பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள்

நேரிசையாசிரியப்பா

 
   
5
  நிலையுடைப் பெருந்திரு நேர்படு காலைக்
காலாற் றடுத்துக் கனன்றெதிர் கறுத்தும்
நனிநிறை செல்வ நாடுநன் பொருளு
மெதிர்பெறிற் கண்சிவந் தெடுத்தவை களைந்துந்
தாமரை நிதியும் வால்வளைத் தனமு
10
  மில்லம் புகுதரி லிருங்கத வடைத்து
மரியய னமரர் மலைவடம் பூட்டிப்
பெருங்கடல் வயிறு கிடங்கெழக் கடைந்த
வமுதமுட் கையி லுதவுழி யூற்றியு
மெய்யுல கிரண்டினுட் செய்குந ருளரே
15
  லெழுகதிர் விரிக்கு மணிகெழு திருந்திழை
நிற்பிரி வுள்ளு மனனுள னாகுவன்
முழுதுற நிறைந்த பொருண்மன நிறுத்திமுன்
வேடந் துறவா விதியுடைச் சாக்கிய
னருட்கரை காணா வன்பெனும் பெருங்கடல்
20
  பலநாட் பெரகி யொருநா ளுடைந்து
கரைநிலை யின்றிக் கையகன் றிடலு
மெடுத்தடை கன்மலர் தொடுத்தவை சாத்திய
பேரொளி யிணையாக் கூடன் மாமணி
குலமலைக் கன்னியென் றருள் குடி யிருக்கும்
25
  விதிநிறை தவறா வொருபங் குடைமையும்
பறவைசெல் லாது நெடுமுக டுருவிய
சேகரத் திறங்குந் திருநதித் துறையு
நெடும்பக லூழி நினைவுட னீந்தினு
மருங்கரை யிறந்த வாகமக் கடலு
30
  மிளங்கோ வினர்க ளிரண்டறி பெயரு
மன்னமும் பன்றியு மொல்லையி னெடுத்துப்
பறந்து மகிழ்ந்து்ம் படியிது வென்னா
  வறிவகன் றுயர்ந்த கழன்மணி முடியு
முடைமையன் பொற்கழல் பேணி
யடையலர் போல வருண்மனந் திரிந்தே.

(உரை)
கைகோள் : களவு தலைவன் கூற்று

துறை : பிரிவுணர்த்தல்

     (இ-ம்.) இதற்கு, “ முன்னிலை யாக்கல் ” (தொல், களவி. சு0) எனவரும் நூற்பாவின்கண் ‘ தெளிவு அகப்படுத்தல் ’ எனவரும் விதி கொள்க.

11 : எழுகதிர்...................திருந்திழை

     (இ-ள்) எழுகதிர் விரிக்கும் - குணகடலில் எழாநின்ற இளஞாயிறுபோல ஒளியைப் பரப்புகின்ற ; மணிகெழு திருந்து இழை - மணிகள் பொருந்திய திருத்தஞ் செய்யப்பட்ட அணிகலன்களையுடைய நங்கையே என்க.

1-6 : நிலை............................அடைத்தும்

     (இ-ள்) நிலையுடை பெருந்திரு நேர்படு காலை - நிலைநிற்றலையுடைய பெருஞ் செல்வமானது தானே வந்தெய்திய காலத்தே ; காலால் தடுத்து - அதனைக் காலால் தள்ளி ; எதிர் கனன்று கறுத்தும் - அதற்கெதிராக நெஞ்சழன்று வெகுண்டும் ; நனிநிறை செல்வ நாடும் . ஒழியாது நிரம்பிய வளப்பத்தைத் தருகின்ற நாடும் ; நன்பொருளும் எதிர்பெறின் - நல்ல பொருள்களும் தாமே வந்து எதிர்ப்பட்ட விடத்தே ; கண்சிவந்து எடுத்தும் அவை களைந்தும் - கண் சிவக்கும்படி சினந்தும் அவையிற்றை எடுத்தெறிந்தும் ; தாமரை நிதியும் வால்வளை தளமும்பதுமநிதியும் வெள்ளிய சங்கநிதியும் ; இல்லம் புகுதலில் - தாமே வந்து வீட்டில் புகுமிடத்தே ; இருங்கதவு அடைத்தும் - அவை புகுதாதபடி பெரிய கதவுகளை அடைத்துத் தடுத்து்ம் என்க,

     (வி-ம்.) நிலையாமையே இயல்பாயுள்ள செல்வத்தினும் மேலாய செல்வம் என்பான் நிலையுடைப் பெருந்திரு என்றான். அதற்கு நேர்படுதல் அரிது என்பான் - நேர்படு காலை என்றான், நனிநிறைந்த செல்வத்தையுடைய நாடு என்க. அஃதாவது நாடாவளத்தையுடைய நாடு, நன்பொருள் என்றது படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்பன. தாமரை நிதி - பதமநிதி. வளைத்தனம் - சங்கநிதி

7-10 : அரி....................................உளரேல்

     (இ-ள்) அரி அயன் அமரர் - திருமாலும் பிரமனும் தேவர்களும், மலைவடம் பூட்டி - மந்தரமலையாகிய மத்தின்கண் வாசுகி என்னும் வடத்தைப் பூட்டி ; பெருங்கடல் வயிறு கிடங்கு எழ - பெரிய கடலினது வயிறானது பள்ளமாகும்படி ; கடைந்த அமுதம் உள்கையில் உதவுழி ஊற்றியும் - கடைந்ததனாற்றிரணட் அமிழ்தத்தை உள்ளங்கையில் கிடைக்கும் பொழுது அதனைத் தரையிற் கவிழ்த்தும் ; மெய்உலகு இரண்டினுள் - மெய்மையுள்ள விண்ணுமாகிய இரண்டுலகத்தினும் ; செய்குநர் உளரேல் - செய்தார் உண்டாயிருந்தால் என்க.

     (வி-ம்.) திருமால் முதலிய தேவர்கள் திருப்பாற் கடலில்கண் மந்தரமலையை மத்தாக நட்டு வாசுகியைக் கடை கயிறாகக்கொண்டு அமுதம் கடைந்தனர் என்பத புராண வரலாறு. வயிறு . ஈண்டு உன்னிடம், கிடங்கு - பள்ளம், உள்கை - உள்ளங்கை, பெருந்திரு முதலியன தாமே வந்தெய்தும் பொழுது அவற்றை வேண்டாமென விடுப்போர் மண்ணிலும் விண்ணிலும் இல்லை என்றவாறு,

13-17: முழுதுற............................அகன்றிடலும்

     (இ-ள்) முழுதுஉற நிறைந்த பொருள் - உள்ளும் புறமுமாக எங்கும் நிறைந்துள்ள சிவமென்னும் பொருளை ; மனம் நிறுத்திமுன் வேடம் துறவா - தன் நெஞ்சின்கண்ணே நிலைபெற வைத்தும் தாம் முன்பு தழுவிய சமண சமயத்திற்குரிய வேடத்தைக் கைவிடாத ; விதிஉடை சாக்கியன் - முறைமையையுடைய சாக்கிய நாயனார் ; அருள்கரை காணா - திருவருள் என்னும் கரையைக் கண்டு ; அன்பு என்னும் பெருங்கடல் - அன்பாகிய பெரிய கடலானது ; பலநாள் பெருகி - நெடுங்காலமாகப் பெருக்கெடுத்து ; ஒருநாள் உடைபட்டுக் கரைநிலை பெறாமல் கைகடந்து செயலற்றுப் போதலும் என்க.

     (வி-ம்.) முழுதுற நிறைந்த பொருள் என்றது அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த இறைவனை முன்வேடம் - சாக்கிய நாயனார் முன்னர்த் தழுவியிருந்த சமணத் துறவிவேடம், அஃதாவது தோமரு கடிஞையும் சுவன்மேல் அறுவையும் கைப்பீலியும் பாயுடையும் உறியும் பிறவும் உடைய வேடம் என்க. காணா . கண்டு. கையகன்றிடல் - எல்லை கடத்தல்.

18-25: எடுத்தடை......................................கடலும்

     (இ-ள்) எடுத்து அடைகல் மலர் அவை தொடுத்துச் சாத்திய - பொறுக்கிச் சேர்த்து வைத்த கல்லாகிய மலர்களைத் தொடர்ச்சியாக எறிந்து வழிபாடு செய்த ; இணையாப் பேரொளி கூடல்மாமணி - ஒப்பில்லாத பேரொளியாகிய மதுரையிலுள்ள கடவுள் மணி ; குலம்மலைக் கன்னி என்று அருள் குடியிருக்கும் - மேன்மையாகிய மலைமகள் என்று பெயர் கூறப்பட்டுத் திருவருள் பரியாதிருக்கின்ற ; விதிநிறை தவறா ஒருபங்கு உடைமையும் - வேதத்தால் விதிக்கப்பட்ட பெருமை தவறாத ஒரு பாகமுடைய தன்மையும் பறவை செல்லாது நெடுமுகனாகிய அன்னப்பறவை செல்லாமல் நெடிய வான முகட்டைக் கடந்து அப்பாற் சென்ற திருமுடியினின்னும் வீழ்கின்ற அழகிய கங்கையாற்றின் துறையும் ; நெடும்பகல் ஊழி நினைவுடன் நீந்தினும் அருங்கரை இறந்த ஆகமக் கடலும் - பயில்வோர் நெடுங்காலமாகிய பல்லூழி காலம் நினைப்புடனே நீந்திச் சென்றாலும் அருமையாகிய கரைகாணக் கூடாத சிவாகமம் என்னும் கடலும் என்க,

     (வி-ம்.) அடைகல் - சேர்த்து வைத்த கல், சாக்கிய நாயனரால் கல்மலரால் வழிபாடு செய்யப்பட்ட கூடல் மாமணி என்க, மணி - மாணிக்கம். கடவுளருள் வைத்து மாணிக்கம் போன்ற கடவுள் என்பது கருத்து. மலைக்கன்னி - பார்ப்பதி. நின்ற - பெருமை. பறவை - இறைவனுடைய முடியைக் காணச்சென்ற நான்முகனாகிய அன்னப் பறவை எனக். சேகரம் - முடி. திருநதி என்றது கங்கைப் பேரியாற்றினை. ஆகமம் - சிவாகமம்.

26-31: இளங்கோ......................................திரிந்தே

     (இ-ள்) இளம் கோவினர்கள் இரண்டு அறிபெயரும் - இளங் கடவுளராகிய படைத்தல் அழித்தல் என்னும் இரு தொழிலையும் அறிந்த நான்முகனும் திருமாலும் ஆகிய இருவரும் ; அன்னமும் பன்றியும் ஒல்லையில் எடுத்து - அன்னமாகவும் பன்றியாகவும் விரைந்து உருவெடுத்துக்கொண்டு ; பறந்தும் அகழ்ந்தும் படி இது என்னா - விண்ணில் பறந்தும் மண்ணைத் தோண்டியும் அளவு இஃதாம் என்று ; அறிவு அகன்று உயர்ந்த கழல்மணி முடியும் - கூறவியலாதபடி அவர்களுடைய அறிவினையும் கடந்து அப்பாற்பட்டுள்ள வெற்றிக் கழலணிந்த திருவடிகளையும் அழகிய முடியினையும் ; உடைமையன் பொற்கழல் பேணி அருள் திரிந்து அடையலர் மனம்போல - உடையவனது பொன்னடியை வழிபட்டு அவன் அருளை அடையாமல் மாறுபட்டு அவ்வடியை அடையாத மடவோர் நெஞ்சு போல என்க.

     (வி-ம்.) முழு முதற்கடவுளின் ஆனைவழி நின்று தொழில் செய்தலின் நான்முகனும் திருமாலும் இளங்கோவினர் எனப்பட்டனர். இரண்டு - படைப்பும் அழிப்புமாகிய இரண்டு தொழில்கள். அன்னமும் பன்றியுமாக உருவெடுத்து என்க. படி - ஒப்புமாம். கழலும் மணிமுடியும் என்க.

12: நின்..........................ஆகுவன்

     (இ-ள்) நின் பிரிவு உள்ளும் மனன் உளன் ஆகுவன் - நின்னைப் பிரிதலுக்கு நினையா நின்ற நெஞ்சமுடையேன் ஆக என்க.

     (வி-ம்.) கழல்பேணி அடையலர் மனம்போல மனன் உளனாகுவன் என இயைத்துக்கொள்க.

     இதனை, திருந்திழையே ! பெருந்திருவைக் கறுத்தும், நாடும் பொருளும் பெறின், கண்சிவந்து களைந்தும், நிதியுந்தனமும் புகின் கதவடைத்தும், அமுத முதவுழி யூற்றியும், செய்தாருளரேல், கூடன் மாமணியாகிய வுடைமையன் கழல்பேணி, அடையலரது, அருள் திரிந்த மனம்போல நிற்பிரிவுள்ளு மனனுளனாவேனெ வினை முடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.