனி அங்ஙனம் கழலாவாதலின் ஒருங்கே அணிந்துகொள்கேன்பாள் இறைஇருந்து உதவா நிறை வலைக்குலனும் சூடகமும் ஒருங்கு பெற்றணிக என்றாள். இறை-ச்றிது பொழுது. இனி முன்கை எனினுமாம்.

42-45: நட்டு..................................கூட்டுக

     (இ-ள்) நட்டு உள்பகையினர் உள்குடிபோல-நண்பு செய்து உட்பகையினர் ஊடாடுகின்ற குடும்பத்தினர்போல; உறவுசெய்து ஒன்றா நகைதரும் உளத்தையும்-பிறரோடு கேண்மை கொண்டு பொருந்தாத ஏதிலார்க்கு நகைப்பைத்தரும் நின் நெஞ்சத்தையும்; கொலையினர் நெஞ்சம் கூண்ட வல்லிருள் எனும் ஐம்பால் குழலையும்-கொலைத் தொழிலுடையோர் நெஞ்சத்தின் கண்செறிந்துள்ள அறியாமையாகிய இருளையொத்த நின்னுடைய ஐம்பாலாகிய கூந்தலையும்; அணிநிலை கூட்டுக-அழகிய நிலையில் சேர்த்துவைப்பாயாக என்க.

     (வி-ம்.) நண்புசெய்து உட்பகையுடையோர் ஊடாடும் குடும்பத்திலுள்ளோர் அவ்வுட்பகைவரால் கலகம் செய்யப்பட்டு ஒருவரோடொருவர் உறவு செய்து ஒன்றாதிருப்பது போல உன்னுடைய நெஞ்சமும் துன்பத்தாற் கலக்குண்டு மற்றவரோடு உறவு செய்தொன்றாதிருந்தது. இனி நம் பெருமான் வந்துவிட்டமையால் இந்நிலை தவிர்ந்து நின் நெஞ்சத்தை நன்னிலையில் சேர்ப்பாய் என்பாள் நட்டுட்பகையினர் உள்குடிபோல உறவு செய்தொன்றா நகைதரு முள்ளத்தையும் அணிநிலை கூட்டுக என்றாள். ஒன்றா உளம் நகைதரும் உளம் எனத் தனித்தனி கூட்டுக. நகைதருதலாவது ஏதிலார்க்கு நகை தோற்றுவித்தல். இனி, குழலுக்குக் கொலைமாக்கள் நெஞ்சத்துள்ள அறியாமையாகிய வல்லிருள் உவமை என்க. கூண்ட-கூடிய. ஐம்பாற்குழல்-ஐந்து பகுதியையுடைய கூந்தல். அவையாவன் முடியும், கொண்டையும், குழலும், பனிச்சையும், சுருளும் என்பன. குழலை அணிநிலை கூட்டுதலாவது கைசெய்து அணிகலனணிந்து ஒப்பனை செய்தல்.

46-48: விருந்து....................பொலிந்தே

     (இ-ள்) விருந்து கொண்டு உண்ணும் பெருந்தவர் போல-இருவகை விருந்தினரையும் தம்பக்கத்தே வைத்துக்கொண்டு உண்ணா நின்ற பெரிய நோன்பினையுடைய இல்லறத்தார் போன்று; நீங்காத் திருவுடை நலனும்-ஒருநாளும் நீங்காத செல்வத்தினையுடைய நலத்தையும்; இன்பத்திர் பொலிந்து- பேரின்ன்பத்தினாலே பொலிவுற்று; பாங்கிற் கூட்டுக-நின்னிடத்தே சேர்ப்பாயாக என்க.

     (வி-ம்.) விருந்தினரைத் தம்பக்கத்தே வைத்துக் கொண்டு உண்ணும் சான்றோர் என்றும் நீங்காத திருவுடை நலன் உடையார் ஆதல்போல நீயும் அத்திருவுடை நலத்தை நின்பக்கலிலே சேர்த்துவாயாக என்றவாறு. விருந்து கொண்டுண்ணும் பெருந்தவர் என்றது, இல்லறத்தே இருந்து வாழ்வாங்கு வாழும் சான்றோரை. “இயல்பினானில்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாந் தலை” (திருக். 47) என்பது பற்றி விருந்து கொண்டுண்போரைப் பெருந்தவர் என்றாள். “அகனமர்ந்து செய்யா ளுறையும் முகனமர்ந்து, நல்விருந்தோம்புவா னில்” (குறள். 84) என்பது பற்றியும், “வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை, பருவந்து பாழ்படுத லின்று” (குறள். 73) என்பது பற்றியும் விருந்தோடுண்ணும் சான்றோரை நீங்காத் திருவுடைமைக்கு உவமை எடுத்தாள்.

     இனி விண்ணாகிய பந்தரில்விரித்துப் போக்கி நாற்றி அமைத்து அலகிட்டுத் தெளித்து விளக்கெடுப்பப் பரப்பி விட்டுற வியப்பெய்தப் பாட்டெடுப்ப அதிர மயிலாடச் சூடிமறைப்பப் பரப்பிச் சிதறி முல்லைமகள் அழைக்கப் பிரிந்தவர் தேர்க்குமுன்னாக மருவாரஞ்சப் பணிவார் கொடுத்தவற்றைக் கொண்டு நம்மெதிர் தோன்றினர். ஆதலால் நமக்கொரு குறைஇல்லை. இனி நீ கூடல்நின்று ஏத்தினர் கிளைபோலப் புனைக நிறுத்துக, அணிகூட்டுக, பெருந்தவர் பொல இன்பத்திர் பொலிந்து நீனாத் திருவுடை நலனும் பாங்கிற் கூட்டுக என வினை முடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.