பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 59

நேரிசையாசிரியப்பா

 
   
5
  நெடுவரைப் பொங்கர்ப் புனமெறி காழகிற்
கடும்புகை வானங் கையுறப் பொதிந்து
தருநிழற் றேவர் தம்முடல் பனிப்பப்
படர்ந்தெறி கங்கை விடுங்குளி ரகற்றும்
பொன்னம் பொருப்ப நின்னுளத் தியையிற்
10
  கனறலைப் பழுத்த திரள்பரன் முரம்பு
வயலவளை கக்கிய மணிநிரைப் பரப்பே
யதர்விரிந் தெழுந்து படர்புகை நீழல்
பொதுளிய காஞ்சி மருதணி நிழலே
தீவாய்ப் புலிப்பற் செறிகுர லெயிற்றியா
15
  கழுநீர் மலையும் வயன்மா தினரே
யயற்புல மெறியு மெயினர்மரத்துடி
நெடுநக ரிரட்டுங் களியரி கிணையே
யிருட்கலர் புலனெனச் சுழற்றருஞ் சூறை
மதுமல ரளைந்த மலயக் காலே
20
  யெழுசிறை தீயு மெருவையும் பருந்துங்
குவளையுங் காட்டுக் கருகொடு புதாவே
வலியழி பகடு வாய்நீர்ச் செந்நாய்
தழைமடி மேதியும் பிணடரிங் கருமே
பட்டுலர் கள்ளி நெற்றுடை வாகை
25
  சுருள்விரி சாலியுங் குலையரம் பையுமே
வடதிரு வால வாய்திரு நடுவூர்
வெள்ளி யம்பல நள்ளா றிந்திரை
பஞ்சவ னீச்சர மஞ்செழுத் தமைத்த
சென்னி மாபுரஞ் சேரன் றிருத்தளி
30
  கன்னிசெங் கோட்டங் கரியோன் றிருவுறை
விண்ணுடைத் துண்ணுங் கண்ணிலி யொருத்தன்
மறிதிரைக் கடலுண் மாவெனக் கவிழ்ந்த
களவுடல் பிளந்த வொளிகெழு திருவேற்
பணிப்பகை யூர்தி யருட்கொடி யிரண்டுடன்
35
  முன்னும் பின்னு மதுக்கொள நிறைந்த
வருவியஞ் சார லொருபரங் குன்றஞ்
சூழ்கொள விருந்த கூடலம் பெருமான்
முழுதுற நிறைந்த விருபதம் புகழார்
போம்வழி யெனுஞ்சர மருத
    மாமை யூர்தரு மணிநிறத் திவட்கே.

(உரை)
கைகோள்: களவு. தோழி கூற்று.

துறை: ஆதரங் கூறல்.

     (இ-ம்.) இதற்கு, "தலைவரும் விழுமநிலை" (தொல்) எனவரும் நூற்பாவின்கண் 'விடுத்தற்கண்ணும்' எனவரும் விதி கொள்க.

1 - 5: நெடுவரை................. இயையின்.

     (இ-ள்) நெடுவரை பொங்கர்ப் புனம் எறிகாழ் அகில்-நெடிய மூங்கில் செறிந்த மலைச்சார்பினில் தினைப்புனத்தை ஓம்பும் பொருட்டு வெட்டப்படுகின்ற வயிரம் பற்றிய அகில் மரங்களைச் சுடுவதனாலுண்டான; கடும்புகை வானம் கையுறப் பொதிந்து - மிக்க புகையானது வானத்தை அகப்படுத்து மூடிக்கொண்டு; தருநிழல் தேவர்தம் உடல் பனிப்ப-கற்பக நிழலை இடமாகவுடைய தேவர்களின் உடல் நடுங்கும்படி; படாந்து எறிகங்கை விடும்-பரவி அலைகளை வீசுகின்ற வான கங்கை தருகின்ற; குளிர் அகற்றம் பொன்னம் பொருப்ப- குளிரை நீக்குகின்ற அழகிய மலையினையுடைய பெருமானே; நின் உளத்து இயையின் - நின் நெஞ்சம் உடன்படுமாயின் என்க.

     (வி-ம்.) வரை-மூங்கில், பொங்கர்-மலைச்சாரற் பொழில். புனம்- தினைப்புனம். புனம் ஓம்புதற் பொருட்டு எறியும் அகில் என்க. எறிதல்- வெட்டுதல். காழ் - வயிரம். அகில் சுடுவதனாலுண்டான புகை என்க. கையுறப் பொதிதல் - அகப்படுத்து மூடுதல். பனித்தல் -நடுங்குதல். பொன் - அழகு. உளத்தியைதல் - உடன்படல்.

36: மாமை................... இவகட்கு

     (இ-ள்) மாமை ஊர்தரும் - அழகு வளருகின்ற; மணி நிறத்து இவட்கு - மணிபோலும் நிறத்தையுடைய எம்பெருமாட்டிக்கு என்க.

     (வி-ம்.) மாமை - அழகு. இவள் என்றது தலைவியை.

6 - 11: கனல்.................மாதினரே

     (இ-ள்) கனல் தலைப்பழுத்த - அழலுதல் தம்மிடத்து முதிர்ந்த; திரள் பரல் முரம்பு -திரண்ட பருக்கைக் கற்களையுடைய பாறைகள்; வயல்வளை கக்கிய மணிநிரைப் பரப்பு-வயலிலுள்ள சங்குகள் உமிழ்ந்த முத்துககள் நிரல்பட்ட மென் நிலப் பரப்பேயாகும்; அதர் விரிந்து எழுந்து படர்புகை நீழல் - அப்பாலை வழியின்கண் வெப்பத்தால் மேலெழுந்து படராநின்ற புகையின் நிழலானது; பொதுளிய காஞ்சி மருது அணி நிழலே-தளிர் நிறைந்த காஞ்சியும் மருதுமாகிய மரங்களின் அழகிய நிழலேயாகும்; தீவாய் புலிப்பல் செறிகுரல் எயிற்றியர் - தீப்போற் புகையாநின்ற வாயினையுடைய புலியினது பற்களை அணிந்துள்ள கழுத்தையுடைய பாலைநிலப் பெண்கள்; கழுநீர் மலையும் வயல்மாதினரே -செங்கழுநீராகிய களைகளைப் பறிக்கின்ற உழவர் மகளிரேயாவர் என்க.

     (வி-ம்.) தலை - இடம். பழுத்தல்-முதிர்தல். பரல்-பருக்கைக் கற்கள். வளை-சங்கு. மணி-முத்து. பரப்பு-நிலப்பரப்பு. அதர்-வழி. பொதுளல்- தழைத்தல். அணிநிழல்- நன்னிழல என்றவாறு. குரல்; ஆகுபெயர். கழுத்து எயிற்றியர் - பாலைநிலப் பெண்கள். கழுநீர் - செங்கழுநீர். மலைதல்-பறித்தல். வயல்மாதினர்-உழத்தியர்.

12 - 15: அயல்..........................காலே

     (இ-ள்) அயல்புலம் எறியும் எயினர் மரத்துடி - அப்பாலையின் பக்கத்தே முழக்குகின்ற மறவர்களது மரத்தாற் செய்த துடிப்பறையானது; நெடுநகர் இரட்டும் களி அரி கிணையே - நெடிய நகரத்தின்கண் முழுக்காநின்ற இனிமைதரும் இந்திரனுக்குரிய மருதநிலப் பறையேயாகும்; இருள்கலர் புலன் என சூழல்தரும் சூறை- அறியாமையையுடைய கீழ்மக்களது அறிவுபோலச் சுழலாநினற சூறைக்காற்றானது; மலர்மது அளைந்த - மலர்த்தேனிற்றோய்ந்து வீசுகின்ற; மலயக் காலே - தென்றற் காற்றோயாகும் என்க.

     (வி-ம்.) புலம்-இடம். எயினர்-பாலைநில மாக்கள். துடி - ஒருவகைப் பறை; உடுக்கையுமாம்; பாலைப்பறையுமாம். அரி-இந்திரன். கிணை - ஒருவகைப் பறை. அரிகிணை எனவே மருதப் பறை என்பதாயிற்று. இருள்- அறியாமை. கலர்-கீழ்மக்கள். 'அம்பலம் பணியாக் கலரை'ப் பொறச் சிறியான் என்னை கொல்லோ கருதியதே என்றார் மணிவாசகரும. புலன்-அறிவு. சூறைக்காற்று-சூழற்காற்று.

16 - 21: எழுசிறை.....................அரம்பையுமே,

     (இ-ள்) எழுசிறை தீயும் எருவையும் - பறந்தெழா நின்ற சிறகுகள் தீய்ந்திடுகின்ற கழுகுகளும்; பருந்தும்-பருந்துகளும்; குவளையங் காட்டு குருகொடு புதாவே - குவளை மலர்களாகிய காட்டின்கண் வாழுகின்ற நாரைகளும் கொக்குகளும் ஆகும்; வலி அழி பகடு நீர்வாய் செந்நாய்-வலிமை குறைந்த யானைகளும் உமிழ் நீர் சொரியும் வாயுள்ள செந்நாய்களும்; தழைமடி மேதியும் பிணர் இடங்களும்-வளவிய மடியினையுடைய எருமைகளும் பொருக்குடலுள்ள முதலைகளும் ஆகும்; பட்டு உலர்கள்ளி- கிளைகள் வெந்து உலர்ந்த கள்ளி மரங்களும்; நெற்று உடை வாகை - நெற்றையுடைய வாகைமரமும்; சுருள்விரி சாலியும் - குருத்து விரிந்த நெற்பயிரும்; குலை அரம்பையுமே - குலைகளையுடைள வாழையுமேயாகும் என்க.

     (வி-ம்.) எழுசிறை: வினைத்தொகை, சிறை . சிறகுகள் எருவை - கழுகு, குருகு- நாரை, புதா - கொக்கு. பகடு - யானை. நீர் - உமிழ்நீர். தழைமடி : வினைத்தொகை. மடி - முலை, மேதி - எருமை. பிணர் - பொருக்கு. இடங்கர் - முதலை. நெற்று- முதிர்ந்துலர்ந்த காய். சுருள், ஆகுபெயர், அரம்பை - வாழை.

22 - 26: வடதிரு ................................... திருவுறை

     (இ-ள்) வடதிரு ஆலவாய் - இடைக்காடன் பொருட்டுக் கோயில் கொண்டருளிய வடமதுரையும்; திருநடு ஊர் - திரு நடுவூர் என்னும் திருப்பதியும்; வெள்ளியம்பலம் - வெள்ளியம்பலமும் நள்ளாறு - திருநள்ளாறும்; இந்திரை- இந்திரையும் பஞ்சவனீச்சரம் - பஞ்சவனீச்சரமும்; அஞ்செழுத்து அமைத்த சென்னி மாபுரம் - திருவைந்தெழுத்து அமைத்த பெருமையுள்ள சோழபுரமும்; சேரன் திருத்தளி-சேரன் திருத்தளியும்; கன்னி செங்கோட்டம்-அழிவில்லாத திருச்செங்கோட்டமும்; கரியோன் திருவுறை - திருமாலது அழகிய சோலையும் என்க.

     (வி-ம்.) சென்னி-சோழன். கன்னி - அழிவின்மை.

27 - 32: விண் ............................. குன்றம்

     (இ-ள்) விண் உடைத்து உண்ணும் - விண்ணுலகத் துள்ளாரை அழித்துண்ட; கண்இலி ஒருத்தன் - கண்ணோட்டம் இல்லாத ஒரு சூரபன்மனுடைய; மறிதிரை கடலுள் -புரளுகின்ற அலைகளையுடைய கடலின்; கண மாஎனக் கவிழ்ந்த - மாமரமாகத் தலைகீழாக முளைத்த; களவு உடல் பிளந்த . வஞ்சக உடம்பினைக் கூறாக்கிய; ஒளிகெழு திருவேல் - ஒளி பொருந்திய அழகிய வேற்படையினை ஏந்திய; பணிப்பகை ஊர்தி பாம்புக்குப் பகையாகிய மயிலை நடத்தும் முருகக்கடவுள்; அருள்கொடி இரண்டுடன் - தன தருளாகிய தெய்வானை வள்ளி என்னும் பூங்கொடியையொத்த இரண்டு தேவிமாருடனே; முன்னும் பின்னும் முதுக்கொள நிறைந்த-முன்பும் பின்பும் பழமை கொள்ளும்படி நிறைந்துள்ள; அருவி அம்சாரல்- அருவிகளையுடைய அழகிய சாரலையுடைய; ஒருபரங்குன்றம் ஒப்பற்ற திருப்பரங்குன்றமும் என்க.

     (வி-ம்.) விண்:ஆகுபெயர். கண் - கண்ணோட்டம். ஒருத்தன் - சூரபன்மன். மா-மாமரம். களவுடல் - வஞ்சக உடம்பு. பணி - பாம்பு, பணிப்பகை என்றது மயிலை. முது - பழமை.

33 - 35: சூழ்கொள................................. மருதம்

     (இ-ள்) சூழ்கொள இருந்த கூடலம் பெருமான் - புடை சூழவிருந்த மதுரைப் பெருமானது; முழுதுஉற நிறைந்த - எங்கும் நிறைந்த; இருபதம்- இரண்டு திருவடிகளையும்; புகழார் போம் வழி எனும் - புகழ்ந்து வாழ்த்தாதவர் போகும் வழி என்று சொல்லப்படுகின்ற; சுரம் - அப்பாலை நிலந்தானும்; மருதம்-மருத நிலமேயாகுங்காண் என்க.

     (வி-ம்.) வடதிருவாலாவாய் முதலாகப் பரங்குன்றம் ஈறாகக் கூறப்பட்ட திருப்பதிகள் புடைசூழவிருந்த மதுரை என்க.

     இதனை, பொன்னம் பொருப்ப! நின்னுள்ளத்தியையின், மணி நிறத்திவட்கு, பரன்முரம்பு மணிநிரைப் பரப்பே, புகைநிழல் மருதணி நிழலே, எயிற்றியர் வயன்மாதினரே, எருவையும் பருந்தும் குறுகொடு புதாவே, பகடு செந்நாய் மேதியுமிடங்கருமே கள்ளிவாகை சாலியு மரம்பையுமே, கூடற் பெருமான் பதம் புகழார் போம்வழியெனுங் கடுஞ்சுரம் மருதமேயென வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.