பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 21

நேரிசையாசிரியப்பா

 
   
5
  நீர்நிலை நின்று கால்கறுத் தெழுந்து
திக்குநிலை படர்ந்த முகிற்பா சடையு
மிடையிடை யுகளு மீனா மீனுஞ்
செம்முகிற் பழநுரை வெண்முகிற் புதுநுரை
யெங்குஞ் சிதறிப் பொங்கியெழு வனப்பும்
10
  பலதலை வைத்து முடியாது பாயு
மெங்குமுகம் வைத்த கங்கைக் காலுங்
கொண்டுகுளிர் பரந்த மங்குல்வா விக்குண்
முயலெனும் வண்டுண வமுதநற வொழுக்கித்
தேவர் மங்கையர் மலர்முகம் பழித்துக்
15
  முறையாப் பாண்டில் வெண்மையின் மலர்ந்த
மதித்தா மரையே மயங்கிய வொருவே
னிற்பாற் கேட்கு மளிமொழி யொன்றுள
மீன்பாய்ந்து மறிக்கத் திரையிட மயங்கிச்
சூவயி றுளைத்து வளைகிடந்து முரலும்
20
  புன்னையம் பொதும்பரிற் றம்முடை நெஞ்சமு
மீணுண வுள்ளி யிருந்தவெண் குருகெனச்
சோறுநறை கான்ற கைதைய மலருங்
பலதலை யரக்கர் பேரணி போல
மருங்குகூண் டெழுந்து கருங்காய் நெருங்கி
25
  விளைகட் சுமந்த தலைவிரி பெண்ணையு
மின்னுங் காணக் காட்சிகொண் டிருந்த
வன்னத் திரளும் பெருங்கரி யாகச்
சொல்லா லின்பமு முயிருறத் தந்து
நாளிழைத் திருக்குஞ் செயிர்கொ ளற்றத்து
30
  மெய்யுறத் தணந்த பொய்யின ரின்று
நெடுமலை பெற்ற வொருமகள் காண
நான்முக விதியோ தாளந் தாக்க
வந்தநான் முகனை யுந்தி பூத்தோன்
விசித்துமிறை பாசத் திடக்கை யிசைப்ப
35
  மூன்றுபுரத் தொன்றி லரசுடை வாணன்
மேருக் கிளைத்த தோளா யிரத்தொடு
மெழுகடல் கிளர்ந்த திரள்கவி யடங்க
முகம்வே றிசைக்குங் குடமுழ விரட்டன்
புட்காற் றும்புரு மணக்கந் திருவர்
40
  நான்மறைப் பயனா மேழிசை யமைத்துச்
சருக்கரைக் குன்றிற் றேன்மழை நான்றென
வேழு முனிவர்க டாழுமாதவ
ரன்பின ருள்ளமோ டென்புகரைந் துருக
விரனான் கமைத்த வணிகுரல் வீங்காது
45
  நான்மறை துள்ளும் வாய்பிள வாது
காட்டியுள் ளுணர்ந்து நோக்கமா டாது
பிதிர்கனன் மணிசூழ் முடிநெடுங் காது
வயிறுகுழி வாங்கி யழுமுகங் காட்டாது
நாசி காகுளி வெடிகுரல் வெள்ளை
50
  பேசாக் கீழிசை யொருபுற மொட்ட
னெட்டுயிர்ப் பெறித லெறிந்துநின் ரிரட்ட
லோசை யிழைத்தல் கழிபோக் கென்னப்
பேசுறு குற்ற மசைவொடு மாற்றி
வண்டின் றாரியுங் கஞ்ச நாதமுஞ்
55
  சிரல்வா னிலையுங் கழையிலை விழ்வது
மருவி யோசையு முழவின் முழக்கமும்
வலம்புரிச் சத்தமும் வெருகின் புணர்ச்சியு
மின்னுமென் றிசைப்ப பன்னிய விதியொடு
மந்திர மத்திமை தாரமிவை மூன்றிற்
60
  றுள்ள றூங்க றெள்ளிதின்மெலிதல்
கூடிய கான மன்பொடு பரவப்
பூதந் துள்ளப் பேய்கை மறிப்ப
வெங்குள வுயிரு மின்பநிறைந் தாட
நாடக விதியோ டாடிய பெருமான்
65
  மதுரை மாநகர்ச் செழிய னாகிக்
கதிர்முடி கவித்த விறைவன் மாமணிக்
காறலைக் கொள்ளாக் கையினர் போல
நீங்கினர் போக்கு மீங்குழி வருதுங்
கண்டது கூறுதி யாயி
    னெண்டகப் போற்றிநின் கால்வணங் குதுமே.

(உரை)
கைகோள்; களவு. தலைவி கூற்று

துறை:- தன்னுட் கையா றெய்திடு கிளவி

     (இ-ம்.) இதற்கு “மறைந்தவற் காண்டல்” (தொல். கள. 21) எனவரும் நூற்பாவின்கண் ‘அருமை செய் தயர்ப்பினும்’ எனவரும் விதிகொள்க.

1-2: நீர்.....................பாசடையும்

     (இ-ள்) நீர் நிலை நின்று கால் கறுத்து எழுந்து-கடலின்கண் நீரைப் பருகி நின்று தம்மிடமெல்லாம் கறுத்து விசும்பின்கண் எழுந்து; திக்கு நிலை படர்ந்த முகில் பாசடையும்-திசை நிலைகளிலே பரவிச் சென்ற முகில்களாகிய பசிய இலைகளையு என்க.

     (வி-ம்.) நீர் நிலை-கடல். நிலைநீர் என நிற்கவேண்டிய மொழிகள் முன்பின்னாக மாறி நீர் நிலை என்று நின்றன. நிலைநீர்: அன்மொழித் தொகை. னிலைத்த நீரையுடைய கடல் என விரியும். கடலிடத்து நின்று நீரைப் பருகிக் கறுத்து எழுந்து படர்ந்த முகில் எனச் சில சொற் பெய்துரைக்க. கால்-இடம். திக்கு நிலை-திக்காகிய நிலைக்களங்கள் என்க. முகிலகிய பாசடை என்க.

3-5: இடை.....................வனப்பும்

     (இ-ள்) இடை இடை உகளும்-இடையிலே இடையிலே இயங்குகின்ற; மீனும் மீனும்-நாள்மீனாகிய மீன்களையும்; செம்முகில் பழநுரை வெள்முகில் புது நுரை எங்கு சிதறி-சிவந்த முகிலாகிய பழைய நுரைகளையும் வெள்ளை முகிலாகிய புதிய நுரைகலையும் தன்னிடமெங்கும் சிதறி; பொங்கி எழு வனப்பும்-மிகுந்து எழாநின்ற அழகினையும் என்க.

     (வி-ம்.) வினை முதலல்லாத கருவி முதலாயின அவ்வினை முதல் வினைக்குச் செய்விப்பனவாம் ஆதலின் சிதறி எனச் செய்விப்பதாகக் கூறினார்.

“வேய்தந்த வெண்முத்தஞ் சிந்துபைங்
 கார்வரை மீன்பரப்பிச்
 சேய்தந்தவானகமானும் சிலம்ப” (திருக்கோவை. 130. உரை)

என்றாற் போல பழையநுரை சிவந்திருத்தலால் அதற்குவமையாகச் செம்மேகம் என்றாள். வனப்பு-அழகு.

6-8: பலதலை.......................வாவிக்குள்

     (இ-ள்) பலதலை வைத்து முடியாது-ஓரிடத்திற் சென்றமையாது பல இடங்களினும் சென்று; எங்கு பாயும் முகம் வைத்த-எவ்விடங்களிலும் பரவும் எண்ணிறந்த பாயும் முகங்களைக் கொண்ட; கங்கைக்காலும்-கங்கையாகிய வாய்க்கால்களையும்; கொண்டு குளிர்பரந்த மங்குல் வாவிக்குள்-தன்பாற் கொண்ட குளிர்ச்சி மிகுந்த வானமாகிய குளத்திற்குள் என்க.

     (வி-ம்.) முகிலாகிய இலைகளையும் மீனாகிய மீன்களையும் செம்முகில் வெண்முகில் ஆகிய பழைய புதிய நுரைகளையும் கங்கையாகிய வாய்க்காலையும் உடைய வானமாகிய குளத்தினுள் என்க.

9-12: முயல்......................தாமரையே

     (இ-ள்) முயல் எனும் வண்டு உண-முயலாகிய வண்டு பருகும்படி; அமுத நறவு ஒழுக்கி-அமுதமாகிய தேனைச் சிந்தி; தேவர் மங்கையர் மலர் முகம் பழித்து-தெய்வ மகளிர்களின் மகிழ்ச்சியால் மலர்ந்த முகங்களைப் பழித்து; பாண்டில் குறையா வெண்மையின் மலர்ந்த மதித்தாமரையே-வட்டம் குறைதலில்லாத வெண்மை நிறத்தோடு இருந்த திங்கள்மண்டிலமாகிய வெண்டாமரையே! என்க.

     (வி-ம்.) மலர்முகம்: வினைத்தொகை; மலர்ந்த முகம் என்க. பாண்டில்-வட்டம். மதித்தாமரை: பண்புத்தொகை.

12-13: மயங்கிய.........................ஒன்றுள

     (இ-ள்) மயங்கிய ஒருவேன்-வருத்தமுடைய ஒருத்தியாகிய யான்; நின்பால் கேட்கும் அளிமொழி ஒன்றுள-நின்னிடத்தே வினவும் அன்பு மொழி ஒன்று உளது அஃதியாதெனில் என்க.

     (வி-ம்.) ஒருவேன்-ஒருத்தியாகிய யாங் அளிமொழி-அன்புமொழி. ஒன்றுள: பன்மை ஒருமை மயக்கம். இனி உளது என்பது ஈறுகெட்டதெனினுமாம்.

14-16: மீன்.......................பொதும்பரில்

     (இ-ள்) திரை இடைமீன் பாய்ந்து மறிக்க-அலகளிடத்தே மீன்கள் பாய்ந்து தடுக்க; வளை மயங்கி சுல் வயிறு உளைந்து கிடந்து முரலும்-சங்கு மயக்கமுற்றுச் சூலுடைய வயிறு நொந்து கிடந்து முழங்கும்; புன்னையம் பொதும்பரில்-புன்னைமரச் சோலையிலே என்க.

     (வி-ம்.) மறிக்க-குதிக்க எனினுமாம். உளைந்து-வருந்தி. வளை-சங்கு. முரலுதல்-முழங்குதல். பொதும்பர்-சோலை.

16-23: தம்முடை..........................கரியாக

     (இ-ள்) தம்முடைய நெஞ்சமும்-எம்பெருமான் தம்முடைய மனமும்; மீன் உணவு உள்ளி இருந்த வெண் குருகு என-மீனாகிய தன் இரையை நினைந்து அது வருமளவும் பார்த்திருந்த வெண் கொக்குப் போல; சோறு நறை கான்ற கைதையம் மலரும்-வெண் சோற்றினையும் தேனையும் சொரிந்த தாழை மலரும்; பலதலை அரக்கர் பேரணி போல-பலவாகிய தலையினையுடைய அரக்கர் படைக்கு வகுத்த பெரிய அணியைப்போன்று; மருங்கு கூண்டு எழுந்து-பக்கத்திலே திரண்டெழுந்து; கருங்காய் நெருங்கி விளை கள் சுமந்த தலைவிரி பெண்ணையும்-கரிய காய்கள் மிடைந்து விளைந்த கள்ளைச் சுமந்த தலையின்கண் மடல் விரிந்த பனைகளும்; இன்னுங் காணக் காட்சி கொண்டிருந்த அன்னத் திரளும்-யாம் இப்பொழுதும் காணும்படி நமக்குக் காட்சி தந்து கொண்டிருக்கின்ற இவ்வன்னக் கூட்டமும்; பெருங்கரியாக-சிரந்த சான்றுகளாகவும் என்க.

     (வி-ம்.) தம்முடைய என்றது எம்பெருமானுடைய என்றவாறு. குருகு-கொக்கு. சோறும் நறையுங் கான்ற என்க. தாழம்பூவினுள் அமைந்த மகரந்தத்தைச் சோறு என்றல் மரபு. நறை-தேங் கைதை-தாழை. தாழை மலருக்கு ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருக்கும் வெண்கொக்கு உவமை. பனைக் கூட்டத்திற்கு அரக்கர் பேரணி உவமை. பனையின்கண் காய்கள் நெருங்கிக்கிடத்தல் பல தலைகட்கு உவமை. கூண்டு-கூடி. பெண்ணை-பனை. தலைவி இது கூறுங்கால் அன்னத்திரள் கூடி இருத்தலின் யாம் இன்னும் காணும்படி இதோ காட்சி கொண்டிருந்த அன்னத்திரளும் என்றாள். பெருங்கரி-சிறந்த சான்று. பெருமை-ஈண்டுச் சிறப்புப் பண்பினைக் குறித்தது.

24-26: சொல்லா..............................இன்று

     (இ-ள்) உயிரெ உற சொல்லா இன்பமும் தந்து-என் உயிர் தளிர்க்கும்படி இவ்வாறு இருந்ததென்று பிறர்க்குச்சொல்லிக் காட்ட வொண்ணாத பேரின்பத்தையும் வழங்கி; நாள் இழைத்து இருக்கும் செயிர் கொள் அற்றத்து-என் சுற்றத்தாருணராதபடி இருவகைக் குறியும் செய்து எதிர் பார்த்திருக்கும் யான் பெரிதும் துன்புறுதற்குக் காரனமான இவ்விரவுக் குறியாகிய செவ்வியிலே; மெய்யுறத் தனந்த பொய்யினர்-உண்மையாக வந்ததுபோல வந்து பிரிந்த பொய்ச் சுளினையுடையார்; இன்று-இற்றை நாளிலே என்க.

     (வி-ம்.) 16-26. புன்னைப்பொதும்பரில் தம்முடைய நெஞ்சமும் கைதைய மலரும் பெண்ணையும் அன்னத்திரளும் கரியாக உயிருற இன்பமுந் தந்து நாள் இழைத்திருக்கும் செயிர்கொள் இவ்வற்றத்துத் தணந்த பொய்யினர் என இயைத்துக் கொள்க. எம்பெருமன் என்னைக் கூடிய காலத்தே சான்றாவார் வேறியாருமிலர், அவர் நெஞ்சமும் இத்தாழை மலரும் இப்பனைகளிம் அன்னத்திரளுமே சான்றாம் என்றவாறு. இத்னோடு

“யாரும் இல்லத் தானே கள்வன்
 தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
 தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
 ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
 குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே”      (குறுந். 25)

எனவரும் குறுந்தொகைச் செய்யுளையும் ஒப்புக்காண்க. சொல்லா இன்பம்-காமவின்பம். “சொன்னலங் கடந்த காமவின்பம்” என்றார் கம்ப நாடரும்.

     “ஒத்த அன்பான ஒருவனும் ஒருத்தியுங் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவர்க்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்ததெனக் கூரப்படாததாய், யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்ப முறுவதோர் பொருளாதலின்” எனவரும் நச்சினார்க்கினியர் நல்லுரையும் ஈண்டு நினைக, (தொல். பொருள். சூ. க. உரை); நாள்-ஈண்டு நாளிடத்தே செய்யும் இர்வகைக் குறிகளும் என்க. செயிர்-துன்பம். அற்றம்-செவ்வி. பிரியேன் பிரியின் ஆற்றேன் என்றது பொய்த்தனர் என்பாள் பொய்யினர் என்றாள்.

     இனி, 27 ஆம் அடி நெடுமாலை என்பது தொடங்கி 60 பெருமான் என்பது வரையில் இறைவனுடைய இன்பக்கூத்தினை நுதலிவந்த ஒரு தொடர்.

27-30: நெடுமாலை...............................விசிப்ப

     (இ-ள்) நெடுமலைபெற்ற ஒரு மகள் காண-நெடிய இமயமலை ஈன்ற ஒப்பற்ற மகளாகிய பார்வதியார் கண்டு மகிழ; நான்முக விதியே தாளந் தாக்க-நான்கு முகங்களை யுடைய படைப்புக் கடவுள் முறைப்படி தாளம் போடவும்; அந்த நான்முகனை உந்தி பூத்தோன்-அந்த நன்முகனைத் தனது திருவுந்தியிற் படைத்தவனாகிய திருமால்; பாசத்து விசித்து மிறை இடக்கை இசைப்ப-கயிற்றினால் பிணித்து வளைந்த இடக்கை என்னும் தொற் கருவியை முழக்காநிற்பவும் என்க.

     (வி-ம்.) முன்னர் நான்முகன் தாலந்தாக்க என்றாராகலின் அந்த நான்முகனை என்று சுட்டினார். உந்தி பூத்தோன் என்றது திருமாலை. பாசத்து விசித்து என மாறுக. மிறை-வலைவு. “விண்ணிட மன்னர் கொள்ள மிறைக்கொளி திருத்தினானே” என்புழியும் (சீவக சிந். 184) அஃதப்பொருட்டாதல் உணர்க. இடக்கை-ஒருவகைத் தோற்கருவி. இதனை ஆமந்திரிகை என்று கூறுதலு முண்டு. இதனை, “முழவொடு கூடி நின்றிசைத்து ஆமந்திரிகை” எனவரும் சிலப்பதிகாரத்திற்கு (3. 141-142) அடியார்க்குநல்லார் கூறும் உரையிலும் காண்க.

31-34: மூன்று ,,,,,,,,,,,,,,,,,,,,,,,இரட்ட

     (இ-ள்) மூன்று புறத்து ஒன்றில்-முப்புறங்களுள் வைத்து ஒருபுறத்தினுள்; அரசு உடைவாணன் எழுகடல் கிளர்ந்த திரள்களி அடங்க-அரசாட்சி செய்யும் வாணாசுரன் ஏழுகடலின்றும் எழுந்த பெருகிய திரண்ட ஆறாவாரங்கள் அட்ஙகிப்போடும்படி; முகம்வேறு இசைக்கும்-தனது ஐந்து முகங்களும் வெவ்வேறு ஓசையாக முழங்கும்; குடமுழவு-குடமுழாவென்னும் தோற்கருவியினை; மேரு கிளைத்த தோள் ஆயிரத்தொடு இரட்ட-மேருமலை ஆயிரங்கிளைகள் வி்ட்டாற்போன்ற தன்னுடைய ஆயிரங் கைகளாலும் முழுக்காநிற்கவும் என்க.

     (வி-ம்.) வாணன் கடவொலி அடங்கும்படி குடமுழாவினை முழக்க என்றவாறு. வாணன்-வாணாசுரன். கலி-ஆரவாரம் குடமுழா-ஐந்து முகங்களையுடைய ஒரு தோற்கருவி. இரட்டுதல்-முழக்குதல் வாணாசுரனுடைய தோள்களுக்கு மேருமலையின் கிளைகள் உவமை. இஃது இல்பொருளுவமை

35-39: புள்,,,,,,,,,,,,,உருக,

     (இ-ள்) புள்கால் தும்புறு-பறவைக்கால் போன்ற காலினையுடைய துன்புறு முனிவரும்; மனக்கந்திருவர்-எப்பொழுதும் ஆணும்பெண்ணுமாய் மணந்திருக்கும் கந்தருவர்களும்; நால்மறை பயனாம் ஏழ் இசை அமைத்து-நான்கு வேதத்தின் பயனாகிய ஏழு பண்களையும் முறைப்படி அமைத்துக்கொண்டு சருக்கரைக்குன்றில் தேன்மழை நான்றென- சருக்கரையாகிய மலையின்மேல் தேனாகிய மழைபெய்தாற்போலே; ஏழு முனிவர்கள் தாழும் மாதவர்-அத்திரி முதலிய ஏழு முனிவர்களும் வணங்கும் தவப் பெருமையுடைய சிறந்த தவத்தினை யுடையோரெல்லாம்; அன்பினர் உள்ளமொடு என்புகரைந்து உருக-அன்புடையோராய் உள்ளமும் என்பும் கரைந்து உருகி நிற்ப என்க.

     (வி-ம்.) ஏழிசை-குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளறி, தாரம் என்பன. நாலுதல்-வீழ்தல். ஏழுமுனிவர்-அத்திரி, ஆங்கீரசன், கௌதமன், கமதக்கிநி, பரத்துவாசன், வசிட்டன், விசுவாமித்திரன் என்னுமிவர்.

40-44 விரல்............காட்டாது

     (இ-ள்) விரல் நான்கு அணி அமைத்த-நான்கு விரலும் அணியாக அமைக்கப்பட்ட; குரல் வீங்காது-மிடறு வீங்காமலும்; நால்மறை துள்ளும் வாய்பிளவாது-நான்கு மறைகளும் முழங்குதற்கிடனான வாயினைப் பெரிதும் அங்காவாமலும்; உள்காட்டி உணர்த்தும் நோக்கம் ஆடாது-உள்ளக்கருத்தினை மெய்ப்பாடாகக் காட்டி உணர்த்தும் கண்ணிமைகள் ஆடாமலும்; பிதி்ர் கனல்மணி சூழ் முடி நடுங்காது-சிதறிய தழல்போன்ற மணி சூழப்பட்ட முடியணிகலனையுடைய தலையினை அசையாமலும்; வயிறு குழிவாங்கி-வயிறு குழியும்படி எக்கி; அழுமுகம் காட்டாது-அழுதாற்போலும் முகம் காட்டாமலும் என்க,

     (வி-ம்.) விரல் நான்கும் எனல்வேண்டிய முற்றும்மை தொக்கது. குரல்-ஈண்டு மிடறு. காட்டி உள்ளுணர்த்தும்-உள்ளக் கருத்தினை மெய்ப்பாடாகக் காட்டி உணர்த்தும் என்க. நோக்கம்-கண். முடி-முடிக்கலனையுடைய தலை. குழிவாங்கி-குழிய எக்கி. அழுமுகம்-அழும்பொழுது தோன்றும் முகம்.

“கண்ணிமையா கண்டந் துடியா கொடிறசையா
 பண்ணளவும் வாய்தோன்றா பற்றெறியா-வெண்ணிலவை
 கள்ளார் நறுந்தெறியற் கைதவனே கந்தருவ
 ருள்ளாளப் பாட லுரை”

எனவும்,

“இடையினோ டேனைப் பிங்கலை யியக்க
     மிகந்துமூ லந்தொடுத் தியக்கி
நடுவுறு தொழிலாற் பிரமரந் திராந்த
     நடைபெற விசைக்குமுள் ளாளம்
மிடறுவீங் காள்கண் ணிமைத்திடா ளெயிறு
     வெளிப்படாள் புருவமே னிமிராள்
கொடிறதுட துடியாள் பாடலு மதுகேட்
     டனை வழங் குதூகல மடைந்தார்”
                         (திருவிளையாடற். இசைவாது. 31)

எனவும்,

“வயிறது குழிய வாங்க லழுமுகங் காட்டல் வாங்குஞ்
செயிரறு புருவ மேறல் சிரநடு்க் குறல்கண் ணாடல்
பயிரறு மிடறு வீங்கல் பையென வாயங் காத்தல்
எயிறுது காட்ட லின்ன உடற்றொழிற் குற்ற மென்ப”
                             (திருவிளையாடற். விறகு 29)

எனவும் வரும் இவற்றால் உடற்றொழிற் குற்றங்களை உணர்க.

45-49: நாசி...........மாற்றி

     (இ-ள்) நாசி-நாசிப்பாட்டும்; காகுளி-காகுளிப்பாட்டும்; வெடிகுரல்-வெள்ளோசையும்; பேசாக் கீழிசை-நிறமுதலியன எழுந்தொலியாத கீழிசையும்; ஒருபுறம் ஒட்டல்-ஒருபுறம் ஒட்டலும்; நெட்டுயி்ர்ப்பு எறிதல் எறிந்து நின்று இரட்டல்-நெட்டுயி்ர்ப் பெறிந்தாற்போல எறிந்து நின்று இரட்டலும; ஓசை இழைத்தல்-ஓசை இழைத்தலும்; கழிபோக்கு என்னப் பேசுறு குற்றம்-கழிபோக்கும் என்று சொல்லப்பட்ட இக்குற்றங்களையும்; அசைவொடு மாற்றி-சோம்பலையும் ஒருசேர விலக்கி என்க.

     (வி-ம்.) நாசிப்பாட்டு-ஒரு தானத்தே பாட ஒரு தானத்தே நழுவுவது. தானம்-நெஞ்சு முதலியன. காகுளி-பேய் கத்தினாற்போற் பாடுவது. ெவெடிகுரல் வெள்ளை-வெடித்த குரலாகிய நிறமில்லா வெள்ளோசை. நிறம்-

“மாத்திரைக ளொன்பானுந் தானங்க ளெட்டானு
 மேத்துங் கிாயையொன் றிரைந்துங்-கோத்துப்
 பதியயயன்மூன் றெழுத்தாற் றொழிலைந்தும் பண்ணின்
 மதியோக ளைந்துநிற மாம்”

என்பதனானறிக. கீழிசை-நிறமுந்தானமுங்குறையும் தட்டை இசை ஒருபுறமோட்டல்-பாடு நிறத்தை யொதுக்கிப் பாடுதல். நெ்டுயி்ாப் பெறித வெறிந்துநின் றிரட்டல்-ஒருபு பண்ணைப்பாட வேறொரு பண்ணிலே வில்ங்கி நின்னறிரட்ல், ஓசையிழைத்தல்-காகங் கத்தினாற் போற் பாடுவது. கழிபோக்கு-ஓரோசையான தன்மை நீங்கிப் பல வோசையாய் வருதல், அசைவு-மடி.

”பெருங்குரல் கட்டை நழுவல் விலங்க
 லொருக்கி யொதுக்கம் புரைத்தல்-விருப்பிலாக்
 காகுளி காக சுரமென்னு மிவ்வெட்டு
 மாகாவெனச் சொன்னா ராய்ந்து”

என்றா ரிசைமரபுடையார். இதனோடு,

“வெள்ளைகா குளிகீ ழோசை வெடிகுர னாசி யின்ன
எள்ளிய வெழாலின் குற்ற மெறிந்துநின் றிரட்ட லெல்லை
தள்ளிய கழிபோக் சோசை யிழைத்தனெட் டுயி்ர்ப்புத் தள்ளித்
துள்ளலென் றின்ன பாடற் றொழிற்குற்றம் பிறவும் தீர்ந்தே”
                            (திருவிளைாயடற். விறகு. 30.)

எனவரும் பாவினையும் ஒப்பு நோக்கு.

50-54: வண்டின்.....................விதியொடு

     (இ-ம்.) வண்டின் தாரியும்-வண்டின் முரற்சியும்; கஞ்சநாதமும்- கஞ்சக்கருவியின் ஒலியும்; வலம்புரி சத்தமும்-வலம்புரிச்சங்கின் முழக்கமும்; சிரல்-மீன்கொத்திக் குருவியும்; வான் நிலையும்-வானம் பாடியும் என்னும் இவை வானத்தே நிற்கும் நிலையும்; கழை இலை வீழ்வதும்-மூங்கிலின் இலை விழுகின்ற வீழ்ச்சியும்; அருவி ஓசையும்- அருவி விழுங்கால் எழும் ஒலியும், முழவின் முழக்கம்-குடழாவின் முழக்கமும்; வெருகின் புணர்ச்சியும்-பூனையின் புணர்ச்சிப்பொழுதில் எழும் ஓசையும்; என்று இன்னும் இசைப்பப் பன்னிய விதியொடு-என்றும் மேலும் பாடுதற்கு வகுத்துக்கூறிய ஓசை முதலிய சிறந்த விதிகளோடே என்க.

     (வி-ம்.) தாரி-முரற்சி. கஞ்சம்-கஞ்சக்கருவி, சிரல்-மீன் கொத்திக்குருவி, வாள்: ஆகுபெயர். வானம்பாடி. இனிச், சிரல் வானிடத்தே நிற்கும் நிலையும் எனினுமாம். வெருகு-பூனை, இசைப்பப்பன்னிய-பாடற்குக்கூறிய. விதி-முறை, உத்தமமான இசை-குயிலோசையும் வண்டினாதமும் வலம்புரிச் சத்தமுமென்க.

“துய்யமொழி மென்குயிலுஞ் சோலைவரி வண்டினமும்
 வைய முழங்கும் வலம்புரியுங்-கைவைத்துத்
 தும்புருவு நாரதரும் பாடியமூ வோசையென
 நம்புநீர் நால்வேதத் துள்”

என்றா ரிசைமரபுடையவர். பாடுந்தொழிற் கிரியையாவன:-

“கிச்சிலி பூனை குடமுழக்கஞ் செம்மைத்தா
 முச்சிமலை நீர் விழுக்கா டொண்பருந்து-பச்சைநிற
 வேயினிலை வீழ்ச்சியுடன் வெங்கா னிழற்பறவை
 யேயுங்கா லோசை யியம்பு”

என்பதனா னறிக. இசையுந் தொழிலும் பகுத்தறியக் கிடத்தலினுய்த்துணர் நிரைநிரை. இன்னுமென்றதனால் வானம்பாடி பருந்து முதலியன கொள்க. வெருகின் புண்ாச்சி: அன்மொழித்தொகை, உறுமுதலைக் குறித்தலி்னின். பன்னுதல் பன்னென வினைமாத்திரையாய் நின்றது. இயலுதல்-பொருந்துதல்.

இதனோடு

“எழுதுசித் திரம்போன் மன்னி யிழுமெனு மருவி யோதை
 முழவொலி கஞ்ச நாதம் வலம்புரி முரலு மோசை
 கொழுதிசை வண்டின் றாரி யெனவிசைக் குணனும் வேரல்
 விழுமிலை சிரன்மீன் மேல்வீழ் வீழ்ச்சிபோற் பாடற் பண்பும்”
                          (திருவிளையாடற். விறகு, 31.)

எனவரும் பாவினையும் ஒப்புநோக்குக..

55-60: மந்தரம்...............பெருமான்

     (இ-ள்) மந்தரம் மத்திமை தாரம் என்று இவை மூன்றின்-படுத்தல், சமன், எடுத்தல் என்னும் இம்மூன்று இடங்களில் அமைத்து; துள்ளல் தூங்கல் தெள்ளிதின் மெலிதல்-துள்ளலும் தூங்கலும் தெளிவுடைத்தாய் மெலிதலும் ஆகிய இவ்வோசை விகற்பங்களோடே; கூடிய கானம்- பொருந்திய இசைப்பாட்டினைப்பாடி; அன்பொடு பரவ-அன்போடே வாழ்த்தா நிற்பவும்; பூதம் துள்ள-பூதக்கூட்டங்கள் மகிழ்சியால் துள்ளா நிற்பவும்; பேய் கை மறிப்ப-பேய்க் கூட்டங்கள் கைவிதிர்த்துக் கொண்டாடா நிற்பவும்; எங்குள உயிரும் இன்பம் நிறைந்து ஆட- எல்லாவுலகங்களிலும் உள்ள உயிர்க்கூட்டங்கள் உள்ளத்தே இன்பம் நிறைதலாலே கமிழ்ந்து ஆடாநிற்பவும்; நாடக் விதியோடு ஆடிய பெருமான்-கூத்திற்கமைந்த இலக்கண முறையோடே திருக்கூத்தாடியருளிய இறைவனும் என்க.

     (வி-ம்.) மந்தரம் மத்திமை தாரம் என்பன நிரலே நீட்டலும் சமநிலையும் குறுக்கலும் ஆகிய இசை விகற்பங்கள். “நீடவும் குறுகவும் நிவப்பவும் துக்கிப் பாடிய புலவர்” என்றார். வெண்பாமலையினும். துள்ளல் தூங்கல் மெலிதல் இவை இசைவிகற்பங்கள். கானம்பாடி என ஒரு சொல் வருவித்தோதுக. தும்புறுவும் கந்தருவரும் ஏழிசை யமைத்திஉ நான்றென உருகவும் குற்றம் அசைவொடும் மாற்றி இசைப்பப் பன்னிய விதியொடு மூன்றில் கூடிய கானம்பாடி அன்பொடு பரவ என இயைத்துக் கொள்க. இறைவன் இன்பக் கூத்தாடுங்கால் உயிரினங்கள் எல்லாம் உள்ளத்தே இன்பம் நிறைதலாலே களித்து ஆடின என்பது கருத்து. நாடகவிதி-கூத்திலக்கணம்.

61-61: மதுரை................................நீங்கினர்

     (இ-ள்) மதுரை மாநகர் செழியன் ஆகிய-மதுரைமா நகரின்கண் பாணடியமன்னன் ஆகி; கதிர்முடி கவித்த இறைவன்-சடைமுதலிய கரந்து ஒளியுடைய முடியணிகலனணிந்து அருளாட்சிசெய்த சொமசுந்தரக்கடவுளும் ஆகிய இறைவனுடைய; மாமணிக்கால்-மாணிக்கத் திருவடிகளை; தலைக்கொள்ளாக் கையினர்போல-தலைமேற் கொண்டு தொழாத சிறியோர்போல; நீங்கினர்-தம்மொழுக்கத்திற்குச் சான்றாவார் பிறர் இல்லை என்று கருதி இப்பொழுது என்னைப் பிரிந்தனர் என்க.

     (வி-ம்.) ஆடிய பெருமானாகிய இறைவன் எனக் கூட்டுக. செழியன்-பாண்டியங் கையினர்-சிறுமையுடையோர். நீங்கினர் என்றது தம்மொழுக்கத்திற்குத் தம்முடைய நெஞ்சமும் கைதைய மலரும் பெண்ணையும் அன்னத்திரளும் கண்கூடாகக் கண்டிருந்த கரிகளாகவும் இப்பொழுது கரியாவார் யாரும் இலர் என்று கருதி நீங்கினர் என்பதுபட நின்றது.

64-66: போக்கும்...............................வணங்குதுமே

     (இ-ள்) போக்கும் ஈங்குழி வருவதும் கண்டு-பிரிவும் இவ்விடத்து வருவதும் ஆராய்ந்து தெளிந்து; அது உறுதியாயின்-அத்தெளிவினை எமக்குச் சொல்லுவாயானால்; நின்கால் எண்தக போற்றி வணங்குதும்- நின்னுடைய திருவடிகளை எம் உள்ளத்தில் தகுதியாக நினைத்து வனங்கா நிற்போம் என்க.

     (வி-ம்.) போக்கு-பிரிவு. ஈங்குழி-இவ்விடம். எண்தக- எம்கருத்திற்கேற்ப எனினுமாம். வணங்குதும்-வணங்குவோம்.

     னின், மதித்தாமரையே ஒருவேன் நின்பால் கேட்கும் மொழி ஒன்றுளது; அஃதாவது-பொய்ச்சூளுரைத்தார் தம்நெஞ்சமும் மலரும் பனையும் அன்னக்கூட்டமும் சான்றாக இளமரக்காவில் இன்பமும் தந்து சான்றாவார் யாரும் இல்லை என்று நீங்கினர். அவர் போக்கும் வரவும் நீ கண்டு எமக்குக் கூறுதியாயின் நின்கால் போற்றி வணங்குதலும் என வுனைமுடிவு செய்க மெய்ப்பாடும் பயனும் அவை.