பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 18

நேரிசையாசிரியப்பா

 
   
5
  குங்குமக் கோட்டல ருணங்கலர் கடுக்கும்
பங்குடைச் செங்காற் பாட்டளி யரிபிடர்க்
குருவிற் றோய்ந்த வரிகெழு மரகதங்
கல்லெனக் கிடப்பச் சொல்லிய மேனித்
திருநெடு மாலிஉக் கொருவிசை புரிந்து
10
  சோதிவளர் பாக மீந்தரு ணித்தன்
முனிவ ரேமுற வெள்ளியம் பொதுவின்
மனமுங் கண்ணுங் கனியக் குனிக்கும்
புதிய நாயகன் பழமறைத் தலைவன்
கைஞ்ஞின் றவன்செங் கால்கண் டனர்போல்
15
  விளக்கமும் புதுமையு மளப்பில் காட்சியும்
வேறாப் பெடுத்துக் கூறுவது நீக்கமு
மறிவோர் காணுங் குறியா யிருந்தன
விருந்திண் போர்வைப் பிணிவிசி முரச
முன்ன மெள்ளினர் நெஞ்சுகெடத் துவைப்ப
20
  மணங்கொள் பேரணி பெருங்கவின் மறைத்ததென்
றெழுமதி குறைத்த முழுமதிக் கருங்கயல்
வண்டு மருவி யுண்டு களியாது
மற்றது பூத்த பொற்றிகழ் தாமரை
யிரண்டு முகிழ்செய்து நெஞ்சுறப் பெருகும்
25
  வற்றா மேனி வெள்ளத்துண் மறிய
நுனித்தலை யந்தனர் கதழெரி வலர்த்துச்
சிவந்த டாய்தோறும் வெண்பொரி சிதறச்
செம்மாந்து மணந்த வளிய கூரெரி
மும்முறை சுழன்று தாயருண் மகிழ
30
  வில்லுறை கல்லின் வெண்மலர் பரப்பி
யிலவலர் வாட்டிய செங்கால் பிடித்துக்
களிதுங் குளத்தொடு மெல்லெனச் சேர்த்தி
யிரண்டு பெயர்காத்த தோலாக் கற்பு
முகனுறக் காணுங் கரியோர் போல
35
  விடப்பா னிறுத்திப் பக்கஞ் சூழ
வடமீன் காட்டி விளக்கணி யெடுத்துக்
குலவாழ்த்து விம்ம மணவணிப் பக்கங்
கட்புலங் கொண்ட விப்பணி யளவும்
வாடிநிலை நின்று மூடியே மாந்து
40
  மென்முக மளக்குங் காலக் குறியைத்
தாமரைக் கண்ணா லுட்புக வறிந்து
முலக மூன்றும் பெறுதற் கரியதென்
றெண்ணா வாய்மை யெண்ணிக் கூறியுங்
கல்லுயர் நெடுந்தோ ளண்ணன்
    மல்லுறத் தந்த வீர்ந்தழை தானே.

(உரை)
கைகோள்: கற்பு. தோழிக்கூற்று.

துறை: மகிழ்ந்துரைத்தல்.

     (இ-ம்.) இதற்கு “பெறற்கரும் பெரும் பொருள் முடிந்தபின் வந்த தெறற்கருமரபிற் சிறப்பின் கண்ணும்” (தொல். கற்பு. 9) எனவரும் விதி கொள்க.

35-41: வாடி...............................தானே

     (இ-ள்) கல் உயர் நெடுந்தோள் அண்ணல்-மலையினுங் காட்டில் உயர்ந்த நெடிய தோளையுடைய நம்பெருமான்; வாடி நிலை நின்றும்-இவள் உடன்படுவளோ படாளோ என்னும் ஐயத்தால் வாட்டமெய்தி யான் சேட்படுத்துந்தொறும் நீங்கானாய் அந்நிலையிலே நின்றும்; ஊடி ஏமாந்தும்-ஆற்றாத தன் நெஞ்சினோடு பிணங்கிக் கலங்கியும், தாமரைக் கண்ணால் என்முகம் அளக்குங்கால்-தன்னுடைய செந்தாமரை மலர் போன்ற கண்களாலே என் முகத்தை நோக்கி மதியுடம்படுத்தற்கு அலவளாவும் பொழுது; அக்குறியை உட்புக அறிந்து-என் கருத்தினைத் தன் நெஞ்சத்திற் புகுமாறு தெளிந்தும்; உலக மூன்றும் பெறுதற்கு அரியது என்று-இத்தழை மூன் றுலகங்களிலும் பெறுதற்கு அரியது என்று; எண்ணா வாய்மை எண்ணிக் கூறியும்-எம்மனோர் கருதுதற்கியலாத உண்மையைத் தானே கருதிக் கூறியும்; மல்உறத் தந்த-எம்பெருமாட்டி வளம்பெற வழங்கிய; ஈர்ந்தாழை-குளிர்ந்த இத்தழை தானும் என்க.

     (வி-ம்.) வாடி-ஐயத்தால் வாடி. நின்று-சேட்படாது நின்று. என்முகம் அளக்குங்கால் என்றது மதியுடம்படுத்தற் பொருட்டு எம் முகத்தை நோக்கி ஆராயுங்கால் எனினுமாம். குறி-கருத்து. என் கருத்து அவன் கண்வழியாக உட்புக அறிந்து கொண்டு என்க. தழை ஒப்பற்ற தன் அன்பிற்கு அறிகுறியாகலின உலக மூன்றும் பெறுதற்கு அரிதென்றான் என்பது கருத்து. இஃது எம்மனோர் எண்ணா வாய்மை ஆயினும் அவன் அதனைக் கருதிக் கூறினான் என்றவாறு. தலைவனுடைய அறம்பிறழா உறுதியை இறைச்சி வகையால் புலப்படுத்துவாக் கல்லுயர் நெடுந்தோள் அண்ணல் என்றாள். மல்-வளம்.

14-15: இருந்திண்..............................துவைப்ப

     (இ-ள்) இரும்திண் போர்வை பிணிவிசி முரசம்-பெரிய திண்ணிய தோலாகிய போர்வையை மிகவுங் கட்டிய மணமுரசம்; முன்னம் எள்ளினர் நெஞ்சுடை-களவொழுக்கத்தின் பொழுது இகழ்ந்த ஏதிலாருடைய மனம் துன்புறும்படி; துவைப்ப-முழங்கா நிற்ப என்க.

     (வி-ம்.) போர்வை-தோலாகிய போர்வை. பிணிவிசி: ஒரு பொருட் பன்மொழி. இனி பிணித்து விசித்த எனக் கோடலும் ஒன்று. முன்னம் என்றது களவொழுக்கம் நிகழ்ந்த காலத்தை. எள்ளினர்-அப்பொழுது இகழ்ந்து அலர் துற்றியவர். துவைத்தல்-முழங்குதல்.

16-21: மணம்..........................மறிய

     (இ-ள்) மணங்கொள் பேரணி பெருங்கவின் மறைத்தது என்று-திருமணத்தின் பொருட்டு அணிந்து கொண்ட பேரணிகலன்களாகிய பாசடை பெரிய அழகென்னும் வெள்ளத்தை மறைத்ததென்று; வண்டு-முலைக்கண்களாகிய வண்டு; மருவி உண்டு களியாது-பொருந்தித் தேன் நுகர்ந்து மகிழாமல்; அது திகழ் இரண்டு பொந்தாமரை முகிழ்செய்து பூத்த நெஞ்சுஉற-அவ்வண்டு திகழாநின்ற முலையாகிய இரண்டு பொந்தாமரை அரும்பி மலர்ந்த நெஞ்சாகிய நீர்நிலையில் பொருந்த; வற்றா பெருகும் மேனி வெள்ளத்துள்-குறையாது பெருகும் நிறமாகிய வெள்ளத்துள்; எழுமதி குறைத்த முழுமதி கருங்கயல் மறிய-விண்ணிலெழுந்த திங்களைப் பிறையாக்கிய முகமாகிய முழுத்திங்களிடத்துணாகிய விழியாகிய கரிய கயல் மீன்கள் குதியாநிற்ப என்க.

     (வி-ம்.) மேனி வெள்ளத்தில் மறிய எனவே கவினையும் வெள்ளமாக உருவகம் பண்ணினார். வண்டு தாமரை நெஞ்சுற எனவே முதலைக் கூறச் சினையறி கிளவியாயிற்று. “தாமச் செப்பிணை முகட்டுத் தண் கதிர்விடு நீலமாமணி தாபித்தன போல் மனம் பருகு கருங்கண்ண” என்றதனை (சீவக. 171) ‘சினையிற்கூறு முதலறி கிளவி’ என்றாற் போல. எழுமதி குறைத்த முழுமதி: குறிப்பினால் வந்த உவமை உருவகம். இவையெல்லாம் மாட்டேறேலா உருவகம்.

“அஞ்சு வருதானை யாமரென்னு நீள்வயலுள்
 வெஞ்சினம் வித்திப் புகழ்விளைக்கும்-செஞ்சுடர்வேற்
 பைங்கட் பனைத்தாட் பகட்டுழவ னல்கலா
 னெங்கட் கடையா விடர்”

என்றார் வெண்பா மலையினும். அது “மாட்டேறின்றி வருதலுமுரித்தே, கூட்டியாளுங் குறிப்பினானே” என்பதனால் அறிக.

22-23: நுனி..........................சிதற

     (இ-ள்) நுனித்தலை அந்தனர்-குடுமித் தலையையுடைய பார்ப்பனர்; கதழ்எரி வளர்த்து-விரைவினையுடைய தீயை வலர்த்து; சிவந்த வாய்தொறும் வெண்பொரி சிதற-அத்தீயினுடைய சிவந்த நாத்தொறும் வெள்ளிய பொரியைச் சிந்தா நிற்ப என்க.

     (வி-ம்.) நுனியையுடைய குடுமியை ஆகுபெயரால் நுனி என்றார். இனி நுனித்தலை அந்தனர் என ஐகாரத்தை அசையாக்கிப் பொருள் கொள்ளினும் ஆம் வாய்-ஈண்டுத் தியின் நா. நா பலவாகலின் வாய்தொறும் என்றார். சிவந்த வாய்தொறும் வெண்பொரி என்புழிச் செய்யுளின்பமுணர்க.

24-25: செம்மாந்து.........................மகிழ

     (இ-ள்) செம்மாந்து மணந்த அளிய கூர்எரி-உளம் பூரித்துக் கூட்டுதற்குக் காரனமாகிய அருட்பண்புடைய மிகுந்த வேள்வித் தீயினை; தாயர் உள்மகிழ மும்முறை சுழன்று-நற்றாய் முதலிய தாய்மார்கள் உள்ளம் மகிழும்படி மூன்றுமுறை சுற்றி என்க.

     (வி-ம்.) செம்மாத்தல்-பூரித்தல். மணந்த என்னும் செய்த வென்னெச்சத்தை மணப்ப எபச் செயவென்னச்ச மாக்குக. தீ-இறைவன் அருட்குறியாகலின் இறைவன் அளியை அதற்கு ஏற்றினார். இனி அளிய தாயர் என இயைப்பினுமாம். கூர்: மிகுதிப் பொருள் குறித்த உரிச்சொல். தாயர்-நற்றாய் முதலிய பல தாயர் உளராகலின் பன்மை கூறினர்.

24-28: இல்லுறை............................சேர்த்தி

     (இ-ள்) இல்உறை கல்லின் வெள்மலர் பரப்பி-இல்லத்தின்கண் கிடக்கும் மரபிற்றாகிய அம்மிக்கல்லின்மேல் வெள்ளிய மலர்களைப் பரப்பிவைத்து; இலவு அலர் வாட்டிய செங்கால் பிடித்து- எம்பெருமான் எம்பெருமாட்டியினுடைய இலவம் பூவை வருந்தச் செய்த சிவந்த காலைப் பிடித்து; களிதூங்கு உளத்தொடும் மெல்லெனச் சேர்த்தி-மகிழ்ச்சிமிக்க நெஞ்சத்தோடே அவ்வம்மியின்மேல் மெல்ல வைத்து என்க.

     (வி-ம்.) இல்லுறை கல்-அம்மி. இவள் சிற்றடியை யாம் ஒவ்வோம் என இலவமல்ர் வருந்தும் என்பது கருத்து. ஊற்றின்பத்தால் உளங்களித்து என்றவாறு. அம்மியின்மேல் மலர் பரப்பப்பட்டிருந்தும் தலைவியின் அடிகள் மென்மையை நினைந்து மெல்லெனச் சேர்த்தி என்றவாறு. என்னை? “அனிச்சமு மன்னத்தின் றூவியு மாத ரடிக்கு நெருஞ்சிப் பழம்” (திருக். 1120) என்பவாகலின் என்க.

29-32: இரண்டு..........................காட்டி

     (இ-ள்) தோலோ இரண்டு பெயர் காத்த கற்பு-அறந்தலை நிற்றலில் தோல்வியுறாத எம்பெருமானும் எம்பெருமாட்டியும் ஆகிய இருவரும் குறிக்கொண்டு காத்ததனால் வந்த கற்புடைமையை; முகனுற்காணும் கரியோர்போல-எதிர் எதிர் வைத்து ஒப்பிட்டுக் காணும் சான்றாயினார்போல; இடப்பால் நிறுத்தி-தலைவியின் இடப்பாகம் தனக்கு வலமாக நிறுத்தி; பக்கம் சூழ வடமீன் காட்டி-சுற்றத்தார் சூழ்ந்து நிற்ப அருந்ததியை எம்பெருமாட்டிக்குக் காட்டி என்க.

     (வி-ம்.) தலைவனும் தலைவியுமாகிய இருவருள் ஒருவர் பிறழினும் கற்பொழுக்கம் இல்லாமையின் இரண்டு பெயர்காத்த கற்பு என்றார். சான்றாவார்-சுற்றத்தார். இஃதென் சொல்லிய வாறோவெனின் கற்புடைமைக்குத் தலைவியையும் அருந்ததியையும் எதிரெதிர் நிறுத்திக் காணும் சான்றாயினார் போலச் சுற்றத்தார் சூழ்ந்து நின்று காண் என்றவாறு. கரியோர-சான்றாயினோர். வடமீன்-அருந்ததி: இனி இதுபற்றிப் பழைய உரையாசிரியர் கூறும் விளக்கம் வருமாறு.

     எண்ணும்மை தொக்கது. காத்த கற்பு உண்டவெச்சில் போல நின்றது. தலைவன் கந்தருவ வழக்கம்போலப் பிரியாது வரைந்தமையானும் தலைவி கந்தருவ வழக்கம்போல் பிரியாது வரைந்தமையானும் தலைவி பிறர் வரைவுக்கஞ்சி அறத்தொடு நிற்றலானும் இருவருங் காத்ததனால் வந்த கற்பென்றார். இது விபரீதவுவமை. உவமையாய் வருவதனைப் பொருளாக்கிப் பொருளை யுவமையாக்குதலிங் களவின்வழி வந்த கற்புங் களவின்வழி வாராக் கற்புந் தம்மிடத்திற் பொருந்தாக் காணுஞ் சான்றாயினார்போல வடமீன் காட்டி யெனினுமாம். களவின்வழி வந்த கற்பு கந்தருவர் கற்பு, களவின்வழி வாராக் கற்பு உலகக் கற்பு. இது உலகக் கற்பன்மையானும் கந்தருவ வழக்க மொத்தமையானும் ‘கரியார்போல’ என்றார்.

32-34: விளக்கு...................அலவும்

     (இ-ள்) விளக்கு அணி எடுத்து குலவாழ்த்து விம்ம-விளக்கு முதலிய மங்கலப் பொருள்களை நிரலாக ஏந்திக் குலமகளிர் வாழ்த்துகின்ற வாழ்த்தொலி பெருகாநிற்ப:மண அணி பக்கம் இக் கண்புலங்கொண்ட-திருமண அணியாகிய தாலியினை எம்பெருமான் எம்பெருமாட்டியின் கழுத்திலே பூட்டும் பகுதியாகிய காட்சியினை என்னுடைய இக்கண்கள் கொண்ட; பணி அளவும்-சடங்கு வரையில் என்க.

     (வி-ம்.) விளக்கு-மங்கலப் பொருள்களுள் ஒன்று. திருமனச் சடங்கில் குலமகளிர் விளக்கு முதலியன ஏந்தி வாழ்த்துதலை,

விரையினர் மலரினர் விளங்கு மேனியர்
உரையினர் பாட்டின ரொசிந்த நோக்கினர்
சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
ஏந்திள முலையின ரிடித்த சுண்ணத்தார்
விளக்கினர் கலத்தினர் விரிந்த பாலிகை
முளைக்குட நிரையினர் முகிழ்ந்த மூரலர்
போதொடு விரிகூந்தற் பொலனறுங் கொடியன்னார்
காதலற் பிரியாமற் கவுக்கை ஞெகிழாமல்
தீதறு கெனவேத்தி.”                 (சிலப். 1. 54. 64)

1-4: குங்கும.........................நித்தின்

     (இ-ள்) குங்குமக்கோட்டு உணங்கு அலர்கடுக்கும் பங்கு உடைச் செங்கால் பாட்டுஅளி-குங்கும மரத்தினது கொம்பின்கண் வாடிய மலரை ஒக்கும் வளைவினையுடைய சிவந்த காலினையும் இசையினையும் உடைய வண்டினது; அரிபிடர் குருவில் தோய்ந்த அரிகெழு மரகதம்-அரிந்தாற் போன்ற பிடரின்கண் அமைந்த நிறமும் ஒலியும் பொருந்திய அழகுடைய மரகத மலையானது; கல் என கிடப்பச் சொல்லிய மேனி திருநெடுமாலுக்கு-ஒரு கல்லே என்று இகழ்ந்து சொல்லும்படி தாழ்ந்து கிடப்ப அதனினும் சிறந்ததாகச் சொல்லப்பட்ட திருமேனியையுடைய நெடிய திருமாலுக்கு; ஒருவிசை-ஒருமுறை; புரிந்து சோதி வளர்பாகம் ஈந்து அருள் நித்தன்-ஒளி வருதற்கிடமான தனது வலப்பாகத்தை வழங்கியருளிய அழிவரவனும் என்க.

     (வி-ம்.) வண்டின் கால்களுக்கு வாடிய குங்குமப்பூ உவமை. உணங்கலர்-வாடியபூ. பங்கு-வளைவு. அளி-வண்டு. அரிபிடர்- அரிந்தாற்போன்ற பிடர். குரு-நிறம். வில்-ஒளி. குருவும் வில்லும் எனல் வேண்டிய எண்ணும்மைகள் தொக்கன. அரிகெழு என்புழி அரி-நிறம். மரகதம்-மரகத மலை. மரகத மலையானது எங்ஙனமிருப்பினும் ஒரு கல்லே யாதலின் திருமால் திருமேனிக்கு உவமையாகாது எனக் கூறப்பட்ட திருமால் திருமேனி என்க. தனக்குரிய பாகம் அதுவாகலின் வலப்பாகத்தைச் சோதிவளர் பாகம் என்று குறித்தார். இதன்கண் குங்குமப்பூ வண்டின் கால்களுக்குவமையாக வண்டின் பிடரினது நிறமும் ஒளியுமே மரகத மலைக்கு உவமையாகும். இனி அம்மரகதமலையும் திருமேனிக்கு உவமை யாகாதென விலக்கலின் இது அடுக்கிய தோற்றம் அன்மை உணர்க. நித்தன்-அழிவற்றவன்.

7-10: முனிவர்........................போல்

     (இ-ள்) முனிவர் மனமும் கண்ணும் ஏம் உறக் கனிய-பதஞ்சலி முதலிய முனிவருடைய மனமும் கண்ணும் இன்பமுறுதலாலே கனியும்படி; வெள்ளியம் பொதுவில் குனிக்கும்-வெள்ளியாலியன்ற அழகிய மன்றத்தில் கூத்தியற்றும்; புதிய நாயகன் பழமறைத் தலைவன்-பின்னைப் புதுமைக்கும் புதுமையுடைய தலைவனும் பழைய மறைகளுக்கு முதல்வனும் கைஞ்ஞின்றவன்-ஒழுக்கத்தே நின்றவனும் ஆகிய இறைவனுடைய; செம்கால் கண்டனர்போல-சிவந்த திருவடிகளைக் கண்ணுற்ற மெய்யடியார் தமக்குத்தாமே உவமையாயினாற்போல என்க.

     (வி-ம்.) முனிவர்-பதஞ்சலி முதலியோர். முனிவர் மனமும் கண்ணும் ஏமுறக் கனியா என மாறுக. பொது-மன்றம். குனிக்கும்-கூத்தியற்றும். புதுமைக்கும் புதுமையானவன் என்பார் புதிய நாயகன் என்றார். பழமைக்கும் பழமையானவன் என்பார் பழமறைக்கும் தலைவன் என்றார். கை-ஒழுக்கம். ஞின்ற: போலி. கால்கண்டவர்-தமக்குத் தாமே உவமையாயினாற்போல என விரித்தோதுக.

11-13: விளக்கமும்............................இருந்தன

     (இ-ள்) விளக்கமும் புதுமையும் அளப்புஇல் காட்சியும்-ஒளியினாலும் புதுமையினாலும் எண்ணப்பட்டாத காட்சியாலும் தமக்குத் தாமே யொப்பாய்; வேறு ஒப்பு எடுத்துக் கூறுவது நீக்கமும்-தமக்கு வேறு உவமை எடுத்துக் கூறுவது இல்லாமையும் உடையவாய்; அறிவோர் காணும் குறியாய் இருந்தன-பெரியோர் காணுதற்குரிய இலக்காய் இருந்தன என்க.

     (வி-ம்.) அளப்புஇல் காட்சி-அளந்து காணப்படாத அழகு, அழகுக்கு எல்லை இன்றாகலின் இங்ஙனம் கூறினார். குறி-இலக்கு. விளக்கத்தாலும் புதுமையாலும், காட்சியாலும் என்பன உருபு தொடர்ந் தடுக்கிய வேற்றுமைக் கிளவி இஃது ஏதுவொடு கூடிய பொது நீங்குவமை. விளக்கமும்.................... நீக்கமும் என்பதுவரை பொருளுக்குக் கூறிய அடை மொழியைக் கண்டனர் என்னுமுவமைக்கும் இயைத்துக் கொள்க. நீக்கமும் உடையவாய் என ஒரு சொல் வருவித்துக் முடிக்க. இனி இத்தழைகள் மணவணிப்பக்கம் கட்புலங்கொண்ட இப்பணியளவும் அறிவோர் காணும் குறியாய் இருந்தன என வினை முடிவு செய்க. இஃதென் சொல்லியவாறோவெனின் என்பெருமான் கொடுத்த தழை விளக்கமும் புதுமையும் காட்சியும் ஒப்புக் கூறுவது நீக்கமும் உடையராய் வாடாது இருந்தன. அங்ஙனம் இருந்தவற்றால் எம்பெருமாட்டி அவற்றைப் பற்றுக்கோடாகக் கொண்டு இத்திருமணச் சடங்கு நிகழுந்துணையும் ஆற்றி இருந்தனள் என்று தான் அத்தழை ஏற்ற முழுத்தத்தைத் தன்னுட் கூறிக் கொண்டாடிய படியாம். மெய்ப்பாடும் பயனும் அவை.