பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 54

நேரிசையாசிரியப்பா

 
   
5
  கொன்றையந் துணரிற் செவ்வழி குறித்தும்
வாலுழை யெருக்கில் வளருழை பாடியுங்
கூவிளங் கண்ணியிற் குலக்கிளை முரற்றியும்
வெண்கூ தளத்தின் விளாரிநின் றிசைத்தும்
வண்டுந் தேனு ஞிமிறுஞ் சுரும்பு
10
  முமிழ்நற வருந்தி யுறங்குசெஞ் சடையோன்
மதுமலர் பறித்துத் திருவடி நிறைத்த
நான்மறைப் பாலனை நலந்துயிர் கவருங்
காலனைக் காய்ந்த காலினன் கூடற்
றிருமருங் கணைந்து வருபுனல் வையை
15
  வரையுரண் டென்னத் திரைநிரை துறையகத்
தணந்தெடுத் தேந்திய வரும்புமுகிழ் முலையோண்
மதிநுதற் பெருமதி மலர்முகத் தொருத்தியை
யாட்டியு மணைத்துங் வட்டியுங் குலவியு
மேந்தியு மெடுத்து மொழுக்கியு மீர்த்து
20
  முழக்கியுந் தபுத்தியு முலையொளி நோக்கியும்
விளிமொழி யோற்றும் விதலையிற் றிளைத்தும்
பூசியும் புனைந்தும் பூட்டியுஞ் சூட்டியு
நிறுத்தியு நிறைத்து நெறித்துஞ் செறித்து
மெழுதியுந் தப்பியு மியைத்தும் பிணித்துங்
25
  கட்டியுங் கலத்தியுங் கமழ்த்தியு மறைத்துச்
செய்தன வெல்லாஞ் செய்யலர் போலவென்
னெட்டிலை பொலிந்தபொன் னிறைதிரு வுறையுளிற்
பாசடைக் குவளைச் சுழன்மணக் காட்டினைக்
கருவரிச் செங்கண் வராலினங் கலக்க
30
  வெரியலர் முண்டகத் தடவிதிக் கெறிய
வெள்ளுடற் கருங்கட் கயனிரை யுகைப்ப
மரகதப் பன்னத் தாம்பலங் குப்பையைச்
சொரியெயிற்றுப் பேழ்வாய் வாளைக டுவைப்பப்
படிந்துசே டெறியுஞ் செங்கட் கவரியு
35
  மலைசூழ் கிடந்த பெருங்குலைப் பரப்பை
மலைகொடு மலைந்த முதுநீர் வெள்ளமு
மிடைந்துவயல் திரிந்து முதுகுசரிந் துடைந்து
சிறியோன் செருவென முறியப் போகி
யுழவக் கணத்தைக் குலைக்குடி புகுத்தும்
  பெருநீ ரூரர் நிறைநீர் விடுத்துச்
செறிந்த தென்னெனக் கேட்டி
மறிந்துழை விழித்த மறிநோக் கினளே.

(உரை)
கைகோள் : கற்பு தலைவி கூட்று

துறை: புனலாட்டுவித்தமை கூறிப் புலத்தல்

     (இ-ம்.) இதனை "அவனறிவு ஆற்ற அறியும் ஆகலின்" (தொல். கற்பி. 6) எனவரும் நூற்பாவின்கண் 'ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்' என்பதன்கண் அமைத்துக்கொள்க.

38: மறிந்து . . . . . . . . . . நோக்கிளளே

     (இ-ள்) மறிந்துழை விழித்த மறிநோக்கினளே - வெட்டுவரால் மறிக்கப்பட்ட இடத்தே அலமந்து விழிக்கின்ற மானினது பார்வைபோன்ற பார்வையினையுடைய தோழியே! என்க.

     (வி-ம்.) மறிந்தஉழை என்பது மறிந்துழை என நிலைமொழி ஈற்றகரம் தெக்கது. மறிந்த - மறிபட்ட. இது தலைவி தோழியை விளித்து. தலைவன் வருகை கண்டு தோழி அவனை அலமந்து நோக்குதலின் இங்ஙனம் விளித்தாள் என்க.

24 - 29: பாசடைக் . . . . . . . . . . துவைப்ப

     (இ-ள்) சுழல் மணம் பாசடை குவளைக் காட்டினை - சுழலாகின்ற நறுமணத்தையுடைய பசிய இலைகளையுடைய குவளைமலர்க் கூட்டத்தினை; கருவரி செங்கண் வரால் இனம் கலக்ககரிய கோடுகளையும் சிவந்த கண்களையுமுடைய வரால்மீன் கூட்டம் பாய்ந்து கலக்காநிற்பவும்; முண்டகத்து எரிஅலர் அடவி- தாமரைகளின் தீப்போன்று மலர்கின்ற மலர்க்கூட்டங்களை; தீக்கு எறிய வெள்உடல் கருங்கண் கயல்நிலை உகைப்ப - திசைதொறும் சிந்தும்படி வெள்ளிய உடலையும் கரிய கண்ணையுமுடைய சேல்மீன் கூட்டம் பாய்நது சிதைப்பவும்; மரகதப் பன்னத்து ஆம்பலங் குப்பையை - மரகதமணி போன்ற நிறமுடைய இலைகளையுடைய ஆம்பல்மலர்க் கூட்டத்தை; சொரி எயிறு பேழ்வாய் வாளைகள் துவைப்ப - சொரிந்து வைத்தாலொத்த பற்களையும் பெரிய வாயையுமுடைய வாளை மீன்கள் பாய்ந்து துவைப்பவும் என்க.

     (வி-ம்.) பாசடை - பசிய இலை. காடு-ஈண்டுக் கூட்டம். கருவரிச் செங்கண் என்புழிச் செய்யுளின்பமுணர்க. வரால்-ஒருவகை மீன். எரி-நெருப்பு, முண்டகம்- தாமரை, கயல்-ஒருவகை மீன். பன்னம்-இலை, குப்பை - கூட்டம், சொரியெயிறு-சொரிந்து வைத்தாற்போன்ற பல். பேழ் - பெரிய.

30 - 34: படிந்து . . . . . . . . . . போகி

     (இ-ள்) படிந்து சேடு எறியும் செங்கண் கவரியும் - நீரிற் களித்துச் சேறாக்குகின்ற சிவந்த கண்ணையுடைய எருமைகளும்; மலைசூழ் கிடந்த பெருங்குலைப் பரப்பை- மலை சூழ்ந்திருந்தாலொத்த பெரிய கரையின் பரப்பினை; மலைகொடு மலைந்த முதுநீர் வெள்ளமும் - தான் பெயர்த்துக் கொண்டு வரும் மலைகளால் உடைக்கின்ற கடல்போன்ற நீர்பபெருக்கும்; மிடைந்து வயல்திரிந்து முதுகுசரிந்து உடைந்து- நெருங்கி வயல்கள் மாறுபட்டு அவற்றின் வரம்புகள் சரிந்து உடைபட்டு; சிறியோன் செய்யும் செரு என - குறுநில மன்னன் செய்யும் போர்போல; முறியப்போகி - முறியும்படி சென்று என்க.

     (வி-ம்.) படிதல் - குளித்தல். சேடு - சேறு. கவரி - எருமை, குலை - கரை, முதுநீர் வெள்ளம் - முதுநீர் போன்ற வெள்ளம், முதுநீர் - கடல், எருமைகளும் வெள்ளமும் மிடைந்து என்க. திரிதல் - வரம்பற்றுப் போதல். முதுகு - வரம்பின் உச்சி. சிறியோன் என்றதற்குக் கீழ்மகன் எனினுமாம். கீழ்மகன் போர்செய்யுங்கால் முறையறச் செய்வானாகலின் வெள்ளம் வயல் முதலியவற்றைத் திரித்தலுக்கு உவமையாக்கப்பட்டான் என்க.

35 - 36: உழவக் . . . . . . . . . . ஊரர்

     (இ-ள்) உழவக் கணத்தை குலைக்குடி புகுத்தும் - உழவர் கூட்டத்தைச் செய்கரையினிடத்துக் குடிபோகச் செய்கின்ற; பெருநீர் ஊரர் - பெருந்தன்மையுடைய மருத நிலத்தூரையுடை தலைவர் என்க.

     (வி-ம்.) வெள்ளம் முறை பிறழ்ந்தோடி உழவர்களைக் குடிபோகச் செய்வதுபோல நந்தலைவரும் முறை பிறழ்ந்தொழுகி யாம் இல்லறம் செய்யாது கெடுக்கின்றனர் என இதன்கண் உள்ளுறை காண்க. உழவக்கணம் - உழவர் கூட்டம். குலை - செய்கரை. பெருநீர் - பெருந்தன்மை. பெருநீர் ஊரர் என்றது இகழ்ச்சி.

1 - 6: கொன்றை . . . . . . . . . . சடையோன்

     (இ-ள்) வண்டும் தேனும் ஞிமிறம் சுரும்பும் - வண்டும் தேனும் ஞிமிறும் சுரும்பும் ஆகிய இந்நால்வகை வண்டினங்களும்; கொன்றை அம் துணரில் செவ்வழி குறித்தும்- தான் அணிந்துள்ள கொன்றையினது பூங்கொத்தின்கண் செவ்வழி என்னும் பண்ணைப் பாடியும்; வால்உழை எருக்கில் வளர் உழை பாடியும் - வெண்மையான பக்கங்களையுடைய எருக்கமலரிடத்தே வளர்கின்ற உழை என்னும் பண்ணைப் பாடியும்; கூவிளங்கண்ணியில் குலக்கிளை முரற்றியும்- வில்வமாலையில் சிறந்த கைக்கிளை என்னும் பண்ணைப் பாடியும்; வெண் கூதளத்தின் விளரி நின்று இசைத்தும் - வெள்ளிய கூதள மலரில் விளரி என்னும் பண்ணை ஒழிவின்றிப் பாடியும்; உமிழ் நறவு அருந்தி - அம்மலர்கள் வெளிப்படுத்துகின்ற தேனை உண்டு; உறங்கு செஞ்சடையோன் - இன்புற்றுத் துயிலுதற்கிடனான சிவந்த சடையினையுடையவனும் என்க.

     (வி-ம்.) துணர்-கொத்து. செவ்வழி, உழை, கிளை, விளரி என்பன பண்வகைகள். வண்டு, தேன், ஞிமிறு, சுரும்பு என்பன வண்டு வகைகள். கொன்றை, எருக்கு, கூவிளம், கூதளம் என்பன சிவபெருமான் சூடும் மலர்கள். வாலுழை என்புழி உழை பக்கம் வெள்ளெருக்காதலின் வாலுழை எருக்கு என்றார். நறவு-தேன். உறங்குடற் கிடனான செஞ்சடை என்க.

7 - 9: மது . . . . . . . . . . காலினன்

     (இ-ள்) மதுமலர் பறிந்துத் திருவடி நிறைத்த - தேன் மிகுந்த மலர்களைக் கொய்து தன் அழகிய அடியின்கண் இட்டு வழிபாடு செய்து நிரப்பிய; நால்மறை பாலனை- நான்கு மறைகளையும் ஓதிய அந்தணச் சிறுவனாகிய மார்க்கண்டனை; நலிந்து உயிர் கவரும் காலனை - வருத்தி உயர் கவர்தலுற்று கூற்றுவனை; காய்ந்த காலினன்- வெகுண்டு உதைத்த திருவடிகளையுடையவனுமாகிய சோமசுந்தரக் கடவுளினது என்க.

     (வி-ம்.) மது - தேன். மலர்களைப் பெய்து வழிபடுமாற்றால் நிறைந்த பாலன் என்க. பாலன் - ஈண்டு மார்க்கண்டன். காலன் - கூற்றுவன். சினந்துதைத்த கால் என்க.

9 - 13; கூடல் . . . . . . . . . . ஒருத்தியை

     (இ-ள்) வடல் திருமருங்கு அணைந்து வரும் - மதுரைமாநகரினது அழகிய பக்கத்தே சேர்ந்து பெருகி வருகின்ற; வரை புரண்டு என்ன திரை நிரை துறை அகத்து-மலைகள் புரளமாறு போலே புரள்கின்ற அலைகளினது வரிசையினையுடைய நீராடு துறையின்கண்; அணந்து எடுத்து ஏந்திய அருப்பு முகிழ் முலையோள் - அண்ணாந்து உயர்ந்து நிமிர்ந்த கோங்கரும்பினை ஒத்த குவிந்த முலையினையுடையாளாகிய; மதிநுதல் பெருமதி மலர் முகத்து ஒருத்தியை-பிறைபோன்ற நெற்றியையும் நிறைத் திங்கள் போன்ற மலர்ந்த மகத்தினையுமுடைய ஒரு பரத்தையை என்க.

     (வி-ம்.) மருங்கு-பக்கம். திரு - செல்வமுமாம். முகிழ்தல் - குவிதல். இளமதி -பிறைத் திங்கள். பெருமதி - தநிறைத் திங்கள், ஒருத்தி என்றது பரத்தையை.

14 - 22: ஆட்டியும் . . . . . . . . . . போல

     (இ-ள்) ஆட்டியும் - நீராடுவித்தும்; அணைத்தும் - மார்போடணைத்தும்; கூட்டியும் -தொழிகளோடு சேர்த்தும்; குலவியும் - கொண்டாடியும்; ஏந்தியும் - தாங்கியும்; எடுத்தும் - தூக்கியும்; ஒழுக்கியும் - நடப்பித்தும்; ஈர்த்தும் - இழுத்தும்; முழுக்கியும்-நீரில் முழுகுவித்தும்; தபுத்தியும்-மேலே எடுத்தும்; முலைஒளி நோக்கியும் - அவள் குளிரால் நடுங்குங்கால் அந்நடுக்கந்தீரக் கட்டியணைத்தும்; பூசியும் - சாந்த முதலியவற்றை அவள்மேற் பூசியும்; புனைந்தும் - மாலை முதலியவற்றை அணிந்தும்; பூட்டியும் - அணிகலன்களைப் பூட்டியும்; சூட்டியும் - கண்ணி முதலியவற்றைச் சூட்டியும்; நிறுத்தியும் - அவள் ஊடாதபடி நிறுத்தியும் நிறைத்தும் - அவள் நெஞ்சத்தை உவகையால் நிரப்பியும்; நெறித்தும்-அவள் கூந்தலை அறல்படச் செய்தும்; செறித்தும் - தன் மார்போடு அணைத்தும்; எழுதியும் - தொய்யிலெழுதியும்; தப்பியும்- எழுதுங்கால் பிழைத்தும்; இயைத்தும் - தமீண்டும் திருத்தியும்; பிணித்தும் - கச்சைக் கொங்கையில் கட்டியும்; கட்டியும்-துகிலை உடுத்தும்; கலத்தியும் - தன் நெஞ்சத்தோடு ஒன்றுபடச் செய்தும்; கமழ்த்தியும் - பனிநீர் முதலியவற்றால் நறுமணங்கமழச் செய்தும்; மறைத்துச் செய்தன எல்லாம்-நாம் அறியாமல் மறைத்து இவ்வாறு தாம் செய்த கற்றங்களெல்லாம்; செய்யலர் போல - செய்ாதவரைப் போன்று என்க.

     (வி-ம்.) ஆட்டுதல் - நீராடச் செய்தல், கூட்டுதல் - தோழி மாரோடு சேர்த்தல். தன்னோடு சேர்த்தல் எனினுமாம். குலவுதல் - கொண்டாடுதல். ஒழுங்குதல்- நடப்பித்தல். விளிமொழி - அழைக்கும் சொல். விதலை - நடுக்கம். திளைத்தல் - கட்டியணைத்தல். நிறுத்துதல் - தன்வழிப் படுத்தல். கலத்துதல் - கலக்கச் செய்தல். கமழ்த்தல்- நறுமணம் கமழச் செய்தல்.

22 - 23: என் . . . . . . . . . . உறையுளில்

     (இ-ள்) என் பொன் நெடுஇலை பொலிந்த - என்னுடைய நெடிய பொற்றகட்டால் விளங்கிய; திருநிறை உறையுளில் - செல்வம் நிறைந்த இம்மாளிகையின்கண் என்க.

     (வி-ம்.) கணவனடைய அயன்மை தோன்ற என் உறையுள் என்றாள். பொன் நெடுஇலை என மாறுக; பொன்னால் இயன்ற நெடிய இலை வடிவமான ஒப்பனையால் பொலிந்த உறையுள் என்க. உறையுள் - இல்லம்.

36 - 37: நிறை . . . . . . . . . . கேட்டி

     (இ-ள்) நிறைநீர் விடுத்து - தமக்குரிய மேன்மைக் குணங்களைக் கைவிட்டு; செறிந்தது - எம்மை நெருங்கி வந்தது; என் எனக் கேட்டி, என்ன காரணமோ என்று நீ கேட்பாயாக என்க.

36 - 37: நிறை . . . . . . . . . . கேட்டி

     (இ-ள்) நிறைநீர் விடுத்து - தமக்குரிய மேன்மைக் குணங்களைக் கைவிட்டு; செறிந்தது - எம்மை நெருங்கி வந்தது; என் எனக் கேட்டி, என்ன காரணமோ என்று நீ கேட்பாயாக என்க.

     (வி-ம்.) நிறைநீர் - நிறைந்த பண்பு. அஃதாவது அன்பு முதலியன. எம்பால் அன்பில்லாதிருந்தும் எம்மில்லத்திற்கு வந்த காரணம் யாது என நீ கேட்டறிவாயாக என்று தலைவி தோழியை நோக்கிக் கூறியபடியாம். இனி இதனை மறி நோக்கினளே பெருநீரூரர் செஞ்சடையோனும் காலினனுமாகிய சோமசந்தரக் கடவுளினது கூடல் மருங்கணைந்து வரும்புனல் வையைத்துறையகத்து மலர் முகத்தையுடைய ஒரு பரத்தையை யாமறியா வண்ணம் மறைத்துச் செய்தனவெல்லாம் (யாம் அறிந்திருக்கவும்) செய்யாதார் போன்று என் உறையுளிற் செறிந்தது என்! எனக் கேட்டி என வினைமுடிவு செய்க.