பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 86

நேரிசையாசிரியப்பா

 
   
5
  பாசடைக் கருங்கழி படர்மண லுலகமு
மெழுமலை பொடித்தவற் கிசைதல் வேண்டி
வரையுல கனைத்தும் வருவது போலத்
திரைநிரை திரைத்துக் கரைகரைக் கொல்லும்
வையைநீர் விழவு புகுந்தன மெனவொரு
10
  பொய்யின ளன்றி மெய்யினை நீயும்
பொலம்பூண் பெயர்ந்துறை பூணை யருடரு
குளிர்ச்சி நீங்கிக் கொடுங்கோல் வேந்தெனச்
சேக்கொள் கண்ணை செம்மொழி பெயர்தந்
தொன்றுட னில்லா மொழியை மறுத்த
15
  முதிரா நாட்செய் முண்டக மலர்ந்து
கவிழ்ந்த முகத்தையெக் கண்மனந் தோன்ற
விரும்பிய நகையை யன்றே நின்கே
ழென்கண் கண்ட விவ்விடை யென்னுள
மன்னிநின் றடங்காக் குடுமியம் பெருந்தழல்
20
  பசுங்கடல் வளைந்து பருகக் கொதித்த
தோற்றமுங் கடந்த தென்றாலாற் றல்செய்
விண்ணகம் புடைத்து நெடுவரை கரக்குங்
கொடுஞ்சூர் கொன்ற கூரிய நெடுவேற்
குன்றக் குறவர் கொம்பினுக் கினியன்
25
  குருகொலி யோவாப் பனிமலை வாவி
வயிறுவாய்த் தழகு குழவியங் கிழவோன்
வாழ்பரங் குன்றெனு மணியணி பூண்ட
நான்மறை புகழுங் கூடலம் பெருமான்
வான்முத லீன்ற மலைமக டன்னொடு
30
  முழுதுணர் ஞான மெல்லா முடைமை
முழுதனுக் கிரகங் கெழுதர மனாதி
பாசமி லாமை மாசறு நிட்கள
மவிகா ரக்குறி யாகிய தன்குண
மெட்டுந் தரித்து விட்டறு குற்ற
35
  மருச்சனை வணக்கம் பிறவுயிர்க் கன்பகம்
பேரருட் டிருநூல் பெருந்துற வெங்கு
நிறைபொரு ளழுந்த வருளினக் கூட்ட
மிருட்பவ நடுங்க வெனுங்குண மெட்டுந்
தமக்கும் படைக்க விதிப்பேற் றடியவர்
    நிலையருட் கற்பென நெடுங்கற் புடையோண்
முன்னுறின் வண்மன மாங்கே
நன்னரிற் கொண்டு குளிரும் பெறுமே.

(உரை)
கைகோள் : கற்பு தோழிகூற்று

துறை : தோழி யியற்பழித்தல்.

     (இ-ம்.) இதற்கு, “பெறற்கரும் பெரும் பொருள்” (தொல். கற்பி. கூ) எனவரும் நூற்பாவின்கண் ‘பிழைத்து வந்து இருந்த கிழவனை நெருங்கி இழைத்து ஆங்கு ஆக்கிக் கொடுத்தற்கண்ணும், எனவரும் விதிகொள்க. (குறிப்பு:- இதற்கும் இதற்கெடுத்துக் காட்டிய திருக்கோவையார்ச் செய்யுளுக்கும் துறை வேறுபாடுண்மை உணர்க.)

1 - 6: பாசடை..............................நீயும்

     (இ-ள்) பாசடைக் கருங்கழி படர்மணல் உலகமும் - பசிய இலைகளால் மூடப்பெற்ற கரிய கழிகளையுடைய பரந்த பெருமணலுலகமாகிய நெய்தனிலந்தானும் குறிஞ்சி நிலத்தைப் போல; எழுமலை பொடித்தவற்கு இசைதல் வேண்டி - ஏழு மலைகளை நீறாக்கிய முருகக் கடவுளுக்குப் பொருந்துதலை விரும்பி; வரை உலகு அனைத்தும் வருவது போல குறிஞ்சி நிலத்திலுள்ள எல்லா மலைகளும் நிலைபெயர்ந்து வருமாறு போலே; திரை நிரை திரைத்துக் கரைகரைக் கொல்லும் - அலைகளை நிரல் நிரலாகச் சுருத்டி வந்து கரையைக் கரைத்தழிகின்றி; வையை நீர் விழவு புகுந்தனம் - வையைப் பேரியாற்றில் வரும் புதுநீர் விழாவிற்குச் சென்று வந்தோம்; என ஒரு பொய்யினாள் அன்றி. விழவிற்குச் சென்று வந்தோம்; என ஒரு பொய்யினள் அன்றி - என்று ஒரு பொய் கூறும் நின்பரத்தை போலல்லாமல்; மெய்யினை நீயும் - மெய்யே பேசும் இயல்புடைய நீ தானும் என்க.

     (வி-ம்.) குறிஞ்சி நிலத்திலுள்ள மலைகளெல்லாம் நெய்தல் நிலத்தையும் முருகன் உறைதற்குத் தகுதியாக்கக் கருதி நிலைபெயர்ந்து புரண்டு வருவதுபோல இருந்தது வையையாற்றிற் புரளும் அலை என்றவாறு, பாசடை - பச்சிலை, மணலுலகம் - நெய்தனிலம், “வருணன் மேய பெருமண லுலகமும்” என்பது தொல்காப்பியம். மலைபொடித்தவன் - முருகக்கடவுள். வரையுலகு - குறிஞ்சி நிலம். வரையுலகிலுள்ள வரையனைத்தும் என்க. கரைக்கொல்லும் - கரைத்துக் கொல்லும். வையையின்கண் புதுநீர் வரும் பொழுது நீர் விழாக் கொண்டாடுதல் வழக்கம். இதனைப் பரிபாடலால் உணர்டக, பொய்யினள் என்றது பரத்தையை, எனவே தலைவனோடு விளையாடி வருகின்ற பரத்தையைத் தோழி கண்டு எங்குச் சென்று வருகின்றனை என்று வினவினளாக, அதற்கவன் யான் வையைநீர் விழாவிற்குப் போய் வருகிறேன் என்று பொய் கூறினாள் என்பதும், வையைநீர் விழவு புகுந்தனம் என ஒரு பொய்யினள் என்பதனாற் பெற்றாம்.

7 - 13: பொலம்..............................நகையை

     (இ-ள்) பொலம் பூண் பெயர்ந்து உறை பூணை - பொன்னணிகள் கலைந்து கிடக்கின்ற ஒப்பனையுடையை; அருள் தரும் குளிர்ச்சி நீங்கி - அருளுடைமை தருகின்ற தண்ணளி ஒழிந்து; கொடுங்கோல் வேந்து என - கொடுங்கோல் அரசன்போல்; சேகொள் கண்ணை - சிவப்பைக் கொண்ட கண்களையுடையை; செம்மொழி பெயர்தந்து - செவ்விய வாய்மைச்சொல் அகன்று; ஒன்றுடன் நில்லா மொழியை - ஒரு தன்மையுடன் நில்லாத சொற்களையுடையை; மறுத்த முதிர்நாள் செய் முண்டகம் மலர்ந்து கவிழ்ந்த முகத்தை - மலர்ச்சிக் கிடமில்லாதொழிந்த பருவமில்லாத நாளில் தோன்றிய தாமரைப் பூப்போல மலர்ந்து கீழே நோக்கிய முகத்தையுடையை; எக்கண் மன்ம் தோன்ற - எவ்விடமோ நின் மனத்திலே தோன்றா நிற்ப; அரும்பிய நகையை - எம்மை நோக்கிப் பொய்யே மலர்ந்த நகைப்பினையுடையை என்க.

     (வி-ம்.) நீதானும் கலைந்த அணிகலனுடையை; சிவந்த கண்ணுடையை; தடுமாறும் சொல்லுடையை; எம்மை நோக்கும் மதுகையின்றிக் கவிழ்ந்த முகத்தினை; நின்மனம் ஒன்று கருத எம்மை நோக்கிப் பொய்யே நகுகின்றனை! என்றவாறு, பொலம்பூண் - பொன்னாலியன்ற அணிகலன், பெயர்ந்துறைதல் . தமக்குரிய இடம் விட்டு விலகிக் கிடத்தல். சே . சிவப்பு நிறம், செம்மொழி - செவ்விய மெய்ம்மொழி, ஒன்றுடன் நில்லா மொழி - தடுமாறுஞ் சொல். நிமிர்ந்து மலர்தற்கு இடம் மறுக்கப்பட்டமையால் இடுக்கணுடன் மலர்ந்து கவிழ்ந்த தாமரை என்க. அரும்பிய நகை என்றது பொய்யாக மலர்ந்த நகைப்பு என்பதுபட நின்றது.

13 - 17: அன்றே...............................என்றால்

     (இ-ள்) அன்றே - அல்லவா; இவ்விடை - இவ்விடத்திலே; என்கண் நிக்கேழ் கண்ட என் உளம் - எனது கண்ணால் நின்னுடைய தன்மையை யுணர்ந்த என் நெஞ்சம்; மன்னி நின்று அடங்கா - என்பால் நிலைபெற்று நின்று அடங்காமல்; குடுமி அம் பெருந்தழல் பசுங்கடல் வளைந்து பருக - கொழுந்து விட்டெரிகின்ற வடவைத்தீயானது பசிய கடலை வளைத்துக் கொண்டு அதன் நீர் முழுதும் பருகுவதற்கு; கொதித்த தோற்றமும் கடந்தது என்றால் - கொதித்தெழும் தோற்றத்தினையும் விஞ்சிக் கொதித்தெழுமாயின் என்க.

     (வி-ம்.) நின் நிலையைக் கண்ட என்னுளமே வடவைத் தீப்போலக் கொதித்தெழுமாயின் என்றவாறு.

17 - 22: ஆற்றல்.....................................கிழவோன்

     (இ-ள்) ஆற்றல் செய் விண்ணகம் புடைத்து நெடுவரை கரக்கும் - போர் செய்து தேவருலகங்களை அழித்து நெடிய மலையினுள்ளே மறைந்த; கொடுஞ்சூர் கொன்ற கூரிய நெடுவேல் - கொடிய சூரனைக்கொன்ற கூர்ந்த நெடிய வேலையுடையவனும்; குன்றக்குறவர் கொம்பினுக்கு இனியன் - மலைவாழ் வேடர் மகளாகிய வள்ளி நாய்ச்சியாருக்கு இனியவனும்; குருகு ஒலி ஓவாப்பனிமலை வாவி -பறவைகள் ஆரவரித்தொழியாத இமயமலைக்காரலின் கண்ணதாகிய சரவணப் பொய்கையானது; அழகு வயிறு வாய்ந்த குழவி அம் கிழவோன் - தன்னிடத்தே அழகாய் ஈன்ற குழந்தையுமாகிய மலைகிழவோன் என்க.

     (வி-ம்.) ஆற்றல் - போர், விண்ணகம் - தேவருலகம், கரத்தல் - மறைதல், சூர் - சூரபதுமலர், குறவர் கொம்பு - வள்ளி, குருகு - பறவைப் பொதுப்பெயர், பனிமலை - இமயமலை, வாவி - பொய்கை, ஈண்டுச் சரவணப் பொய்கை. கிழவோன் என்றது மலைகிழவோன் என்பதுபட நின்றது. குழவியங்கிழவோள் என்புழி முரணணி தோன்றிச் செய்யுளின்பம் மிகுதலுணர்க. பனிமலைவாவி அழகு வயிறு வாய்ந்த குழவியம் கிழவோன் என்னுமிதனை,

“மறுவறு கற்பின் மாதவர் மனிவியர்
 நிறைவயின் வழாஅது நிற்சூ லினரே
 நிவந்தோங் கிமயத்து நீலப் பைஞ்சுனைப்
 பயந்தோ ரென்ப பதுமத்துப் பாயல்
 பெரும்பெயர் முருக” (பரிபாடல்.கு. செவ்வேள்)

எனவரும் பரிபாடலினும் காண்க.

23 - 30: வாழ்...............................தரித்து

     (இ-ள்) வாழ்பரங்குன்று என்னும் மணி அணி பூண்ட நான்மறை புகழும் கூடல் அம் பெருமான் - வாழ்கின்ற திருப்பரங்குன்றம் என்னும் மணியணிகலனைப் பூண்டுள்ள நான்கு வேதங்களும் புகழாநின்ற மதுரைப்பெருமான்; வான் முதல் ஈன்ற மலைமகள் தன்னொடும் - வானம் முதலிய ஐம்பெரும் பூதங்களாலியன்ற உலகங்களையும் அவற்றின்கண் வாழும் உயிரினங்களையும் ஈன்றருளிய தாயாகிய பார்வதியாருடனே; முழுது உணர் ஞானம் - எல்லாவற்றையும் உணர்கின்ற பேரறிவும்; எல்லாம் உடைமை - எல்லாப் பொருள்களையும் தன் வயத்தே உடைமையும்; முழுது அனுக்கிரகம் - பேரருளுடைமையும்; கெழுபரம்- முடிவிலாற்றலும்; அநாதி - தோற்றமின்மையும்; பாசம் இலாமை - பற்றின்மையும்; மாசுஅறு நிட்களம் - குற்றமற்ற அருவமும்; அ விகாரக்குறி - அழகிய உருவமும்; ஆகிய - இவையாகிய; தன்குணம் எட்டும் தரித்து - தன்க்கே உரிய எட்டுக்குணங்களையும் தாங்கி என்க.

     (வி-ம்.) அணி பூண்ட கூடல், மறைபுகழும் கூடல் எனத் தனித்தனி கூட்டுக. வான்முதல் அனைத்தும் என்றது வானம் முதலிய ஐம்பெருங்பூதங்களாலியன்ற உலகங்களையும் அவற்றின்கண் தோன்றி வாழும் உயிரினங்களையும் என்க. அநாதி -தோற்றமின்மை, பாசம் - பற்று, நிட்களம் - அருவநிலை. அவிகாரக்குறி என்றது சகளத்தை - சகளம் - உருவம். எண்குணம் - என்குணமாவன முற்றுமுணர்தல், அனைத்தும் தன்வயத்தேயுடைமை, பேரளுடைமை, அருவமாதல் என்பன. இனி இவற்றோடு பரிமேலழகர் சைவாகமத்திற் கண்டு கூறிய எண்குணங்கள் தன்வயத்தனாதல், தூயவுடம்பினானாதல், இயற்கையுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்ப முடைமை என்பனவாம். இவை சிறிது வேறுபட்டுருத்துலணர்க.

30 - 35: விட்டு...........................அடியவர்

     (இ-ள்) அறுகுற்றம் விட்டு . காம முதலிய அறுவகைக் குற்றங்களையும் நீக்கி; அருச்சனை - இறைவழிபாடும்; வணக்கம் - பணிவுடைமையும்; பிறவுயிர்க்கு அன்பு அகம் - பிற உயிர்களிடத்து அருளுடைய நெஞ்சமும்; பேரருள் திருநூல்- பெரிய அருளால் தோற்றுவிக்கப்பட்ட மெய்ந்நூலணர்ச்சியும்; பெருந்துறவு- எவற்றினும் பெரிய துறவுள்ளமும்; எங்கும் நிறைபொருள் அழுந்தல் - அங்கிக் கெனாதபடி எங்கும் நிறைந்துள்ள மெய்ப்பொருளின்கண் அழுந்தாலும்; அருள் இனக்கூட்டம் - அருளையடைந்த அடியாரொடு கூடுதலும்; இருள் பவம் நடுங்கல்- அறியாமையுடைய பிறப்பிற்கு அஞ்சுதலும்; எனும் குணம் எட்டும் - ஆகிய இந்த எண்வகைக் குணங்களையும்; தமக்கும் படைக்க - அடியாராகிய தமக்கும் அளித்தருளுதலாலே; விதி பேற்று அடியவர் - அவற்றை முறைமையாலே எய்திய பேற்றினையுடைய அடியவர்களுடைய என்க.

     (வி-ம்.) அறவகைக் குற்றம் - அவா, வெகுளி, இவறல், மயக்கம், செருக்கு, அழுக்காறு என்பன, அருச்சனை - வழிபாடு, வணக்கம் என்றது பணிவுடைமையை, அருள் நூல் - மெய்ந்நூல், பெருந்துறவு - முற்றத்துறக்கும் துறவு எங்கும் நிறை பொருள் என்றது இறைவனை - அருளினம் - மெய்யடியார் கூட்டம், இருள்- அறியாமை, பவம் - பிறப்பு எனவே அடியார்க்குரிய என் குணங்கள் வருமாறு:- இறைவழிபாடு செயதல், பணிவுடைடைமை, அருளுடைமை, மெய்ந்நூற் பயிற்சி, முற்றத்துறத்தல், மெய்ப்பொருளில் அழுந்துதல், அடியாரொடு கூடுதல், பிறப்பிற்கஞ்சுதல் என்னும் இவ்வெட்டும் என்க.

36 - 38: நிலை..................................பெறுமை

     (இ-ள்) நிலை அருள் கற்பு என - நிலைமையான திருவருட் கற்பைப்போல; நெடுங்கற்புடையோள் - நீங்காத பெரிய கற்பையுடைய எம்பெருமாட்டிக்கு; முன் உறின் - முன்னர் நீர் இவ்வண்ணம் சென்றாயெனில்; அவள்மனம்-அப்பெருமகளது நெஞ்சம்; ஆங்கே நன்னரில் கொண்டு - அப்போதே நன்மையை யுட்கொண்டு; குளிரும் பெறுமே - குளிர்ச்சியடையுமோ? நீயே கூறுதி! என்க.

     (வி-ம்.) நின்னைக் கண்டு என் நெஞ்சமே கொதிக்குமாயின் நின்னைக்கண்டுழி எம்பெருமாட்டியின் நெஞ்சம் என்னாம் என்றவாறு. நீயே கூறுதி என்பது குறிப்பெச்சம். அருட்கற்பு என்றது மெய்யடியார் அவனருளையன்றிப் பிறிதொன்றனையும் எண்ணாத ஒருமைப்பாட்டினை அஃது ஈண்டுத் தலைவியின் கற்புக்கு உவமை. அவள் என்றது அப்பெருமகள் என்பதுபட நின்றது. நன்னர்- நன்மை, குளிரும் பெறுமே என்புழி ஏகாரம் வினா, எதிர்மறைப் பொருளை வற்புறுத்தி நின்றது.

     இதனை, நீயும் வையைநீர் விழவு புகுந்தனமென, மெய்யினை, பெயர்துறை பூனை: சேக்கொள் கண்ணை, ஒன்றுடனில்லா மொழியை, கவிழ்ந்த முகத்தை, மனந்தோன்றா நகையை யன்றோ, நின்கேழ்கண்ட என்னுள்ளம், கடல் பருகக் கொதித்த பெருந்தழற் றோற்றமுங் கடந்த தென்றால், கூடற்பெருமான் மலைமகளொடு தன்குணமெட்டுந் தரித்தபடி யருச்சனை முதலிய எண்வகைக் குணங்களையும் தமக்கும் படைக்கப்பெற்ற, அடியவரருட் கற்பெனக் கற்புடையோண் முன்னுறின் அவள் மனம் குளிரும் பெறுமோ வென வினைமுடிவு செய்க. மெய்ப்பாடு - அது. பயன் - தலைவனை இடித்துரைக்கு மாற்றால் தலைவியின் ஊடல் தீர்தல்.