41-50
 
41. அவயவங்கூறல்
 
   
வீதி குத்திய குறுந் தாட் பாரிடம்  
விண் தலை உடைத்துப் பிறை வாய் வைப்ப,  
குணங்கினம் துள்ள, கூளியும் கொட்ப;  
மத்தியந்தணன் வரம் சொலி விடுப்பத்  
தில்லை கண்ட புலிக்கால் முனிவனும்,
5
சூயை கை விடப் பாஞ்சலி ஆகிய  
ஆயிரம் பணாடவி அருந்தவத்து ஒருவனும்,  
கண்ணால் வாங்கி, நெஞ்சு அறை நிறைப்ப;  
திருநடம் நவின்ற உலகு உயிர்ப் பெருமான்;  
(கடல் மாக் கொன்ற தீப் படர் நெடு வேல்
10
உருள்இணர்க் கடம்பின் நெடுந் தார்க் கண்ணியன்,  
அரி-மகள் விரும்பிப் பாகம் செய்து,  
களியுடன் நிறைந்த ஒரு பரங்குன்றமும்;  
பொன்அம் தோகையும், மணி அரிச் சிலம்பும்,  
நிரைத் தலைச் சுடிகை நெருப்பு உமிழ் ஆரமும்,
15
வண்டு கிளை முரற்றிய பாசிலைத் துளவும்,  
மரகதம் உடற்றிய வடிவொடு மயங்க,  
மரக்கால் ஆடி அரக்கர்க் கொன்ற  
கவைத் தலை மணி வேல் பிறைத் தலைக் கன்னி  
வடபால் பரிந்த பலி மணக் கோட்டமும்;
20
சூடகம், தோள்வளை, கிடந்து வில் வீச,  
யாவர்தம் பகையும், யாவையின் பகையும்,  
வளனின் காத்து, வருவன அருளும்,  
ஊழியும் கணம் என, உயர் மகன் பள்ளியும்;  
உவா மதி கிடக்கும் குண்டு கடல் கலக்கி,
25
மருந்து கைக் கொண்டு வானவர்க்கு ஊட்டிய,  
பாகப்பக்க நெடியோன் உறையுளும்;  
தும்பி உண்ணாத் தொங்கல்-தேவர்  
மக்களொடு நெருங்கிய வீதிப் புறமும்;  
மது நிறை பிலிற்றிய பூவொடு நெருங்கி,
30
சூரரக்கன்னியர் உடல் பனி செய்யும்  
கடைக்கால் மடியும் பொங்கர்ப் பக்கமும்;  
ஊடி ஆடுநர்த் திரையொடு பிணங்கித்  
தோழியின் தீர்க்கும் வையைத் துழனியும்;  
அளவா ஊழி மெய்யொடு சூழ்ந்து,
35
நின்றுநின்று ஓங்கி, நிலை அறம் பெருக்கும்  
ஆனாப் பெரும் புகழ் அருள் நகர்க் கூடல்)  
பெண் உடல் பெற்ற சென்னிஅம் பிறையோன்;  
பொற்றகடு பரப்பிய கருமணி நிரை என,  
வண்டும், தேனும், மருள் கிளை முரற்றி,
40
உடைந்து உமிழ் நறவு உண்டு, உறங்கு தார்க் கொன்றையன்-  
திருவடி புகழுநர் செல்வம் போலும்,  
அண்ணாந்து எடுத்த அணி உறு வன முலை;  
அவன் கழல் சொல்லுநர் அரு வினை மானும்,  
மலை முலைப் பகை அட மாழ்குறும் நுசுப்பு;
45
மற்று-அவன் அசைத்த மாசுணம் பரப்பி  
அமைத்தது கடுக்கும், அணிப் பாம்பு அல்குல்;  
ஆங்கு-அவன் தரித்த கலைமான் கடுக்கும்,  
இரு குழை கிழிக்கும் அரிமதர் மலர்க் கண்--  
புகர் முகப் புழைக்கை துயில் தரு கனவில்
50
முடங்குளை கண்ட பெருந் துயர் போல,  
உயிரினும் நுனித்த அவ் உருக் கொண்டு,  
பொன்மலை பனிப்பினும் பனியா  
என் உயிர் வாட்டிய தொடி இளங்கொடிக்கே.
உரை
   
42. வன்புறை எதிரழிந்து இரங்கல்
 
   
ஈன்ற செஞ் சூழல், கவர்வழி பிழைத்த  
வெறிவிழிப் பிணர் மருப்பு ஆமான் கன்றினை,  
மென் நடைக் குழைசெவி பெறா, வெறுங் கரும் பிடி,  
கணிப் பணைக் கவட்டும், மணற் சுனைப் புறத்தும்,  
தழைக் குற மங்கையர் ஐவனம் அவைக்கும்
5
உரற்குழி நிரைத்த கல் அறைப் பரப்பும்,  
மானிட மாக்கள் அரக்கி கைப்பட்டென,  
நாச் சுவை அடுக்கும் உணவு உவவாது  
வைத்துவைத்து எடுக்கும் சாரல் நாடன்  
அறிவும், பொறையும், பொருள் அறி கல்வியும்,
10
ஒழுக்கமும், குலனும், அழுக்கு அறு தவமும்,  
இனிமையும், பண்பும், ஈண்டவும் நன்றே!--  
வெடிவால் பைங் கண் குறு நரியினத்தினை,  
ஏழ் இடம் தோன்றி, இனன் நூற்கு இயைந்து,  
வீதி போகிய வால் உளைப் புரவி
15
ஆக்கிய விஞ்சைப் பிறை முடி அந்தணன்,  
(கொண்டோற்கு ஏகும் குறியுடை நல் நாள்,  
அன்னையர் இல்லத்து, அணி மட மங்கையர்  
கண்டன கவரும் காட்சி போல,  
வேலன் பேசி, மறி செகுத்து, ஓம்பிய,
20
காலம் கோடா வரை வளர் பண்டம்  
வருவன வாரி; வண்டினம் தொடர,  
கண் கயல் விழித்து; பூத்துகில் மூடி;  
குறத்தியர், குடத்தியர்; வழி விட நடந்து;  
கருங்கால் மள்ளர், உழவச் சேடியர்,
25
நிரை நிரை வணங்கி மதகு எதிர்கொள்ள;  
தண்ணடைக் கணவற் பண்புடன் புணரும்  
வையை மா மாது மணத்துடன் சூழ்ந்த)  
கூடல் பெருமான், பொன் பிறழ் திருவடி  
நெஞ்சு இருத்தாத வஞ்சகர் போல,
30
சலியாச் சார்பு நிலை அற நீங்கி,  
அரந்தை யுற்று, நீடநின்று இரங்கும்--  
முருந்து எயிற்று, இளம் பிறைக் கோலம்  
திருந்திய திரு நுதல் துகிர் இளங்கோடியே.
உரை
   
43. அன்னமோடு அழிதல்
 
   
கவைத் துகிர், வடவையின், திரள் சிகை பரப்பி,  
அரை பெறப் பிணித்த கல் குளி மாக்கள்  
உள்ளம் தீக்கும் உவர்க் கடல் உடுத்த  
நாவல்அம் தண் பொழில் இன்புடன் துயில;  
உலகு அற விழுங்கிய நள்ளென் கங்குல்,
5
துயிலாக் கேளுடன், உயிர் இரை தேரும்  
நெட்டுடல் பேழ்வாய்க் கழுதும் உறங்க;  
பிள்ளையும் பெடையும் பறைவாய்த் தழீஇச்  
சுற்றமும் சூழக் குருகு கண்படுப்ப;  
கீழ் அரும்பு அணைத்த முள் அரை முளரி
10
இதழ்க் கதவு அடைத்து மலர்க்கண் துயில;  
விரிசினை பொதுளிய பாசிலை ஒடுக்கி,  
பூவொடும், வண்டொடும், பொங்கரும், உறங்க--  
(பால் முகக் களவின் குறுங் காய்ப் பச்சிணர்,  
புட்கால்-பாட்டினர்க்கு உறையுள் கொடுத்த,
15
மயிர் குறை கருவித் துணைக் குழை அலைப்ப;  
வரிந்த இந்தனச் சுமை, மதி, அரவு, இதழி,  
அகன்று கட்டு அவிழ்ந்த சேகரத்து, இருத்தி;  
வீதியும், கவலையும், மிக வளம் புகன்று;  
பொழுது கண் மறைந்த தீவாய்ச் செக்கர்
20
தணந்தோர் உள்ளத்துள் உறப் புகுந்த பின்,  
கார் உடல் காட்டி, கண்ட கண் புதைய,  
அல் எனும் மங்கை மெல்லெனப் பார்க்க,  
முரன்று எழு கானம் முயன்று, வாது இயைந்த  
வட புல விஞ்சையன் வைகு இடத்து அகன் கடை,
25
"தென் திசைப் பாணன் அடிமை யான்" என,  
போகா விறகுடன் தலைக் கடை பொருந்தி;  
உந்தித் தோற்றம் ஓசை நின்று ஒடுங்க,  
பாலையில் எழுப்பி, அமர் இசை பயிற்றி,  
தூங்கலும் துள்ளலும், சுண்டி நின்று எழுதலும்,
30
தாரியில் காட்டித் தரும் சாதாரி,  
உலகு உயிர் உள்ளமும் ஒன்றுபட்டு ஒடுங்க,  
இசை விதி பாடி, இசைப்பகை துரந்த  
கூடற்கு இறையோன் தாள் விடுத்தோர் என)  
என் கண் துஞ்சா நீர்மை
35
முன் கண்டு ஓதாது அவர்க்கு, இளங் குருகே.
உரை
   
         44. சொல்லாது ஏகல்  
   
இலது எனின், உளது என்று, உள்ளமொடு விதித்தும்  
சொல்லா நிலை பெறும்; சூளுறின், மயங்கிச்  
செய் குறிக் குணனும் சிந்தையுள் திரிவும்;  
உழை நின்று அறிந்து, பழங்கண் கவர்ந்தும்;  
கண் எதிர் வைகி, முகன் கொளின் கலங்கியும்:
5
வழங்குறு கிளவியின், 'திசை' என, மாழ்கியும்;  
ஒரு திசை நோக்கினும், இருக்கினும், உடைந்தும்;  
'போக்கு' என உழையர், அயர்ப்பிடைக் கிளப்பினும்,  
முலைக் குவட்டு ஒழுக்கிய அருவி தண் தரளம்  
செம்மணி கரிந்து தீத்தர, உயிர்த்தும்;
10
'போம்' என வாய்ச் சொல் கேட்பினும், புகைந்தும்;  
கொள்ளார் அறுதியும், கொண்டோர் இசைத்தலும்,  
ஈது எனக் காட்டிய மயல் மடவரற்கு--  
(முன், ஒரு வணிகன், மகப் பேறு இன்மையின்,  
மருமான்தன்னை மகவு எனச் சடங்கு செய்து,
15
உள்ளமும் கரணமும் அவனுழி ஒருக்கி,  
முக்கவர்த் திருநதி துணையுடன் மூழ்கி,  
அப் புலத்து உயிர் கொடுத்து, அருட்பொருள் கொண்டபின்;  
மற்று அவன் தாயம் வவ்வுறு மாக்கள்,  
காணி கைக்கொண்ட மறு நிலை மைந்தனை,
20
நிரைத்துக் கிளை கொள் நெடு வழக்கு உய்த்தலும்,  
மைந்தனும், கேளிரும், 'மதி முடிக் கடவுள்! நின்  
புந்தி ஒன்று இன்றிப் புகல் இலம்' என்று அயர்  
அவ்வுழி; ஒரு சார், அவன் மாதுலன் என,  
அறிவு-ஒளி நிறைவே ஓர் உருத் தரித்து வந்து,
25
அருள் வழக்கு ஏறி, அவர் வழக்கு உடைத்த  
கூடல் நாயகன் தாள் பணியார் என)  
எவ்வழிக் கிளவியின் கூறிச்  
செவ்விதின் செல்லும் திறன், இனி யானே?  
உரை
   
         45. தெளிதல்  
 
நின்று அறி கல்வி ஒன்றிய மாந்தர்  
புனை பெருங் கவியுள் தருபொருள் என்ன  
ஓங்கி, புடை பரந்து, அமுதம் உள் ஊறி,  
காண் குறி பெருத்து, கச்சு-அவை கடிந்தே,  
எழுத்து, மணி, பொன், பூ, மலை, என யாப்புற்று
5
அணி பெரு முலைமேல் கோதையும் ஒடுங்கின;  
செங்கோல் அரசன் முறைத் தொழில் போல,  
அமுதமும், கடுவும், வாளும், படைத்த  
மதர் விழித் தாமரை மலர்ந்து, இமைத்து, அமர்த்தன;  
செய் குறை முடிப்பவர் சென்மம் போலப்
10
பதமலர் மண்மிசைப் பற்றிப் பரந்தன;  
அமுதம் பொடித்த முழுமதி என்ன  
முகம் வியர்ப்பு உறுத்தின; உள்ளமும் சுழன்றன--  
(இதழியும், தும்பையும், மதியமும், கரந்து  
வளை விலை மாக்கள் வடிவு எடுத்தருளி,
15
முத்தமிழ் நான்மறை முளைத்தருள் வாக்கால்  
வீதி கூறி, விதித்த முன் வரத்தால்--  
கரு முகில் விளர்ப்ப, அறல் நீர் குளிப்ப,  
கண் புகை யாப்புத் திணி இருள் விடிய,  
உடல்தொறும் பிணித்த பாவமும் புலர,
20
கண்ட நீள் கதுப்பினர் கை குவி பிடித்து--  
குருகு அணி செறித்த தனி முதல் நாயகன்,  
குருகும் அன்னமும் வால் வளைக் குப்பையை.
'அண்டமும் பார்ப்பும் ஆம்' என அணைக்கும்,  
அலை நீர்ப் பழன முது நகர்க்) கூடல்
25
ஒப்புடைத்து ஆய இப் பொற்றொடி மடந்தை,  
'அணங்கினள் ஆம்' என நினையல்,  
பிணங்கி வீழ்ந்து மாழ்குறும் மனனே!  
உரை
   
46. பருவம் கண்டு பெருமகள் புலம்பல்
 
 
பசி மயல் பிணித்த பிள்ளை வண்டு அரற்ற,  
ஆசையின் செறிந்த பொங்கர்க் குலத்தாய்  
அருப்புமுலைக் கண் திறந்து உமிழ் மதுப் பால்,  
சினை மலர்த் துணைக் கரத்து அன்புடன் அணைத்து,  
தேக்கிட அருத்தி, அலர்மலர்த் தொட்டில்
5
காப்புறத் துயிற்றும் கடி நகர்க் கூடல்  
அருளுடன் நிறைந்த கரு உயிர் நாயகன்  
(குரவு அரும்பு உடுத்த வால் எயிற்று அழல்விழிப்  
பகுவாய்ப் பாம்பு முடங்கல் ஆக,  
ஆலவாய் பொதிந்த மதிமுடித் தனி முதல்)
10
சேக்கொள் முளரி அலர்த்திய திருவடி  
கண் பருகாத களவினர் உளம் போல்,  
காருடன் மிடைந்த குளிறு குரல் கண முகில்  
எம் உயிர் அன்றி இடை கண்டோர்க்கும்  
நெஞ்சு அறை பெருந் துயர் ஓவாது உடற்றக்
15
கவையா நெஞ்சமொடு பொருவினைச் சென்றோர்  
கண்ணினும் கவரும் கொல்லோ--  
உள் நிறைந்து இருந்து வாழிய மனனே?  
உரை
   
47. முகிலொடு கூறல்
 
 
கருங் குழற் செவ் வாய்ச் சிற்றிடை மடந்தைக்கு  
உளத்துயர் ஈந்து, கண் துயில் வாங்கிய  
ஆனா இன்னல் அழிபடக் காண்பான்,  
(விரிபொரி சிந்தி, மண மலர் பரப்பி,  
தெய்வக் குலப் புகை விண்ணொடும் விம்ம,
5
இரு-நால் திசையும், உண்பலி தூவி,  
நல் நூல் மாக்கள் நணிக் குறி சொற்று,  
பக்கம் சூழ்ந்த நெடு நகர் முன்றில்  
கோடு அகழ்ந்து எடுத்த மறி நீர்க் காலும்,  
வெங்கார் பெய்து நாள் குறித்து உழுநரும்,
10
சூல் நிறைந்து உளையும் சுரி வளைச் சாத்தும்,  
இனக் கயல் உண்ணும் களிக் குருகினமும்,  
வரைப் பறை அரிந்த வாசவன்-தொழுது  
நிரைநிரை விளம்பி வழி முடி நடுநரும்,  
நாறு கழி துற்ற சகடு ஈர்க்குநரும்,
15
தாமரை பாடும் அறுகால்-கிளையும்,  
உறைத்து எழு கம்பலை உம்பரைத் தாவி  
முடித்தலை திமிர்ப்ப அடிக்கடி கொடுக்கும்  
அள்ளற் பழனத்து அணிநகர்க்) கூடல்  
நீங்காது உறையும் நிமிர்சடைப் பெருமான்--
20
உரகன் வாய் கீண்ட மாதவன் போல  
மண் அகழ்ந்து எடுத்து வருபுனல் வையைக்  
கூலம் சுமக்கக் கொற்றாள் ஆகி,  
நரைத் தலை முதியோள் இடித்து அடு கூலி கொண்டு  
அடைப்பது போல, உடைப்பது நோக்கி,
25
கோமகன் அடிக்க, அவன் அடி வாங்கி,  
எவ் உயிர், எவ் உலகு, எத் துறைக்கு எல்லாம்,  
அவ் அடி கொடுத்த அருள் நிறை நாயகன்--  
திரு மிடற்று இருள் எனச் செறி தரும் மா முகில்!  
எனது கண் கடந்து நீங்கித்
30
துனைவுடன் செல்லல், ஒருங்குபு புரிந்தே.
உரை
   
48. தழை விருப்பு உரைத்தல்
 
   
அறுகும் தும்பையும் அணிந்த செஞ் சடையும்,  
கலைமான், கணிச்சியும், கட்டிய அரவமும்,  
பிறிதும் கரந்து, ஒரு கானவன் ஆகி,  
அருச்சுனன் அருந் தவம் அழித்து அமர் செய்து, அவன்  
கொடுமரத் தழும்பு திருமுடிக்கு அணிந்து,
5
பொன்னுடை ஆவம் தொலையாது சுரக்கப்  
பாசுபதக் கணை பரிந்து அருள் செய்தோன்--  
வாசவன் மகட் புணர்ந்து, மூன்று எரி வாழ,  
தென் கடல் நடுத் திடர் செய்து உறைந்து இமையவர்  
ஊர் உடைத்து உண்ணும் சூர் உடல் துணித்த
10
மணி வேற் குமரன் களிமகிழ் செய்த  
பேர் அருட் குன்றம் ஒரு பால் பொலிந்த  
அறப் பெருங்கூடல் பிறைச் சடைப் பெருமான்--  
திருவடிப் பெருந்தேன் பருகுநர் போல,  
மணமுடன் பொதுளிய வாடா மலர்த் தழை
15
ஒரு நீ விடுத்தனை; யான் அது கொடுத்தனன்;  
அவ்வழிக் கூறின்; அத் தழை வந்து  
கண் மலர் கவர்ந்தும், கைமலர் குவித்தும்,  
நெட்டுயிர்ப்பு எறிந்தும் முலைமுகம் நெருக்கியும்,  
ஊடியும், வணங்கியும், உவந்து அளி கூறியும்,
20
பொறை அழி காட்சியள் ஆகி  
நிறை அழிந்தவட்கு நீ ஆயினவே!  
உரை
   
49. விரவிக் கூறல்
 
 
வெயர்-அமுது அரும்பி, முயல் கண் கறுத்து,  
தண்ணம் நின்று உதவலின், நிறைமதி ஆகி;  
பொன்அம் பொகுட்டுத் தாமரை குவித்து,  
நிறை அளி புரக்கும் புது முகத்து அணங்கு!--நின்  
ஒளி வளர் நோக்கம் உற்றனை ஆயின்,
5
இன் உயிர் வாழக்கை உடலொடும் புரக்கலை:  
(ஒரு தனி அடியாற்கு உதவுதல் வேண்டி,  
மண்ணவர் காண, வட்டணை, வாள், எடுத்து,  
ஆதி சாரணை, அடர் நிலைப் பார்வை,  
வாளொடு நெருக்கல், மார்பொடு முனைத்தல்,
10
பற்றி நின்று அடர்த்தல், உள்-கையின் முறித்தல்,  
ஆனனத்து ஒட்டல், அணி மயிற் புரோகம்,  
உள் கலந்து எடுத்தல், ஒசிந்து இடம் அழைத்தல்,  
கையொடு கட்டல், கடிந்து உள் அழைத்தல், என்று  
இவ்வகைப் பிறவும், எதிர் அமர் ஏறி,
15
அவன் பகை முறித்த அருட் பெருங் கடவுள்  
கூடல் அம் கானல்) பெடையுடன் புல்லி,  
சேவல் அன்னம், திருமலர்க் கள்ளினை,  
அம் மலர் வள்ளம் ஆக நின்று உதவுதல்  
கண்டுகண்டு, ஒருவன் மாழ்கி,
20
விண்டு உயிர் சோர்ந்த குறி நிலை மயக்கே.
உரை
   
50. ஊடல் தணிவித்தல்
 
   
அவ்வுழிஅவ்வுழிப் பெய் உணவு உன்னி,  
முகன் பெறும் இரு செயல் அகன் பெறக் கொளுவும்  
புல்லப் பாண்மகன் சில்லையும் இன்றி;  
இன்பக் கிளவி அன்பினர்ப் போக்கி;  
முடித்தலை மன்னர் செருக்கு நிலை ஒருவி;
5
பொன்னுறு ஞாழற் பூவுடன் கடுக்கும்  
பேழ்வாய்ப் புலி உகிர் சிறு குரல் விளங்க,  
அமுதம் துளிக்கும் குமுதவாய் குதட்டிப்  
பழம் கோள் தத்தை வழங்கு சொல் போலும்  
மழலைக் கிளவியும், இரு நிலத்து இன்பமும்,
10
ஒரு வழி அளிக்கும் இருங் கதிர்ச் சிறுவனை,  
தழல் விழி மடங்கல் கொலை அரிக் குருளையைப்  
பொன்மலை கண்ட பொலிவு போல,  
மணிகெழு மார்பத்து அணிபெறப் புகுதலின்;  
(கறங்கு இசை அருவி அறைந்து நிமிர் திவலையும்,
15
துருத்தி வாய் அதுக்கிய குங்குமக் காண்டமும்,  
குற மகார் கொழிக்கும் கழை நித்திலமும்,  
நெடு நிலை அரங்கில் பரிபெறு தரளமும்,  
புனம் பட எறிந்த கார் அகில் தூமமும்,  
அந்தணர் பெருக்கிய செந் தீப் புகையும்,
20
வேங்கையின் தாதுடன் விரும்பிய சுரும்பும்,  
கந்தி விரி படிந்த மென் சிறை வண்டும்,  
சந்தனப் பொங்கர்த் தழைச் சிறை மயிலும்,  
முன்றில் அம் பெண்ணைக் குடம்பை கொள் அன்றிலும்,  
ஒன்றினொடு ஒன்று சென்று தலை மயங்கும்
25
குளவன் குன்றக் கூடல் அம் பதி நிறை,  
மஞ்சு அடை குழல் பெறு செஞ் சடைப் பெருமான்--  
அருந் தமிழ்க் கீரன் பெருந் தமிழ்ப் பனுவல்  
வாவியில் கேட்ட காவிஅம் களத்தினன்--  
திருக்கண் கண்ட பெருக்கினர்போல)
30
முளரிஅம் கோயில் தளைவிட வந்து,  
நல்லறம் பூத்த முல்லைஅம் திருவினள்!  
நின் உளத்து இன்னல் மன் அறக் களைந்து,  
பொருத்தம் காண்டி--வண்டு ஆரும்  
அருத்தி அம் கோதை மன்னவன் பாலே.
35
உரை