பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 75

நேரியாசிரியப்பா

 
   
5
  பெருந்துய ரகற்றி யறங்குடி நாட்டி
யுளச்சுருள் விரிக்கு நலத்தகு கல்வியொன்
றுளதனக் குரிசி லொருமொழி சாற்றப்
பேழ்வாய்க் கொய்யுளை யரிசுமந் தெடுத்த
பன்மணி யாசனைத் திருந்துசெவ் வானி
10
  னெடுஞ்சடைக் குறுஞ்சுடர் நீக்கியைந் தெடுக்கிய
வாறைஞ் நூறொடு வேறுநிரை யடுத்த
பன்மணி மிளிர்முடி பலர்தொழக் கவித்துப்
பஃறலைப் பாந்தட் சுமைதிருத் தோளிற்
றரித்துல களிக்குந் திருத்தகு நாளி
15
  னெடுநாட் டிருவயிற் றருளுட னிருந்த
நெடுஞ்சடை யுக்கிரற் பயந்தரு ணிமலன்
மற்றவன் றன்னால் வடவையின் கொழுந்துசுட்
டாற்றா துடலமு மிமைக்குறு முத்தமும்
விளர்த்துநின் றணங்கி வளைக்குல முழங்குங்
20
  கருங்கடல் பொரிய வொருங்குவேல் விடுத்த
வதற்கருள் கொடுத்த முதற்பெரு நாயகன்
வெம்மையுந் தண்மையும் வினையுடற் காற்று
மிருசுட ரொருசுடர் புணர்விழி யாக்கிமுன்
விதியவன் றரா வுடலொடு நிலைத்த
25
  முத்தமிழ்க் கூடன் முதல்வன் பொற்றாள்
கனவினுங் காணாக் கண்ணிலர் துயரும்
பகுத்துண் டீகுநர் நிலைத்திரு முன்ன
ரில்வெனுந் தீச்சொ விறுத்தனர் தோமு
மனைத்துயி ரோம்பு மறத்தினர் பாங்கர்க்
30
  கோறவென் றயவினர் குறித்தின குற்றமு
நன்றறி கவ்வியர் நாட்டுறு மொழிபுக்
கவ்வா ணிழந்தோர்க் கருவிட மாயது
மொருகணங் கூடி யொருங்கே
யிருசெவிப் புக்க தொத்தன விவட்கே.

(உரை)
கைகோள் : கற்பு. தோழி கூற்று

துறை: கலக்கங்கண்டுரைத்தல்

     (இ-ம்.) இதனை “பெறற்கரும் பெரும் பொருள்” (தொல். கற்பி. க) எனவரும் நூற்பாவின்கண் ‘பிறவும் வகைபடவந்த கிளவி, என்பதனால் அமைத்துக்கொள்க.

30: இவட்கு...................................

     (இ-ள்) இவட்கு - எம்பெருமாட்டியாகிய இவளுக்கு என்க.

     (வி-ம்.) இவள் என்றது எம்பெருமாட்டியாகிய இவளுக்கு என்பதுபடநின்றது.

1-3: பெருந்துயர்...............................சாற்ற

     (இ-ள்) பெருந்துயர் அகற்றி - மாந்தரின் உளத்தில் உறையும் பெரிய துன்பத்தை நீக்கி ; அறம் குடிநாட்டி - அறப்பண்பினை நெஞ்சின்கண் குடியாக இருத்தி ; உளச்சுருள் விரிக்கும் - நெஞ்சின் சுருக்கத்தை மலர்வியாநின்ற ; நலத்தகு கல்வி ஒன்று உளது - நலஞ் செய்யும் தகுதியையுடைய ; கல்வி என்னும் பொருள் ஒன்று உளது ; என குரிசில் ஒரு மொழி சாற்ற - என்று நம்பெருமான் சொன்ன ஒரு மொழியை யான் சொல்லுமளவிலே என்க.

     (வி-ம்.) ஒதற்குப் பிரியக்கருதும் தலைவன் அக்கருத்தினை மெல்ல வெளிப்படுப்பான் தோழியை நோக்கி மாந்தர் தேடுதற்குரிய பொருள் ஒன்று உளது ; என குரிசில் ஒரு மொழி சாற்ற - என்று நம்பெருமான் சொன்ன ஒரு மொழியை யான் சொல்லுமளவிலே என்க.

     (வி-ம்.) ஓதற்குப் பிரியக்கருதும் தலைவன் அக்கருத்தினை மெல்ல வெளிப்படுப்பான் தோழியை நோக்கி மாந்தர் தேடுதற்குரிய பொருள் ஒன்று உளது ; அது துயரகற்றும் ; அறத்தை நெஞ்சில் நாட்டும் . உளச்சுருள் விரிக்கும் . என்று கூறினானாக, அக்குறிப்புணர்ந்த தோழி அவன் கூற்றினைத் தலைவிக்குக் கூறுகின்றான் என்க. இதனோடு

“அறம்பொரு ளின்பமும் வீடும் பயக்கும்
 புறங்கடை நல்லிசையு நாட்டும் - உறுங்கவலொன்
 றுற்றுழியுங் கைகொடுக்குங் கல்வியி னூங்கில்லை
 சிற்றுயிர்க் குற்ற துணை ”            (நீதிநெறி. உ. கல்வி)

எனவரும் வெண்பாவையும் நினைக. குரிசில் - தலைவன்.

4-8: பேழ்வாய்............................கவிந்து

     (இ-ள்) பேழ்வாய் கொய்யுளை அரி சுமந்து எடுத்த - பெரிய வாயையும் கொய்தாலொத்த பிடரிமயிரினையுமுடைய சிங்கத்தினாலே சுமந்து தாங்கப்பட்ட ; பல்மணி ஆசனத்து இருந்து - பலவாகிய மணிகள் பதித்த இருக்கையில் எழுந்தருளியிருந்து ; செவ்வானின் நெடுஞ்சடை குறுஞ்சுடர் நீக்கி - செக்கர் வானம் போன்ற நெடியாசடையையும் குறிய பிறையையும் அகற்றி ; ஐந்து அடுக்கிய ஆறு ஐஞ்நூறொடு - ஐந்து என்னும் எண்ணால் பெருக்கப்பட்ட மூவாயிரத்தாலாகிய பதினையாயிரம் என்னும் எண்பெற்ற ; வேறு நிலை அடுத்த - வேறுவேறான வரிசை பொருந்திய ; பல்பணி மிளிர்முடி - பல்வேறு மணிகளோடு விளங்காநின்ற திருமுடியை ; பலர் தொழக் கவித்து - பலரும் வண்ங்கும்படி அணிந்து என்க.

     (வி-ம்.) பேழ்வாய் - பெரிய வாய், கொய்யுளை ; வினைத்தொகை, உளை- பிடரிமயிர், அரி - சிங்கம், அரிசுமந்தெடுத்த ஆசனம்-சிங்காசனம், சடைக்கற்றைக்கு செக்கர்வானம் உவமை. நெடுஞ்சடைக் குறுஞ்சுடர் என்புழிச் செய்யுளின்ப முணர்க.

6-12: பஃறலை..............................நிமலன்

     (இ-ள்) பல்தலை பாந்தள் - பலவாகிய தலைகளையுடைய அதிசேடன் என்னும் பாம்பிற்கு ; சுமை - சுமையாகிய நிலவுலகத்தை ; திருத்தோளில் தரித்து- தனது அழகிய தோளிலே தாங்கி ; உலகு அளிக்கும் திருத்தகு நாளில்- உலகின்கணுள்ள உயிர்களைப் பாதுகாவா நின்ற செல்வம் மிக்க நாளிலே ; அருளுடன் திருவயிற்று நெடுநாள் இருந்த உக்கிரன் பயந்து அருள் நெடுஞ்சடை நிமலன் - திருவருள் உருவமாகிய சடாதகைப் பிராட்டியாரது அழகிய வயிற்றில் நெடுநாள் தங்கியிருந்த உக்கிர பாண்டியனைப் பெற்றருளிய நெடிய சடையையுடைய தூயோனாகிய சோமசுந்தரக் கடவுள் என்க.

     (வி-ம்.) அருள் - ஈண்டு அருளுருவமாகிய தடாதகைப் பிராட்டியார் என்க. அருளுடன் என்புழி உடன் உருபு மயக்கம். நெடுஞ்சடை நிமலன் என மாறுக நிமலன் - அழுக்கற்றவன், எனவே தூயோன் என்பதாயிற்று.

13-17: மற்றவன்................................நாயகன்

     (இ-ள்) மற்றவன் தன்னால் - அந்த உக்கிரபாண்டியனால் ; வடவையின் கொழுந்து சுட்டு - வடவைத்தீயின் கொழுந்தானது சுட்டனால் ; வளைக்குலம் ஆற்றாது உடலமும் இமைக்குறும் முத்தமும் விளர்த்து நின்று - சங்கினங்கள் பொறாமல் தமதுடலும் சுடருகின்ற முத்தமும் வெளிற நின்று ; அணங்கி முழங்கும் கருங்கடல் - வருந்தி ஒலித்தற்கிடமாகிய பெரிய கடலானது ; ஒருங்கு பொரிய வேல்விடுத்த - ஒருசேர வெந்து பொரியும்படி வேற்படையை எறியச்செய்த ; அதற்கு -அச்செயலுக்கு ; அருள்கொடுத்த முதல் பெருநாயகன் - திருவருள் வழங்கிய யாவர்க்கும் முதல்வனாகிய பெரிய கடவுளாகிய சிவபெருமானாகிய என்க.

     (வி-ம்.) மற்றவன் - முற்கூறப்பட்ட உக்கிரபாண்டியன் , இமைக்குறுதல்- ஒருசொல் ; சுடர்தல், அணங்குதல் - வருந்துதல். கருங்கடல் என்புழி கருமை பெருமை. அதற்கு - அச்செயலுக்கு.

18-22: வெம்மையும்..............................துயரும்

     (இ-ள்) வெம்மையும் தண்மையும் - வெப்பத்தையும் குளிர்ச்சியையும; வினைஉடற்கு-இருவினைகாரணமாக உயிர்கள் எடுத்துவரும் உடலுக்கு; ஆற்றும்-செய்யாநின்ற ; இருசுடர் ஒருசுடர் புணர்விழி ஆக்கி - ஞாயிறும் திங்களும் ஆகிய இரண்டு ஒளிப்பிழம்புகளோடு மற்றோர் ஒளிப்பிழம்பாகிய நெருப்பையும் பொருந்தா நின்ற கண்களாகக் கொண்டு ; முன் விதியவன் தாரா உடலொடு நிலைத்த - ஏனை உயிர்களுக்குப்போலப் படைப்புக் கடவுளாகிய நான்முகனாலே படைக்கப்படாத திருவருள் உடம்போடு நிலைபெற்ற ; முத்தமிழ்க்கூடல் முதல்வன் - இயல், இசை, கூத்து என்னும் மூன்று வகையாகிய தமிழையுடைய மதுரையில் எழுந்தருளியுள்ள பெருமானது ; பொன்தாள் கனவினும் காணாக்கண் இலர் துயரும் - பொன்னடியைக் கனவினும் காணப்பெறாத அகக்கண் இல்லாத மடவோருடைய துன்பமும் என்க.

     (வி-ம்.) வினைகாரணமாக உயிர்கள் எடுத்துவரும் உடலுக்கு வெப்பமும் தட்பமும் செய்யும் இருசுடர் என்க. வெம்மை செய்யும் சுடர் ஞாயிறு, தண்மை செய்யும் சுடர் திங்கள், ஒரு சுடர் - மற்றொரு சுடர், அஃதாவது நெருப்பு, புணர்விழி ; வினைத்தொகை, இறைவன் மேற்கொள்ளும் வடிவங்களெல்லாம் தானே படைத்துக்கொள்ளும் வடிவமாதலின் விதியவன் தாரா உடல் என்றார். முத்தமிழ்- இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ப, பொன்னடி-அழகிய அடி, பேதையர்- மடவோர்.

23-28: பருத்து..........................................விடமாயதும்

     (இ-ள்) பகுத்து உண்டு ஈகுநர் - தம்பால் உள்ள பொருளை வறியோர்க்கும் பகுத்துக் கொடுத்து எஞ்சியதை உண்டு அறம் செய்வோருடைய; நிலைத் திருமுன்னர் - நிலைபெற்ற செல்வத்தையுடைய முன்றிலிற் சென்று; இல் எனும் தீ சொல் இறுத்தனர் தோமும் - இல்லை என்னும் தீய சொல்லைச் சொல்லிய இரவலருடைய துன்பமும் ; அனைத்து உயிர் ஓம்பும் அறத்தினர் பாங்கர் - உயிர் அனைத்தையும் பாதுகாக்கும் அறப்பண்புடைய சான்றோரிடத்து ; அயலினர் - சால்பிலாத கயவர் ; கோறல் என்று குறித்தன குற்றமும் - கொல்லுதல் என்று சொல்லப்பட்டனவாகிய குற்றமும் ; நன்று அறி கல்வியர் - நம்மை அறிதற்குக் கருவியாகிய கல்வியையுடைய சான்றோர் ; நாட்டுறு மொழி - நிலைநாட்டிய சொல்லானது ; அரண் இழந்தோர்க்கு - அக் கல்வியாகிய காவலைக் கைவிட்டாரிடத்து; புக்கு அருவிடம் ஆயதும் - புகுந்து அவரை அழிக்கும் தீர்த்தற்கரிய நஞ்சாகிய துன்பமும் என்க.

     (வி-ம்.) பகுத்துண்டு ஈகுநர் என்றது இல்லறம மேற்கொண்ட சான்றோரை, அவர் செல்வம் அழிவெய்தாமையின் நிலைத்திரு என்றார். இதனோடு,

“பழியஞ்சிப் பாத்தூ ணுடைத்தாயின் வாழ்க்கை
 வழியெஞ்சு லெஞ்ஞான்று மில் ”
(குறள். 44)

என்னும் திருக்குறளையும் நிகை. நிலைத்திரு: அன்மொழித்தொகை நிலைத்த செல்வத்தையுடைய இல்லம் என்க. இல்எனும் தீச்சொல் - எமக்கு உணவு முதலியன இல்லை என்று கூறி இரக்கும் கொடிய சொல் ; இச்சொல் இரவலன் உளத்தையும் ஒரேவழி, புரவலர் உளத்தையும் வருத்துதலின் தீச்சொல் எனப்பட்டது. தோம்- துன்பம், அனைத்துயிர் ஓம்பும் அறத்தினர் என்றது துறவோரை, ஏனையோர் கொல்லுங்கள் என்று சொல்லும் சொல்லே அவர் செவியைச் சுடுதலின் அறத்தினர் பாங்கர்க்கோறல் என்று குறித்தனவாகிய குற்றமும் என்றான். குறித்தல் - சொல்லுதல், நன்றுஅறி கல்வி - நன்மையை அறிதற்குக் கருவியாகிய கல்வி. கற்றோர்மொழி கல்லார் செவியைச் சுடுதலின் கல்வியர்மொழி அரண் இழந்தோர்க்கு விடம் ஆயதும் என்றாள். ‘கல்லாத மாந்தர்க்குக் கற்றறிந்தார் சொற்கூற்றம்’ என்பதும் நோக்குக.

29-30: ஒருகணம்....................................ஒத்தன

     (இ-ள்) ஒருகணம் கூடி - ஆகிய இவ்வருத்த மெல்லாம் ஒரு கூட்மாகக் கூடி ; ஒருங்கே இருசெவி புக்கது ஒத்தன - ஒருசேர இரண்டு செவியினிடத்தும் புகுந்தாற்போல இருந்தன என்க.

     (வி-ம்.) கணம் - கூட்டம் இதனை, இவளுக்குக் குரிசில், நலத்தகு கல்வி யொன்றுளதென்று கூறியவோர் மாற்றமானது, கூடல் முதல்வனது தாளைக் கனவிலுங் காணாதவர் துயரமும் தீச்சொலிறுத்தனர் தோமும், அறத்தினர் பாங்கர்க் கோறலென்றனர் குற்றமும் கல்வியர்மொழி மூடர்க்குவிடம் போலாய வருத்தமும் ஒருங்குகூடிச் செவிபுக்க தொத்தனவென்று வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.