பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 8

நேரிசையாசிரியப்பா

 
   
5
  உயிர்புகுஞ் சட்டக முழிதொறு முழிதொறும்
பழவினை புகுந்த பாடகம் போல
முதிர்புயல் குளிறு மெழுமலை புக்க
கட்டுடைச் சூருடல் காமங் கொண்டு
பற்றியுட் புகுந்து பசுங்கடல் கண்டு
10
  மாவொடுங் கொன்ற மணிநெடுந் திருவேற்
சேவலங் கொடியோன் காவல்கொண் டிருந்த
குன்ற முடுத்த கூடலம் பதியிறை
தொடர்ந்துயிர் வவ்விய விடங்கெழு மிடற்றோன்
புண்ணியந் தழைத்த முன்னோர் நாளி
15
  லிருவிர னிமிர்த்துப் புரிவோடு சேர்த்துக்
குழையுடற் றலைவிரி கைத்திரி கறங்க
வொருவிரற் றெறித்து மைவிரற் குவித்தும்
பெருவா யொருமுகப் படகம் பெருக்கத்
தடாவுட லும்பர்த் தலைபெறு முழவ
20
  நான்முகந் தட்டி நடுமுக முரப்ப
வொருவாய் திறந்துட் கடிப்புடல் விசித்த
சல்லரி யங்கைத் தலைவிரற் றாக்கக்
கயந்தலை யடியெனக் கயிறமை கைத்திரி
யிருவிர லுயர்த்திச் செருநிலை யிரட்ட
25
  விருதலை குவிந்த நெட்டுடற் றண்ணுமை
யொருமுகந் தாழ்த்தி யிருகடிப் பொலிப்பத்
திருமல ரெழுதிய வரையிரு பத்தைந்
தங்குலி யிரண்டிரண் டணைத்துவிளர் நிறீஇ
மும்முகக் கயலுடன் மயிர்க்கயிறு விசித்த
30
  கல்ல வடத்திரள் விரற்கலை கறங்க
மரக்கா லன்ன வொருவாய்க் கோதை
முகத்தினுந் தட்ட மூக்கினுந் தாக்க
நாடிரு முனிவர்க் காடிய பெருமான்
றிருவடி விபவாக் கருவுறை மாக்க
  ணெஞ்சினுங் கடந்து நீண்டவல் லிரவிற்
செல்லவு முரியந் தோழி நில்லா
தெம்மெதிர்ப் பின்றி யிருந்தெதிர்ப் பட்டு
மறைவழி யொழுகா மன்னவன் வாழும்
35
  பழிநாட் டார்ந்த பாவம் போலச்
சேர மறைந்த கூரிரு ணடுநா
ளரிதிற் போந்தனி ரென்றொர்
பெரிதின் வாய்மை வெற்பனிற் பெறினே.

(உரை)
கைகோள்: களவு. தலைவிகூற்று

துறை: செலவு நினைந்துரைத்தல்.

     (இ-ள்) இதற்கு ‘உயிரினும் சிறந்தன்று நாணே..............தோன்றுமன் பொருளே’ என்னும் நூற்பாவின்கண் (தொல். களவி-22) ‘தாவினன்மொழி கிழவி கிளப்பினும்’ என்னும் விதிகொள்க.

1-5: உயிர்.............................புகுந்து

     (இ-ள்) உயிர் புகும் சட்டகம் உழிதொறும் உழிதொறும்-உயிர் பொருந்துதற் கிடமாகிய உடம்பிடந்தொறும் உடம்பிடந்தொறும்; பாடகம் போல பழவினை புகுந்த- இடைவிடாது காலைப் பாடகம் சூழ்ந்து கிடந்தாற்போலச் சூழ்ந்து கிடந்த பழவினை கொல்லும் விருப்பங் கொண்டு தொடர்ந்து உட்புகுந்தாற்போல; முதிர் புயல் குளிரும் எழுமலைபுக்க-சூன் முதிர்ந்த முகில் முழங்கா நின்ற ஏழு மலையினும் புகுதற்குக் காரணமாய; கட்டு உடைச் சூர் உடல்-கட்டினையுடைய சூரபன்மா உயிரினைப் பருகும் காமம் கொண்டு பற்றி உள்புகுந்து-விருப்பங் கொண்டு அவனைத் தொடர்ந்து சென்று கடலினுட் புகுந்து என்க.

     (வி-ம்.) சட்டகம்-உடம்பு உழிதொறும் உழிதொறும்- இடந்தொறும் இடந்தொறும். பாடகம்-மாதர் காலணியில் ஒன்று. இது பழவினைக்கு உவமம். “பாடகம் போலச் சூழ்ந்த பழவினை” என்றார் சிந்தாமணியினும். காமம் கொண்டு புகுந்த என உவமைக்கு ஒட்டுக. பாடகம் பழவினைக்கும் பழவினை புகுதல் வேல்புகுதற்கும் உவமைகள் ஆதலின் அடுக்கிய தோற்றம் அன்மை உணர்க. எழுமலை-ஏழுமலை.

     பழவினை புகுதற்குக் காரணமாகிய இடத்தினையுடைய நெஞ்சம் புகுந்தாற்போல எனினுமாம். எழுவகைப் பிறப்பில் பலவகை உடம்பினையும் கூறுவார் உழிதொறும் உழிதொறும் என்றார். கட்டு-கற்பித்தல். அஃதாவது முருகன் எனக்குப் பகையாய் வருக என்று கற்பித்தல் என்க. குதிரை முகமும் மக்கள் வடிவுமாகக் கற்பித்தலுடைய சூரன் எனினுமாம். உடல்-ஆகுபெயர்: உயிர் என்க. அவன் சென்ற கடலினுட் புகுந்து என்க. கல்.-6

5-7: பசுங்கடல்...........................கொடியோன்

     (இ-ள்) பசுங் கடல் கண்டு-பசிய அக் கடலிடத்தே அவனைக் கண்டு; மாவொடுங் கொன்ற-அவன் மறைதற்கிடமான மாமரத்தோடே கொன்ற; மணி நெடுந் திருவேல் சேவலங் கொடியோன்-வீரமணி கட்டிய நெடிய அழகிய வேலினையும் கோழிச் சேவற் கொடியினையும் உடையோனாகிய முருகப்பெருமான் என்க.

     (வி-ம்.) பசுங்கடல் கண்டு என்றது அம் மலைகளிலே காணாமல் பசிய கடலிடத்துக் கண்டு என்பதுபட நின்றது. சூரன் மாவானதன்றி அம்மாவே தனக்கு அரணுமாக நிற்றலின் மாவொடுங்கொன்ற என்றார். “சூருடை மாமுதல் தடிந்த” எனப் பிறரும் கூறுதலுணர்க. மாவொடும் என்புழி உம்மை இசை நிறை. சூரன் என்னும் பெயர் ஒப்புமை பற்றிக் கொன்ற என்றார். மணி-வீரமணி.

7-9: காவல்.................................மிடற்றோன்

     (இ-ள்) காவல் கொண்டு இருந்த-காப்பாகக்கொண்டு எழுந்தருளியுள்ள; குன்றம் உடுத்த கூடல் அம்பதி இறை-திருப்பரங்குன்றத்தை அணிந்த அழகிய மதுரை நகரத்தில் வாழும் இறைவனாகிய; தொடர்ந்து உயிர் வவ்விய விடம் கெழுமிடற்றோன்-தொடர்ந்து உயிர்களைக் கைக்கொள்ளும் நஞ்சு பொருந்திய மிடற்றினையுடைய சிவபெருமான் என்க.

     (வி-ம்.) குன்றம்-திருப்பரங்குன்றம். பதியுறை என்றும் பாடம். இதற்குப் பதியில் உறைகின்ற என்க. மிடறு-கழுத்து.

10-12: புண்ணியம்.................................கறங்க

     (இ-ள்) புண்ணியம் தழைத்த முன்னோர் நாளில்-சிவபுண்ணியம் மிக்க மந்திரியாகிய வியாழனுக்குரிய பூசை நாளிலே; இருவிரல் புரிவொடு நிமிர்ந்து-பெரிய விரலினைத் தொழிலோடு நிமிர்த்தி; சேர்த்து குழை உடல் விரிதலை-புடைத்தற்குக் காரணமான குழையா நின்ற உடலினையும் பரந்த தலையினையுமுடைய; கைத்திரி கறங்க-இடக்கை என்னும் இசைக்கருவி முழங்கா நிற்பவும் என்க.

     (வி-ம்.) புண்ணியம்-சிவபுண்ணியம், முன்னோர்-மந்திரி: அது ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி. மந்திரி நாளெனவே வியாழநாளாய் பூசமாயிற்று. இனி முன்னோர் நாளில் என்பதற்கு முன்னொரு காலத்திலே எனினும் ஆம். சேர்த்து உடல் குழையுடல் எனத் தனித்தனி கூட்டுக. சேர்த்து உடல்: வினைத்தொகை. குழை உடலுமது. சேர்த்துதல்-புடைத்தல். இருவிரல்-பெரியவிரல். இனி இரண்டு விரல் எனினுமாம். இருவிரலால் புடைக்கும் கைத்திரி என்றவாறு. கைத்திரி-இடக்கை. கறங்க-முழங்க.

11-34: ஒரு....................................பெருக்க

     (இ-ள்) பெருவாய் ஒரு முகம் படகம்-பரந்த வாயினையும் ஒரே முகத்தினையுடைய படகம் என்னும் தோற் கருவி; ஒரு விரல் தெரித்தும்-தன்னிடத்தே ஒரு விரலைக் கொண்டு புடைத்தும்; ஐவிரல் குவித்தும்-ஐந்து விரல்களையும் சேர்த்துப் புடைத்தும் முழக்குதலாலே; பெருக்க-முழக்கத்தைப் பெருகப் பண்ணவும் என்க.

     (வி-ம்.) படகம்-ஒருவகைத் தோற்கருவி. இதனை முழக்குவோர் ஒற்றை விரலால் தெரித்தும் ஐந்து விரல்களையும் கூட்டிப் புடைத்தும் முழக்குவர் என்பது பெற்றாம். தெரித்தும் குவித்தும் என்பன ஏதுப் பொருட்டாயின.

15-16: தடா.................................உரப்ப

     (இ-ள்) தடா உடல் உம்பர்-தனது பெரிய உடலின்ல்; தலைபெறும் முழவம்-தலையினைப் பெற்ற முழவம் என்னும் தோற்கருவி; நால் முகம் நடுமுகம் தட்டி உரப்ப-தன் நான்கு முகங்களிலும் நடுமுகத்தினும் தட்டுதலாலே முழங்கா நிற்பவும் என்க.

     (வி-ம்.) இதனால் முழவம் என்னும் தோற்கருவி உச்சியிலே ஐந்து முகங்கலை உடையது என்பதும் அதனை முழக்குவோர் அவ்வைந்து முகங்களிலும் மாறிமாறிப் புடைத்து முழக்குவர் என்பதும் பெற்றாம். தட என்னும் உரிச்சொல் தடா என நின்றது. தட்டி-தட்ட. உரப்புதல்-ஒலித்தல்.

17-18: ஒருவாய்.................................தாக்க

     (இ-ள்) ஒருவாய் திறந்து உள் கடிப்பு உடல் சல்லரி-ஓரிடத்தைத் திரந்து குமிழினை உள்ளேகட்டிய உடலினையுடைய சல்லரி என்னும் கருவி. அங்கை தலை விரல் தாக்க-உள்ளங்கையாலும் நுனிவிரலாலும் தாக்கப்பட்டு முழங்கா நிற்பவும் என்க.

     (வி-ம்.) வாய்-இடம். கடிப்பு-குமிழ். விசித்தல்-கட்டுதல். சல்லரி-ஓர் இசைக்கருவி. இதனை உள்ளங்கையாலும் நுனிவிரல்களாலும் தாக்கி முழக்குவர் என்பது பெற்றாம். முழங்கவும் என ஒரு சொல் வருவித்துக் கொள்க.

19-20: கயந்தலை..........................................இரட்ட

     (இ-ள்) கயந்தலை அடி என கயிறு அமை கைத்திரி-யானைக்கன்றின் அடிபோன்று பரந்த கண்களையுடைய கயிறுகள் அமைந்த துடி என்னும் தோற்கருவி; இருவிரல் உயர்த்தி செருநிலை இரட்ட-இரண்டு விரல்களை உயர்த்தி மாறுபட முழக்குதலாலே முழங்கா நிற்ப என்க.

     (வி-ம்.) கயந்தலை-யானைக்கன்று. மெல்லிய தலையையுடையது என்பது பொருள். கையினால் ஒலியைத் திரித்தலால் கைத்திரி என்பது பெயராயிற்று. இதற்கு உடுக்கை என்றும் பெயருண்டு. செருநிலை-மாறுபட்டநிலை. இரட்டல்-ஒலித்தல்.

21-22: இருதலை......................................ஒலிப்ப

     (இ-ள்) இருடலை குவிந்த நெடுஉடல் தண்ணுமை-இரண்டு தலையும் குவிந்துள்ள நீண்ட உடலினையுடைய தண்ணுமை என்னும் தோற்கருவி, ஒருமுகம் தாழ்த்தி இருகடிப்பு ஒலிப்ப-ஒரு முகத்தைத் தாழ்த்தி இருகடிப்பு ஒலிப்ப-ஒரு முகத்தைத் தாழச் செய்து உயர்ந்த மற்றொரு முகத்தின்கண் இரண்டு கடிப்புக்களால் ஒலித்தலால் முழங்கா நிற்பவும் என்க.

     (வி-ம்.) தண்ணுமை-மத்தள வகையினுள் ஒன்று. இது நீண்ட உடலினையும் இருபக்கத்திலும் குவிந்த தலைகளையும் உடையது என்பதும், இது ஒரு டலையில் இரண்டு கடிப்புக்களைக் கொண்டு தாக்கி முழக்கப்படும் என்பதும் பெற்றாம். கடிப்பு-குறுந்தடி.

13-14: திருமலர்......................................கரங்க

     (இ-ள்) திருமலர் எழுதிய-தாமரை மலர் வடிவ எழுதப்பட்ட, இருபத்தைந்து அங்குலி வரை இரண்டு இரண்டு அணைந்து-இருபத்தைந்து அங்குலம் வரையில் இரண்டிரண்டு விரலாக அணைத்து; விளர் நிறீஇ-விளரிப்பண்ணை நிறுத்தி மும்முகக்கயலுடன் மயிர்க்கயிறு கட்டப்பட்டுள்ளது இக்கருவி என்க. விளர்நிறீஇ-செவ்வேநிறுத்த எனப்பழைய உரை கூறும். விளரி-நெய்தல்யாழ் எனினுமாம். இதற்கு விளரி ஈறு கெட்டு விளர் என நின்றது என்க. இனி விளர்நிறீஇ என்பதற்கு வெள்ளை வண்ணம் பூசப்பட்டு எனினுமாம்.

28-29: மரக்கால்...............................தாக்க

     (இ-ள்) மரக்கால் அன்ன-அளவு கருவியாகிய மரக்காலை ஒத்த; ஒருவாய்க் கோதை-ஒரு கடப்பறை! முகத்தினும் தட்ட மூக்கினும் தாக்க-தன் முகத்திற் தட்டுதலாலும் மூக்கில் தாக்குதலாலும் முழங்கா நிற்பவும் என்க.

     (வி-ம்.) மரக்கால்-நெல்முதலியன அளக்கும் கருவி. ஒரு வாய்க்கோதை-ஒருகடப்பறை,

19: நாடு.....................................பெருமான்

     (இ-ள்) நாடு இரு முனிவர்க்கு-தன்னையே நாடுகின்ற பதஞ்சலி வியாக்கிரபாதர் என்னும் இரு முனிவர்களுக்காக. ஆடிய பெருமான்-திருக்கூத்தாடிய இறைவன் என்க.

     (வி-ம்.) முனிவர்-பதஞ்சலி, வியாக்கிரபாதர். மிடற்றோன் முன்னோர் நாளில் கலங்கவும், பெருக்கவும், உரப்பவும், தாக்கவும், இரட்டவும், ஒலிப்பவும், கறங்கவும், தாக்கவும் முனிவர்க்காக ஆடிய பெருமான் என இயைத்துக்கொள்க.

30-32: திருவடி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,தோழி

     (இ-ள்) திரு அடி வினவா கரு உறை மாக்கள் நெஞ்சினும்-திருவடிகளை நினையாமல் எய்திய பிறப்பினையுடைய மாக்களுடைய நெஞ்சத்துள் உஐயும் இருளைக்காட்டினும்; கடந்து நீண்ட வால் இரவில்-பெரிதும் இருண்டு நீண்ட வலிய இரவின்கண்; நில்லாது செல்லவும் உரியம்-முறைமையன்றாயினும் ஈண்டுத் தங்கி இராமல் யாமே நம் பெருமான் இருக்குமிடத்திற்குப் போதற்கும் உரியேம். தோழி-தோழீ கேள் என்க.

     (வி-ம்.) திருவடி நினையா என்றும் பாடம். கரு: ஆகுபெயர். பிறப்பென்க. நெஞ்சும் அது-நெஞ்சினிடத்தில் இருள் என்க.

33: எம்......................................எதிர்ப்பட்டு

     (இ-ள்) நம் பெருமான்; எம் எதிர்ப்பு இன்றி-ஈண்டு வந்து எம்மை எதிர்த்தல் அன்றி; இருந்து எதிர்ப்பட்டு-நாம் சென்று காண அவர் மனையிலேயே இருந்து நம்மால் எதிர்ப்பட்டுழி என்க.

     (வி-ம்.) எம் எதிர்ப்பின்றி என்றது தாமே வந்து நம்மை எதிர்த்தலே நேர்மையாகவும் அங்ஙனம் செய்யாமல் என்றவாறு. இருந்தெதிர்ப்படுதலாவது, நாம் அவர்பால் செல்லுங்கால் அவர் மனையில் அவர் இருந்து நம்மால் காணப்பட்டு என்றவாறு.

34-8: மறை...................................பெறினே

     (இ-ள்) மறைவழி ஒழுகா மன்னவன் வாழும்-மெய்நூல் விதித்த நெறியில் நின்று ஒழுகாத கொடுங்கோல் மன்னவன் வாழாநின்ற; பழி நாட்டு ஆர்ந்த பாவம் போல-பழியையுடைய நாட்டின்கண், நிரம்பிய பாவத்தைப் போல; சேரமறைத்த கூர் இருள் நடு நாள்-உலகத்துப் பொருள்களை யெல்லாம் ஒரு சேர மரைத்த மிக்க இருளையுடைய இவ்விடையாமத்திலே; அரிதிற் போந்தனிர் என்று-மிகவும் அருமையாக இங்கு வந்துள்ளீர் என்று; ஓர் பெரிது இன் வாய்மை-ஒரோஒ ஒரு மிகவும் இனிய முகமன் மொழியினை; வெற்பனில் பெறினே-நம் பெருமான் கூற யாம் கேட்பதுண்டாயின் என்க.

     (வி-ம்.) மறைவழி ஒழுகா மன்னவன் என்றதனால் கொடுங்கோல் மன்னவன் என்பது பெற்றாம். அம்மன்னவன் நாட்டின்கண் பாவம் பெருகி அந்நாட்டின் புகழையெல்லாம் ஒருசேர மறைந்தாற்போல உலகத்துப் பொருள்களையெல்லாம் ஒரு சேர மறைத்த இருள் என்க. போந்தனிர்-வந்தீர். அங்ஙனம் தலைவன் வியந்து நம்மை வரவேற்கும் மொழிநமக்கு மிகவும் இனியதாய் இருக்கும் என்பாள் பெரிது இன் வாய்மை என்றாள். பெறுதலும் அரிதென்பாள் பெறினே என்றாள்.

     இனி, இச் செய்யுளை மிடற்றேனும் பெருமானும் ஆகிய இறைவனுடைய திருவடி நினையாதார் நெஞ்சினும் இருண்ட இவ்வல்லிரவில் யாம் அவன் இருக்கு மிடமத்திற்குச் செல்லவும் உரியம். யாம் அங்ஙனம் சென்றுழி நம்மால் எதிர்ப்பட்ட அவ்வெற்பன் நீயிர் நடுநாள் அரிதிற் போந்தனிர் என்று கூறும் ஒரு மொழியை யாம் பெறுவதுண்டாயின்; அங்ஙனம் பெறுதலும் அரிது. ஆகலின் செல்லா தொழிவோம் எனத் தலைவி செலவு நினைந்துரைத்துக் குறிப்பால் வரைவு கடாவினான் என்க. மெய்ப்பாடும் பயனும் அவை.