51-60
 
51. குலமுறை கூறி மறுத்தல்
 
   
பெரு மறை நூல் பெறக் கோன்முறை புரக்கும்  
பெருந்தகை வேந்தன் அருங் குணம் போல,  
மணந்தோர்க்கு அமுதும், தணந்தோர்க்கு எரியும்,  
புக்குழிப் புக்குழிப் புலன் பெறக் கொடுக்கும்  
மலையத் தமிழ்க் கால் வாவியில் புகுந்து
5
புல் இதழ்த் தாமரைப் புது முகை அவிழ்ப்ப,  
வண்டினம் படிந்து மதுக் கவர்ந்து உண்டு,  
சேயிதழ்க் குவளையின் நிரை நிரை உறங்கும்  
நிலை நீர் நாடன்--நீயே: இவளே--  
மலை உறை பகைத்து, வான் உறைக்கு அணக்கும்
10
புட்குலம் சூழ்ந்த பொருப்புடைக் குறவர்தம்  
பெருந்தேன் கவரும் சிறுகுடி மகளே: நீயே--  
ஆயமொடு ஆர்ப்ப, அரிகிணை முழக்கி,  
மாயா நல் அறம் வளர் நாட்டினையே: இவளே--  
தொண்டகம் துவைப்ப, தொழிற் புனம் வளைந்து,
15
பகட்டினம் கொல்லும் பழி நாட்டவளே: நீயே--  
எழு நிலை மாடத்து இள முலை மகளிர்  
நடம் செயத் தரளவடம் தெறு நகரோய்: இவளே--  
கடம் பெறு கரிக் குலம் மடங்கல் புக்கு அகழத்  
தெறித்திடு முத்தம் திரட்டு வைப்பினளே:நீயே--
20
அணிகெழு நவமணி அலர் எனத் தொடுத்த  
பொற்கொடித் தேர்மிசைப் பொலிகுவை அன்றே: இவளே--  
மணி வாய்க் கிள்ளை துணியாது அகற்ற,  
நெட்டிதண் ஏறும் இப் புனத்தினளே:  
ஆதலின், பெரும் புகழ் அணைகுதி ஆயின்,
25
(நாரணன் பாற, தேவர் கெட்டு ஓட,  
வளி சுழல் விசும்பின் கிளர்முகடு அணவிக்  
கரு முகில் வளைந்து பெருகியபோல,  
நிலை கெடப் பரந்த கடல் கெழு விடத்தை  
மறித்து, அவர் உயிர் பெறக் குறித்து உண்டருளி,
30
திருக்களம் கறுத்த அருட் பெரு நாயகன்)  
கூடல் கூடினர் போல,  
நாடல் நீ--இவள் கழைத் தோள் நசையே.
உரை
   
52. காவற்பிரிவு அறிவித்தல்
 
   
நடைத் திரைப் பரவை நாற் கடல் அணைத்து  
வரையறுத்து, அமைந்த வகை நான்கு ஆக,  
விதிவரத் திருத்திய மேதினிப் பொறையை--  
குரு மணி விரித்தலின், தேனொடு கிடந்து  
மாயாது தொடுத்த மண மலர் சுமத்தலின்--
5
வரை என நிறுத்திய திரு உறை பெருந்தோள்  
தரித்தும், அணைத்தும், தான் எனக் கண்டும்,  
செய்ததும் அன்றி, திருமனம் பணைத்துக்  
காக்கவும் குரிசில் கருத்துறும் போலும்--  
(விடையா வடந்தை செய் வெள்ளிஅம் சிலம்பினும்,
10
தென்கால் விடுக்கும் செம்பின் பொருப்பினும்,  
கொண்டல் வந்து உலவும் நீலக் குவட்டினும்,  
கோடை சென்று உடற்றும் கொல்லிக் கிரியினும்,  
பிறந்தவர் பிறவாப் பெரும் பதியகத்தும்,  
முடிந்தவர் முடியா மூதூரிடத்தும்,
15
கண்டவர் காணாக் காட்சி செய் நகரினும்,  
வேதத் தலையினும், விதி ஆகமத்தினும்,  
கல்வியர் உளத்தும், கலர் நெஞ்சகத்தும்,  
தெய்வம் விடுத்துப் பொய் கொள் சிந்தையினும்,  
கொலையினர் கண்ணும்; குன்றாது இயைந்து,
20
வெளியுறத் தோன்றி, இருளுற மறைந்த  
விஞ்சை வந்தருளிய, நஞ்சு அணி மிடற்றோன்--  
சந்தமும், பதமும், சருக்கமும், அடக்கமும்,  
சின்னக் குறளும், செழுங் கார் போலப்  
பெரு மறை முழங்கும்--திரு நகர்க் கூடல்
25
ஒப்புற்று) அடை மலர் சுமந்த  
மைப்புறக் கூந்தல் கொடி வணங்கு இடையே!  
உரை
   
53. உள் மகிழ்ந்து உரைத்தல்
 
 
நுனிக் கவின் நிறைந்த திருப் பெரு வடிவினள்!  
உயிர் வைத்து உடலம் உழன்றன போல,  
நெடும் பொருள் ஈட்ட, நிற்பிரிந்து இறந்து,  
கொன்று உணல் அஞ்சாக் குறியினர் போகும்  
கடுஞ் சுரம் தந்த கல் அழல் வெப்பம்--
5
தேவர் மருந்தும், தென் தமிழ்ச் சுவையும்,  
என் உயிர் யாவையும் இட்டு அடைத்து ஏந்தி,  
குருவியும், குன்றும், குரும்பையும், வெறுத்த நின்  
பெரு முலை மூழ்க என் உளத்தினில் தொடாமுன்--  
(வீழ் சுற்று ஒழுக்கிய பராரைத் திரு வடக்
10
குளிர் நிழல் இருந்து, குணச் செயல் மூன்றும்,  
உடலொடு படரும் நிலை நிழல்போல  
நீங்காப் பவத்தொகை நிகழ் முதல் நான்கும்,  
உடன் நிறைந்து ஒழியா உட்பகை ஐந்தும்,  
மதியினின் பழித்த வடு இரு மூன்றும்,
15
அணுகாது அகற்றி, பணிமுனி நால்வர்க்கு  
அறம் முதல் நான்கும் பெற அருள் செய்த  
கூடற் பெருமான் நீடு அருள் மூழ்கி,  
இரு பதம் உள் வைத்திருந்தவர் வினைபோல்)  
போயின துணைவினை நோக்கி
20
ஏகின எனக்கே அற்புதம் தருமே!  
உரை
   
54. புனல் ஆட்டுவித்தமை கூறிப் புலத்தல்
 
 
கொன்றைஅம் துணரில் செவ்வழி குறித்து,  
வால் உளை எருக்கில் வளர் உழை பாடி,  
கூவிளங்கண்ணியில் குலக் கிளை முரற்றி,  
வெண் கூதளத்தில் விளரி நின்று இசைத்து,  
வண்டும், தேனும், ஞிமிறும், சுரும்பும்,
5
உமிழ்நறவு அருந்தி உறங்கு செஞ் சடையோன்;  
மது மலர் மறித்துத் திருவடி நிறைத்த  
நான்மறைப் பாலனை நலிந்து உயிர் கவரும்  
காலற் காய்ந்த காலினன்; கூடல்  
திரு மறுகு அணைந்து வரு புனல் வையை
10
வரை புரண்டென்னத் திரை நிரை துறையகத்து,  
அணந்து எடுத்து ஏந்திய அரும்பு முகிழ் முலையோள்  
மதிநுதல் பெருமதி மலர்முகத்து ஒருத்தியை--  
ஆட்டியும் அணைத்தும், கூட்டியும் குலவியும்,  
ஏந்தியும் எடுத்தும், ஒழுக்கியும் ஈர்த்தும்,
15
முழுக்கியும் தபுத்தியும், முலை-ஒளி நோக்கியும்,  
விளி மொழி ஏற்றும், விதலையின் திளைத்தும்,  
பூசியும் புனைந்தும், பூட்டியும் சூட்டியும்,  
நிறுத்தியும் நிரைத்தும், நெறித்தும் செறித்தும்,  
எழுதியும் தப்பியும், இயைத்தும் பிணித்தும்,
20
கட்டியும் கலத்தியும், கமழ்த்தியும் மறைத்தும்--  
செய்தன எல்லாம் செய்யலர் போல, என்  
நெட்டிலை பொலிந்த பொன் நிறை திரு உறையுளில்--  
பாசடைக் குவளைக் சுழல் மணக் காட்டினைக்  
கரு வரிச் செங் கண் வராலினம் கலக்க,
25
வேரி மலர் முண்டகத்து அடவி திக்கு எறிய  
வெள் உடற் கருங் கட் கயல் நிரை உகைப்ப,  
மரகதப் பன்னத்து ஆம்பல்அம் குப்பையைச்  
சொரி எயிற்றுப் பேழ்வாய் வாளைகள் துகைப்ப,  
படிந்து சேடு எறியும் செங் கட் கவரியும்,
30
மலை சூழ் கிடந்த பெருங் குலைப் பரப்பும்,  
மலையுடன் அலைந்த முதுநீர் வெள்ளமும்,  
மிடைந்து, வயல் இரிந்து முதுகு சரிந்து உடைந்து  
சிறியோன் செரு என முறிய, போகி,  
உழவக்கணத்தைக் குலைக் குடில் புகுத்தும்--
35
பெரு நீர் ஊரர், நிறைநீர் விடுத்துச்  
செறிந்தது என்? எனக் கேண்மின்,  
மறிந்துழை விழித்த மறி நோக்கினரே!  
உரை
   
55. தன்னை வியந்து உரைத்தல்
 
 
விடம் கொதித்து உமிழும் படம் கெழு பகு வாய்க்  
கண்டல் முள் முளைத்த கடி எயிற்று அரவக்  
குழுவினுக்கு உடைந்து குளிர் மதி ஒதுங்க,  
தெய்வப் பிறை இருந்த திரு நுதற் பேதையைக்  
கண்டு உகண்டு அரவம் மயில் எனக் கலங்க,
5
நெடுஞ் சடைக் காட்டினை அடும் தீக்கொழுந்து என,  
'தலை ஏது' அலையா நகு தலை தயங்க,  
அணி தலைமாலையை நிறைமதித் திரள் எனப்  
புடைபுடை ஒதுங்கி அரவு வாய் பிளப்ப,  
ஒன்றினுக்கு ஒன்று கன்றிய நடுக்கொடு
10
கிடந்து ஒளி பிறழும் நெடுஞ் சடைப் பெருமான்,  
(படை நான்கு உடன்று, பஞ்சவன்-துரந்து,  
மதுரை வவ்விய கருநட வேந்தன்  
அருகர்ச் சார்ந்து நின்று அருட்பணி அடைப்ப,  
மற்று-அவன்தன்னை நெடுந்துயில் வருத்தி;
15
இறையவன் குலத்து முறையர் இன்மையினால்,  
கருதி, தோரை கல்லொடு பிறங்க  
மெய் அணி அளறாக் கைம் முழம் தேய்த்த  
பேர் அன்பு உருவப் பசுக் காவலனை,  
உலகினில், தமது முக் குறி ஆக,
20
மணி முடி வேணியும், உருத்திரக் கலனும்,  
நிலவு உமிழ் புண்ணியப் பால் நிறச் சாந்தமும்,  
அணிவித்து, அருள் கொடுத்து, அரசன் ஆக்கி,  
அடுமால் அகற்றி, நெடு நாள் புரக்க  
வையகம் அளித்த மணி ஒளிக் கடவுள்)
25
நெடு மதிற் கூடல் விரிபுனல் வையையுள்  
பிடி குளிசெய்யும் களிறு-அது போல,  
மயில் எனும் சாயல் ஒரு மதி நுதலியை  
மருமமும், தோளினும், வரை அறப் புல்லி  
ஆட்டுறும் ஊரன் அன்பு கொள் நலத்தினை,
30
பொன்னுலகு உண்டவர் மண் உலகு இன்பம்  
தலைநடுக் குற்ற தன்மை போல,  
ஒன்று அற அகற்றி உடன் கலந்திலனேல்--  
அன்ன ஊரனை எம் இல் கொடுத்து,  
தேரினும், காலினும், அடிக்கடி கண்டு,
35
நெட்டுயிர்ப்பு எறிந்து, நெடுங் கண் நீர் உகுத்துப்  
பின்னும் தழுவ உன்னும் அவ் ஒருத்தி-  
அவளே ஆகுவள், யானே--தவல் அருங்  
கரு நீர்க் குண்டு அகழ் உடுத்த  
பெரு நீர் ஆழித் தொல் உலகுழிக்கே.
40
உரை
   
56. புதல்வன்மேல் வைத்துப் புலவி தீர்தல்
 
 
அடியவர் உளத்து இருள் அகற்றலின் விளக்கும்,  
எழு மலை பொடித்தலின் அனல் தெறும் அசனியும்,  
கருங் கடல் குடித்தலின் பெருந்தழற் கொழுந்தும்,  
மா உயிர் வௌவலின் தீவிழிக் கூற்றும்,  
என் உளம் இருத்தலின் இயைந்து உணர் உயிரும்,
5
நச்சின கொடுத்தலின் நளிர் தரு ஐந்தும்,  
கரு வழி நீக்கலின் உயர் நிலைக் குருவும்,  
இரு நிலம் காத்தலின் மதியுடை வேந்தும்,  
ஆகிய மணி வேல் சேவல்அம் கொடியோன்--  
வானக மங்கையும், தேன் வரை வள்ளியும்,
10
இரு புறம் தழைத்த திரு நிழல் இருக்கும்--  
ஒரு பரங்குன்றம் மருவிய கூடல்,  
பெருநதிச் சடைமிசைச் சிறுமதி சூடிய  
நாயகன் திருவடி நண்ணலர் போல,  
பொய் பல புகன்று, மெய் ஒளித்து, இன்பம்
15
விற்று உணும் சேரி விடாது உறை ஊரன்,  
ஊருணி ஒத்த பொது வாய்த் தம்பலம்  
நீயும் குதட்டினை ஆயின்--சேயாய்!  
நரம்பு எடுத்து உமிழும் பெரு முலைத் தீம் பாற்கு  
உள்ளமும் தொடாது, விள் அமுது ஒழுக்கும்
20
குதலைவாய் துடிப்பக் குலக் கடை உணங்கியும்,  
மண் உறு மணி எனப் பூழி மெய் வாய்த்தும்,  
புடை மணி விரித்த உடைமணி இழுக்கியும்,  
சுடிகையும் சிகையும் சோர்ந்து கண் பனித்தும்,  
பறையும் தேரும் பறிபட்டு அணங்கியும்,
25
மறிக்கட் பிணாவினர் இழைக்கும் சிற்றிலில்  
சென்று அழியாது நின்று அயர் கண்டும்,  
உறுவதும் இப் பயன்: அன்றேல்,  
பெறுவது என் பால்; இன்று நின் பேறே.
உரை
   
57. தலைவி தோழியோடு புகல்தல்
 
   
நடைமலை பிடித்த சொரி எயிற்று இடங்கரை  
ஆழி வலவன் அடர்த்தன போல,  
புன் தலை மேதி புனல் எழ முட்டிய  
வரி உடற் செங் கண் வராலுடன் மயங்க,  
உள் கவைத் தூண்டில் உரம் புகுந்து உழக்கும்
5
நிறை நீர் ஊரர்--நெஞ்சகம் பிரிக்கும்  
பிணி மொழிப் பாணனுடன் உறை நீக்கி;  
நூலொடு துவளும் தோல் திரை உரத்தின்  
மால் கழித்து அடுத்த நரை முதிர் தாடி செய்  
வெள்ளி குமிழ்த்த வெரூஉக் கட் பார்ப்பான்
10
கோலுடன் படரும் குறு நகை ஒருவி;  
பூ விலைத் தொழில்மகன் காவல் கைவிட்டு;  
திக்கு விண் படர் நதி, திரு மதி, கயிலை,  
நாமகள், பெருங்கடல், நாற் கோட்டு ஒருத்தல்,  
புண்ணியம், இவை முதல் வெள் உடல் கொடுக்கும்
15
புகழ்க் கவிப் பாவலர் புணர்ச்சி இன்பு அகற்றி;  
எல்லாக் கல்வியும் இகழ்ச்சி செய் கல்வியர்  
பெரு நகைக் கூட்டமும் கழிவு செய்து; இவ் இடை,  
மயக்குறு மாலை மா மகள் எதிர--  
ஒருவழிப் படர்ந்தது என்னத் திருமுகம்
20
ஆயிரம் எடுத்து வான்வழி படர்ந்து,  
மண் ஏழ் உருவி மறியப் பாயும்  
பெருங் கதத் திரு நதி ஒருங்குழி மடங்க,  
ஐம் பகை அடக்கிய அருந் தவ முனிவன்  
இரந்தன வரத்தால், ஒரு சடை இருத்திய
25
கூடல் பெருமான் குரைகழல் கூறும்  
செம்மையர் போல--கோடா  
நம்மையும் நோக்கினர், சிறிது கண் புரிந்தே.
உரை
   
58. வழிபாடு கூறல்
 
   
நிரை இதழ் திறந்து மது வண்டு அருத்தும்  
விருந்து கொள் மலரும் புரிந்து உறை மணமும்,  
செந்தமிழ்ப் பாடலும் தேக்கிய பொருளும்,  
பாலும் சுவையும், பழமும் இரதமும்,  
உடலும் உயிரும், ஒன்றியது என்ன--
5
கண்டும், தெளிந்தும், கலந்த உள் உணர்வால்,  
பாலும், அமுதமும், தேனும், பிலிற்றிய  
இன்பு அமர் சொல்லி, நண்பும், மனக் குறியும்,  
வாய்மையும், சிறப்பும், நிழல் எனக் கடவார்--  
விண்ணவர் தலைவனும் வீயா மருந்தும்,
10
அளகைக்கு இறையும் அரும் பொருள் ஈட்டமும்,  
கண்ணனும் காவலும், முனியும் பசுவும்,  
ஒன்றினும் தவறா ஒருங்கு இயைந்தனபோல்,  
நீடி நின்று உதவும் கற்புடை நிலையினர்  
தவம் கற்று ஈன்ற நெடுங் கற்பு அன்னை!
15
(முன் ஒரு நாளில் முதல் தொழில் இரண்டினர்,  
பன்றியும், பறவையும், நின்று உரு எடுத்து,  
கவையா உளத்துக் காணும் கழலும்,  
கல்வியில், அறிவில், காணும் முடியும்,  
அளவு சென்று எட்டா அளவினர் ஆகி,
20
மண்ணும் உம்பரும், அகழ்ந்தும் பறந்தும்,  
அளவா நோன்மையில் நெடு நாள் வருந்திக்  
கண்ணினில் காணாது, உளத்தினில் புணராது,  
நின்றன கண்டு, நெடும் பயன் படைத்த  
திரு அஞ்செழுத்தும் குறையாது இரட்ட,
25
இரு நிலம் உருவிய ஒரு தழல்-தூணத்து,  
எரி, மழு, நவ்வி, தமருகம், அமைத்த  
நாற் கரம், நுதல்விழி, தீப் புகை கடுக் களம்,  
உலகு பெற்று எடுத்த ஒரு தனிச் செல்வி,  
கட்டிய வேணி, மட்டு அலர் கடுக்கை,
30
ஆயிரம் திருமுகத்து அருள் நதி, சிறுமதி,  
பகை தவிர் பாம்பும், நகை பெறும் எருக்கமும்,  
ஒன்றிய திருஉரு நின்று நனிகாட்டிப்  
பேர் அருள் கொடுத்த) கூடல் அம் பதியோன்  
பதம் இரண்டு அமைத்த உள்ளக்
35
கதி இரண்டு ஆய ஓர் அன்பினரே.
உரை
   
59. ஆதரம் கூறல்
 
   
நெடு வரைப் பொங்கர்ப் புனம் எரி கார் அகில்  
கரும் புகை வானம் கையுறப் பொதிந்து,  
தருநிழல் தேவர்தம் உடல் பனிப்பப்  
படர்ந்து எறி கங்கை விடும் குளிர் அகற்றும்  
பொன்அம் பொருப்ப! நின் உளத்து இயையின்--
5
கனல்தலைப் பழுத்த திரள் பரல் முரம்பு,  
வயல் வளை கக்கிய மணி நிரைப் பரப்பே!  
அதர் விரிந்து எழுந்த படர்புகை நீழல்,  
பொதுளிய காஞ்சி மருது அணி நிழலே!  
தீ வாய்ப் புலிப் பற் சிறு குரல் எயிற்றியர்,
10
கழுநீர் மிலையும் வயல் மாதினரே!  
அயற்புலம் எறியும் எயினர் மாத் துடி,  
நடு நகர்க்கு இரட்டும் களி அரி கிணையே!  
இருள் கவர் புலன் எனச் சுழல்தரும் சூறை,  
மதுமலர் அளைந்த மலையக் காலே!
15
எழுசிறை தீயும் எருவையும் பருந்தும்,  
குவளை அம் காட்டுக் குருகொடு புதாவே!  
வலி அழி பகடு வாய் நீர்ச் செந்நாய்,  
தழை மடி மேதியும் பிணர் இடங்கருமே!  
பட்டு உலர் கள்ளி நெற்றுடை வாகை,
20
சுருள் விரி சாலியும் குலை அரம்பையுமே!  
(வட திரு ஆலவாய், திருநடவூர்,  
வெள்ளியம்பலம், நள்ளாறு, இந்திரை,  
பஞ்சவனீச்சரம், அஞ்செழுத்து அமைத்த  
சென்னி மாபுரம், சேரன் திருத்தளி,
25
கன்னி செங்கோட்டம், கரியோன் திருஉறை--  
விண் உடைத்து உண்ணும் கண்ணிலி ஒருத்தன்,  
மறிதிரைக் கடலுள் மா எனக் கவிழ்ந்த  
களவு உடற் பிளந்த ஒளி கெழு திரு வேல்,  
பணிப்பகை ஊர்தி, அருட்கொடி இரண்டுடன்,
30
முன்னும், பின்னும், முதுக்கொள நிறைந்த  
அருவிஅம் சாரல் ஒரு பரங்குன்றம்--  
சூழ்கொள இருந்த) கூடல்அம் பெருமான்  
முழுதும் நிறைந்த இரு பதம் புகழார்  
போம் வழி என்னும் கடுஞ் சுரம் மருதம்!--
35
மாமை ஊரும் மணி நிறத்து இவட்கே.
உரை
   
60. முகம் கண்டு மகிழ்தல்
 
   
நிறைமதி புரையா! நிறைமதி புரையா!  
'தேரான் தெளிவு' எனும் திருக்குறள் புகுந்து  
குறைமதி மனனே! நிறைமதி புரையா!--  
உவர்க் கடற் பிறந்தும், குறைஉடல் கோடியும்,  
கருங் கவைத் தீ நாப் பெரும் பொறிப் பகுவாய்த்
5
தழல்விழிப் பாந்தள்தான் இரை மாந்தியும்,  
மிச்சில் உமிழ்ந்து மெய்யுள் கறுத்தும்,  
தணந்தோர்க்கு எரிந்தும் மணந்தோர்க்கு அளித்தும்,  
குமுதம் மலர்த்தியும் கமலம் குவித்தும்,  
கடல் சூழ் உலகில் மதி நடு இகந்தும்--
10
பெரு மறை கூறி அறை விதிதோறும்,  
'முத் தழற்கு உடையோன் முக்கட் கடவுள்' என்று  
உய்த்திடும் வழக்குக் கிடக்க என்று, ஒருகால்,  
வானவர் நதிக் கரை மருள் மகம் எடுத்த  
தீக்குணத் தக்கன் செருக்களம்தன்னுள்,
15
(கண்தொறும் விசைத்த கருப்புத் தரளமும்,  
வளை உமிழ் ஆரமும், சுரிமுகச் சங்கும்,  
வலம்புரிக் கூட்டமும், சலஞ்சலப் புஞ்சமும்,  
நந்தின் குழுவும், வயல்வயல் நந்தி  
உழவக் கணத்தர் படைவாள் நிறுத்தும்)
20
கூடற்கு இறையோன் குரை கழற்படையால்  
ஈர்-எண் கலையும் பூழிபட்டு உதிர  
நிலனொடு தேய்ப்புண்டு அலமந்து உலறியும்,  
சிதைந்து நைந்து எழு பழித் தீ மதி புரையா!--  
முண்டகம் மலர்த்தி முதிராது அலர்ந்தும்,
25
தீக் கதிர் உடலுள் செல்லாதிருந்தும்,  
திளையாத் தாரைகள் சேரா  
முளையா வென்றி இவள் முகமதிக்கே!  
உரை