பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 15

நேரிசையாசிரியப்பா

 
   
5
  கல்லுயர் வரைதோட் செம்மனக் குரிசிலுங்
கல்லாத் தவறுளம் புல்லிய குழலு
மிம்மனை நிறைபுகுந் தெழின்மணம் புணரக்
கோளொடு குறித்து வரும்வழி கூறிய
மறைவாய்ப் பார்ப்பான் மகனும் பழுதிலன்
10
  சோதிடக் கலைமக டோற்றம் போலச்
சொரிவெள் ளலகரும் பழுதில் வாய்மைய
ருடறொடு குறியின் வரும்வழி குறித்த
மூதறி பெண்டிருந் தீதில ரென்ப
பெருந்திரட் கண்ணுட் பேச்சுநின் றோர்ந்து
15
  வாய்ச்சொற் கேட்டநன் மதியரும் பெரிய
ராய்மலர் தெரிந்திட்டு வான்பலி தூவித்
தெய்வம் பராய மெய்யருந் திருவினர்
கருங்கொடி யடம்புங் கண்டலுஞ் சூழ்ந்த
பனைக்குடிப் பரதவர் கலத்தொடு மறியச்
20
  சுரிமுகச் செவ்வாய்ச் சூல்வளை தெறிப்பக்
கழுக்கடை யன்ன கூர்வாய்ப் பெருங்கட்
பனைகிடந் தன்ன வுடன்முத றுணிய
வாருயிர் கவருங் காருடற் செங்கட்
கூற்றமுருத் தெழுந்த கொள்கை போல
  நெட்டுடற் பேழ்வாய்ப் பெருஞ்சுறவு தடியும்
வரைநிரை கிடந்த திரையுவர் புகுந்து
நெடுஞ்சடைக் கிஅந்த குறும்பிறைக் கொழ்ந்துங்
கருமுகில் வெளுத்த திருமிடற் றிருளு
25
  நுதன்மதி கிழித்த தழலவிர் நோக்கமு
மறைத்தொரு சிறுகுடிப் பரதவ னாகிப்
பொன்றலைப் புணர்வலை கொடுங்கர மாக்கி
நெடுங்கடல் கலக்கு மொருமீன் படுத்த
நிறையரு ணாயக னுறைதரு கூடல்
வணங்கா ரினமென மாழ்கிக்
குணங்குடி போய்வித் தாயுளந் தவறே.

(உரை)
கைகோள்: களவு. கண்டோர் கூற்று.

துறை: அழுங்குதாய்க் குரைத்தல்.

     (இ-ம்.) இதற்கு, ‘பொழுதும் ஆறும்..................கண்ட தென்ப’ (தொல். அகத். 40) எனவரும் நூற்பாவின்கண் ‘ஆங்கு அத்தாய்நிலை கண்டு தடுப்பினும்’ எனவரும் விதிகொள்க.

14-18: கருங்கொடி...........................துணிய

     (இ-ள்) கர்ங்கொடி அடம்பும் கண்டலும் சூழ்ந்த-கரிய கொடியினையுடைய அடம்பும் தாழையும் சூழ்ந்த; பனைகுடிப் பரதவர்-பனைகளின் சூழலிலே குடியிருக்கும் பரதவராகிய நெய்தனில மாக்கள்; கலத்தொடு மறிய-தம் மரக்கலத்தோடே இறந்து படவும்; சுரிமுகச் செவ்வாய் சூல்வளை தெறிப்ப- சுரிந்தமுகத்தினையும்சிவந்த வாயினையும் கருவினையுமுடைய சங்குகள் தெறித்து விழவும்; கழுக்கடை அன்னகூர் வாய் பெருங்கண் பனை கிடந்தன்ன உடல்முதல்- கழுமரத்தினது நுனியை ஒத்த கூரிய வாயினையும் பெரிய கண்ணினையும் பனை கிடந்தாற்போன்ற உடலையும் உடைய மீன் முதலான உயிரினங்கள்; துணிய-துணிபடும்படியும் என்க.

     (வி-ம்.) கண்டல்-தாழை. பனைக்குடி-பனையின்கீழ் வாழும் குடி. பரதவர்-நெய்தனில மாக்கள். கலம்-மரக்கலம். மறிய-இறப்ப. அஞ்சி மீளவும் எனினுமாம். சுரிமுகம்-முறுக்குடைய முகம். வளை-சங்கு. கழு-கழுமரம்; சூலமுமாம். பனை-மீன் முதலியவற்றின் உடலுக்குவமை. உடல்: ஆகுபெயர். கழுக்கடையன்ன குரவாய் என்றும் பாடம். இதனை, கழுக்கடை போன்ற குரம்பாளையிடத்தில் மிக்க கள்ளையுடைய பெரிய பானை எனப் பானைக்கு அடையாக்கிக் கூறுக. குரம்பாளையை விகார வகையால் குரம் என்றார் என்க. குரம்பாளை-பனை முதலியவற்றின் பாளை. இதனை இக்காலத்தார் கூராஞ்சி என்று வழங்குவர்.

19-21: ஆருயிர்........................தடியும்

     (இ-ள்) ஆர்உயிர் கவரும் கார் உடல் செங்கண் கூற்றம்- பெறுதற்கரிய உயிரைக் கவர்கின்ற கரிய உடலையும் சிவந்த கன்களையும் உடைய கூற்றுவன்; உருத்து எழுந்தகொள்கைபோல- சினந்து எழுந்த தன்மைபோல;னெடு உடல் பேழ்வாய் பெருஞ் சுறவு தடியும்-நீண்ட உடலையும் பெரிய வாயையுமுடைய பெரிய சுறாமீன் ஒன்று சினந்து கொல்லா நிற்றற் கிடனான, என்க.

     (வி-ம்.) ஒரு சுறா மீன் கூற்றம் சினந்து எழுந்தாற்போல எழுந்து பரதவர் மறியவும் வளை தெறிப்பவும் மீன் முதலிய துணியவும் கொல்கின்ற என் இயைத்துக் கொள்க. சுறாவிற்குக் கூற்றம் உவமை. காருடல் செங்கண் என்புழிச் செய்யுளின்பம் காண்க.

22-28: வரைநிரை..........................படுத்த

     (இ-ள்) வரைநிரை கிடந்த திரை உவர்புகுந்து-மலைகள் வரிசையாஅக் கிடந்தாற் போன்ற அலைகளையுடைய அக்கடலிடத்தே சென்று; நெடுசடைக் கிடந்த குறும்பிறைக் கொழுந்தும்- நீண்ட தன் சடையின் மேலிருந்த குறிய இளம்பிறையையும்; கருமுகில் வெளுத்த திருமிடற்று இருளும்-கரிய முகிலும் வெளுத்தற்குக் காரணமான அழகிய தன்னுடைய மிடற்றின் கண்ணதாய களங்கத்தையும்; மதிநுதல் கிழித்த தழல் அவிர் நிக்கமும்-திங்கள் போன்றதனது நெற்றியின்கண் கிழிபட்ட தீ விளங்கும் கண்ணையும்; மறைத்து-பிறர் காணாதபடி மறைத்தருளி; சிறுகுடி பரதவன் ஆகி-ஒரு சிறிய குடியின்கண் பிறந்த ஒரு வலைஞனாக உருவங்கொண்டு; பொந்தலை புணர்வலை கொடு கரம் ஆக்கி-இரும்பினைத் தலையிலே புணர்த்தப்பட்ட வலையினைத் தன் கொடுங்கையில் ஏந்தி வீசி; நெடுங்கடல் கலக்கும் ஒரு மீன் படுத்த-நெடிய கடலைக் கலக்குகின்ற ஒப்பற்ற அச்சுறா மீனை அகப்படுத்திய என்க.

     (வி-ம்.) இறைவனுடைய கட்டளைப்படி நந்திதேவர் சுறாமீனாய்க் கடலைக் கலக்கியதனையும், இறைவன் வலைஞனாய்ச் சென்று அச் சுறாமீனை வலைவீசிப் பிடித்தருளியதனையும் திருவிளையாடற்புராணத்தே (45)-வலைவீசின படலத்தின்கண் விளக்கமாகக் காண்க. வரைநிரை-அலை நிரைகளுக்குவமை. உவர்-கடல். பிறைக்கொழுந்து-இளம்பிறை. இறைவனுடைய மிடற்றின் நிறத்தை நோக்குழி முகிலின் நிறம் வெளிறு என்று சொல்லும்படி இருத்தலின் கருமுகில் வெளுத்த திருமிடற்று இருளும் என்றார். மிடற்றிருள்-மிடற்றின்கண் உள்ள இருள் போன்ற களங்கம். மதிநுதல் என மாறுக. தழலவிர் நோக்கம்-நெருப்புக்கண். பரதவன்-வலை அங் பொன்-இரும்பு. வலையினது விளிம்பின்கண் இரும்பால் வளையங்கள் செய்து அமைத்திருத்தல் இயல்பு. கொடுங்கரம்-வளைந்த கை: இதனை இக்காலத்தார் குடங்கை என்று வழங்குவர். கொடுங்கரம் ஆக்கி வீசி என ஒருசொல் வருவித்துக் கொள்க. நெட்டுடற் பேழ்வாய்ப் பெருஞ்சுறவு தடியும் உவர் புகுந்து பிறை முதலியவற்றை மறைத்து வலையைக் கரத்தில் ஆக்கிக் கடல் கலக்கும் அச்சுறாவாகிய ஒரு மீனைப் படுத்த என இயைத்துக் கொள.

29-31; நிறை...........................தவறே

     (இ-ள்) நிறை அருள் நாயகன் உறைதரு கூடல் நிறைந்த அருளையுடைய முதற்பெருங் கடவுளாகிய சிவபெருமான் எழுந்தருளி இருக்கின்ற மதுரை நகரத்தை; வணங்கார் இனம் என மாழ்கி-வணங்காத மடவோர் கூட்டம்போல் மயங்கி; குணம் கூடி போய்வித்து-குணக்குன்றாகிய தன்மகளைத் தன் குடியினின்றும் தலைவனோடு போகச் செய்தமையாலே; ஆய் உளந்தவாறு- இச்செவிலித் தாயினது நெஞ்சமும் பிழையுடையதாயிற்று என்க,

     (வி-ம்.) இது முன்னிலைப் பன்மொழி. செவிலி மகட்போக்கி மயங்கும் மயக்கத்திற்கு மதுரையை வணங்காதவர் மயக்கம் உவமை. குணம்: தலைவிக்குப் பண்பாகுபெயர். தலைவியினது களவொழுக்கத்தை குறிப்பாலுணர்ந்து அவள் காதலனை வரவேற்று வதுவை செய்வித்தல் இவள் கடமையாகவும் அது செய்யாது அவள் திறத்தே இற்செறித்தல் முதலிய கொடுமைகளைச் செய்து அவள் தலைவனுடன் போகும்படி செய்துவிட்டாள் என்று செவிலியை இடித்துரைப்பார் குணங்குடி போய்வித்து இவ் ஆய் உளம் தவறு என்றார். தலைவி தலைவனுடன் சென்றது தவறன்று. அறமே என்பார் அவளைக் குணம் என்று ஆகுபெயரால், கூறினர். ஆதலின் நீ அவலம் விடுக என்பது குறிப்பு. ஆய்-செவிலித் தாய்.

1-5: கல்லுயர்..................................பழுதிலன்

     (இ-ள்) உயர் வரை கல்தோள் செம்மெனக் குரிசிலும்-வளருகின்ற மூங்கிலையுடைய மலைபோன்ற தோளையும் செவ்விய மனத்தினையுமுடைய தலைவனும்; கல்லாத்தவறு உளம் புல்லிய குழலும்-கல்லாமையையுடைய குற்றமுடைய உள்ளத்தினைப் போன்று இருண்ட கூந்தலையுடைய அத்தலைவியும்; இம்மனை நிறைபுகுந்து-இவள் சொன்ன இல்லத்தின்கண் தோற்றப் பொலிவு நிறையப் புகுந்து; எழில்மணம் புணர வரும்வழி-அழகிய வதுவை விழாவயர்ந்து கூடுதற்குரிய நெறியினை; கோளோடு குறித்து கூறிய-வியாழனோக்கினையும் சரக்கோளினையும் கருதிச் சொன்ன; மறைவாய்ப் பார்ப்பான் மகனும்-வேதமோதிய வாயினையுடைய பார்ப்பன மகனும்; பழுதிலன்-குற்றமுடையன் அலன் என்க.

     (வி-ம்.) உயர்வரைக்கல் என மாறுக. வரை-மூங்கில். கல்-மலை. செம்மனம்-நடுவுநிலைமையுடைய மனம். கல்லாத் தவறுளம்-கல்ல மையையுடைய பிழைபட்ட நெஞ்சு. அஃதிருண்டிருத்தலின் கூந்தலுக்குவமை யாயிற்று. நிறைபுகுந்து- நிறையப் புகுந்து.

6-7: சோதிட.........................வாய்மையர்

     (இ-ள்) சொதிடக் கலைமகள் தோற்றம்போல-(மணம் புணரக் கோளைக் குறித்துவரும் வழிலூறிய) கணித நூலை வழங்கும் கலைமகளினது தோற்றம்போல; சொரிவெள் அலகரும்-சொரிகின்ற வெள்ளிய பலகறைகளையுடைய மகளிரும்; பழுது இல் வாய்மையர்- தம்மொழியாலே குற்றமற்ற வாய்மையை யுடையோரே யாவர் என்க.

     (வி-ம்.) மணம்புணரவரும் வழி கூறிய என இதனொடும் ஒட்டுக. சொதிடக் கலைமகள்-சோதிடக்கலையை வழங்கும் தெய்வம். வெள்ளலகர்-பலகறைகளை வைத்துக்கொண்டு குறிசொல்லும் மகளிர். இவர்களுக்குக் கலமகளுவமை. அலகு-பலகறை.

8-9: உடல்.......................என்ப

     (இ-ள்) உடல் தொடு குறியின்-உடம்ப்னைத் தொடும் தூதஇலக்கணத்தினால்; வரும்வழி குறித்த-மனம்புணர வரும் வழி கூறிய; மூதுஅறி பெண்டிரும் தீதிலர்-முதுமையறிந்த பெண்டிர்களும் தீங்குடையாரல்லர் என்க.

     (வி-ம்.) என்ப: அசை. உடல் தொடுகுறி-உடலைத் தொட்டுக்கூறும் குறி.

10-11: பெரும்.........................பெரியர்

     (இ-ள்) பெரும் திரள் கண்ணுள் பேச்சுநின்று ஓர்ந்து-மிகுந்த கூட்டத்தில் நின்று அவர் கூறும் மொழியை நிமித்தமாகக் கொண்டு ஆராய்ந்து; வாய்ச்சொல் கேட்ட-மணம் புணர் வரும்வழி நற்சொல்லாகக் கேட்ட; நன்மதியரும் பெரியர்-நல்ல அறிவுடையோரும் பெருமௌயுடையோரே என்க.

     (வி-ம்.) வாய்ச்சொல்-பிறர் தம்முட் பேசும் பேச்சினைத் தங் காரியத்திற்கு நிமித்தமாகக் கோடல். அது “குடக்கணீர் கொண்டுவா என்றாள் குனிவிற் றடைக்கையாய் வென்றி தரும்” (புறப். வெட்சி. வெண்பா. 4) என்றாற் போல்வது. ஓர்தல்-ஆராய்தல். நன்மதி-பேரறிவு.

12-13: ஆய்மலர்..................திருவினர்

     (இ-ள்) மெய்யரும்-உண்மையினையுடைய அவ்விருவரும் போய்; ஆய்மலர் தெரிந்திட்டு-அழகிய மலரை ஆராய்ந்து இட்டு; வான்பலிதூவி-சிறந்த பலியாகக் கொடுத்து: தெய்வம் பராய திருவினர்-தம்மைக் கூட்டுவித்த தெய்வத்தை வழிபடுவதாகிய நல்வினையை உடையராயினர் இனி ஓரிடரில்லை என்க.

     (வி-ம்.) மெய்யர்-உண்மையினையுடைய அத்தலைவனும் தலைவியும். பலி-தெய்வத்திற்கு இடும் உணவு. இனியோரிடரில்லை என்பது குறிப்பெச்சம். இது பாலை நிலத்தின்கண் தலைவியைத் தேடிவரும் செவிலியைக் கண்டோர் அவள் உணரும்படி தம்முட்கூறி அச்செவிலிக்கு இப்பொழுது நின்மகளும் அவள் கணவனும் அவர் ஊருக்குச் சென்று இன்புற்றமர்ந்திருப்பர் என்று குறிப்பாக உணர்த்தியபடியாம். அவர் தம்முள் பேசிக்கொள்வது வருமாறு. இப்பொழுது நம்மாற் காணப்பட்ட அத்தலைவனும் தலைவியும் இந்த மலையின்கண் திருமணம் செய்து கோடற்கு வழி கூறிய பார்ப்பன மகனும் குற்றமிலனாயினன். அத்தலைவனுக்குக் குறி கூறிய அலகரும் தொடுகுறி கூறிய பெண்டிரும் வாய்ச்சொற் கேட்ட அறிஞரும் மெய்ம்மையுடையோர் ஆகும்படி அத்தலைவன் மனைகட்சென்று தம்மைக் கூட்டுவித்த தெய்வத்தைத் தொழுதிருப்பார். ஆதலால் அவர்க்கு இனி ஏதம் இல்லை என்பதாம். எனவே செவிலி தன் மகள் சிறந்தானை வழிபடீஇச் சென்றாள், அவள் தலைவன் செல்வமனையிற் புகுந்திருப்பாள் என்று உணர்ந்தாளாதல் உணர்க. இனி இருவரையும் போகப் பண்ணிய தாய்போலும் இவள் உள்ளமும் தவறுடையதே. இனி அக்குரிசிலும் குழலும் பார்ப்பான் முதலியோர் இத்தன்மையராய்த் தம்மனைகட் சென்று நல்வினை உடையராயின் என வினை முடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.