01-10
 
1. தமர் நினைவு கூறி வரைவு கடாதல்
 
   
அமுதமும் தருவும் பணிவரப் படைத்த  
உடலக்கண்ணன் உலகு கவர்ந்து உண்ட  
களவுடை நெடுஞ் சூர்க் கிளை, களம் விட்டு ஒளித்த--  
அருள் நிறைந்து அமைந்த கல்வியர் உளம் எனத்  
தேக்கிய தேனுடன் இறால் மதி கிடக்கும்--
5
எழு மலை பொடித்த கதிர் இலை நெடு வேல்  
வள்ளி துணைக் கேள்வன் புள்ளுடன் மகிழ்ந்த  
கறங்கு கால் அருவிப் பரங்குன்று உடுத்த  
பொன் நகர்க் கூடல் சென்னி அம் பிறையோன்  
(பொதியப் பொருப்பன் மதியக் கருத்தினை,
10
'கொங்கு தேர் வாழ்க்கை'ச் செந்தமிழ் கூறி,  
பொற்குவை தருமிக்கு அற்புடன் உதவி,  
என் உளம் குடிகொண்டு இரும் பயன் அளிக்கும்  
கள் அவிழ் குழல் சேர் கருணை எம்பெருமான்)  
மலர்ப்பதம் நீங்கா உளப் பெருஞ் சிலம்ப!
15
கல்லாக் கயவர்க்கு அரு நூல் கிளை மறை  
சொல்லினர் தோம் என, துணை முலை பருத்தன;  
பல உடம்பு அழிக்கும் பழி ஊன் உணவினர்  
தவம் என, தேய்ந்தது, துடி எனும் நுசுப்பே;  
கடவுள் கூறார் உளம் என, குழலும்,
20
கொன்றை புறவு அகற்றி, நின்ற இருள் காட்டின;  
சுரும்பு படிந்து உண்ணும் கழுநீர் போல,  
கறுத்துச் சிவந்தன கண் இணை மலரே;  
ஈங்கு இவை நிற்க: சீறூர், பெருந் தமர்,  
இல்லில் செறிக்கும் சொல்லுடன், சில் மொழி
25
விள்ளும்; தமியில் கூறினர்,  
உள்ளம் கறுத்துக் கண் சிவந்து உருத்தே.
உரை
   
2. தாய் அறிவு கூறி வரைவு கடாதல்
 
   
'பூ', 'மணி', 'யானை', 'பொன்', என எடுத்து,  
திங்களும், புயலும், பரிதியும், சுமந்த  
மலை வரும் காட்சிக்கு உரியஆகலின்,  
நிறையுடைக் கல்வி பெறு மதி மாந்தர்  
ஈன்ற செங் கவி எனத் தோன்றி, நனி பரந்து,
5
பாரிடை இன்பம் நீளிடைப் பயக்கும்  
பெரு நீர் வையை வளை நீர்க் கூடல்  
உடல், உயிர், என்ன உறைதரு நாயகன்  
(கடுக்கை மலர் மாற்றி வேப்பலர் சூடி,  
ஐவாய்க் காப்பு விட்டு அணி பூண் அணிந்து,
10
விரிசடை மறைத்து மணி முடி கவித்து,  
விடைக்கொடி நிறுத்திக் கயற்கொடி எடுத்து,  
வழுதி ஆகி முழுது உலகு அளிக்கும்,  
பேர் அருள் நாயகன்) சீர் அருள் போல,  
மணத்துடன் விரிந்த கைதைஅம் கானல்,
15
நலத் தொடர் வென்றிப் பொலம் பூண் குரிசில்  
சின்னம் கிடந்த கொடிஞ்சி மான் தேர்,  
நொச்சிப் பூ உதிர் நள் இருள் நடு நாள்,  
விண்ணம் சுமந்து தோற்றம் செய்தென,  
தன் கண்போலும் என்கண் நோக்கி,
20
கள்வரைக் காணும் உள்ளம் போலச்  
செம் மனம் திருகி, உள்ளம் துடித்து,  
புறன் வழங்காது, நெஞ்சொடு கொதித்தனள்,  
மாறாக் கற்பின் அன்னை--  
கூறு ஆம் மதியத் திரு நுதற் கொடியே!
25
உரை
   
3. பாங்கி அஞ்சி அச்சுறுத்தல்
 
   
பகையுடன் கிடந்த நிலை பிரி வழக்கினைப்  
பொருத்தலும், பிரித்தலும், பொருபகை காட்டலும்,  
உட்பகை அமைத்தலும், உணர்த்து சொல் பொருத்தலும்,  
ஒரு தொழிற்கு இரு பகை தீராது வளர்த்தலும்,  
செய்யா அமைச்சுடன் சேரா அரசன்
5
நாடு கரிந்தன்ன காடு கடந்து இயங்கி--  
இடும்பை நிரப்பினர்க்கு ஈதலின்--இறந்தோர்க்கு,  
இதழ் நிறை மதுவம் தாமரை துளித்தென,  
விழி சொரி நீருடன் பழங்கண் கொண்டால்,  
(உலகு இயல் நிறுத்தும் பொருள் மரபு ஒடுங்க,
10
மாறனும் புலவரும் மயங்குறு காலை,  
முந்துறும் பெரு மறை முளைத்தருள் வாக்கால்,  
'அன்பின் ஐந்திணை' என்று அறுபது சூத்திரம்,  
கடல் அமுது எடுத்துக் கரையில் வைத்ததுபோல்,  
பரப்பின் தமிழ்ச் சுவை திரட்டி, மற்று அவர்க்குத்
15
தெளிதரக் கொடுத்த தென் தமிழ்க் கடவுள்,  
தழற்கண் தரக்கின் சரும ஆடையன்  
கூடல் அம் பெரும் பதி கூறார் கிளை என)  
'நிறை நீர்க் கயத்துள் ஒரு தாள் நின்று,  
தாமரை, தவம் செய்து, அளியுடன் பெற்ற
20
திருமகட்கு அடுத்தது என்?' என்று,  
ஒருமை காண்குவர்--துகிர்க் கிளைக் கொடியே!  
உரை
   
4. பிரிவு அருமை கூறி வரைவு கடாதல்
 
 
அண்டம் ஈன்று அளித்த கன்னி முனிவாக,  
திரு நுதல் முளைத்த கனல் தெறு நோக்கினில்,  
ஆயிர மணிக் கரத்து அமைத்த வான் படையுடன்  
சயம் பெறு வீரனைத் தந்து, அவன் தன்னால்,  
உள்ளத்து அருளும் தெய்வமும் விடுத்த
5
இருள் மனத் தக்கன் பெரு மகம் உண்ணப்  
புக்க தேவர்கள் பொரு கடற்படையினை  
ஆரிய ஊமன் கனவு என ஆக்கிய  
கூடல் பெருமான் பொதியப் பொருப்பகத்து--  
அருவி அம் சாரல் இருவி அம் புனத்தினும்,
10
மயிலும், கிளியும், குருவியும், 'நன்றி  
செய்குநர்ப் பிழைத்தோர்க்கு உய்வு இல' என்னும்  
குன்றா வாய்மை நின்று நிலை காட்டித்  
தங்குவன கண்டும், வலி மனம் கூடி,  
ஏகவும் துணிந்தனம்--எம் பெரும் படிறு
15
சிறிது நின்று இயம்ப, உழையினம்! கேண்மின்: இன்று,  
ஊற்று எழும் இரு கவுட் பெரு மதக் கொலை மலைக்  
கும்பம் மூழ்கி, உடல் குளித்து ஓட,  
பிறை மதி அன்ன கொடுமரம் வாங்கி,  
தோகையர் கண் எனச் சுடு சரம் துரக்கும்
20
எம்முடைக் குன்றவர் தம் மனம் புகுத, இப்  
புனக் குடிக் கணியர் தம் மலர்க்கை ஏடு அவிழ்த்து,  
வரிப்புற அணில் வாற் கருந் தினை வளை குரல்  
கொய்யும் காலமும் நாள்பெறக் குறித்து,  
நிழலும் கொடுத்து, அவர் ஈன்ற
25
மழலை மகார்க்கும் பொன் அணிந்தனரே.
உரை
   
5. இளமை கூறி மறுத்தல்
 
   
இரண்டு உடல் ஒன்றாய்க் கரைந்து, கண் படாமல்,  
அளவு இயல் மண நிலை பரப்பும் காலம்  
தளை கரை கடந்த காமக்கடலுள்  
புல் நுனிப் பனி என மன்னுதல் இன்றி,  
பீரம் மலர்ந்த வயாவு நோய் நிலையாது,
5
வளை காய் விட்ட புளி அருந்தாது,  
செவ் வாய் திரிந்து வெள் வாய் பயவாது,  
மனை புகையுண்ட கரு மண் இடந்து  
பவள வாயில் சுவை காணாது,  
பொற்குட முகட்டுக் கரு மணி அமைத்தெனக்
10
குங்குமக் கொங்கையும் தலைக்கண் கறாது,  
மலர அவிழ்ந்த தாமரைக் கயல் என  
வரி கொடு மதர்த்த கண் குழியாது,  
குறி படு திங்கள் ஒருபதும் புகாது,  
பொன் பெயர் உடையோன் தன் பெயர் கெடுப்ப,
15
தூணம் பயந்த மாண் அமர் குழவிக்கு,  
அரக்கர் கூட்டத்து அமர் விளையாட,  
நெருப்பு உமிழ் ஆழி ஈந்தருள் நிமலன்  
(கூடல் மாநகர், ஆட எடுத்த  
விரித்த தாமரை குவித்த தாளோன்)
20
பேர் அருள் விளையாச் சீர்-இலர் போல,  
துலங்கிய அமுதம் கலங்கிய தென்ன,  
இதழ் குவித்துப் பணித்த குதலை தெரியாது;  
முருந்து நிரைத்த திருந்து பல் தோன்றாது;  
தெய்வம் கொள்ளார் திணி மனம் என்ன,
25
விரிதரு கூழையும் திரு முடி கூடாது;  
துணை மீன் காட்சியின் விளை கரு என்ன,  
பார்வையின் தொழில்கள் கூர்விழி கொள்ளாது;  
மறு புலத்து இடுபகை வேந்து அடக்கியது என,  
வடுத்து எழு கொலை முலை பொடித்தில அன்றே:
30
செம் மகள் மாலை இம் முறை என்றால்,  
வழுத்தலும் வருதலும் தவிர்தி--  
மொழிக் குறி கூடாச் செவ் வேலோயே!  
உரை
   
6. சுவடு கண்டு இரங்கல்
 
   
நிணம், உயிர் உண்ட, புலவு பொறாது,  
தலை உடல் அசைத்து, சாணை வாய் துடைத்து,  
நெய் குளித்து அகற்றும் நெடு வேல் விடலை--  
அந்தணர் உகும் நீர்க்கு அருட்கரு இருந்து  
கோடா மறை மொழி நீடுறக் காணும்
5
கதிர் உடல் வழி போய்க் கல்லுழை நின்றோர்  
நெருப்பு உருத்தன்ன செருத் திறல் வரைந்த  
வாசகம் கண்டு மகிழ்ந்ததும் இவணே;  
துணை விளக்கு எரியும் நிலைவிழிப் பேழ்வாய்த்  
தோகை மண் புடைக்கும் காய்புலி மாய்க்க
10
வாய் செறித்திட்ட மாக் கடிப்பு இதுவே;  
செடித்தலைக் கார் உடல் இடிக் குரற் கிராதர்  
மறைந்து கண்டு அக் கொலை மகிழ் உழி இந் நிலை;  
தவ நதி போகும் அரு மறைத் தாபதர்  
நன்னர் கொள் ஆசி நாட்டியது இவ் உழை;
15
கறை அணல் புயங்கன் எரி தழல் விடத்தை  
மலை மறை அதகம் மாற்றிய அதுபோல்,  
கொடுமரக் கொலைஞர் ஆற்றிடைக் கவர,  
எண்ணாது கிடைத்த புண் எழு செரு நிலைக்  
கை வளர் கொழுந்து மெய் பொடியாகென
20
சிற்றிடைப் பெரு முலைப் பொற்றொடி மடந்தை தன்  
கவைஇய கற்பினைக் காட்டுஉழி இதுவே;  
குரவம் சுமந்த குழல் விரித்து இருந்து  
பாடலம் புனைந்த கற் பதுக்கை இவ் இடனே;  
ஒட்டு விட்டு உலறிய பராரை நெட்டாக் கோட்டு,
25
உதிர் பறை எருவை உணவு ஊன் தட்டி,  
வளை வாய்க் கரும் பருந்து இடை பறித்து உண்ணக்  
கண்டு நின்று உவந்த காட்சியும் இதுவே;  
செம்மணிச் சிலம்பும் மரகதப் பொருப்பும்,  
குடுமி அம் தழலும் அவண் இருட் குவையும்,
30
முளை வரும் பகனும் அதனிடை மேகமும்,  
சேயிதழ் முளரியும் கார் இதழ்க் குவளையும்,  
ஓர் உழைக் கண்ட உவகையது என்ன,  
எவ் உயிர் நிறைந்த செவ்வி கொள் மேனியின்  
அண்டப் பெருந் திரள் அடைவு ஈன்று அளித்த
35
கன்னி கொண்டு இருந்த மன் அருட் கடவுள்  
(மலை உருக் கொண்ட உடல் வாள் அரக்கர்  
வெள்ளமும், சூரும், புள் இயல் பொருப்பும்,  
நெடுங் கடற்கிடங்கும், ஒருங்கு உயிர் பருகிய  
மணி வேற் குமரன் முதல் நிலை வாழும்
40
குன்று உடுத்து ஓங்கிய கூடல் அம் பதியோன்)  
தாள் தலை தரித்த கோளினர் போல,  
நெடுஞ் சுரம் நீங்கத் தம் கால்  
அடும் தழல் மாற்றிய கால் குறி இவணே.
உரை
   
7. நற்றாய் வருந்தல்
 
   
பொடித்து அரும்பாத சின் முலைக் கொடிமடந்தையள்,  
மணி மிளிர் பெருங் கட்கு இமை காப்பு என்ன,  
விழித்துழி விழித்தும், அடங்குழி அடங்கியும்,  
தன்னை நின்று அளித்த என்னையும் ஒருவுக;  
பல் மணிக் கலன்கள் உடற்கு அழகு அளித்தென,
5
சுற்று உடுத்து ஓங்கிய ஆயமும் துறக்குக;  
பிணிமுக-மஞ்ஞை செருமுகத்து ஏந்திய  
மூ-இரு திருமுகத்து ஒரு வேலவற்கு,  
வான் உற நிமிர்ந்த மலைத்தலை முன்றிலின்,  
மனவு அணி மடந்தை, வெறியாட்டாளன்,
10
வேல்மகன், குறத்தி, மா மதி முதியோள்--  
தொண்டகம் துவைப்ப, முருகு-இயம் கறங்க--  
ஒருங்கு வந்து, இமையா அருங் கடன் முற்றிய  
பின்னர், நின்று ஏற்ற கைத்தாயையும் பிழைக்குக;  
கருந் தலைச் சாரிகை, செவ் வாய்ப் பசுங்கிளி,
15
தூவி அம் தோகை, வெள் ஓதிமம், தொடர் உழை,  
இவையுடன் இன்பமும் ஒருவழி இழக்குக;  
(சேயிதழ் இலவத்து உடைகாய்ப் பஞ்சி  
புகை முரிந்து எழுந்தென விண்ணத்து அலமர,  
குழை பொடி கூவையின் சிறை, சிறை தீந்த
20
பருந்தும் ஆந்தையும் பார்ப்புடன் தவழ,  
உடை கவட்டு ஓமை உலர் சினை இருக்கும்  
வளை கட் கூகையும் மயங்கி வாய் குழற,  
ஆசையின் தணியா அழல் பசி தணிக்கக்  
காளிமுன் காவல் காட்டி வைத்து ஏகும்
25
குழிகட் கரும் பேய் மகவு கண் முகிழ்ப்ப,  
வேம் உடல் சின்னம் வெள்ளிடை தெறிப்ப,  
நெடுந் தாட் குற்றிலை வாகை நெற்று ஒலிப்ப,  
திசை நின்று எழாது, தழல் முகம் தெறிப்ப,  
சுடலையில், சூறை இடை இடை அடிக்கும்
30
பேர் அழற் கானினும், நாடும் என் உளத்தினும்,  
ஒரு பால் பசுங்கொடி நிறை பாட்டு அயர,  
பாரிடம் குனிப்ப, ஆடிய பெருமான்)  
வையகத்து உருவினர் மலர் ஆவறிவினைப்  
புலன் நிரை மறைத்த புணர்ப்பு-அதுபோல,
35
குளிர் கொண்டு உறையும் தெளிநீர் வாவியை  
வள்ளை, செங்கமலம், கள் அவிழ் ஆம்பல்,  
பாசடை மறைக்கும் கூடல் பெருமான்  
செந் தாள் விடுத்து உறை அந்தர்கள் தம்மினும்,  
மூவாத் தனி நிலைக்கு இருவரும் ஓர் உயிர்
40
இரண்டு எனக் கவைத்த நல் அரண் தரு தோழியை,  
செரு விழும் இச்சையர், தமது உடல் பெற்ற  
இன்புகள் நோக்கா இயல்பு-அது போல,  
மருங்கு பின் நோக்காது, ஒருங்கு விட்டு அகல,  
பொருந்தியது, எப்படி, உள்ளம்--
45
அருந் தழற் சுரத்தின் ஒருவன் அன்பு எடுத்தே?  
உரை
   
8. செலவு நினைந்து உரைத்தல்
 
   
உயிர் புகும் சட்டகம் உழிதொறும் உழிதொறும்  
பழவினை புகுந்த, பாடகம் போல,  
முதிர் புயல் குளிறும் எழு மலை புக்க  
கட்டுடைச் சூர் உடல் காமம் கொண்டு  
பற்றி உட்புகுந்து, பசுங் கடல் கண்டு,
5
மாவொடும் கொன்ற மணி நெடுந் திரு வேல்  
சேவல்அம் கொடியோன் காவல் கொண்டிருந்த  
குன்றம் உடுத்த கூடல் அம் பதி இறை,  
தொடர்ந்து உயிர் வவ்விய விடம் கெழு மிடற்றோன்  
(புண்ணியம் தழைத்த முன் ஓர் நாளில்,
10
இரு விரல் நிமிர்த்துப் புரிவொடு சேர்த்தி,  
குழை உடல் தலை விரி கைத்திரி கறங்க;  
ஒரு விரல் தெறித்தும், ஐவிரல் குவித்தும்,  
பெரு வாய் ஒரு முகப் படகம் பெருக்க;  
தடா உடல் உம்பர்த் தலை பெறும் முழவம்
15
நான் முகம் தட்டி, நடு முகம் உரப்ப;  
ஒரு வாய் திறந்து உள் கடிப்பு உடல் விசித்த  
சல்லரி அங்கைத் தலை விரல் தாக்க;  
கயந்தலை அடி என, கயிறு அமை கைத்திரி,  
இரு விரல் உயர்த்திச் செரு நிலை, இரட்ட;
20
இரு தலை குவிந்த நெட்டுடல்-தண்ணுமை  
ஒரு முகம் தாழ்த்தி, இரு கடிப்பு ஒலிப்ப;  
திருமலர் எழுதிய வரை இருபத்தைந்து  
அங்குலி இரண்டு இரண்டு அணைத்து விளர் நிறீஇ,  
மும் முகக் கயலுடன் மயிர்க் கயிறு விசித்த
25
கல்லவடத் திரள் விரல்-தலை கறங்க;  
மரக்கால் அன்ன ஒருவாய்க்கோதை  
முகத்தினும் தட்ட, மூக்கினும் தாக்க;  
நாடு இரு முனிவர்க்கு ஆடிய பெருமான்)  
திருவடி வினவாக் கரு உறை மாக்கள்
30
நெஞ்சினும் கிடந்து நீண்ட வல் இரவில்,  
செல்லவும் உரியம், தோழி, நில்லாது--  
எம் எதிர்வு இன்றி, இருந்து எதிர்ப்பட்டு,  
மறைவழி ஒழுகா மன்னவன் வாழும்  
பழி நாட்டு ஆர்ந்த பாவம் போலச்
35
சேர மறைத்த கூர் இருள் நடு நாள்,  
'அரிதின் போந்தனிர்' என்று, ஓர்  
பெரிது இன் வாய்மை வெற்பனின் பெறினே!  
உரை
   
9. அறத்தொடு நிற்றல்
 
 
தன்னுழைப் பல உயிர் தனித்தனி படைத்துப்  
பரப்பிக் காட்டலின், பதுமன் ஆகியும்;  
அவ் உயிர், எவ் உயிர், அனைத்தும் காத்தலின்,  
செவ்வி கொள் கரு முகிற் செல்வன் ஆகியும்;  
கட்டிய கரை வரம்பு உட்புக அழித்து,
5
நீர் தலை தரித்தலின், நிமலன் ஆகியும்;  
தருவும் மணியும் சங்கமும் கிடைத்தலின்,  
அரி முதிர் அமரர்க்கு அரசன் ஆகியும்;  
மூன்று அழல், நான்மறை, முனிவர் தோய்ந்து,  
மறை நிர் உகுத்தலின், மறையோன் ஆகியும்;
10
மீனும், கொடியும், விரிதிணை ஐந்தும்,  
தேன் உறை தமிழும், திரு உறை கூடலும்,  
மணத்தலின், மதிக் குல மன்னவன் ஆகியும்;  
நவ மணி எடுத்து நல் புலம் காட்டலின்,  
வளர் குறி மயங்கா வணிகன் ஆகியும்;
15
விழைதரும் உழவும், வித்தும், நாறும்,  
தழைதலின், வேளாண் தலைவன் ஆகியும்;  
விரிதிரை வையைத் திரு நதி சூழ்ந்த  
மதுரை அம் பதி நிறை மைம்மலர்க் களத்தினன்--  
இணை அடி வழுத்தார் அணை தொழில் என்ன,
20
கைதைஅம் கரை சேர் பொய்தற்பாவையோடு,  
இரு திரை எடுக்கப் பொருதிரை எடுத்தும்,  
பூழிப் போனகம் பொதுவுடன் உண்டும்,  
சாய் தாள் பிள்ளை தந்து கொடுத்தும்,  
முட உடற் கைதை மடல் முறித்திட்டும்,
25
கவைத் துகிர்ப் பாவை கண்ணி சூடக்  
குவலயத் திரு மலர் கொணர்ந்து கொடுத்தும்,  
நின்றான் உண்டு ஒரு காளை;  
என்றால், இத் தொழில் செய்வது புகழே?  
உரை
   
10. பரத்தையிற் பிரிவு கண்டவர் கூறல்
 
 
வடி விழிச் சிற்றிடைப் பெரு முலை மடவீர்!-  
தொழுமின்; வணங்குமின்; சூழ்மின்; தொடர்மின்;  
கட்டுதிர் கோதை கடி மலர்; அன்பொடு  
முண்டக முகையின் முலை முகம் தருமின்;  
உருளின் பூழி உள்ளுற ஆடுமின்;
5
எதிர்மின்; இறைஞ்சுமின்; ஏத்துமின்; இயங்குமின்;  
கருப்புரம் துதைந்த கல் உயர் மணித் தோள்  
வாசம் படரும் மருத்தினும் உறுமின்;  
பெருங் கவின், முன்நாள், பேணிய அருந் தவம்  
கண்ணிடை, உளத்திடை, காண்மின்; கருதுமின்;
10
பூவும் சுண்ணமும் புகழ்ந்து எதிர் எறிமின்;  
யாழில் பரவுமின்; ஈங்கு, இவை அன்றி,  
'கலத்தும்' என்று எழுமின்; கண்ணளி காண்மின்--  
வெண்சுடர் செஞ்சுடர், ஆகிய விண்ணொடு,  
புவி, புனல், அனல், கால், மதி புலவோன், என,
15
முழுதும் நிறைந்த முக்கட் பெருமான்  
(பனிக் கதிர் குலவன் பயந்தருள் பாவையைத்  
திருப் பெரு வதுவை பொருந்திய அந் நாள்,  
சொன்றிப் பெரு மலை தின்று நனி தொலைத்த,  
கார் உடல் சிறு நகைக் குறுந் தாட் பாரிடம்
20
ஆற்றாது அலந்த நீர் நசை அடக்க,  
மறிதிரைப் பெரு நதி வரவழைத்தருளிய  
கூடல் அம் பதி உறை குணப் பெருங் கடவுள்)  
முண்டகம் அலர்த்தும் முதிராச் சேவடி  
தரித்த உள்ளத் தாமரை ஊரன்
25
பொன் துணர்த் தாமம் புரிந்து ஒளிர் மணித் தேர்,  
வீதி வந்தது; வரலான் நும்  
ஏதம் தீர இரு மருங்கு எழுந்தே.
உரை