பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 43

நேரிசையாசிரியப்பா

 
   
5
  கவைத்துகிர் வடவையிற் றிரட்சிகை பரப்பி
யரைபெறப் பிணித்த தற்குளி மாக்க
ளுள்ளந் தீக்கு முவர்க்கட லுடுத்த
நாவல்ந் தண்பொழி லின்புடன் றுயில
வுலகற விழுங்கிய நள்ளென் கங்கு
10
  றுயிலாக் கேளுட னுயிரிரை தேரு
நெட்டுடற் பேழ்வாய்க் கழுது முறங்கப்
பிள்ளையும் பெடையும் பறைவரத் தழீஇச்
சுற்றமுஞ் ழுழ்ந்து குருகுகண் படுப்பக்
கீழரும் பணைத்த முள்ளரை முளரி
15
  யிதழ்க்கத வடைத்து மலர்க்கண் டுயில
விரிசினை பொதுளிய பாசிலை பொடுக்கிப்
பூவோடும் வண்டொடும் பொங்கரு முறங்கப்
பான்முகக் களவின் குறுங்காய்ப் பச்சிணர்
புட்காற் பாட்டினர்க் குறையுள் கொடுத்த
20
  மயிர்குறை கருவித் துணைக்குழை யலைப்ப
வரிந்தவிந் தனச்சுமை மதியர விதழி
யகன்றுகட் டவிழ்ந்த சேகரத் திருத்தி
வீதியுங் கவலையு மிகவளம் புகன்று
பொழுதுகண் மறைந்த தீவாய்ச் செக்கர்
25
  தணந்தோ ருள்ளத் துள்ளுறப் புகுந்தபின்
காருடல் காட்டிக் கண்டகண் புதைய
அல்லெனு மங்கை மெல்லெனப் பார்க்க
முரன்றெழு கான முயன்றுவா தியைந்த
வடபுல விஞ்சையன் வைகிடத் தகன்கிடைத்
30
  தென்றிசைப் பாண னடிமை யானெனப்
போகா விறகுடன் றலைக்கடை பொருந்தி
யுந்தித் தோற்ற மோசைநின் றொடுங்கப்
பாலையி லெழுப்பி யமரிசை பயிற்றித்
தூங்கலுந் துள்ளலுஞ் சுண்டிநின் றெழுதலுந்
35
  தாரியிற் காட்டித் தருஞ்சா தாரி
யுலகுயி ருள்ளமு மொன்றுபட் டொடுங்க
விசைவிதி பாடிய விசைப்பகை துரந்த
கூடற் கிறையோன் றாள்விடுத் தோரென
என்கண் டுஞ்சா நீர்மை
    முன்கண் டோதா தவர்க்குநங் குருகே.

(உரை)
கைகோள்: களவு. தலைவிகூற்று

துறை: அன்னமோடழிதல்.

     (இ-ம்) இதற்கு, "மறைந்தவற் காண்டல்" (தொல், கள, 20) எனவரும் நூற்பாவின்கண், இட்டுப் பிரிவிரங்கினும்" எனவரும் விதி கொள்க.

1 - 4: கவை...........................................துயில

     (இ-ள்) கவைத்துகிர் - கிளைகளையுடைய பவளக் கொடிகள்; வடைவையின் திரள்சிகை பரப்பி - வடவைத் தீயைப் போலத் திரண்ட தம்முடைய கொழுந்துகளை யாண்டும் பரப்ப; அரைபெறப் பிணித்த - தமது இடையில் அமையக் கட்டிய; கல்குளி மாக்கள் - முத்து முதலிய மணிகளை நீரில் முழுகி எடுக்கும் மாந்தர்களுடைய; உள்ளம் தீக்கும் - நெஞ்சினைச் சுடுகின்ற; உவர்கடல் உடுத்த - உப்பினையுடைய கடல் சூழ்ந்த; தண்நாவலம் பொழில் - தண்ணிய இந்நாவலம் பொழிலிலுள்ள உயிரினங்கள் எல்லாம்; இன்புடன் துயில - இன்பத்தோடே துயிலா நிற்பவும் என்க.

     (வி-ம்.) கவை - கிளை. துகிர் - பவளக்கொடி. வடவை - வடவைத்தீ. இது பவளக்கொழுந்திற் குவமை. முத்துக் குளிப்போர் ஆண்டுள்ள பவளக்கொடிகளைக் கைப்பற்றி இடையிற் கட்டிக்கொள்வர் என்பது கருத்து. கல்-முத்து முதலிய மணிகள். உப்பு அதனுள் மூழ்குவாருடைய நெஞ்சை வருத்துதலின் கள்குளி மாக்கள் உள்ளந் தீக்கும் உவர்என்றாள். உவர் - உப்பு தண் நாவலம் பொழில் என மாறுக. நாவலம்பொழில் இமயத்தின் தெற்கும் குமரிக்கு வடக்கும் உள்ள நிலப்பகுதி. இஃது ஆகுபெயராய் உயிரினங்களைக் குறித்து நின்றது. துயில் இனிதாகலின் இன்புடன் துயில என்றாள்.

5 - 7: உலகு ............... உறங்க

     (இ-ள்) உலகு அற விழுங்கிய நள்என் கங்குல் - உலக முழுவதையும் மறைத்துள்ள நள்என்னும் அநுகரண ஓசையையுடைய இவ்விடை யாமத்தின்கண்; துயிலாக் கோளுடன் - உறங்குதலில்லாத தன் சுற்றத்தோடு; உயிர் இரை தேரும்- உயிரினங்களாகிய தாந்தின்னும் இரைகளை ஆராய்கின்ற; நெடு உடல் பேழ்வாய் கழுதும் உறங்க - நெடிய உடம்பினையும் பெரிய வாயினையுமுடைய பேய்களும் துயிலா நிற்பவும் என்க.

     (வி-ம்.) நள்ளென்: குறிப்புமொழி. கங்குல் - இரவு. துயிலாதகேள் எனல் வேண்டிய பெயரெச்சத்தீறு தொக்கது. கேள் - சுற்றம். உயிராகிய இரை என்க. தேர்தல் - ஆராய்தல். கழுது - பேய். கழுதும் என்புழி உம்மை சிறப்பும்மை.

8 - 9: பிள்ளையும் . . . . . . . படுப்ப

     (இ-ள்) விள்ளையும் பெடையும் பறைவரத் தழீஇ - தங் குஞ்சுகளும் பேடும் தஞ் சிறகினுள்ளே வரும்படி தழுவிக் கொண்டு; சுற்றம் ஏழ்ந்து குருகுகண் படுப்ப- தம்மினப் பறவைகள் சூழாநிற்பக் குருகினங்கள் கண்ணுறங்கா நிற்பவும் என்க.

     (வி-ம்.) "பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை" (தொல். மரபு. 4) என்பதோத்தாகலான் குருகிற்குப் பிள்ளை கூறப்பட்டது. பறை - சிறகு. குருகு- பறவைப்பொது. கண்படுத்தல் - துயிலல்.

10 - 11: கீழ் . . . . . . . துயில

     (இ-ள்) கீழ் அரும்பு அணைத்த முள்அரை முளரி - கீழே அரும்புகளைத் தழுவியுள்ள முள்ளினையுடைய நாளங்களையுடைய தாமரைகள்; இதழ் கதவு அடைத்து மலர் கண்துயில - இதழ்களாகிய கதவுகளை மூடிக்கொண்டு மலர்களாகிய தங்கண்கள் துயிலா நிற்பவும் என்க.

     (வி-ம்.) அரை - நாளம். இதழ்களாகிய கதவு என்க. தாமரை மலர்க்கண் துயில என முதல்வினை சினையொடு முடிந்தது.

12 - 13: விரிசினை . . . . . . . உறங்க

     (இ-ள்) விரிசினை பொதுளிய - விரிந்த கிளைகளில் தழைத்துச் செறிந்த; பாசிலை ஒடுக்கி - பச்சை இலைகளை ஒடுக்கிக் கொண்டு; பூவொடும் வண்டொடும்- மலர்களோடும் அவற்றினுள் அடங்கிய வண்டுகளோடும்; பொங்கரும் உறங்க- சோலைகளும் துயிலா நிற்பவும் என்க.

     (வி-ம்.) பாசிலை - பச்சையிலை, தேன் பருகிய வண்டுகளோடும் என்றவாறு. பொங்கர் - சோலை.

14 - 16: பான்முகம் . . . . . . . அலைப்ப

     (இ-ள்) புள்கால் பாட்டினர்க்கு - பறவையின் கால்களையுடைய தும்புரு நாரதராகிய யாழ்வலவர் யாழ்வலவர் படலுக்கு; உறையுள் கொடுத்த - தங்குமிடமாக அருளிச்செய்த; பால்முகம் களவின் குறுங்காய் பசு இணர்- பாலைத் தன்னிடத்திலுள்ள களாவினது குறிய காயுடன் கூடிய பசிய இலைக்கொத்துக்கள் கிடந்து; மயிர் கறை கருவி துணை குழை அலைப்ப- மயிர்குறைக்கின்ற கத்தரிகை போன்ற இரண்டு செவிகளினும் அசையா நிற்ப என்க.

     (வி-ம்.) தும்புருவும் நாரதருமாகிய இருமுனிவர்க்கும் கால்கள் மக்கட்கால் போலாவாய்ப் பறவைக் கால்கள் போலிருத்தலினாலும் இருவரும் யாழ் வல்லுநர் ஆதலாலும் அவரைப் புட்கால் பாட்டினர் என்றார். பாட்டிற்கு உறையுள் என்றது பாடலை விரும்பிக் கேட்கும் என்றவாறு. களாக்காயில் பால் இருத்தல் இயல்பாகலின் பான்முகக்காய் என்றார். இணர் - கொத்து. களா: ஆகாரம் குறுகி கள என நின்றது. மயிர் குறை கருவி - கத்தரிகை துணை - இரண்டு. குழை: ஆகுபெயர்; செவி என்க.

17 - 18: வரிந்த . . . . . . . இருத்தி

     (இ-ள்) வரிந்த இந்தனச் சுமை - கட்டப்பட்ட விறகுச் சுமையினை; மதி அரவு இதழி அகன்று - திங்களும் பாம்புங் கொன்றை மாலையும் நீங்கப்பெற்று; கட்டு அவிழ்ந்த சேகரத்து இருத்தி - சடைக்கட்டு நீங்கிய தனது திருமுடியின்மேல் வைத்துக் கொண்டு என்க.

     (வி-ம்.) இந்தனம்-விறகு என்னும் பொருளுடைய வடசொல், மதி - ஈண்டுப் பிறைத் திங்கள். கொன்றை: ஆகுபெயர். சேகரம் - முடி. விறகுச் சுமையை முடிமேல் வைத்து என்க.

19 - 23: வீதியும் . . . . . . . பார்க்க

     (இ-ள்) வீதியும் கவலையும் மிகவளம் புகன்று - மதுரை நகரத்துத் தெருக்களினும் சந்திகளினும் மிகையான விலைகூறிச் சென்று; பொழுது கண்மறைந்துபோன தீவாய் செக்கர்-கதிரவன் கண்ணுக்குத் தோன்றாமல் மறைந்துபோனமையாலே தீயையொத்த செவ்வானமானது; தணந்தோர் உள்ளத்துள் உற புகுந்தபின் - காதலரைப் பிரிந்துள்ளோருடைய நெஞ்சத்தின் கண் ஊடுருவி நுழைந்த பின்னர்; கார் உடல் காட்டி கண்ட கய்புதைய - தனது கரிய உடம்பினை யாவருக்கும் காட்டித் தன்னைக் கண்டோருடைய கண்கள் தன் மேனியிற் புதைந்து போம்படி; அல்எனும் மங்கை மேல் எனப் பார்க்க - இரவு என்னும் பெண்ணும் உலகினை மெல்லென்று உற்றுநோக்கா நிற்பவும் என்க.

     (வி-ம்.) கவலை சந்தியும் சதுக்கமும் முதலியன. வளம் - விலைப் பொருள். மறைந்த - மறைந்தமையாலே. வாய்: உவமவுருபு. தணந்தோர் - காதலரைப் பிரிந்து தனித்துறைவோர். நெஞ்சினுட் புகுந்து வருத்துதலின் உள்ளத்துள் உறப் புகுந்தபின் என்றாள். அல் - இரவு.

24 - 27: முரன் . . . . . பொருந்தி

     (இ-ள்) முரன்று எழுகானம் முயன்று - ஒலித்தெழா நின்ற இசைக் கலையிலே பெரிதும் முயற்சி செய்து அது காரணமாக; வாது இயைந்த வடபுல விஞ்சையன்- பிறஇசை வாணரோடே வாதிட்டு வெல்லுதற்கு வந்த, வடநாட்டு இசை வாணனாகிய எமநாதன் என்னும் பாணன்; வைகு இடத்து அகன்கடை - தங்கியிருக்கும் மாளிகையின் பெரிய வாயிலிலே சென்று அவன் நீ யாரென வினவ; யான்தென்திசை பாணன் அடிமை என - யான் தென்றிசையிலுள்ள இம்மதுரைமா நகரத்தில் வாழும் பாணபத்திரன் என்னும் இசைவாணனுடைய அடிமைகாண் என்று கூறி; போகா விறகடன் தலைக்கடை பொருந்தி - விலைபோகாத விறகோடே அம்மாளிகையின் தலைவாயிலிலே இருந்து என்க.

     (வி-ம்.) முரலுதல் - உலித்தல். கானம் - இசை. வாது - சொற் போர். வாடபுலம் - வடநாடு. விஞ்சையன் - வித்தையையுடையோன். ஈண்டு இசைக் கலையோன் என்பதுபட நின்றது. கடை - வாயில். தென் திசை: ஆகுபெயராய் மதுரையைக் குறித்து நின்றது. பாணன் - பாணபத்திரன் என்னும் ஒரு மெய்யடியார். விலைபோகா விறகு என்க. தலைக்கடை - முன்புற வாயில்.

28 - 34: உந்தி . . . . . . . என

     (இ-ள்) உந்தி தோற்றம் ஓசை நின்று ஒடுங்க-உந்தியில் தோற்றும் இயல்புடைய ஓசையானது தோன்றி நின்றொடுங்க; பாலையில் எழுப்பிப்பின்; அமர்இசை பயிற்றி-அமரோசையாக இறக்கி; தூங்கலும் துள்ளலும் சுண்டி நின்று எழுதலும் தாரியில் காட்டி -தூங்கலும் துள்ளலும் சுண்டி நின்று எழுதலும் தாரியில் காட்டி - தூங்கல், துள்ளல், மெலிந்து நின்று எழுதல் என்னும் இசை விகற்பங்களை ஒழுங்காகக் காட்டி; தரும் சாதாரி - பாடியருளிய சாதாரி என்னும் இசையை; உலகுஉயிர்

உள்ளமும் ஒன்றுபட்டு ஒடுங்க - உலகின்கண் வாழும் உயிரினங்கள் எல்லாம் தம் உள்ளத்தோடே அவ்விசையின்கண் ஒரு மைப்பட்டு அடங்கா நிற்கும்படி; இசை விதிபாடிய - இசை நூல் விதிப்படி பாடியவாற்றாலே; இசைபகை துரந்த - தன் மெய்யடியாராகிய அப் பாணபத்திரருடைய பகைவனாகிய எமநாதனை ஓடச் செய்தருளிய; கூடற்கு இறையோன் - மதுரைக்கு இறைவனாகிய சோமசுந்தரக் கடவுளினுடைய; தாள் விடுத்தோர் என-திருவடிகளை நினையாது விடுத்தவர் துன்பத்தாலே துயிலா திருத்தல் போல என்க.

     (வி-ம்.) உந்தி - அகவுறுப்பினுளொன்று. ஒலி உந்தியில் தோன்றும் என்பதனை,

" உந்தி முதலா முந்துவளி தோன்றித்
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
இண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்
உறுப்புற் றமைய நெறிப்பட நாடி
எல்லா எழுத்தும் சொல்லுங் காலைப்
பிறப்பின் ஆக்கம் வேறுவே றியல
திறப்படத் தெரியுங் காட்சி யான"     (தொல். பிறப்பி. 1)

எனவரும் தொல்காப்பியத்தானும் உணர்க. பாலை - ஒருவகைப் பண். எழுப்பி என்றதனால் ஆரோசையாக எழுப்பி என்பது பெற்றாம். அமரிசை - அமரோசை. இவற்றை ஆரோகணம் அவரோகணம் என்று கூறுப. தூங்கல், துள்ளம், மெலிதல் முதலியன இசைக் காரணங்கள். தாரி - ஒழுங்கு. சாதாரி - ஓரிசை. இறைவன் பாணபத்திரன் பொருட்டு விறகு சுமந்து சென்று வடபுலத்து ஏமநாதனைச் சாதாரி- ஓரிசை. இறைவன் பாணபத்திரன் பொருட்டு விறகு சுமந்து சென்று வடபுலத்து ஏமநாதனைச் சாதாரி பாடிக் காட்டி ஓட்டினார் என்னுமிதனைத் திருவிளையாடற் புராணத்தில் உணர்க, தாளை விடுத்தோர் துன்பத்தால் கண் துஞ்சாமை போல என விரித்துக் கொள்க.

35 - 36: என் . . . . . குருகு

     (இ-ள்) என்கண் துஞ்சா நீர்மை-என்னுடைய கண்கள் துயிலாமைக்குக் காரணமான எனது இத்துன்ப நிலைமையை; நம் குருகு - எம்முடைய சூழிலில் வாழும் இவ்வன்னமானது; முன்கண்டு அவர்க்கு ஓதாது - முன்னரே கண்டு வைத்தும் அந்தத் தலைவர்பாற் சென்று கூறுகின்றிலுது; இனி யான் என் செய்கோ" என்க.

     (வி-ம்.) இனியான் என்செய்கோ என்பது குறிப்பெச்சம். கண் துஞ்சா நீர்மை- கண் துஞ்சாமைக்குக் காரணமான துன்பநிலைமை. முன்கண்டும் எனல் வேண்டிய சிறப்பும்மை விகாரத்தாற்றொக்கது. எம் சூழலில் வாழும் குருகு என்பாள் நங்குருகு என்றாள். குருகு - அன்னம்.

     இனி அதனை, நாவலந் தண்பொழி லின்புடன்றுயில, கழுது முறங்க, முள்ளரை முளரி இதழ்க் கதவடைத்து, மலர்க்கண்டுயில, பூவொடும் வண்டொடும் பொங்கரு முறங்க, அந்தனச்சுமை சேகரத்திருத்தி, அல்லெனு மங்கையு மெல்லெனப் பார்க்க, வாதியைந்த வடபுல விஞ்சையன் வைகிடத் தகன்கடைத் தென்திசைப் பாணனடிமை யானெனப் போகா விறகுடன் தலைக்கடைப் பொருந்தி இசை விதிபாடி இசைப்பகை துரந்த கூடற் கிறையோன் றாள்விடுத் தோரென, என்கண் டுஞ்சாநீர்மை, நங்குருகு அவர்க்கு ஓதா தென்செய் கேனென, வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.