பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 29

நேரிசையாசிரியப்பா

 
   
5
  ஈன்றவென் னுளமுந் தோன்றமொழி பயின்ற
வளைவாய்க் கிள்ளையும் வரிப்புனை பந்தும்
பூவையுங் கோங்கின் பொன்னலர் சூட்டிய
பாவையு மானுந் தெருள்பவ ரூரு
நெடுந்திசை நடக்கும் பொருணிறை கலத்தினப்
10
  பெருவளி மலக்கச் செயன்மறு மறந்தாங்குச்
சேர மறுக முதுக்குறை வுறுத்தி
யெரிதெறுங் கொடுஞ்சுரத் திறந்தன ளாக
நதிக்கடத் தறுகட் புகர்கொலை மறுத்த
கல்லிப மதனைக் கரும்புகொள வைத்த
15
  வாலவா யமர்ந்த நீலநிறை கண்டன்
மறிதிரைப் பரவைப் புடைவயிறு குழம்பத்
துலக்குமலை யொருநாட் கலக்குவ போல
வுழுவையுகி ருழுக்கு மேந்துகோட் டும்ப
லுரிவை மூடி யொளியினை மறைத்துத்
20
  தரைபடு மறுக்கந் தடைந்தன போல
விண்ணுற விரித்த கருமுகிற் படாங்கொடு
மண்ணக முருகக் கனற்றுமழன் மேனியை
யெடுத்து மூடி யெறிதிரைப் பழனத்துப்
பனிச்சிறுமை கொள்ளா முள்ளரை முளரி
25
  வண்டொடு மலர்ந்த வண்ணம் போலக்
கண்ணு மனமுங் களிவர மலர்த்துதி
மலர்தலை யுலகத் திருளெறி விளக்கு
மன்னுயிர் விழிக்கக் கண்ணிய கண்ணு
மறையுகு நீர்க்குங் கருவுங் கரியும்
30
  வடிவ மெட்டினுண் மகிழ்ந்த வொன்றுஞ்
சேண்குள மலர்ந்த செந்தா மரையுஞ்
சோற்றுக்கடன் கழிக்கப் பெற்றுயிர் கழிக்கு
மாசைச் செருநர்க் கடைந்துசெல் வழியு
மருளும் பொருளு மாகித்
  திருவுல களிக்கும் பரிதிவா னவனே.

(உரை)
கைகோள்: களவு. நற்றாய் கூற்று

துறை:- சுடரோடிரத்தல்.

     (இ-ம்.) இதனை, “தன்னும் அவனும் அவளும் சுட்டி..................அவ்வழி யுரிய” (தொல். அகத். 36) எனவரும் நூற்பாவின்கண் ‘தெய்வம் நன்மைதீமை அச்சம் சார்தல் என்று அன்னபிறவும் அவற்றொடு தொகைஇ’ என்றதனால் அச்சம் காரணமாகத் தெய்வத்தை நோக்கிக் கூறியது என்க.

23-31: மலர்..........................வானவனே

     (இ-ள்) மலர்தலை உலகத்து இருள் எறி விளக்கும்-பரந்தவிடத்தையுடைய நிலவுலகத்தை மூடியுள்ள இருளை அகற்றும் விளக்கும் ஆகி; மன்உயிர் விழிக்க கண்ணிய கண்ணும்-அவ்வுலகத்தே நிலைபெற்றுள்ள உயிரினங்கள் விழித்துக் கொள்ளுதற்குக் காரனமாக கருதுகின்ற கண்ணும் ஆகி; மறைஉகு நீர்க்கு கருவும் கரியும்-மறையோர் சொரிகின்ற நீருக்குக் காரணமும் அவர் சொரியுங்கால் சான்றும் ஆகி; வடிவம் எட்டினுள் மகிழ்ந்த ஒன்றும்-இறைவனுடைய திருவடிவங்கள் எட்டனுள் வைத்து உயிரினங்கள் மகிழ்வதற்குக் காரணமான ஒருவடிவமும் ஆகி; சேண்குலம் மலர்ந்த செந்தாமரையும்-வானமாகிய நீர்நிலையின்கண் மலர்ந்த ஒரு செந்தாமரை மலர் ஆகியும்; சோற்றுக்கடன் கழிக்கப் போற்று உயிர் கழிக்கும் ஆசைச்செறுநர்க்கு-தம்மன்னன் வழங்கிய பெருஞ்சோற்றுத் திரளையை வாங்கியுண்ட கடனைத்தீர்த்தற்குப் போர்க்களத்தின்கண்ணே தம்மாற் போற்றப்படுகின்ற உயிரைக் கொடுக்கின்ற புகழின்கண் அவாவினையுடைய போர்மறவர்க்குத் தாம் இறந்துழி; அடைந்து செல்வழியும்-துறக்கம் அடைதற்குப் புகுந்து செல்லாநின்ற வழியும் ஆகி; அருளும் பொருளும் ஆகி; எவ்வுயிர்க்கண்ணும் பரந்துபட்டுச்செல்லும் பேரன்புமாகி அவ்வுயிரினங்கள் நுகரும் பொருள்களும் ஆகி; திருஉலகு அளிக்கும் பரிதி வானவனே-அழகிய உலகத்தினைப் பாதுகாத்தருளுகின்ற ஞாயிற்றுக்கடவுளே! என்க.

     (வி-ம்.) ஆகி என்பதனை, கண் முதலியவற்றோடும் ஒட்டுக. உயிர்களின் கண்கள் விழித்தற்குக் காரணமாய்க் கருதுகின்ற சிரந்த அண்ணும் ஆகி என்க. எனவே உயிரினங்களின் கண்ணுக்குக் கண்ணாகி என்றவாறாயிற்று. மறை; ஆகுபெயர். மறையோர் என்க. கரு-காரணம். மழைபெய்தற்கு ஞாயிறே காரணமாதல் பற்றி நீர்க்குக் கருவும் ஆகி என்றார். கரி-சான்று. மறையோர் உகுக்கும் நீருக்குக் கருவாதலோடு அவர் உகுக்காங்கால் கரியும் நீயேயாகி என்றவாறு. சேண்-உயரம். ஆகுபெயராய் வானத்தை உணர்த்தி நின்றது. சோற்றுக்கடன் கழிக்க உயிர்கொடுத்தல் அவிப்பலி என்னும் ஒரு மறத்துறை. இதனை,

கொளு “வெவ்வாள் அமருட் செஞ்சோ றல்லது
 உள்ளா மைந்தர் உயிர்ப்பலி கொடுத்தன்று”
            (புறப்பொருள்-மாலை. வாகைப்படலம். 30)

எனவும்,

“சிறந்த திதுவெனச் செஞ்சோறு வாய்ப்ப
 மறந்தரு வாளமர் என்னும்-பிறங்கழலுள்
 ஆருயிர் என்னும் அவிட்டோர் அங்கஃதால்
 வீரியரெய் தற்பால வீடு”
                (புறப்பொருள்-மாலை. வாகைப்படலம். 30)

எனவும் வரும் வெண்பாமாலையான் உணர்க. இனி மறவர்க்கு மன்னர் சோறுவழங்குவதனை, கொளு:

“திருந்தார் தெம்முனை தெறுகுவார் இவரெனப்
 பெருஞ்சோ றாடவர் பெறுமுறை வகுத்தன்று”

எனவும்,

“உயவர் புகழ் எறிமுர சார்ப்பக்
 குயவரி வேங்கை யனைய-வயவர்
 பெறுமுறையாற் பிண்டங்கோள் ஏவினான் பேணார்
 இறுமுறையா லெண்ணி யிறை”        (புறப்பொ. வஞ்சிப். 23)

எனவும் வரும் வெண்பாமாலையான் உணர்க. போர்க்களத்தின்கண் மறச்சாவெய்திய மறவர் உயிர் ஞாயிற்றுமண்டிலத்தினூடே புகுந்து துறக்கம் எய்தும் என்பதுபற்றிச் செருநர்க்கு வழியும் ஆகி என்றார். உயிர்நீத்துப் புகழ் பெறுதலே அம்மறவர்க்கு விருப்பம் என்றார். ஆசைச்செருநர் என்றார். எல்லாவுயிரினங்களிடத்தும் பரந்துபட்டுச் செல்லும் ஒளியை அருளாக உருவகித்தார். பொருள்-உணவு முதலிய நுகர்பொருள். இவற்றின் தோற்றத்திற்கு ஞாயிறே காரணமாதல் பற்றி பொருளுமாகி என்றார். உலகு: ஆகுபெயர். உயிர்கள் என்க. பரிதி-ஞாயிறு. இப்பகுதியோடு,

தரவு

“ஆயிரங் கதிராழி ஒருபுறந்தோன் றகலத்தான்
மாயிருந் திசைசூழ வருகின்ற வரவுணர்த்த
மனக்கமல மலரினையும் மலர்த்துவான் தானாதல்
இனக்கமலம் உணர்த்துவன்போன் றெவ்வாயும் வாய்திறப்பக்
குடதிசையின் மறைவதூஉ மறையென்று கொள்ளாமைக்
கடவுளர்தம் உறங்காத கண்மலரே கரிபோக
ஆரிருளும் புலப்படுப்பான் அவனேஎன் றுலகறியப்
பாரகலத் திருள்பருகும் பருதியஞ் செல்வகேள்;

 

தாழிசை

“மண்டலத்தி னிடைநின்றும் வாங்குவார் வைப்பாராய்
வுண்டலத்திர் கடவுளரை வெவ்வேறு வழிபடுவார்
ஆங்குலகம் முழுவதும்போர்த் திருவுருவி னொன்றாக்கி
ஆங்கவரை வேறுவே றளித்தியென் றறியாரால்;
மின்னுருவத் தாரகைநீ வெளிப்பட்ட விடியல்வாய்
நின்னுருவத் தொடுங்குதலால் நெடுவிசும்பிற் காணாதார்
எம்மீனுங் காலைவா யிடைகரந்து மாலைவாய்
அம்மீனை வெலிப்படுப்பாய் நீயேஎன் றறியாரால்;
தவாமதியந் தொறுநிறைந்த தண்கலைகள் தலைதேய்ந்து
உவாமதிய நின்னொடுவந் தொன்ராகும் என்றுணரார்
தண்மதியின் நின்னொளிபுக் கிருள்அகற்றாத் தவற்றாற்கொல்
அம்மதியம் படைத்தாயும் நீயேஎன் றறியாரால்;

 

இருசீர் நான்கு

நீராகி நிலம்படைத்தானை நெருப்பாகி நீர்பயந்தனை
ஊழியிற் காற்றெழுவினை ஒளிகாட்டி வெளிகாட்டினை

 

ஒருசீரெட்டு

கருவாயினை விடராயினை
கதியாயினை விதியாயினை
 உரிவாயினை அருவாயினை
ஒன்றாயினை பலவாயினை

 

தனிச்சொல்

எனவாங்கு,

 

சுரிதம்

விரிதிரைப் பெருங்கடல் அமிழ்தந் தன்ன
ஒருமுதற் கடவுள்நிற் பரவுதும் திருவொடு
சுற்றந் தழீஇக் குற்ற நீக்கித்

துன்பந் தொடரா இன்ப மெய்திக்
கூற்றுத்தலை பணிக்கும் ஆற்றல் சான்று
கழிபெருஞ் சிறப்பின் வழிவழிப் பெருகி
நன்றறி புலவர் நாப்பண்
வென்றியொடு விளங்கி மிகுகம்யாம் எனவே”
                      (தொல். பொருள். 458. மேற்கோள்)

எனவரும் பழம்பாடலை ஒப்புக் காண்க. விளக்காய்ச் சிரப்பினைக் கொடுத்தலானும், கண்ணா யெல்லாப் பொருளுந் தெரியப்பண்ணுதலானும், கருவா யெல்லாப் பொருளையுமுண்டாக்குதலானும், சான்றாயவரவர் செய்த நல்வினை தீவினை தவர துண்மையாய் நிற்றலானும், தாமரையாய்க் கண்டோர்க்கு உவகையும் விருப்பமு முண்டாக்குதலானும், வழியாய்க் கதியிற் செலுத்தலானும், அருளும் பொருளுமாயிடுக்கண் தீர்த்தலானும் ‘அளிக்கும்’ என்றார். இது, பலபொருளுருவகம்.

1-8: ஈன்ற............................இறந்தானாக

     (இ-ள்) ஈன்ற என் உளமும்-பெற்று வளர்த்த என் நெஞ்சமும்; மொழிதோன்றப் பயின்ற வளைவாய்க் கிள்ளையும்- தான்மகிழும்படி தன்னுடனே எழுத்துருவம் தோன்ற நன்கு மொழிபேசிய வளைந்த அலகினையுடைய தன்கிளியும்; வரிபுனை பந்தும்-வரிந்து அழகுசெய்த தன்னுடைய பந்தும்; பூவையும்-தான் பேணிவளர்த்த நாகணவாய்ப்புள்ளும்; கோங்கின் பொன் அலர்சூட்டிய பாவையும்-தால் ஓலுறுத்தி முலைகொடுத்துப் பாராட்டிக் கோங்கினது பொன்நிற மலர்களைச் சூட்டிய தனது விளையாட்டுப் பாவையும்; மானும்-தான் பேணி வளர்த்த மான் கன்றும்; தெருள்பவர் ஊரும்-திசையறிந்த மாலுமிகள் தாம் செலுத்துகின்ற; நெடுந்திசை நடக்கும் பொருள் நிறை கலத்தினை- நெடுந்தொலை இயங்கும் பண்டங்கள் நிறைந்த மரக்கலத்தினை; பெருவளி மலக்க-பெரிய சூரைக்காற்றுச் சுழற்றுதலாலே; செயல் மறந்து மறுகி ஆங்கு-அம்மாலுமிகள் கையறவுகொண்டு நெஞ்சம் சுழன்றாற்போல; சேர மறுக-சுழன்று வருந்தும்படி எம்மை நீத்து; முதுக்குறைவு உறுத்தி-தனது பேரறிவுடைமையை எமக்குக் காட்டி; எரி தெறும் கொடுஞ்சுரத்து இறந்தனளாக-தீ சுட்டெரிக்கும் கொடிய பாலையிலே சென்றனள் ஆக என்க.

     (வி-ம்.) ஈன்ற என்பது வயிறுளைந்து ஈன்று வளர்த்த என்பதுபட நின்றது. தோன்ற-எழுத்துருவம் தோன்ற; பொருள்தோன்ற எனினுமாம். கிள்ளை-கிளி, வரிப்புனைந்து- வரியையுடைய புனைந்த பந்து; வரிந்து புனைந்த பந்துஆம். பூவை-நாகணவாய்ப்புள். பாவை-விளையாட்டுப்பாவை. மிகுதிபற்றிப் பந்தும் பாவையும் மறுக என்றாள். தெருள்பவர்-திசை அறிந்த மாலுமிகள். நடத்தல்-இயங்குதல். பொருள்-பண்டங்கள். கலம்- மரக்கலம். பெருவளி-சூறைக்காற்று. மலக்குதல்-சுழற்றுதல். செயல் மறுத்தல்-கையாறு கொள்ளல். மறுகி என்பதன் ஈறுகெட்டது. இனி மறுசெயல் எனஇயைத்து மற்றுச்செயல் எனினுமாம். என்உளமும், கிள்ளையும் பந்தும், பூவையும், பாவையும், மானும் ஒருசேர மறுக என இயையும். தெருள்பவர் தாம் ஊரும் கலத்தினை வளிமலக்கச் செயல்மறந்து மறுகினாற்போல மறுகஎனத் தொழிலுவமையாக்குக. முதுக்குறைவு-பேரறிவு. உறுத்துதல்-அறிவுறுத்துதல். அஃதாவது தான் பேரறிவுடையளாதலை எமக்குக் காட்டி என்றவாறு. இதனாற் போந்தபொருள், என் மகள் தனக்கு எம்மினுங் காட்டில் தன் கேள்வனே சிறந்தான் என உணர்ந்து எம்மை நீத்துக் கற்புக் கடம்பூண்டு அவனுடன் பாலையில் சென்றாள் என்றவாறு. இச்செயல் அறத்தொடு புணர்ந்த அவள் அறிவுடைமையைப் புலப்படுத்துதலின் முதுக்குறைவுறுத்தி என்றாள். இதனாலும் ஞாயிறு அவளை வருத்தாமைக்கு ஓர் ஏதுக்காட்டினாள் என்க. அவள் மெல்லியல் புணர்த்துவாள் எரிதெறுங் கொடுஞ்சுரத் திறந்தனள் என்றாள்.

9-11: நதிக்........................கண்டன்

     (இ-ள்) நதிக்கடம் தறுகண் புகர் கொலை மறுத்த கல் இபம் அதனை-யாறுபோல் மதநீர் சொரிதலையும் தறுகண்மையினையும் புள்ளிகலையும் கொலைத்தொழிலையும் நீத்த கல்லால் இயன்ற யானையை, கரும்பு கொளவைத்த ஆலவாய் அமர்ந்த நீலம்நிறை கண்டன்-உயிரியானையைப்போலக் கரும்பு தின்னும்படி செய்தருளிய மதுரையில் எழுந்தருளியுள்ள நீல நிறம் நிறைந்த மிடற்றினையுடைய சிவபெருமான் என்க.

     (வி-ம்.) கடம்-மதநீர். புகர்-புள்ளி. கல்யானை ஆதலின் மதம் தறுகண்மை புகார் கொலை முதலியன இல்லையாயிற்று. கல்லிபம்-கல்லாலியன்ற யானை. கல்லானை கரும்பு கொளவைத்தது, இறைவன் மதுரையில் செய்தருளிய திருவிளையாடலுள் ஒன்று. ஆலவாய்-மதுரை. கண்டன்-மிடற்றினையுடையோன்.

12-19: மறிதிரை............................மூடி

     (இ-ள்) உழுவை உகிர் உழக்கும் ஏந்துகோட்டு உம்பல் உரிவைமூடி-புலி தன் நகத்தால் கிழித்தற்குக் காரணமாகிய உயர்ந்த கோட்டினையுடைய யானையினது தோலைப் போர்த்துக்கொண்டு; ஒளியினை மறைத்து-தன்னுடைய பேரொளியினை மறைத்துக்கொண்டமையால்; தரைபடும் மறுக்கம் தடைந்தனபோல-உலகின்கண் உள்ள உயிர்கள் அப்பேரொளியைப் பொறுக்கமாட்டாமையால் படுகின்ற துன்பங்கள் தடைப்பட்டன ஆதல்போல; துலக்குமலை மறிதிரை பரவை புடைவயிறு குழம்ப கலக்குவது ஒரு நாள்போல-விளக்கமுடைய மலையால் தேவர்களும் அசுரர்களும் புரளுகின்ற அலைகலையுடைய கடலின் வயிற்றிடம் குழம்பும்படி கலக்குவதற்கு இடனான் அந்த ஒருநாளில் அதன்கண் உண்டாகிய நஞ்சுபோல; மண்ணகம் உருக கனற்றும் அழல் மேனியை-நில உலகம் உருகும்படி சுடுகின்ற தியினையுடைய நின்மேனியை; விண்ணுற விரித்த கருமுகில் எடுத்து படாங்கொடு மூடி-வானத்தின்கண் பொருந்தும்படி நின்னால் விரிக்கப்பட்ட கரிய முகிலை எடுத்துப் போர்வையாகக் கொண்டு மறைத்து என்க.

     (வி-ம்.) நீலகண்டன் உயிர்கள் பொறுக்கவியலாத தனது பேரொளியை யானைத்தோலால் மூடி அவ்வுயிரினங்கள் மறுக்கந் தீர்ந்து தன்னைக் கண்டு கண்குளிரச் செய்தான். அவ்வுயிரினங்களின் துன்பமும் தீர்ந்தன. அதுபோல நீயும் உன்னுடைய அழல்மேனியை முகிற் போர்வையால் மறைத்து எம்மகட்கு இன்பம் செய்தி என்பது கருத்தாகக் கொள்க. இனி இக்கருத்துக்கேற்ப மறிதிரைப் பரவை புடைவயிறு குழப்பக் கலக்குவதாகிய ஒருநாளில் அதன்கட்டோன்றிய நஞ்சுபோல மண்ணகமுருகக் கனற்றும் அழல்மேனியை என இயைத்தும் வருவித்தும் பொருள் கூறுக. இப்பகுதிக்குப் பழைய உரையாசிரியர் மாற்றியும் வருவித்தும் கூறிய பொருள் பொருந்தாமையும் உணர்க. யாம் கூறிய பொருட்குக் கலக்குவது என்பாலது ஈறுகெட்டு நின்றதெனக் கொள்க. தெய்வ ஒளியினை உயிரினங்கள் கண்டுபொறா என்றே இறைவன் தன்மேனியைக் கரித்தோலால் போர்த்தனன் என்னும் இது தற்குறிப்பேற்றம் என்க. மறைத்து என்றதனை மறைப்ப எனச் செயவென்னெச்சமாக்குக. தரை; ஆகுபெயர்; உயிரினங்கள். மறுக்கம்-துன்பம். தடைந்தன-தடைப்பட்டன.

19-22: எறிதிரை................................மலர்த்துதி

     (இ-ள்) எறிதிரை பழனத்து-வீசுகின்ற அலைகளையுடைய நீர் நிரம்பிய மருதப்பரப்பின்கண்; பனிச்சிறுமை கொள்ளா-பனிப் பருவத்தாலுண்டாகும் துன்பத்தை எய்தாத ஏனைப் பருவத்தின்கண்; முள்ளரை முளரி-முள்ளமைந்த அரையினையுடைய செந்தாமரை; வண்டொடு மலர்ந்த வண்ணம் போல-விடியற்காலத்தே தன்னகத்து வைத்துப் பொதிந்த வண்டோடே இதழ்விரிந்து மலர்ந்த தன்மைபோல; மனமும் கண்ணும் களிவர மலர்த்துதி-என் மகளுடைய நெஞ்சமும் கண்ணும் மகிழும்படி அவள் முகத்தை மகிழ்ச்சியால் மலரச் செய்வாயாக இஃது அடியேன் நின்னை வேண்டும் வரங்காண் என்க.

     (வி-ம்.) எறிதிரைப்பழனம் என்றது மருதவைப்பினை. பனிச்சிறுமை-பனியாலுண்டாகும் துன்பம். பனிக்காலத்தே தாமரைமலர் முகங் கருகுதல் இயல்பு. ஆதலால் அப்பருவத்தை விலக்குவார் பனிச்சிறுமை கொள்ளா முளரி என்றார். கண்ணுக்கு வண்டு உவமை. தாமரை தன்னகத்திருந்த வண்டுகளை அகத்தே வைத்து மாலைப்பொழுதில் குவிந்துகொள்ளும். ஆகலின் அது மறுநாட்காலையில் மலருங்கால் அங்குச் சிறைப்பட்ட வண்டும் சிறகுவிரித்து முரன்று எழுதல் இயல்பாகலின் வண்டொடு மலர்ந்த வண்ணம்போல என்றாள். மலர்த்துதி என்ற வினைக்கேற்பச் செயப்படுபொருள் வருவித்துரைக்கப்பட்டது.

      இனி, பரிதிவானவனே என்மகள் சுரத்திறந்தனள். நீ அவளை நின் அழல் மேனியால் வாட்டாமல் முகிற்படாம் கொண்டு மூடி நின்னைக்கண்டு மனமும் களிவர அவள்முகத்தை மலர்த்துவாயாக. இது யான் வேண்டும் வரம்என வினைமுடிவு செய்க. இது யான் வேண்டும் வரம் என்பது குறிப்பெச்சம். மெய்ப்பாடும் பயனும் அவை.