பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 19


நேரிசையாசிரியப்பா

 
   
5
  நெடுவளி யுயிர்த்து மழைமத மொழுக்கி
யெழுமலை விழுதலை புடைமணி யாக
மீன்புகார் நிறைந்த வான்குஞ் சரமும்
வால்பெற முளைத்த கூன்கோ டானும்
பேச நீண்ட பன்மீ னிலைஇய
10
  வானங் கடலிற் றோணிய தானுங்
கொழுநர்க் கூடுங் காம வுததியைக்
கரைவிட வுகையு நாவா யனுங்
கள்ளமர் கோதையர் வெள்ளணி விழவி
லைங்கணைக் கிழவன் காட்சியு மகிழ
15
  விழைத்து வளைத்த கருப்புவில் லானு
நெடியோன் முதலாந் தேவர் கூடி
வாங்கிக் கடைந்த தேம்படு கடலி
னமுதுடன் றோன்றிய வுரிமை யானு
நின்றிரு நுதலை யொளிவிசும் புடவி
20
  லாடிநிழற் காட்டிய பீடது வானுங்
கரையற வாணியு மானக் கலனுட்
டலைபெற விருந்த நிலைபுக ழானு
மண்ணக மனைத்து நிறைந்தபல் லுயிர்கட்
காயா வமுத மீகுத லானும்
25
  பாற்கட லுறங்கு மாயவன் போலத்
தவள மாடத் தகன்முதுகு பற்றி
நெடுங்கார் கிடந்து படும்புனல் பிழியுங்
கூடைவீற் றிருந்த நாடகக் கடவுள்
பொற்சுடர் விரித்த கொத்தலர் கொன்றையுந்
30
  தாளியு மறுகும் வாலிழை யெருக்கமுங்
கரந்தையும் வன்னியு மிடைத்தசெஞ் சடையி
லிரண்டைஞ் ஞாறு திரண்டமுக மெடுத்து
மட்புல னகழ்ந்து திக்குநிலை மயக்கிப்
புரியாக் கதமோ டொருபா லடங்குங்
35
  கங்கையிற் படிந்த பொங்கு தவத்தானு
மந்நெடு வேணியிற் கண்ணியென விருந்து
தூற்றுமறு வொழிந்த வேற்றத் தானு
மணிவான் பெற்றவிப் பிறையைப்
பணிவாய் பிரிந்து தாமரை மகளே.

(உரை)
கைகோள்: களவு. தோழை கூற்று

துறை: பிறைதொழுகென்றல்.

     (இ-ம்.) “நாற்றமும் தோற்றமும்” (தொல். கள. 23) என்னும் நூற்பாவின்கண், ‘மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர்பொருள் நாட்டத் தானும் எனவரும் விதி கொள்க.

35: தாமரைமகளே.........................

     (இ-ள்) தாமரைமகளே-செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள் போல்வாய்! என்க.

     (வி-ம்.) இனி மங்கலமாய்ப் போழ்தின் முகமலர்ச்சியுடைத்தாய் எல்லோரானும் நன்கு மதிக்கப்படும் தன்மையும் உடைத்தாய், விளங்கும் தாமரை மலரை ஒத்த மகளே எனினுமாம்.

1-4: நெடுவளி.........................கோடானும்

     (இ-ள்) எழுமலை விழுமலை புடைமணிஆக-இப்பிறையானது எழுமலையும் விழுமலையும் ஆகிய இரண்டு மலைகளும் இரண்டு பக்கங்களினும் கட்டும் மணிகளாக; நெடுவளி உயிர்த்து மழைமதம் ஒழுக்கி-நீண்ட காற்றாகிய மூச்சினை உதிர்த்து மழையாகிய மதத்தினைச் சிந்தி; மீன்புகர் நிறைந்த-விண்மீன்களாகிய புள்ளிகள் நிறைந்த; வான் குஞ்சரமும் வால்பெற முளைத்த-வானமாகிய யானையினது முகத்தில் தூய்மையுண்டாகத் தோன்றிய; கூன் கோடு ஆனும்-வளைந்த மருப்பேயோயினும் என்க.

     (வி-ம்.) எழுமலை-கோள்கள் தோன்றுடற்கிடனான மலை; (உதயகிரி) விழுமலை-அவை மறைதற்கிடனான மலை; (அத்தமனகிரி). மலைகளாகிய மணிகளையும் நெடுவளியாகிய மூச்சினையும் மழையாகிய மத நீரினையும் மீனாகிய நெற்றிப் புள்ளிகலையும் உடைய வானமாகிய யானை முகத்திலே தோன்றிய வளைந்த மருப்பாயினும் என்க. கூன்-வளைவு, கோடானும்-கோடு ஆயினும். ஆயினுமென்பது ஆனுமெனக் குறைத்து நின்றது. “ஒன்றானுந் தீச்சொல்” (குறள்-128) என்றாற்போல, இது மேல் வருவனவற்றிற்கும் ஒக்கும்.

5-6: பேச.....................தோணியதானும்

     (இ-ள்) பேச நீண்ட பல்மீன் நிலைஇய வானக்கடலில்- இன்னும் இப்பிறை சொல்லத்தொலையாத பலவாகிய மீன்கள் நிலைபெற்ற வானமாகிய கடலின்கண் இயங்குமொரு; தோணியது ஆனும்-தோணியே யாயினும் என்க.

     (வி-ம்.) வானக்கடலில் தோணி என்பது ஏமப்புணையைச் சுடும் என்றாற்போல ஏகதேச உருவகம். எனவே இருளாகிய பாசியை நீத்து உலகத்தை விளக்கமாகிய கரையில் ஏற்றும் தோணிஎன்றுங் கூறிக் கொள்க. பன்மீன் இரண்டிற்கும் சிலேடை. தோணி-மரக்கலம்.

7-8: கொழுநர்......................நாவாயானும்

     (இ-ள்) கொழுநர் கூடும் காம உததியைவிட-தலைவிமார் தங்கணவரொடு கூடுதற்குக் காரணமாகிய காமக் கடலின் நீங்க; கரை உகையும் நாவாயானும்-இன்பமாகிய கரையிற் செலுத்தும் படகேயாயினும் என்க.

     (வி-ம்.) கொழுநர்-கணவர். காமவுததி-காமமாகிய கடல். உகையும்-செலுத்தும். நாவாய்-ஒருவகை மரக்கலம்.

9-11: கள்ளமர்.....................வில்லானும்

     (இ-ள்) ஐங்கணைக் கிழவன் கள்அமர் கோதையர் வெள்ளணி விழவில்-இன்னும் அப்பிறை ஐந்து மலரம்புகளையுடைய காமவேள் தேன் பொருந்திய மலர்மாலையினையுடைய மகளிருடைய பிறந்தநாள் விழாவின்கண்; உள்மகிழ இழைத்து வளைத்த-அவர்தம் உள்ளத்தினுள்ளே மகிழும்படி செய்து வளைத்த; கருப்பு வில் காட்சியானும்-கரும்பு வில்லைப்போலக் காணப்படுவதொன்றாயினும் என்க.

     (வி-ம்.) ஐங்கணைக் கிழவன்-முல்லை, அசோகு, தாமரை, மாமலர், கருங்குவளை என்னும் ஐந்து மலரம்புகளையுமுடைய காமவேள். கள்-தேங் வெள்ளணி விழவு-பிறந்தநாள் விழா. “கரும்பகடும் செம்பொன்னும் வெள்ளணி நாட்பெற்றார்” எனவரும் வெண்பா மாலையினும் அஃதப்பொருட்டாதல் உணர்க. காணப்படுவதனைக் காட்சி என்றார்.

12-14: நெடியோன்.........................உரிமையானும்

     (இ-ள்) நெடியோன் முதலாம் தேவர்கூடி-இன்னும் அப்பிறைத்தானும் திருமால் முதலிய தேவர்களெல்லாம் ஒருங்கு கூடி; வாங்கிக் கடைந்த தேம்படி கடலின்-வலித்துக் கடைந்த இனிமையுடைய திருப்பாற் கடலில்; அமுதுடன் தோன்றிய உரிமையானும்-அமிழ்தத்தோடே பிறந்த உரிமை உடைமையானும் என்க.

     (வி-ம்.) நெடியோன்-திருமால். தே-இனிமை. தேம்படு-கடல் என்றது திருப்பாற் கடலினை. இனி, தேம்-பாலுக்கு ஆகுபெயர் எனினுமாம்.

15-16: நின்..............................பீடதுவானும்

     (இ-ள்) நின் திரு நுதல் ஒளியை-அப்பிறை உன்னுடைய அழகிய நெற்றியின் ஒளியை; ஆடி நிழல்-கண்ணாடி நிழலைத் தன்னிடத்திற் காட்டினாற்போல; விசும்பு உடலில் காட்டிய பீடதுவானும்-விசும்பு தன்னிடத்தில் காட்டிய பெருமையை உடையதாதலாலும் என்க.

     (வி-ம்.) இஃது எடுத்துக் காட்டுவமை. பீடது என்புழி அதுவென்பது பகுதிப்பொருள் விகுதி. நுதலொளியை எனற்பாலது நுதலையொளியென எழுத்து நிலைமாறிற்று.

17-18: கரை.....................புகழானும்

     (இ-ள்) கரை அற அணியும் மானக் கலனுள்-எல்லையின்றி அணிகின்ற பெருந்தன்மையுடைய அணிகலன்களுள் வைத்து; தலைபெற இருந்த நிலை புகழாலும்-நின்னுடைய தலைக்கு அணியும்படி பிறை என்னும் ஓரணிகலனாகும் நிலைத்த புகழுடமையானும் என்க.

     (வி-ம்.) பிறை என்பது மகளிர் தலையணிகலன்களுள் ஒன்றாதல் பற்றி இங்ஙனம் கூறினாள். பிறை அணிகலன் என்பதனை 14ஆம் செய்யுளில் “தண்ணம் பிறையும் தலைபெற நிறுத்துக” என்பதனானும் உணர்க. மானம், கொண்டாட்டமுமாம். நிலைபுகழ்-நிலைத்த புகழ்.

19-20: மண்..........................ஈகுதலானும்

     (இ-ள்) மண் அகம் அனைத்தும் நிறைந்த பல் உயிர்கட்கு-நில உலகம் அனைத்தும் நிறைந்துள்ள பலவாகிய உயிரினங்களுக்கு; ஆயா அமுதம் ஈகுதலானும்-ஆராய்ந்து அமிழ்தத்தை வழங்குதலாலும் என்க.

     (வி-ம்.) மண்ணகம்-நிலஉலகம். ஆயா-ஆய்ந்து

21-24: பாற்கடல்.........................கடவுள்

     (இ-ள்) பால் கடல் உறங்கும் மாய்வன் போல- திருப்பாற்கடலிலே துயிலுகின்ற திருமால் கிடன்ம்தாற்போல; தவல மாடத்து அகல் முதுகுபற்றி-வெள்ளிய மேனிலைமாடத்தின் அகன்ற இடத்தைப்பற்றி; நெடுங்கார் கிடந்து படும்புனல் பிழியும்-நெடிய முகில் கிடந்து தன்னிடத்துண்டாகிய நீரைச் சொரிதற்கிடனான; கூடல் வீற்றிருந்த நாடகக் கடவுள்-மதுரைமா நகரத்திலே எழுந்தருளியுள்ள கூத்தினையுடைய இறைவனுடைய என்க.

     (வி-ம்.) பாற்கடல் தவளமாடத்திற்கும் திருமால் முகிலுக்கும் பண்புவமை. திருமால் கிடப்பது முகில் கிடத்தற்குத் தொழிலுவமை. நாடகமென்றது கதைதழுவி வரும் கூத்து. ஆயினும் ஈண்டு அப்பொருள் குறியாது கூத்தென்னும் பொதுமை குறித்து நின்றது. இனி நாடு அகம் எனக் கண்ணழித்து நாடப்பட்ட அகக்கூத்தெனினுமாம். அக்கூத்தாவது தேசி வடுகு சிங்களம் என மூவகைப்படும். இவை, சாத்துவிகம் முதலிய மூன்று குணமும் பற்றி ஆடுதலின் அகமார்க்கமாயிற்று. “அகத்தொழில் சுவையான் அகமெனப் படுமே” எனவும் ‘தேசி வடுகுடனே சிங்களமென் றோதினார், பேசிலிவை பிஞ்ஞகன் முன்னா டியவா, மோசையா மொத்துடனே, பாணியாவுடனே, இசையுடனே வைத்து முதலாய் வந்திறும்” எனவும் வருவனவற்றால் உணர்க.

25-31: பொங்.................தவத்தானும்

     (இ-ள்) பொன் சுடர் விரித்த கொத்து அலர் கொன்றையும்-பொன்னொளியை விரித்தாற்போன்று கொத்தாக அலர்ந்த கொன்றை மலரும்; தாளியும் அருகும் வால்இழை எருக்கமும் கரந்தையும் வன்னியும் மிடைந்த செஞ்சடையில்-தாளியும் அறுகும் வெள்ளிய இதழினையுடைய எருக்கமாலையும் கரந்தைமாலையும் வன்னிமாலையும் செறிந்த சிவந்த சடையின்கண்; இரண்டு ஐஞ்ஞூறு திரண்ட முகம் எடுத்து-ஓராயிரமாகக் கூடிய முகங்களை நிமிர்த்தி; மண்புலன் அகழ்ந்து திக்கு நிலைமயக்கி-மண்ணினிடத்தைத் தோண்டித் திசைகளை நிலைகெடுத்து; பிரியாக் கதமோடு-ஒருகாலமும் விளையாத வெகுளியோடே; ஒருபால் அடங்கும் கங்கையிற் படிந்த-ஒருபக்கத்திலே அடங்கியிருக்கும் கங்கையின்கண் ஆடிய; பொங்கு தவத்தானும்-மிக்க தவத்தையுடைமையானும் என்க.

     (வி-ம்.) கொன்றை முதலியன மிடைந்த சடையில் ஒருபால் அடங்கும் கங்கை என்க. இரண்டைஞ்ஞூறு-ஆயிரம். கதம்-சினம். பகீரதனுடைய முயற்சியால் வானத்தினின்றும் இறங்கிய கங்கை செருக்குடையளாய் ஆயிரம் முகங்கொண்டு நிலத்தைக் குழித்துத் திசைகளை நிலைமயக்கிப் பேராரவாரத்தோடு இறங்கா நிற்ப இறைவன் அப்பெருங்கங்கையைத் தன் சடையில் ஒரு துளி போல எளிதில் ஏற்றான் என்பது தோன்ற இரண்டைஞ்ஞூறு...........ஒருபாலடங்குக் கங்கை என்றார். கங்கையில் நீராடுதலே சிறந்த தவமாதலின் கங்கையிற் படிந்த பொங்குதவம் என்றார்.

31-33: அந்நெடு.....................ஏற்றத்தானும்

     (இ-ள்) அந்நெடு வேணியில் கண்ணி என இருந்து-அக்கங்கை ஒருபாலருடைய சிறப்புடைய நீண்ட அச்சடையின்கண் சூடும் பூவாக இருந்து; தூற்றம் மறு ஒழிந்த ஏற்றத்தானும்-உலகத்தோர் பழிதூற்றுவதற்குக் காரனமான களங்கம் ஒழிந்ததனால் வந்த உயர்வினாலும் என்க.

     (வி-ம்.) சடையில் கங்கை ஒருபால் அடங்கும் என்றமையால் அத்தகைய சிறப்புடைய வேணி என்பாள் அந்நெடுவேணி எனச் சுட்டினாள். கண்ணி-தலையிற் சுடும் மலர்மாலை. பிறையும் மாலைபோலத் தலையிற் சூடப்படுதலின் கண்ணியென இருந்து என்றாள். மறுஒழிந்தமைக்கு வேணியில் இருந்தது குறிப்பேதுவாயிற்று. ஏற்றம்-உயர்வு.

34-35: அணி..........................புரிந்து

     (இ-ள்) அணிவான் பெற்ற இப்பிறையைப் புரிந்து பணிவாய்-அழகிய வானம் ஈன்றருளிய இந்தப் பிறையை நீயும் விரும்பித் தொழுவாயாக! என்க.

     (வி-ம்.) அணி வான்-அழகிய வானம். புரிந்து-விரும்பி. இனி, தாமரைமகளே! இப்பிறையானது கோடாயினும் தோணியாயினும், நாவாவாயினும், விற்போலக் காணப்படுவதாயினும் இது உரிமையினாலும் பெருமையினாலும் புகழப்படுதலாலும் ஈகுதலாலும் தவத்தாலும் ஏற்றமுடைமையானும் நம்மாற் பணியத்தகும், ந்யும் விரும்பிப் பணிவாயாக என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.