பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 
செய்யுள் 42
 
   
5
  ஈன்றநெஞ் சூழற் கவர்விழி பிழைத்த
வெறிவிழிப் பிணர்மருப் பாமான் கன்றினை
மென்னடைக் குழைசெவிப் பெறாவெறுங் கரும்பிடி
கணிப்பணைக் கவட்டு மணற்சுனைப் புறத்தும்
தழைக்குற மங்கைய ரைவனந் துவைக்கு
10
  முரற்குழி நிரைத்த கல்லறைப் பரப்பு
மானிட மாக்க ளரக்கிகைப் பட்டென
நாச்சுவை மடிக்கு முணவுத வாது
வைத்துவைத் தெடுக்குஞ் சார னாட
னறிவும் பொறையும் பொருளறி கல்வியு
15
  மொழுக்கமுங் குலனு மழுக்கறு தவமு
மினிமையும் பண்பு மீண்டவு நன்றே
வெடிவாற் பைங்கட் குறுநரி யினத்தினை
யேழிடந் தோன்றி யினனூற் கியைந்து
வீதி போகிய வாலுளைப் புரவி
20
  யாக்கிய விஞ்சைப் பிறைமுடி யந்தணன்
கொண்டோற் கேகுங் குறியிடை நன்னா
ளன்னைய ரில்லத் தணிமட மங்கையர்
கண்டன கவருங் காட்சி போல
வேலன் பேசி மறிசெகுத் தோம்பிய
25
  காலங் கோடா வரைவளர் பண்டம்
வருவன வாரி வண்டினந் தொடரக்
கட்கயல் விழித்துப் பூத்துகின் மூடிக்
குறத்தியர் குடத்தியர் வழிவிட நடந்து
கருங்கான் மள்ள ருழவச் சேடியர்
30
  நிரைநிரை வணங்கி மதகெதிர் கொள்ளத்
தண்ணடைக் கணவற் பண்புடன் புணரும்
வையை மாமாது மணத்துடன் சூழ்ந்த
கூடற் பெருமான் பொன்பிறழ் திருவடி
நெஞ்சிருத் தாத வஞ்சகர் போலச்
  சலியாச் சார்பு நிலையற நீங்கி
யரந்தை யுற்று நீடநின் றிரங்கு
முருந்தெயிற் றிளைம்பிறைக் கோலந்
திருந்திய திருநுதற் றுகிரிளங் கொடிக்கே.

(உரை)
கைகோள்: களவு. தோழி கூற்று

துறை: வழியொழுகி வற்புறுத்தல்.

     (இ-ம்.) இதற்கு, “நாற்றமும் தோற்றமும்” (தொல். கள. 23) எனவரும் நூற்பாவின்கண் ‘ஆங்கதன் றன்மையின் வன்புறை உளப்படப் பாங்குற வந்த நாலெட்டு வகையும்” என்புழி வன்புறை என்னும் விதிகொண்டு தலைவனது வரைபொருட் பிரிவினை ஆற்றாத தொழி அவள்வழி யொழுகி அவளைப் பாராட்டுமுகத்தான் ஆற்றுவித்து என்று கொள்க. இதற்கு மேலே காட்டியுள்ள வன்புறை யெதிரழிந்திரங்கல் என்னும் தலைவி கூற்றாய் வரும் திருக்கோவைச் செய்யுள் பொருந்துமாறில்லை. ஒரோவழி அதற்கு முற்செய்யுளாகிய வழியொழுகி வற்புறுத்தல் என்னும் துறை பற்றிவரும் தோழி கூற்றாகிய,

மதுமலர்ச் சோலையும் வாய்மையும்
அன்பும் மருவிவெங்கான்
கதுமெனப் போக்கும் நிதியின்
அருக்குமுன் னிக்கலுழ்ந்தால்
நொதுமலர் நோக்கமொர் மூன்றுடை
யோந்தில்லை நோக்கலர்போல்
இதுமலர்ப் பாவைக்கென் னோவந்த
வாறென்ப ரேந்திழையே.”           (திருக்கோவை. 275)

“சூழிருங் கூந்தலைத்
 தோழி தெருட்டியது”

இப்பாட்டுப் பொருந்துதல் கூடும். இதனை ஆராய்ந்து கொள்க.

13-16: வெடிவால்............................அந்தணன்

     (இ-ள்) வெடிவால் பைங்கண் குறுநரி இனத்தினை-வெடித்த வாலினையும் பசிய கண்களையுமுடைய குறிய நரித்திரளை; ஏழ் இடம் தோன்றி-ஏழிடங்கள் உயர்ந்து காணப்பெற்று; இனன்நூற்கு இயைந்து- குதிரைக் கூட்டத்திற்கு இலக்கனம் கூறும் நூல்விதிக்குப் பொருந்தி; வீதிபோகிய வால் உளைப்புரவி ஆக்கிய-மதுரைமா நகரத்தின் வீதியிலே செல்லும் வெள்ளிய பிடரிமயிரையுடைய குதிரைகளாக்கிய; விஞ்சைப் பிறைமுடி அந்தனன்- வித்தையினையுடைய பிறையினையுடைய முடியினையுடைய அந்தணனாகிய என்க.

     (வி-ம்.) வெடிவால்-பாறிய மயிரையுடைய வால். வீதி-மதுரைமா நகரத்து வீதி என்க. வால்-வென்மை. உளை-பிடரிமயிர். விஞ்சை- வித்தை. அந்தணன்- இறைவன். “அறவாழி அந்தணன்” எனத் திருவள்ளுவரும் ஓதுதல் காண்க. இன்னூற்கியைந்து என்புழி இருநூற்கியைந்து எனவும் பாடம் உண்டு.

17-26: கொண்டோற்...........................எதிர்கொள்ள

     (இ-ள்) அன்னையர் இல்லத்து அணிமட மங்கையர்- தாய்வீட்டின்கண் ணிருக்கின்ற அழகும் மடப்பமுமுடைய மகளிர்கள்; கொண்டோற்கு ஏகும் குறிஉடை நன்னாள்-தம்மை மணந்த கணவன் வீட்டிர்குச் செல்லுதற்கெனக் குறித்த குறிப்புடைய நல்ல நாளிலே; கண்டன கவரும் காட்சிபோல- தாயில்லத்தே தாம் கண்டகண்ட பொருள்களை யெல்லாம் கவர்ந்துகொண்டு செல்லுகின்ற தோற்றத்தைப் போல; வேலன் பேசி மறி செகுத்து ஓம்பிய-மழை பெய்தலைக் குறித்து வெறியாட்டாளன் வாழ்த்தி ஆடு பலியிட்டுப் பூசனைசெய்த; காலங் கோடோ-காலம் மாறுபடாமல்; வரைவளர் பண்டம்- மலையிற்றோன்றுகின்ற பொருள்களுள் வைத்து; வருவன வாரி- வருவனவற்றை யெல்லாம் வாரிக்கொண்டு; வண்டு இனம் தொடர- வண்டுக் கூட்டங்கள் தன்னைப் பின்தொடர்ந்து வாரா நிற்ப; கயல்கண் விழித்து-கயல் மீன்களாகிய தன் கண்களை விழித்து; பூதுகில் மூடி- மலர்களாகிய ஆடையால் திருமேனியை மூடிக்கொண்டு; குறத்தியர் குடத்தியர் வழிவிட நடந்து-குற மகளிரும் இடை மகளிரும் தன்பின்னே வந்து வழிவிடா நிற்ப நிரலே குறிஞ்சி நிலத்தினையும் முல்லை நிலத்தினையும் நடந்து கடந்து; கருங்கால் மள்ளர் உழவச்சேடியர்-கரிய காலையுடைய உழவர்களும் உழத்தியராகிய தோழிமாரும்; நிரைநிரை வனங்கி மதகு எதிர்கொள்ள- முறைமுறையாக வணங்கி மதகுதொறும் வந்து தன்னை எதிர்கொள்ளா நிற்பவும் என்க.

     (வி-ம்.) அணியும் மடமும் உடைய மங்கையர் என்க. கொண்டோர்க்கு-கணவன் இல்லிற்கு என்க. கணவன் வீட்டிற்குச் செல்லுதற்கு நன்னாள் கோடல் மரபாகலின் குறியுடை நன்னாள் என்றார். கண்டன-தாம் சிறப்பாகக் கண்ட பொருள்களையெல்லாம் என்க. தாய் வீட்டிலிருந்து கணவன் வீட்டிற்குச் செல்லும் மகளிர் தாய்வீட்டில் உள்ள சிறந்த பொருள்களை யெல்லாம் கவர்ந்து கொண்டுபொதல் இயல்பாதல் உணர்ந்து கொள்க. வேலன்- வெறியாட்டாளன். பேசுதல்-ஈண்டு வாழ்த்துதல் என்பதுபட நின்றது. மறி-ஆடு. செகுத்தல்-கொல்லுதல். மழையை வேண்டி வேலன் முருகனை வெறியாட்டெடுத்து வழிபட்ட பொழுதே அக்காலந் தவறாமல் மழை பொழியப்பட்டு வையையில் வெள்ளம் வரும் என்பது கருத்து. வரைவளர் பண்டம்-மலையில் தோன்று பொருள்கள் அவையாவன: மிளகு, கோட்டம், அகில், தக்கோலம், குங்குமம் என்பனவும் யானை வெண்க்டும், அகிலின் குப்பையும, மானமயிர்க் கவரியும், சந்தனக் குறையும், சிந்தூரக் கட்டியும், அரிதாரமும், ஏலவல்லியும், இருங்கறி வல்லியும், கூவைநூறும், தெங்கின் பழனும், தேமாங்கனியும், பலவின் பழங்களும், காயமும், கரும்பும், பூமலி கொடியும், கமுகின் செழுங்குலைத் தாறும், வாழைத்தாறும், பொன்னும், மணியும், பிறவும் என்க.குறிஞ்சி நிலமாகிய தன் பிறப்பிடத்திலிருந்து ஆங்குள்ள சிறந்த பொருள்களை வாரிக்கொண்டு கடலாகிய தன் கணவன் வீட்டிற்குச் செல்லும் வையை நதிக்குப் பிறந்த விட்டிலிருந்து ஆங்குள்ளவற்றைக் கவர்ந்து கொண்டு கணவன் வீட்டிற்குச் செல்லும் மகளிரை உவமமாக வெடுத்துக் கூறுதல் பெரிதும் இன்புறுத்தலுணர்க. கயல் கண் விழித்து என மாறுக. ஈண்டு,

“மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ வாடை யதுபோர்த்துக்
 கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி”
                                    (சிலப். கானல். 25)

எனவும், “வையை என்ற பொய்யாக் குலக்கொடி....புண்ணிய நறுமலர் ஆடைபோர்த்து” (சிலப். 13. 170. 3) எனவும் வரும் இளங்கோவடிகளார் மொழிகளையும் நினைக. குறிஞ்சி நிலத்தையும் முல்லை நிலத்தையும் கடந்து வருதலின் குறத்தியர் குடத்தியர் வழிவிட நடந்து என்றார். புதுப்புனலை உழவரும் உழத்திஅரும் வணங்கி வரவேற்றல் மபர்பு. மதகினைத் திறந்து ஊரினுள் விடுதலாலே மதகெதிர் கொள்ள என்றார்.

27-30: தண்ணடை...................போல

     (இ-ள்) தண்ணடை கணவன்-தண்ணிய நீரொழுக்கமுள்ள கடலாகிய தன் கணவனை; பண்புடன் புணரும்-கற்புடை மகளிர் குணத்தோடே புணருகின்ற; வையை மாமாது-வையை என்னும் பெரிய மகள்; மணத்துடன் சூழ்ந்த- மணக்கோலத்துடன் சூழப்பெற்ற; கூடல் பெருமான்-மதுரையில் எழுந்தருளிய சோமசுந்தரக் கடவுளினது; பொன்பிறை திருவடி- பொன்னிறத்தையும் மாறுபடுத்துகின்ற அழகிய அடிகளை; நெஞ்சு இருத்தாத வஞ்சகர் போல-நெஞ்சத்தின்கண் நினையாத வஞ்சகர்களைப் போல என்க.

     (வி-ம்.) தண் அடை-குளிர்ந்த நீரடைகரை எனினுமாம். கணவன்-கடலாகிய கணவன் என்க. பண்பு,

“கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
 மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
 விருந்துபுறத் தருதலும் சுற்றம் ஓம்பலும்”       (தொல். 1098)

பிறவும் ஆம்.

31-34: சலியா......................கொடிக்கே

     (இ-ள்) சலியாச் சார்பு-ஒருகாலும் சலித்தலில்லாத ஆதரவு; நிலையிற நீங்கி-நிலைகெடச் சென்று; அரந்தையுற்று நீடநின்று இரங்கும்-துன்பங்கொண்டு ஒழிவற நின்று வருந்தா நின்ற; முருந்து எயிற்று இளம்பிறை கோலம் திருந்திய-மயிலிறகின் அடிப்பகுதியினை யொத்த பற்களையும் இளம்பிறை போன்ற தலைக்கோலத்தால் திருத்தமுற்ற; திருநுதல்-அழகிய நெற்றிய்னையுடைய; இளந்துகிர் கொடிக்கு-இளமையான பவளக்கொடி போன்ற எம்பெருமாட்டியின் திறத்திலே என்க.

     (வி-ம்.) சலியாச் சார்பு-நீங்காத ஆதரவு. அரந்தை-துன்பம். முருந்து-மயில் இறகின் அடிப்பகுதி. இளம்பிறைக் கோலம்-இளம்பிறை வடிவிற்றாகிய ஒருவகைத் தலைக்கோலம். துகிர்-பவளம்.

1-3: ஈன்ற.........................பிடி

     (இ-ள்) ஈன்ற செஞ்சூழல்-தன் தாய் தன்னை ஈன்ற செவ்விய சூழலினின்றும்; கவர்வழி பிழைத்த-கவர்த்த வழியிலே ஓடி வழி தவறிப்போன; வெறிவழி பிணர் மருப்பு ஆமான் கன்றினை- வெறித்த விழியினையும் செதும்புடைய கொம்பினையுமுடைய காட்டுப் பசுவினது கன்றை; மெல்நடை குழை செவி-மெல்லிய நடையினையும் குழைந்த செவிகளையும்; பெறாவெறுங் கரும்பிடி-நன்குபெறாத வறிய கரிய பெண்யானை என்க.

     (வி-ம்.) தாய் தன்னை ஈன்ற தாய் என்க. கவர்வழி- கிளைவழி. பிழைத்தல்-வழிதவறிப் பொதல். ஆமான்-காட்டுப் பசு. பருவமெய்தாத பெண் யானை என்பார் வெறுங் கரும்பிடி என்றார்.

4-9: கணி...........................நாடன்

     (இ-ள்) கணிப்பணைக் கவட்டும்-வேங்கை மரத்தின் பரிய கிளையினும்; மணல்சுனை புறத்தும்-மணலையுடைய சுனையின் பக்கத்திலும்; தழைகுற மங்கையர் ஐவனம் துவைக்கும் உரல்குழி நிறைந்த கல்அறை பரப்பும்-தழைகளை யுடுக்குங் குறமகளிர் மலைநெல்லை யிடிக்கின்ற உரலாகிய குழிகள் நெருங்கிய கற்பாறையை பரப்பினிடத்தும்; மானிட மாக்கள் அரக்கி கைப்பட்டென-மனிதருடைய மக்கள் அரக்கியின் கையில் அகப்பட்டாற்போல; நாமடிக்கும் சுவை உண-நாவை மடித்துண்ணற்குக் காரணமான சுவையறிந்து உண்ணுதற்கு; உதவாது வைத்து எடுக்கும்-உதவாமையால் அங்கங்கே வைத்து வைத்து எடுத்தற்கிடனாகிய; சாரல் நாடன்-மலைச்சாரலையுடைய நாட்டையுடைய தலைவனது என்க.

     (வி-ம்.) பிடியானையின் கைப்பட்ட ஆமான் கன்றிற்கு அரக்கியின் கைப்பட்ட மானிடக் குழந்தை உவமை. ஆமான் கன்று யானைக்குண வன்மையின் உண்ணமாட்டாதும் விடமாட்டாதும் கவடு முதலிய இடங்களில் வைத்து வைத்து எடுக்கும் என்பது கருத்து. இதன்ன்ல் தோழி தலைவன் தலைவியை விரைந்து மணம் செய்துகொண்டு இல்லறம் செய்யுங் கருத்திலனாய் இருவகைக் குறிகளிடத்தும் இற்செறிப்பு முதலிய இன்னல் நிலைகளினும் வைத்து வைத்து வருத்துகின்றான் என அவனை இயற்பழிக்கின்றாள். இதற்கு யானை தலைவனுக்கும் பிறப்பிடத்தினின்றும் வழிதவறி வந்த ஆமான்கன்று தலைவிக்கும் உவமையாகக் கொள்க. மானிட மக்கள் அரக்கி கைப்பட்டென என்றது ஏனைய உவமங் இங்ஙனம் இயற்பழித்துழித் தலைவி அதனைப் பொறாது தோழியின் துடுக்கினை அடக்கத் தலைவனுடைய நற்பண்புகளை நினைந்து அவன் நல்லன் அருளுடையன் நம்மைக் கைவிடான் விரைந்து வந்து வரைந்துகொண்டு அளிசெய்வன் எனலும், அங்ஙனம் கூறியவழி அந்நினைவு பற்றுக்கோடாக ஆற்றியிருத்தலும் இதன்பயன் என நுண்ணிதின் உணர்ந்து கொள்க.

10-12: அறிவும்..........................நன்றே

     (இ-ள்) அறிவும் பொறையும் பொருள் அறிகல்வியும் ஒழுக்கமும் குலனும்-அறிவுடைமையும், நட்டார் பிழைபொறுக்கும் பொறையும், பொருளியலினை அறிதற்குக் காரணமாகிய கல்வியுடைமையும், அதன் காரியமாகிய நல்லொழுக்கமும் இவற்றிற்கெல்லாம் காரணமாகிய உயர்குடிப் பிறப்பும்; அழுக்கு அறுதவமும் இனிமையும் பண்பும்-மனமாசு தீர்த்தற்குக் காரணமான தவமுடைமையும், எல்லோர்க்கும் இனியனாம் தன்மையும், பாடறிந்தொழுகும் பண்பும்; ஈண்டவும் நன்று-பெரிதும் நன்றாயிருந்தனகாண் என்க.

     (வி-ம்.) அறிவும், பொறையும், பொருளறி கல்வியும், ஒழுக்கமும், குலனும், அழுக்கறு தவமும், இனிமையும், பண்பும், ஈண்டவும் நன்று என்றது இகழ்ச்சிக்குறிப்பு. இவை நமக்கு நல்லன அல்ல என இயற்பழித்தபடியாம். இங்ஙனம் இயற்பழித்தமைக்குக் காரணம் தலைவியை வெகுள்விப்பது. என்னை! அழுகையில் அழுந்திக் கிடக்கும் அவள் நெஞ்சை அந்நிலைமாற்றி வெகுள்வித்து அவ்வழிபற்றி அவளை ஆற்றுவிப்பது தொழியின் கருத்தாகலின் என்க. நன்று: ஒருமைப் பன்மை மயக்கம்.

     இனி இதனைச் சாரல் நாடன் அறிவு முதலியன இளங்கொடி திறத்தில் நல்லனவல்ல என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடு: இளிவரல். பயன்: தலைவியை ஆற்றுவித்தல்.