|
|
செய்யுள்
85
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
பழுதறு
தெய்வங் காட்டப் பண்டையி
னுழுவ னலத்தா லோருயி ரென்றுங்
கடுஞ்சூ டந்துங் கைபுனை புனைந்தும்
பூழியம் போனகம் பொதுவுட னுண்டுங்
குழமகக் குறித்துச் சிலமொழி கொடுத்துங் |
10
|
|
கையுறை
சுமந்துங் கடித்தழை தாங்கியு
முயிரிற் றளர விரங்கியு முணங்கியும்
பனையுங் கிழியும் படைக்குவ னென்று
மிறடியஞ் சேவற் கெறிகவண் கூட்டியும்
புனமுமெம் முயிரும் படர்கரி தடிந்து |
15
|
|
மழுங்குறு
புனலெடுத் தகிற்புகை யூட்டியு
மொளிர்மணி யூசல் பரியவிட் டுயர்த்து
மிரவினிற் றங்க வெளிவர விரந்து
மிருவியம் புனத்திடை யெரியுயிர்ப் பெறிந்தும்
தெரிந்தலர் கொய்துந் பொழிற்குறி வினவியு |
20
|
|
முடலொடும்
பிணைந்தகை யாய்துயி லொற்றிச்
செறியிருட் குழம்பகஞ் சென்றுபளிங் கெடுத்த
விற்பொழிற் கிடைக்கு மளவுநின் றுலைந்தும்
பன்னாட் பன்னெறி யழுங்கின ரின்று
முகனைந்து மணத்த முழவந் துவைக்க |
25
|
|
வொருகாற்
றூக்கி நிலைய மொளிர்வித்து
மூவுட லணைத்தமும் முகத்தொ ரோமுகத்
தெண்கடிப்பு விசித்த கல்லல் செறிய
விருட்குற ளூன்றியெம் மருட்களி யாற்றி
யுருள்வாய்க் கொக்கரை யும்பர்நாட் டொலிக்கக் |
30
|
|
கரங்கால்
காட்டித் தலைய மியக்கி
யிதழவிழ் தாமரை யெனுந்தகு ணித்தந்
துவைப்பநின் றமைகரத் துக்கவைக டோற்றிக்
கரிக்கா லன்ன மொந்தைகலித் திரங்கத்
துடியெறிந் திசைப்பத் துகளம் பரப்பி |
35
|
|
வள்ளம்
பிணைத்தசெங் கரடிகை மல்க
வெரியக லேந்திவெம் புயங்கமிசை யாக்கி யெரிதளிர்த்
தன்ன வேணியிற் குழவிப்
பசும்பிறை யமுதொடு நிரம்பிய தென்ன
மதுக்குளிர் மத்தமு மிலைத்தொரு மறுபிறை |
40
|
|
மார்பமு
மிருத்திய தென்னக் கூன்புறத்
தேனக் கோடுவெண் பொடிப்புலத் தொளிரப்
பொலன்மிளிர் மன்றப் பொதுவக நாடித்
தனிக்கொடி காணவெவ் விடத்துயிர் தழைப்ப
வாடிய பெருமா னமர்ந்துநிறை கூடல் |
|
|
கனவினும்
வினவா தவரினு நீங்கிச்
சூளும் வாய்மையுந் தோற்றி
நீளவும் பொய்த்தற் கவர்மனங் கரியே. |
(உரை)
கைகோள் : கற்பு. தலைவி கூற்று.
துறை: வாய்மொழி
கூறித் தலைமகள் வருந்தல்.
(இ-ம்)
இதற்கு, ழுஎஞ்சி யோர்க்கும் எஞ்சுதல் இலவேழு (தொல். அகத். 42) எனவரும் விதி கொள்க.
1
- 8: பழுதறு........................என்றும்
(இ-ள்)
பழுது அறு தெய்வம் காட்ட-குற்றமற்ற ஊழானது கூட்டுவித்தலால்; பண்டையின்-முன்னாளிலே;
உழுவல் நலத்தால் ஓர் உயிர் என்றும்-எழுமையும் தொடர்ந்த அன்போடு நம்மிருவர்க்கும்
உயிர் ஒன்றென்றும்; கடுஞ்சூள் தந்தும்-கொடிய சூண்மொழி கூறியும்; கைபுனை புனைந்தும்-கையால்
அணிகலனணிந்தும்; பூழி அம்போனகம் பொதுவுடன் உண்டும்-வண்டற் சோற்றினை ஆயத்தோடிருந்தருந்தியும்;
குழமகக் குறித்துச் சில மொழி கொடுத்தும்-நமது விளையாட்டுப் பாவையாகிய இளமகவைப்
பாராட்டி அதற்குச் சில மொழிகளைப் பயிற்றியும்; கையுறை சுமந்தும்- எமக்குக் கையுறையாகச்
சிலபொருள்களைச் சுமந்து கொணர்ந்தும்; கடிதழை தாங்கியும்-மணமிக்க தழையை யேந்தி
வந்தும்; உயிரின் தளர இரங்கியும்- உயிரோடு தளரும்படி வருந்தியும்; உணங்கியும்-வாடியும்;
பனையும் கிழியும் படைக்குவன் என்றும்-பனைமடலாற் குதிரையும் ஓவியக் கிழியும் படைப்பேன்
என்று அச்சுறுத்தியும் என்க.
(வி-ம்.)
இவையெல்லாம் களவுக் காலத்தே நிகழ்ந்தவற்றைத் தலைவி நினைந்து கூறுகின்றாள் என்க.
தெய்வம்-ஊழ்வினை. உழுவல் நலம்
- எழுமையும் தொடர்ந்த அன்பு. சூண்மொழி பொய்ப்பின் அதனை மொழிந்தாற்குப் பெருங்கேடு
உண்டாமாதலின் கடுஞ்சூள் எனப்பட்டது. புனை-அணிகலன.் பூழி-புழுதி. போனகம்-சோறு. குழமக-இளங்குழவி.
கையுறை-அன்புடையோரைக் காணப்போவார் அவர் பொருட்டுக் கொடு செல்லும் கைப்பொருள்.
கடி-மணம். உயிரின் என்புழி ஐந்தனுருபு மூன்றனுருபொடு மயங்கிற்று. பனை: ஆகுபெயர். பனைமடலாற்
செய்யும் குதிரை என்க. கிழி-தலைவியின் உருவம் வரைந்த படம்.
9
- 14: இறடி...........................எறிந்தும்
(இ-ள்)
இறடி அம் சேவற்கு எறி கவண் கூட்டியும்-தினைப்புனங் காத்தற் பொருட்டுக் கல்லெறிதற்குக்
கவண் கட்டிக் கொடுத்தும்; புனமும் எம் உயிரும் படர்கரி தடிந்தும்-தினைப்புனத்தையும்
எம்முயிரையும் அழித்தற்கு வந்த யானையைக் கொன்றும்; அழுங்குறு புனல் எடுத்து அகில்புகை
ஊட்டியும்-யான் அழுந்திய நீரினின்றும் என்னைக் கரையேற்றிக் குளிர் தீரும்படி அகிற்புகை
புகைத்தும்; ஒளிர்மணி ஊசல் பரிய இட்டு உயர்த்தும் - சுடருகின்ற மணிகளையுடைய ஊசலின்
கயிறு அற்றபொழுது புதிய கயிறிட்டு ஆட்டியும்; இரவினில் தங்க எளிவர இரந்தும்-இரவின்கண்
எம்மிடத்தே தங்கியிருத்தற்கு எளிமையுண்டாக எம்மை வேண்டிக்கொண்டும்; இருவி அம்புனத்திடை
எரி உயிர்ப்பு எறிந்தும்-கதிரரியப்பட்டு வறுந்தாளாக நின்ற தினைப்புனத்தின்கண்
எம்மைக் காணாமையால் பெருமூச் செறிந்தும் என்க.
(வி-ம்.)
இறடி-தினை. சேவல்-காவல். ழுசேவலாய் வைகுந் தினைப்புனத்திற் புள்ளினுடன்-மாவெலாங்
கூடிழு (கந்தபு. வள். 109) என்புழியும் அஃதப்பொருட்டாதல் உணர்க. கவண்-கிளிகடி கருவி.
அழுங்குறுதல்: ஒருசொல்: அழுந்துதல். குளிர் போக்குதற் பொருட்டுப் புகையூட்டி என்பது
கருத்து. பரிதல்-அறுதல். உயர்த்தல்-ஆட்டல். இரத்தல்- வேண்டிக்கோடல். இருவி-கதிர்
கொய்து விடப்பட்ட வறுந்தாள்.
15
- 19: தெரிந்து....................இன்று
(இ-ள்)
அலர் தெரிந்து கொய்தும்-யான் விரும்பும் மலர்களை அறிந்து கொய்து கொணர்ந்து கொடுத்தும்;
பொழிற் குறி வினவியும்- பொழிலினிடத்தே பகற்குறி யிடத்தைக் கேட்டும்; உடலொடும்
பிணைந்த கை ஆய் துயில் ஒற்றி-இரவுக் குறியின்கண் யான் என் உடலோடும் அணைந்த தாயின்
துயிலை ஆராய்ந்து நீங்கி; செறி இருள் குழம்பு அகம் சென்று -செறிந்த குழம்பு போன்ற
இருளின்கண் நள்ளிரவில் யாம் சென்று; பளிங்கு எடுத்த இல் பொழில் கிடைக்கு மளவும்-பளிக்குப்
பாறையால் இயற்றிய எம் இல்லத்தின் புறத்தேயுள்ள அப் பொழிலின்கண்
சென்று அவனை எய்து மளவும்; நின்று உலைந்தும்-எம் வருகையை எதிர்பார்த்து நின்று வருந்தியும்;
பல் நாள் பல்நெறி அழுங்கினர்-இவ்வாறு களவுக் காலத்தே பலநாள் பலவகையாலும் வருத்தமுற்ற
தலைவர்; இன்று-யாம் எளியேமாகிய இக்கற்புக் காலத்தின்கண் என்க.
(வி-ம்.)
தெரிதல்-தன் விருப்பத்தைக் குறிப்பாலுணர்தல். பொழிற்குறி -பகற்குறி. ஆய்-தாய்;
என்றது செவிலித்தாயை. துயில் ஒற்றுதல் துயிலுதலை ஆராய்ந்தறிதல். பளிங்கு எடுத்த
இல்-படிகக்கல்லால் இயற்றிய வீடு. இற்பொழில்-இல்லின் பக்கத்தேயுள்ள படப்பை.
என்வே இரவுக்குறியிடம் என்றாளாயிற்று. இன்று என்றது யாமெளியேமாகிய இக்கற்புக் காலத்தின்கண்
என்பதுபட நின்றது.
20
- 23: முகன்.....................................செறிய
(இ-ள்)
ஐந்து முகன் மணத்த-ஐந்து முகங்கள் பொருந்திய; முழவம் துவைக்க-முழவம் என்னும் தோற்கருவி
முழங்கா நிற்பவும்; ஒருகால் தூக்கி நிலையம் ஒளிர்வித்து-ஒரு காலைத் தூக்கிக் கூத்தினைத்
தோற்றுவித்து; மூ உடல் அணைத்த மும்முகத்து ஒரோமுகத்து எண்கடிப்பு விசித்த கல்லல்
செறிய மூன்று உடல் பொருந்திய மூன்று முகத்தினுள் ஒவ்வொரு முகத்தினும் எவ்வெட்டுக்
கடிப்புக்களால் கட்டப்பட்ட கல்லல் என்னும் தோற்கருவி முழங்காநிற்பவும் என்க.
(வி-ம்.)
முகன்-போலி. முழவம்-ஒருவகைத் தோற்கருவி. இஃது ஐந்து முகத்தையுடையது என்பது பெற்றாம்.
நிலையம்-கூத்து. கடிப்பு-குறுந்தடி. கல்லல்-இது மூன்று முகமுடைய ஒருவகைத் தோற்கருவி. இம்முகங்களில்
எவ்வெட்டுக் குறுந்தடிகள் வைத்து வாரால் இறுக்கப்பட்டிருக்கும் என்பது பெற்றாம்.
24
- 28: இருள்..........................துவைப்ப
(இ-ள்)
இருள் குறள் ஊன்றி-இருண்ட பூதங்கள் தம்முகத்திலே பொருத்தி; எம் அருள் களி ஆற்றி-எமக்குத்
திருவருளால் மகிழ்ச்சியுண்டாகும்படி செய்து; உருள்வாய் கொக்கரை-உருண்ட முகத்தையுடைய
வலம்புரிச் சங்கத்தை;உம்பர் நாட்டு ஒலிக்க-தேவர் நாடளவும் செல்லுமாறு முழக்க; கரம்
கால் காட்டி தலையம் இயக்கி- கையையும் காலையும் காட்டித் தலையம் என்னும் கூற்றைத்
தோற்றுவித்து; இதழ் அவிழ் தாமரை என்னும் தகுணித்தம் துவைப்ப-இதழ் விரிந்த தாமரை
மலரையொத்த தகுணித்தம் என்னும் இசைக் கருவி முழங்காநிற்ப என்க.
(வி-ம்.)
குறள்-பூதம். பூதம் கொக்கரை என்னும் சங்கை வாயில் ஊன்றி ஒலிக்க என்றவாறு. கொக்கரை-வலம்புரிச்
சங்கில் ஒருவகை. உம்பர் நாடு-தேவருலகம்.
தலையம்-ஒருவகைக் கூத்து.தகுணித்தம்-ஒருவகை இசைக்கருவி.
28
- 32: நின்று.......................ஆக்கி
(இ-ள்)
நின்று அமை கரத்து கவைகள் தோற்றி-நிலைபெற்று அமைந்த கையால் பலவகையாகக் கிளைக்கின்ற
ஒலிகள் எழுப்பப்பட்டு; கரிகால் அன்ன மொந்தை கலித்து இரங்க-யானைக் காலையொத்த
மொந்தைஎன்னும் இசைக்கருவி மிகவும் முழங்கா நிற்ப; துடி எறிந்து இசைப்ப-உடுக்கை எறியப்பட்டு
முழங்கா நிற்பவும்; துகலம் பரப்பி-நுணுகிய ஒலிகளை எழுப்பி; வள்ளம் பிணைத்த செங்கரடிகை-மரக்கால்
கட்டிய கரடிகை என்னும் இசைக்கருவி; மல்க-ஆரவாரத்தால் மிகா நிற்ப; எரி அகல் ஏந்தி-மழுவினை
ஏந்தி; வெம்புயங்கம் மிசை ஆக்கி-வெவ்விய பாம்புகளை மேலே அணிந்து கொண்டு என்க.
(வி-ம்.)
கையால் முழக்கி ஒலி எழுப்பப்படும் மொந்தை என்க. இது யானைக்கால் போன்றிருக்கும்
என்பது பெற்றாம். துடி-உடுக்கை. துகளம்- நுட்பவொலி. வள்ளம்-மரக்கால். கரடிகை-ஒருவகை
இசைக் கருவி. இதன் ஒலி கரடி முழக்கம் போறலின் அப்பெயர் பெற்றது. எரியகல்-மழு.
புயங்கம்-பாம்பு.
33
- 37: எரி..................ஒளிர
(இ-ள்)
எரிதளர்த்தன்ன வேணியில்-நெருப்புத் தளிர்த்தாலொத்த சடையில்; குழவிப் பசும்பிறை
அமுதொடு நிரம்பியது என்ன-இளம்பிறை அமிழ்தத்தோடே நிரம்பியிருந்தாற்போல; மதுகுளிர்
மத்தமும் மிலைத்து- தேனோடு குளிர்ந்திருக்கும் ஊமத்தம் பூவையும் அணிந்து; ஒரு மறுபிறை
மார்பமும் இருத்தியது என்ன-சடையில் அணிந்த பிறையே யன்றி வேறொரு பிறையை மார்பினிடத்தும்
வைத்தாற்போல; கூன் புறத்து ஏனக்கோடு-வளைந்த புறத்தினையுடைய பன்றிக்கொம்பானது;
வெண் பொடிப்புறத்து ஒளிர-வெள்ளிய திருநீறு சண்ணித்த திருமேனியில் ஒளி செய்ய என்க.
(வி-ம்.)
எரிதளர்த்தல்-தீ கொழுந்து விட்டெரிதல். இது சடைக்குவமை. அமுதம் நிரம்பிய பிறை,
தேன் நிரம்பிய மத்தமலருக்குவமை. மறு ஒரு பிறை எனமாறுக. முன்னரே சடையில் ஒரு பிறை
அணிந்திருத்தலின் மற்றொரு பிறை என்றார். பிறை-ஈண்டுப் பன்றிக் கொம்புற் குவமை.
வெண்பொடி-திருநீறு.
38
- 43: பொலன்....................................கரியே
(இ-ள்)
பொலன் மிளிர் மன்றப் பொதுவகம்-பொன் ஒளி விசுகின்ற மன்றமாகிய அம்பலத்தின்கண்;
தனிக்கொடி நாடிக் காண-ஒப்பற்ற பூங்கொடி போல்பவளாகிய சிவகாமி விரும்பிக் கண்டு
மகிழா நிற்ப; எவ்விடத்து உயிர் தழைப்ப ஆடிய பெருமான்- எவ்வுலகங்களிலும் வாழுகின்ற
உயிரினங்கள் இன்பத்தாற் பெருகும்படி இன்பக்கூத்தாடிய கடவுள்; அமர்ந்து நிறை கூடல்-விரும்பி
நிறைந்திருக்கின்ற மதுரைப்பதியை; கனவினும் வினவாதவரினும் நீங்கி-கனவிடத்தேயும்
கேட்டறியாத மடவோர்போல அன்பு சிறிதுமின்றிப் பிரிந்து; சூளும் வாய்மையும் தோற்றி-பண்டு
சூண்மொழியும் உண்மை மொழியும் எமக்குச் சொல்லிக்காட்டி; நீளவும் பொய்த்தற்கு
- இப்பொழுது அவற்றைப் பெரிதும் பொய்யாக்கியதற்கு; அவர்மனம் கரி- அவர் நெஞ்சே
சான்றாவதல்லது யான் பிறிதொரு சான்று பெற்றிலேன் என்க.
(வி-ம்.)
நீங்கி என்றது அன்பின்றி நீங்கி என்பதுபட நின்றது. வினவாதவர் போலப் பொய்த்தற்கு
எனத் தொழிலுவமையாக்குக. இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவன் சூண்மொழியும் வாய்மையும்
கூறினனாதலின் ஆங்குப் பிறர் இன்மையின் அவர் மனமே கரி என்றாள். பிறிதொரு கரி
பெற்றிலேன் என்பது குறிப்பெச்சம். பொலன்-பொன். தனிக்கொடி: அன்மொழித்தொகை:
சிவகாமி என்க. உயிரும் எனல் வேண்டிய முற்றும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது.
அமர்ந்து-விரும்பி. கனவினும் வினவாதவர் என்றது நனவிலே கண்டறிதல் கிடக்கக் கனவினும்
வினவாதவர் என்பதுபட நின்றது. சூள்- ஆணைமொழி. வாய்மை-உண்மைமொழி. நீளவும் என்றது
ஈண்டு மிகவும் என்பதுபட நின்றது. கரி-சான்று. இதனை, பொழில் கிடைக்குமளவும் பன்னாள்
பன்னெறி யழுங்கினர், இன்று எவ்விடத் துயிர்தழைப்ப ஆடியபெருமான் கூடல் கனவினும் வினவாதவரினும்
நீங்கிச் சூளும் வாய்மையுந் தோற்றி நீளவும் பொய்த்தற்கு அவர் மனங்கரியென வினைமுடிவு
செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.
|