பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 97

நேரிசையாசிரியப்பா

 
   
5
  வெறிக்குறுங் கதுபின் வெள்ளியிற் றெயிற்றியர்
செம்மணி சுழற்றித் தேனிலக் கெறிதரப்
பெருக்கெடுத் திழிதரும் வெள்ளப் பிரசக்
கான்யா றுந்துங் கல்வரை நாட
சொற்றவ றுவக்கும் பித்தினர் சேர்புலன்
10
  சிறிதிடைத் தெருள்வது முடனுடன் மருள்வது
மாமெனக் காட்டு மணியிருண் மின்னலி
னிணம்புணர் புகர்வே லிணங்குதுணை யாகக்
காம மாறுட் கவர்தரும் வெகுளுநர்
படிறுளங் கமழுஞ் செறிதரு தீயுறழ்
15
  கொள்ளி வாய்க்குணங் குள்ளதோ றிவரிய
மின்மினி யுமிழுந் துன்னலர் கள்ளியை
யன்னையென் றணைதரு மரையிருள் யாமத்துக்
கடுஞ்சுட ரிரவி விடுங்கதிர்த் தேரினை
மூல நிசாசரர் மேனிலம் புடைத்துத்
20
  துணைக்கரம் பிடித்தெனத் த்ற்றிடும் பொழில்சூழ்
கூடற் பதிவருங் குணப்பெருங் குன்றினன்
றாமரை பழித்த விருசர ணடையாக்
கோளினர் போலக் குறிபல குறித்தே
யைந்தமர் கதுப்பின ளமைத்தோ ணசைஇத்
25
  தருவிற் கிழவன் றானென நிற்றி
நின்னுயிர்க் கின்ன னேர்தரின் றிருவின்
றன்னுயிர்க் கின்ன றவரில வாவா
விரண்டுயிர் தணப்பென வெனதுகண் புணரவிக்
கொடுவழி யில்வர வென்றும்
  விடுவது நெடும்புக ழடுவே லோயே.

(உரை)
கைகோள்: களவு. தோழிகூற்று

துறை: ஆறுபார்த்துற்ற வச்சக்கிளவி

     (இ-ம்.) இதற்கு, “நாற்றமும் தோற்றமும்” (தொல். களவி. 23) எனவரும் நூற்பாவின்கண் ‘ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும்.....................அனைநிலை வகையால் வரைதல் வேண்டினும்’ எனவரும் விதி கொள்க.

1 - 4: வெறி..............................நாட

     (இ-ள்) வெறி குறுங்கதுப்பின் வெள் எயிற்று எயிற்றியர்- நாற்றமுடைய குறிய கூந்தலையும் வெள்ளிய பற்கலையும் உடைய எயிற்றராகிய பாலைநில மகளிர்; செம்மணி சுழற்றி தேன் இலக்கு எறிதர-சிவந்த மாணிக்கக் கற்களைக் கவணில் வைத்துச் சுழற்றி தேன்கூடாகிய இலக்கின்கண் வீசுதலாலே; பெருக்கெடுத்து இழிதரும் வெள்ளப்பிரசம்-அக்கூடுடைந்து ஒழுங்காநின்ற தேன்வெள்ளமானது; கான்யாறு உந்தும் கல்வரை நாட-கான்யாற்றில் சென்று கலந்து அதன்கண் உள்ள நீரை விரைந்து செலுத்துதற்கிடனான மலைநாட்டையுடைய பெருமானே! என்க.

     (வி-ம்.) வெறி-நாற்றம். குறுங்கதுப்பு-கூழையான கூந்தல். எயிற்றியர்-பாலைநில மகளிர். செம்மணி-மாணிக்கமணி. கவணில்வைத்துச் சுழற்றி என்க. இலக்கு-குறி. பிரசம்-தேங் கான்யாறு-காட்டாறு. உந்துதல்-செலுத்துதல். கல்வரை: இரு பெயரொட்டு. 26: அடு வேலோயே

     (இ-ள்) அடுவேலோய்-பகைவரைக் கொல்லும் வேற்படையினை யுடையோய்! கேள் என்க.

     (வி-ம்.) அடும் வேர்படையை யுடையோயாயினும் என்பாள் அடுவேலோய் என மீண்டும் விளித்தாள். அடுதல்-கொல்லுதல்.

5 - 11: சொல்...............................குணங்கு

     (இ-ள்) சொல் தவறு உவக்கும் பித்தினர் சேர்புலன்-தமது சொற் சோர்விலேயே மகிழாநின்ற பித்தர்களுடைய அறிவானது; சிறிது இடைத்தெருள்வதும் உடன்உடன் மருள்வதும் ஆம் எனக் காட்டும்-சிறிது போழ்து தெலிவதும் இடையிட்டு மயக்குவதும் போலத் தோன்றா நின்ற; அணி இடையிட்டு இருள் மின்னலின்- செறிந்த இருளின் ஊடே இடையிட்டு இடையிட்டுத் தோன்றும் மின்னலையுடைய இவ்விரவின்கண்; நிணம் புணர் புகர்வேல் இணங்கு துணையாக-பகைவருடைய ஊன் பொருந்துதலாலே புள்ளிகளையுடைத்தாய நினது வேற்படை ஒன்றுமே நினக்குப் பொருந்திய துணையாகக்கொண்டு; காமம் ஆறு உள் கவர்தரும் வெகுளுநர் படிறு உளம்-காம முதலிய அறுவகைக் குற்றங்களானும் கவரப்படுகின்ற நெஞ்சத்தையுடைய சினத்தையுடையவர்களுடைய பொய்ம்மையுடைய நெஞ்சத்தின்கண்; கமழும் செறிதரும் தீ உறழ் கொள்ளிவாய்க் குணங்கு- மேலெழாநின்ற அடர்ந்த சினத்தீயையொத்த கொள்ளிவாய்ப் பேய்கள் என்க.

     (வி-ம்.) வேல்-புகருடைமைக்கு நிணம் புணர்தல் ஏது என்க. நிணம்-ஊங் புகர்-புள்ளி. இணங்குதுணை-பொருந்திய துணை. காமம் முதலிய ஆறாவன காமம், வெகுளி, இவறல், மயக்கம், தன்முனைப்பு, அழுக்காறு என்பன. வெகுளுநர்-பெயர். படிறு-பொய்மை. இடையறாது நிற்றலின் கமழும் தீ என்றார். தீ-சினத்தீ. உறழ்தல்-ஒத்தல். கொள்ளிவாய்க் குணங்கு- கொள்ளிவாய்ப்பேய். இதற்கு வெகுளுநர் நெஞ்சத்தில் எழும் சினத்தீ உவமை.

11 - 19: உள்ளுதோறு...............................போல

     (இ-ள்) உள்ளுதோறு இவரிய-நினைத்த இடங்களிலெல்லாம் செல்லுகின்ற; மின்மினி உமிழும் அலர் துன்கள்ளியை-மின்மினிகள் ஒளி வீசுகின்ற மலர் நிரம்பிய கள்ளி மரங்களை; அன்னை என்று அணைதரும் அரை யிருள் யாமத்து- எம்முடைய தாய் என்று உறவுகூறி எய்துகின நள்ளிரவாகிய இருட் பொழுதில்; கடுஞ்சுடர் இரவி விடும் கதிர்த்தேரினை- வெவ்விய சுடர்களையுடைய கதிரவன் செலுத்துகின்ற ஒளிமிக்க தேரினை; மூல நிசாசரர் மேல் நிலம் புடைத்து-தீமைக்கெல்லாம் காரணமாகிய அசுரர்கள் விண்ணுலகத்தை அழித்து; துணைக்கரம் பிடித்து எனத் தோற்றிடும் பொழில் சூழ்-இரு கைகளானும் பிடித்தாற்போலத் தோற்றுகின்ற சோலை சூழ்ந்துள்ள; கூடல்பதி வரும்-மதுரை நகரத்தில் எழுந்தருளிய; குணப்பெருங் குன்றினன்- குணங்களால் இயன்ற பெரிய மலையை யொத்த சிவபெருமானுடைய; தாமரைப்பழித்த இருசரண் அடையாக் கோளினர் போல-செந்தாமரை மலரை அழகாற் பழித்த திருவடி இரண்டினையும் அடையாத மடவோர் சொல்லைப்போல என்க.

     (வி-ம்.) கொள்ளிவாய்ப் பேய் கள்ளிமரங்களைத் தந் தாய் எனக் கருதி எய்துடற்கிடனான யாமம் என்றவாறு. உள்ளுதோறும்-தாம் நினைத்த இடங்களிலெல்லாம். இவர்தல்-பரவுதல். மின்மினி உமிழும் யாமம் முணங்கு அணைதரும் யாமம் எனத் தனித்தனி கூட்டினும் அமையும். அரை யாமம்; இருள் யாம என இயைக்க. பொழில் உயர்ந்து கதிரவன் தேரைத் தீண்டுதலால் அத்தோற்றம் அரக்கர் கதிரவன் தேரைக் கைகளாற் பிடித்தாற்போலத் தோன்றும் என்றவாறு. குணம்-எண்குணம். அவை முற்கூறப்பட்டன. கோள்-கொள்கை. அடையாமைக்குக் காரணமான கொள்கையுடையார் என்றவாறு.

19 - 24: குறிபல.....................................புணர

     (இ-ள்) பலகுறி குறித்து-பலகுறிகளை எண்ணி; ஐந்து அமர் கதுப்பினள்-ஐந்து பகுதியாக அமைந்த கூந்தலையுடைய எம்பெருமாட்டியின்; அமைத்தோள் நசைஇ-மூங்கில் போன்ற டொல்களைத் தழுவுவதற்குப் பெரிதும் விரும்பி; தருவின் கிழவன்தான் என நிற்றி-தேவேந்திரன் என்னும்படி ஈண்டுவந்து நிகின்றாய்; நின் உயிர்க்கு இன்னல் நேர்தரின்-இங்ஙனம் வருதலால் நின்னுடைய உயிர்க்குத் துன்பம் ஏற்பட்டால்; திருவின் தன் உயிர்க்கு இன்னல் தவறு இல-திருமகள் போல்வளாகிய எம்பெருமாட்டியின் உயிர்க்கும் துன்பம் பல வருதல் தவறமாட்டா; ஆஆ-அந்தோ!; இரண்டு உயிர் தனப்பு என-அங்ஙனமாயின் என் என்பிற்குரிய இரண்டு உயிர்கள் போம் என்று யான் கருதும்படி; எனது கண் புணர-அடிச்சியாகிய என்னுடைய கண்கள் காணும்படி என்க.

     (வி-ம்.) குறி-அடையாளங்கள். அவை இரவுக்குறி இடத்தின் அடையாளங்கள். ஐந்து-ஐந்துவகை. அவை முடி, கொண்டை, சுருள், குழல், பனிச்சை என்பன. இவற்றுள் மயிரை உச்சியிற் சேர்த்து முடித்தல் முடி எனவும், பக்கத்திற் சேர்த்து முடித்தல் கொண்டை எனவும், பின்னே அள்ளிச் செருகுதல் சுருள் எனவும், சுருட்டி முடித்தல் குழல் எனவும், பின்னி விடுதல் பனிச்சை எனவும் கூறப்படும். அமை-மூங்கில். நசைஇ-விரும்பி. தருவின் கிழவன் என்றது தேவேந்திரனை. தேவேந்திரன் அகலிகை தோளை விரும்பி இரவில் காட்டினூடே சென்று செவ்வி பார்த்து நின்றாற்போல நீயும் நிற்கின்றனை என அசதியாடினாளு மாயிற்று. நிற்றி-நிற்கின்றாய். நீ அஞ்சாது இங்ஙனம் வந்து நிற்பினும் யாமதற்கொவ்வோம் என்பது குறிப்பு. இன்னல்-ஈண்டு சாதல்மேற்று. திரு என்றது தலைவியை. தன்: அசை. தலைவன் உயிர்க்கு இன்னல் நேரின் சாதல் ஈறாக அவள் எய்தும் இன்னல் சாலப்பல என்பாள் இன்னல் தவறில எனப் பன்மையின் முடித்தாள். இன்னல்கள் வருதலின் தவறமாட்டா என்பது கருத்து. ஆஆ: இரக்கக் குறிப்பு. இரண்டு உயிர் என்றது எனதன்பிற்குரிய உயிர் என்பதுபட நின்றது. தணைப்புஆம் என ஆக்கச்சொல் வருவித்தோதுக.

24 - 26: இக்கொடுவழி...........................புகழ்

     (இ-ள்) இ கொடுவழி-இந்தக் கொடுமையாகிய வழியில்; இ வரவு-நீ இவ்வாறு துணிந்து வருதலை; என்றும் விடுவது நெடும்புகழ்-இனி எப்பொழுதும் நினையாதொழிவது நினக்குப் பெரிய புகழாகும்; இன்றேல் ஒரோவழி நினக்குப் பெரிய பழியாய் விடுங்காண் என்க.

     (வி-ம்.) இவ்வரவு என்புழி இங்ஙனம் அஞ்சாது துணிந்து நீ வருதல் என்பதுபட நின்றது. விடுவது புகழ் எனவே, விடாதுவரின் அது பெரும்பழியாய் முடியினும் முடியும் என்பது குறிப்பெச்சம்.

     இதனை, வரைநாட! வேலோய்! அரையிருள் யாமத்துக் கூடற் குணக்குன்றினன் சரணடையாக் கோளினர்போல, குறித்துக் கதுப்பினள் தோள்நசைஇ இரண்டுயிர் தணப்பென என் கண்காண இக்கொடு வழியில் நின்வரவு விடுவது நெடும்புகழாமென வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனுன் அவை.