பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 4

நேரிசையாசிரியப்பா

 
   
5
  அண்டமீன் றளித்த கன்னிமுனி வாகத்
திருநுதன் முஐத்த கனறெறு நோக்கினில்
ஆயிர மணிக்கரத் தமைத்தவான் படையுடன்
சுயம்பெறு வீரனைத் தந்தவன் றன்னால்
உள்ளத் தருளுந் தெய்வமும் விடுத்த
10
  இருமண்மனத் தக்கன் பெருமக முண்ணப்
புகதே வினர்தம் பொருகடற் படையினை
ஆரிய வூமன் கனவென வாக்கிய
கூடற் பெருமான் பொதியப் பொருப்பகத்
தருவியஞ் சார லிருவியம் புனத்தினும்
15
  மயிலுங் கிளியும் குருவியும் படிந்து
நன்றி, செய்குநர்ப் பிழைத்தோர்க் குய்வில வென்னும்
குன்றா வாய்மை நின்றுநிலை காட்டித்
தங்குவன கண்டும் வலிமனங் கூடி
ஏகவுந் துணிந்தன மெம்பெரும் படிறு
  சிறிதுநின் றியம்ப வுழையினங் கேண்மினின்
றூற்றெழு மிருகவுட் பெருமதக் கொலைமலைக்
கும்ப மூழ்கி யுடற்குளித் தோடப்
பிறைமதி யன்ன கொடுமரம் வாங்கித்
20
  தோகையர் கண்ணெனச் சுடுசரந் துரக்கும்
எம்முடைக் குன்றவர் தம்மனம் புகுதவிப்
புனகுடிக் கணியர்தம் மலர்க்கையே டவிழ்த்து
வரிப்புற வணில்வாற் கருத்தினை வளைகுரல்
கொய்யுன், காலமு நாள்பெறக் குறித்து
25
  நிலழுங் கொடுத்தவ ரீன்ற
மழலை மகார்க்கும் பொன்னணி தற்கே.

(உரை)
கைகோள், களவு. தோழிக்கூற்று

துறை: பிரிவருமை கூறல்
(இ-ம்.) இதுவுமது.

     (இ-ள்) உழையினம்-மானினங்காள்; எம்பெறும் படிறு-எம்முடைய பெரிய குற்றத்தை; இன்று இயம்ப இப்பொழுது யாங்கள் நும்பாற்சொல்ல; சிறிது நின்று கேண்மின்-சிறிது பொழுது நின்று கேளுங்கள்! என்க.

     (வி-ம்.) தலைவன் சிறைப்புறத்தே வந்து நிற்றலை அறிந்த தோழி அவன் வரவறியாள் போன்று மான்களுக்குக் கூறுவாள்போல் அவன் கேட்பக் கூறத் தொடங்குபவள் அவற்றை விளித்துக் கூறுகின்றாள். படிறு-குற்றம். பெரும்படிறு சிறிது நின்றியம்ப என்புழிச் செய்யுளின்ப முணர்க. உழையினம்: விளி; மானினம். இன்று இயம்ப என மாறிக் கூட்டுக. பொறுமையுடன் நின்று கேளுங்கள் என்பாள் சிறிது நின்று கேண்மின் என்றாள்.

1 - 4: அண்டம்.......................................தன்னால்

     (இ-ள்) அண்டம் ஈன்று அளித்த கன்னி-எண்ணிறந்த அண்டங்கலையும் படைத்து அவற்றின்கண் வாழும் உயிர்களையும் பாதுகாத்த கன்னிகையாகிய உமாதேவியார்; முனிவு ஆக- சினங்கொண்டாராக; அக்குறிப்பறிந்து; திருநுதல் முளைத்த கனல் தெறு நோக்கினில்-தன்னுடைய அழகிய நுதலின்கண் தோன்றிய நெருப்பாகச் சுடா நுன்ற கண்ணினால்; மணிக்கரத்து அமைந்த ஆஇரம் வான்படையுடன்-அழகிய கையிலே அமைக்கப்பட்ட எண்ணிறந்த சிறந்த படைக்கலன்களோடே; சயம் பெறுவீரனைத்தந்து அவன் தன்னால்-வெற்றி பெறுமியல்யுடைய வீரபத்திரனைப் படைத்தருளிய அவனாலே என்க.

     (வி-ம்.) அண்டம்-உலகங்கள். அளித்த-பாதுகாத்த. கன்னி-என்றும் இளமை நீங்காத உமையம்மையார். முனிவு-சினம். நுதல்-நெற்றி. தெறு நோக்கு-சுடும் கண். ஆயிரம் என்றது எண்ணிறந்த என்றபடி. வான்-சிறந்த. சயம்-வெற்றி. வீரனை-வீரபத்திரனை. தந்து-படைத்தருளி.

5 - 10: உள்ளத்து..................................சாரன்

     (இ-ள்) உள்ளத்து அருளும் தெய்வமும் விடுத்த-தன் நெஞ்சத்தே அருளுடைமையும் தெய்வம் உண்டு என்னும் எண்ணத்தையும் துவரநீக்கிய; அடுள்மனத் தக்கன்- அறியாமையையுடைய மனத்தையுடைய தக்கன் என்பான் செருக்கினால் தொடங்கிய; பெருமகம் உண்ணப்புக்க தேவினர்தம்- பெரிய வேல்வியின்கண் அவியுண்ணப் புகுந்த நான்முகன் இந்திரன் முதலிய தேவர்களுடைய; பொருகடல் படையினை-போர் செய்தற்குக் காரணமான கடல்போன்ற பெரியபடைகளை; ஆரியவூமன் கனவு என ஆக்கிய-ஆரிய வூமன்கண்ட கனவைப் போன்று வெளிப்படாமற் செய்த; கூடல் பெருமான்-மதுரையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுடைய; பொதியப் பொருப்பு அகத்து- பொதியமலையின்கண் அமைந்த; அருவி அம்சாரல்-அருவிகளையுடைய அழகிய சாரலின்கண் என்க.

     (வி-ம்.) அருள்-எல்லாவுயிர்களிடத்தும் பரந்துபட்டுச் செல்லும் பேரன்பு. தெய்வம் உண்டு என்னும் நினைவு என்க. இருள்-அறியாமை. மகம்-வேள்வி. உண்ண-அவியுண்ண என்க. தேவினர்-நான்முகன் முதலியோர். பொருகடற்படை: வினைத்தொகை. ஆரியவூமன்-ஆரியனாகிய வூமங் ஊமன் கனவென அரியவாக்கிய எனக் கூறிக் குறுக்கல்விகாரம் என்பாரும் உளர். ஊமன்கண்ட கனவு வெளிப்படாததுபோலத் தேவர்படையும் வெளிப்படாதாயற் றென்பது கருத்து. சாரல்-மலைப்பக்கம்.

10 - 15: இருவி.......................................துணிந்தனம்

     (இ-ள்) இருவி-அம்புனத்திலும்-தினை அரிந்து இருவியாக விடப்பட்ட தாளையுடைய அழகிய இத் தினைப்புனத்தின் கண்ணும்; மயிலுங் கிளியுங் குருவியும் படிந்து-மயிலும் கிளியும் குருவியும் தமக்கு உணவில்லாதிருந்தும் பயின்று பழகிய இடமாதலின் இவ்விடத்தினின்றும் போகாவாய் வீழ்ந்து கிடத்தலால்; நன்றி செய்குநர்ப் பிழைத்தோர்க்கு-த்மக்கு நன்மை செய்தவர் திறத்திலே தவறு செய்தவர்க்கு அப்பாவத்தினின்றும் னீங்குவதற்கு; உய்வுஇல-வழியில்லை; என்னும் குன்றாவாய்மை-என்று கூறப்படும் குறையாத உண்மையை; நிலைநின்று காட்டித் தங்குவன கண்டும்-தாம் ஈண்டே தங்கி நிலைத்தலால் எமக்கு அறிவித்துத் தங்குகின்ற அப்பறவைகளைக் கண்டு வைத்தும்; மனவலிகூடி-மனவலிமை பெற்று; ஏகவுந்துணிந்தனம்-இப் புனங்காவலை விட்டு எம்மில்லத்திற்குச் செல்லத்துணிந்துளோம் என்க.

     (வி-ம்.) இருவி-கதிரை அரிந்துகொண்டு வறிதேவிடப்பட்ட தாள். புனத்தினும் என்புழி உம்மை, இழிவு சிறப்பு.என்னை" தமக்கு இரை வழங்கவியலாத இவ்வறும்புனத்திலும் என்பதுபட நிற்றலால் என்க. மயில் முதலிய பறவைகள் பண்டு தமக்குத் தினைப்புனம் இரை வழங்கியனன்றியை நினைந்து அது தன் கதிரையிழந்து நல்கூர்ந்த விடத்தே அதனைப்பிரிந்து போதல் நன்றி மறத்தல் என்னுந் திவினையாம் என்று அஞ்சி அவ்வறும்புனத்தைப் பிரியாது தங்குகின்றன. அவற்றின் ஒழுக்கத்தால் யாங்கள் நன்றி செய்குநர்ப் பிழைத்தோர்க்குய்வில் என்னும் வாய்மையை உணைர்ந்திருந்தும் யாங்கள் எமக்கு எம்பெருமான் செய்த நன்றியைப் பொருட்படுத்தாது பிரிந்து போகின்றோம் என்பது கருத்து. யாங்கள் இயல்பாகப் பிரிகின்றோமில்லை, நேர்ந்த செவ்வி அங்ஙனம் எம்மைப் படிறு செய்விக்கின்றது என்று இரங்குவாள் வலிமனங்கூடி ஏகவுந்துணிந்தன என்றாள். ஏகவும் என்புழி உம்மை இழிவு சிறப்பு. ஏகவுந் துணிந்தனம் என்றது பிரிவருமை கூறியபடியாம்.

17 - 21 ஊற்றெழுக............................................புகுத

     (இ-ள்) பெருமதம் ஊற்று எழும் இருகவுள்-மிக்க மதநீர் இடையறாது ஊற்றெழாநின்ற இரண்டு கவுள்களையுடைய; கொலைமலை-கொலைத்தொழிலை யுடைய மலைபோன்ற யானையின்; கும்பம் மூழ்கி-மத்தகத்திலமிழ்ந்து; உடல் குளித்துஓட-உடலின் கண் உருவியோடும்படி; பிறை மதியன்ன கொடுமரம் வாங்கி-பிறைத்திங்கள் போன்ற வில்லை வளைத்து; தொகையர் கண் எனச் சுடுசரம்-துரக்கும்-மயில்போன்ற மகளிரையுடைய கண்ணை ஒத்த சுடுகின்ற கணையை ஏவுகின்ற; எம்முடைக் குன்றவர் தன்மனம் புகுத-எம்முடைய குன்றக் குறவருடைய நெஞ்சிலே புகுதும்படி;

     (வி-ம்.) மதம் ஊற்றெழு கவுள் என்க. கொலைமலை-யானை: அன்மொழித்தொகை. தஞ் சுற்றத்தாரின் ஆற்றல் கூறுவாள், அவரெய்யும் கணை யானையின் மத்தகத்தை துளைத்து உடலினும் ஊடுறுவும் என்றாள். அவர்தாமே ஆராந்தறியவல்லுநர் அல்லர் என்பாள், மனம்புகுத என்றாள்.

21 - 26: இப்புனக்குடி.....................................பொன்னணிதற்கே

     (இ-ள்) இப்புனக்குடி கணியர்-இத்தினைப்புனத்தின்கட் பழங்குடியாகிய இவ்வேங்கையராகிய காலக்கணிவர்; தம் மலர்க்கை ஏடு அவிழ்த்து-தம் கையதாகிய மலராகிய குறிப்பேட்டினை அவிழ்த்துப் பார்த்து; நிழலும் கொடுத்து-அவர் தம்பாற் சோதிடங் கேட்டதற்கு நீழலுமளித்து; வரிப் புற அணில்வால் கருந்தினை வளைகுரல் கொய்யும் காலமும்-வரிகளையுடைய முதுகினையுடைய அணிலின் வால் போன்ற கரிய தினையின் முதிர்ந்து வளைந்த கதிரினைக் கொய்தற்கு காலமும்; நாள் பெறக் குறித்து-நன்னாளாகக் குறிப்பிட்டு மேலும்; அவர் ஈன்ற மழலை மகார்க்கும் பொன் அணிதற்கு-அக்குன்றவர் ஈன்ற மழலை மொழியினையுடைய மக்கட்கும் பொன் அணிந்து விடுதலாலேயே என்க.

     (வி-ம்.) கணியர்-வேங்கையர். செறலால், அஃறிணை உயர்திணையாயிற்று. இப்புனத்தின் பூங்குடியாகிய கணியர் என்க. வேங்கை குறிஞ்சிக் கருப்பொருளாதல்பற்றி இங்ஙனம் கூறினாள். கணியர்-காலக்கணிதர். வேங்கைமலர்தல் கண்டு குன்றவர் தினை கொய்தற்குரிய காலம் இஃதென்றறிதலாலே வேங்கை சோதிடங் கூறிற்று எனத் தற்குறிப்பேற்றிக் கூறுகின்றாள். வேங்கை சோதிடங் கூறிற்று என்பதற்கேற்பக் கை யேடவிழ்ந்து....குறித்து எனச் சிலேடைவகையாற் கூறிய நயம் உணர்க. மலராகிய கையேடு என்க. மலரின்கண் ஒழுங்குற்ற இதழுமாம். ஆள்-நன்னாள். கதிர் கொய்யத் தொடங்குங்கால் நன்னாள் கொண்டு தொடங்கல் மரபாகலின் காலமும் நாள் பெறக் குறித்து எனப்பட்டது.

     அவர்-அக்குறவர். பொன்னணிதல்-பின்போன்ற தன் மலரைச் சூடுவித்தல். பொன்னணிதல் என்னும் சடங்கையும் செய்து என ஒரு பொருள் தோன்றுதல் உணர்க. மழலை மகார் என்றமையால் உரையாசிரியர். பொன்னணிதல்-கலியாணம் என்றது பொருந்தாமை யுணர்க. பொன்னணிதற்கு; உருபு மயக்கம். பொன்னணிதல் என்க.

     இனி, உழையினங்காள்! யாம் செய்த படிறு கேண்மின்! மயில் முதலியன தங்குதல் கண்டும் ஏகவுந்துணிந்தனம். எற்றிற்கு அங்ஙனம் துணிந்தீர்" எனின் எம் குன்றவர் மனம் புகும்படி வேங்கை மலர்க்கையேடவிழ்த்துத் தினைக்குரல் கொய்யுங் காலமும் குறித்து அவர் தம் மக்கட்குப் பொன்னணிந்தமையான் என்றவாறு.

     வேங்கை மலர்ந்தமையால் எந்தமர் தினை கொய்யலாவார் யாம் காவலொழிந்து இல்லிற் கேகின்றோம் என்றுணர்த்தியபடியாம்.

     இதன்கண் உழையினங்கேண்மின்! என்றது மானொடு கூறி வரைவுகடாவியது. கணியர் குரல் கொயுங் காலங்குறித்துப் பொன்னணிந்தமையால் என்றது, தினைமுதிர் வுரைத்து வரைவு கடாவியது. மயிலும்...........தங்குவன கண்டும் வலிமனங்கூடி ஏகவுந் துணிந்தனம் என்றது பிரிவருமை கூறி வரைவு கடாவியது என்க. இவ்வாற்றான் மேலே காட்டிய திருக்கோவையார்த்துறை மூன்றும் இதன்க ணடங்கினமை ய்ணர்க. மெய்ப்பாடும் பயனும் அவை.