81-90
 
81. வறும் புனம் கண்டு வருந்தல்
 
   
உள் இருந்து எழுந்து புறம்பு நின்று எரியும்  
அளவாத் திரு மணி அளித்த லானும்,  
கொலை முதிர் கடமான் முதிர்முகம் படர்ந்து  
கொழுஞ் சினை மிடைந்து களிரொடு பொதுளிய  
நெடு மரத்து இளங்கா நிலைத்தலானும்,
5
பாசடை உம்பர் நெடுஞ் சுனை விரிந்த  
பேர் இதழ்த் தாமரை பெருகலானும்,  
நெடு விசும்பு அணவும் பெரு மதி தாங்கி,  
உடையா அமுதம் உறைத லானும்,  
இளமையும், தொங்கலும், இன்பமும் ஒருகால்
10
வாடாத் தேவர்கள் மணத்த லானும்,  
நூறுடை மகத்தில் பேறு கொண்டிருந்த  
புரந்தரன் போலும்--பொன் எயில் எறிந்த  
மணி வேற் குமரன்--திரு வளர் குன்றம்  
பேர் அணி உடுத்த பெரு நகர்க் கூடல்
15
கோயில் கொண்டிருந்த குணப் பெருங் குன்றம்,  
(அருந் தவக் கண்ணினோடு இருந்த மா முனிபால்,  
பேர் இருள் மாயைப்பெண், மகவு இரக்க,  
உவர் முதல் கிடந்த சுவை ஏழ் அமைத்துக்  
கொடுத்த மெய்ப் பிண்டம் குறியுடன் தோன்றிய
20
ஏழு நீர்ச் சகரர்கள், ஏழ் அணி நின்று,  
மண் புக மூழ்கிய வான் பரி பிணிக்க,  
பல் முக விளக்கின் பரிதியில் தோட்டிய  
வேலைக் குண்டு அகழ் வயிறு அலைத்து எழுந்த  
பெருங் கார்க் கருங் கடு அரும்பிய மிடற்றோன்;
25
எறிந்து வீழ் அருவியும், எரிமணி ஈட்டமும்,  
உள்ளுதோறு உள்ளுதோறு உள்நா அமுது உறைக்கம்  
திரு முத்தமிழும், பெருகு தென் மலயத்து  
ஆரப் பொதும்பர் அடை குளிர் சாரல்,  
சுரும்புடன் விரிந்த துணை மலர்க் கொடியே!
30
விண் விரித்து ஒடுக்கும் இரவி வெண் கவிகைக்கு  
இட்டு உறை காம்பு என விட்டு எழு காம்பே!  
மரகதம் சினைத்த சிறை மயிற்குலமே!  
நீலப் போதும் பேதையும் விழித்த  
பொறி உடல் உழையே! எறிபரல் மணியே!
35
பாசிழைப் பட்டு நூல் கழி பரப்பிய  
கிளைவாய்க் கிளைத்த வளைவாய்க் கிளியே!  
மைந்தர்கண் சென்று மாதர் உள் தழைத்த  
பொழி மதுப் புது மலர்ப் போக்குடைச் சுரும்பே!  
வெறி முதிர் செம் மலர் முறிமுகம் கொடுக்கும்,
40
சந்தனப் பொதும்பர்த் தழை சினைப் பொழிலே!  
கொள்ளை அம் சுகமும் குருவியும் கடிய  
இரு கால் கவணிற்கு எறி மணி சுமந்த  
நெடுங் கால் குற்றுழி நிழல் வைப்பு இதணே!  
நெருநல் கண்ட எற்கு உதவுழி இன்பம்
45
இற்றையின் கரந்த இருள் மனம் என்னை?  
இவண் நிற்க வைத்த ஏலாக் கடுங்கண்  
கொடுத்து உண்டவர் பின் கரந்தமை கடுக்கும்;  
ஈங்கு இவை கிடக்க: என் நிழல் இரும் புனத்து  
இருந்து ஒளிர் அருந் தேன் இலதால்; நீரும்,
50
'நின் புனம் அல்ல' என்று என் புலம் வெளிப்பட  
அறைதல் வேண்டும்: அப் புனம் நீரேல்,  
முன்னம் கண்டவன் அன்று என்று  
உன்னா, உதவுதல் உயர்ந்தோர் கடனே.
உரை
   
82. நெஞ்சொடு வருந்தல்
 
   
வடமொழி மதித்த இசை நூல் வழக்குடன்  
அடுத்தன எண்-நான்கு அங்குலியகத்தினும்,  
நாற்பதிற்று இரட்டி நால் அங்குலியினும்,  
குறுமையும், நெடுமையும், கோடல் பெற்று; ஐதாய்,  
ஆயிரம் தந்திரி நிறை பொது விசித்து;
5
கோடி மூன்றில் குறித்து; மணி குயிற்றி;  
இரு நிலம் கிடத்தி; மனம், கரம், கதுவ;  
ஆயிரத்து எட்டில் அமைத்தன பிறப்பு,  
பிரவிப் பேதத் துறையது போல,  
ஆரியப் பதம் கொள் நாரதப் பேரியாழ்
10
நன்னர் கொள் அன்பால் நனிமிகப் புலம்ப--  
முந் நான்கு அங்குலி முழு உடல் சுற்றும்,  
ஐம்பதிற்று இரட்டி ஆறுடன் கழித்த  
அங்குலி நெடுமையும் அமைத்து, உள் தூர்ந்தே,  
ஒன்பது தந்திரி உறுத்தி, நிலை நீக்கி,
15
அறுவாய்க்கு ஆயிரண்டு அணைத்து வரை கட்டி,  
தோள் கால் வதிந்து, தொழில்படத் தோன்றும்  
தும்புருக் கருவியும் துள்ளி நின்று இசைப்ப--  
எழு என உடம்பு பெற்று, எண்பது அங்குலியின்,  
தந்திரி நூறு தழங்கு மதி முகத்த
20
கீசகப் பேரியாழ் கிளையுடன் முரல--  
நிறைமதி வட்டத்து முயல் உரி விசித்து,  
நாப்பண் ஒற்றை நரம்பு கடிப்பு அமைத்து,  
அந் நரம்பு இருபத்தாறு அங்குலி பெற  
இடக் கரம் துவக்கி, இடக்கீழ் அமைத்து,
25
புற விரல் மூன்றின், நுனிவிரலகத்தும்,  
அறுபத்திரண்டு இசை அனைத்து உயிர் வணக்கும்  
மருத்துவப் பெயர் பெறும் வானக் கருவி,  
தூங்கலும், துள்ளலும், துவக்கி நின்று இசைப்ப--  
நான்முகன் முதலா மூவரும் போற்ற,
30
முனிவர் அஞ்சலியுடன் முகமன் இயம்ப,  
தேவர்கள் அனைவரும் திசைதிசை இறைஞ்ச,  
இன்பப் பசுங்கொடி இடப்பால் படர,  
வெள்ளிஅம் குன்றம் விளங்க வீற்றிருந்த--  
முன்னவன் கூடல் முறைவணங்கார் என,
35
அரவப் பசுந் தலை, அரும்பு அவிழ் கணைக் கால்,  
நெய்தற் பாசடை நெடுங் காட்டு ஒளிக்கும்  
கண் எனக் குறித்த கருங் கயல் கணத்தை,  
வெள் உடல், கூர்வாய், செந் தாட் குருகினம்,  
அரவு எயிறு அணைத்த முள் இலை முடக் கைதைகள்
40
கான்று அலர் கடி மலர் கரந்து உறைந்து, உண்ணும்  
கருங் கழி கிடந்த கானல்அம் கரைவாய்,  
மெய் படு கடுஞ் சூள் மின் எனத் துறந்தவர்  
சுவல் உளைக் கவனப் புள் இயல் கலி மான்  
நோக்கம் மிறைத்த பரிதி கொள் நெடுந் தேர்ப்
45
பின்னொடும் சென்ற என் பெரும் பிழை நெஞ்சம்,  
சென்றுழிச்சென்றுழிச் சேறலும் உளவோ?  
அவ் வினைப் பயனுழி அருந்தவம் பெறுமோ?  
இடை வழி நீங்கி என் எதிர் உறுங்கொல்லோ?  
அன்றியும், நெடு நாள் அமைந்து உடன் வருமோ?
50
யாது என நிலைக்குவன்மாதோ--  
பேதை கொள்ளாது ஒழி மனம், கடுத்தே?  
உரை
   
83. கண் துயிலாது மொழிதல்
 
   
கடு வினை அங்குரம் காட்டி, உள் அழுக்காறு  
எண் திசைச் சாகை கொண்டு, இருள் மனம் பொதுளி,  
கொடுங் கொலை வடுத்து, கடும் பழிச் சடை அலைந்து,  
இரண்டு ஐஞ்ஞூறு திரண்ட அக் காவதம்  
சுற்றுடல் பெற்று, துணைப் பதினாயிரம்
5
மற்று அதின் நீண்டு மணி உடல் போகி,  
ஐம்பது-நூறுடன் அகன்று சுற்று ஒழுக்கி,  
பெருங் கவிழ் இணர் தந்து அவை கீழ்க் குலவிய  
அடல் மாக் கொன்ற நெடு வேற் குளவன்,  
குன்றவர் வள்ளிஅம் கொடியொடு துவக்கிப்
10
பன்னிரு கண் விரித்து, என் வினை துரக்கும்  
அருட் பரங்குன்றம் உடுத்து அணி கூடல்  
குறும் பிறை முடித்த நெடுஞ் சடை ஒருத்தனைத்  
தெய்வம் கொள்ளார் சிந்தை-அது என்னக்  
கிடந்த வல் இரவில், கிளர்மழை கான்ற
15
அவலும், உம்பரும், அடக்குபுனல் ஒருவி,  
தே அருள் கல்லார் சிந்தையின் புரண்ட  
கவலையும் காற் குறி கண்டு, பொழில் துள்ளும்  
இமையாச் சூரும் பல கண்டு, ஒருங்காத்  
துடியின் கண்ணும் துஞ்சாக் கண்ணினர்
20
கடியும் துனைவில் கையகன்று, எரிமணித்  
தொகை இருள் கொல்லும் முன்றில் பக்கத்து,  
இணை முகப் பறை அறை கடிப்புடைத் தோகை  
வயிற்றுள் அடக்கி வளை கிடை கிடக்கும்,  
முழக்கி மெய் கவரும் முகக் கொலை ஞாளி
25
அதிர் குரைப்பு அடக்கி, இற்புறத்து அணைந்த நம்  
பூம் புனல் ஊரனை, பொருந்தா நெடுங் கண்  
அன்னையின் போக்கிய அரும் பெருந் தவறு--  
மாலையும் கண்ணும் மேனியும் உள்ளமும்  
மயங்காத் தேவர், மருந்து வாய்மடுக்க
30
முகம் கவிழ் வேலையில், அறம் குடிபோகிய  
மாய வல் அரக்கர், தட்டிக்  
காய் பார் உகுத்த விதி ஒத்தனவே.
உரை
   
84. தலைவன் வரவு உரைத்தல்
 
 
நாற் கடல் வளைத்த நானிலத்து உயிரினை,  
ஐந்தருக் கடவுள், அவன் புலத்தினரை,  
நடந்து புக்கு உண்டும், பறந்து புக்கு அயின்றும்,  
முத் தொழில் தேவரும் முருங்க உள் உறுத்தும்,  
நோன் தலைக் கொடுஞ் சூர்க் களவு உயிர் நுகர்ந்த
5
தழல் வேற் குமரன் சால் பரங்குன்றம்,  
மணியொடும் பொன்னொடும் மார்பு அணி அணைத்த  
பெருந் திருக் கூடல் அருந் தவர் பெருமான்  
இரு சரண் அகலா ஒருமையர் உளம் என--  
சுடர் விளக்கு எடுமின்! கோதைகள் தூக்குமின்!
10
பூவும் பொரியும் தூவுமின்! தொழுமின்!  
சுண்ணமும் தாதும் துனைத்துகள் தூற்றுமின்!--  
கரும் பெயல் குளிறினம் களி மயில் என்னக்  
கிடந்து அயர்வாட்கு, முன் கிளர்வினைச் சென்றோர்  
உடல் உயிர் தழைக்கும் அருள் வரவு உணர்த்த,
15
முல்லைஅம் படர் கொடி நீங்கி, பிடவச்  
சொரி அலர் தள்ளி, துணர்ப் பொலம் கடுக்கைக்  
கிடைதரவு ஒருவி, களவு அலர் கிடத்தி,  
பூவைஅம் புடைமலர் போக்கி, அரக்கு அடுத்துக்  
கழுவிய திரு மணி கால் பெற்றென்ன,
20
நற் பெருந் தூது காட்டும்  
அற்புதக் கோபத் திருவரவு-அதற்கே.
உரை
   
85. இரங்கல்
 
   
பழுது அறு தெய்வம் காட்டிப் பண்டையின்  
உழுவலின் நலத்தால் ஓர் உயிர் என்றும்,  
கடஞ் சூள் தந்தும், கைபுனை புனைந்தும்  
பூழிஅம் போனகம் பொதுவுடன் உண்டும்,  
குழமகற் குறித்தும், சில மொழி கொடுத்தும்,
5
கையுறை சுமந்தும், கடித் தழை தாங்கியும்,  
உயிரினில் தள்ளா இரங்கியும், உணங்கியும்,  
பனையும், கிழியும் படைக்குவன் என்றும்,  
இறடிஅம் சேவற்கு எறி கவண் கூட்டியும்,  
புனமும் எம் உயிரும் படர் கரி தடிந்தும்,
10
அழுங்குறு புனல் எடுத்து அகிற் புகை ஊட்டியும்,  
ஒளி மணி ஊசல் பரிய விட்டு யாத்தும்,  
இரவினில் தங்க எளிவரல் இரந்தும்,  
இருவிஅம் புனத்திடை எறி உயிர்ப்பு எறிந்தும்,  
தெரித்து அலர் கொய்தும், பொழில் குறி வினவியும்,
15
உடலொடும் பிணைந்த கை ஆய் துயில் ஒற்றி,  
செறிஇருட் குழம்பகம் சென்று, பளிங்கு எடுத்த  
இற் பொழில் கிடைக்கும் அளவும் நின்று அலைந்தும்,  
பல நாள் பல் நெறி அழுங்கினர்: இன்று,  
(முகன் ஐந்து மணத்த முழவம் துவைக்க
20
ஒரு கால் தூக்கி நிலையம் ஒளிர்வித்து,  
மூஉடல் அணைத்த மும் முகத்து ஓர் முகத்து  
எண் கடிப்பு விசித்த கல்லலகு எறிய,  
இருட் குறள் ஊன்றி, எம் அருட்களி ஆற்றி,  
உருள் வாய்க் கொக்கரை உம்பர் நாட்டு ஒலிக்க,
25
கரம், கால், காட்டி, தலையம் இயக்கி,  
இதழ் அவிழ் தாமரை எனும் தகுணிச்சம்  
துவைப்ப, நீள் கரத்துக் கவைகள் தோற்றி,  
கரிக் கால் அன்ன மொந்தை கலித்து இரங்க,  
துடி எறிந்து இசைப்ப, துகளம் பரப்பி,
30
வள்ளம் பிணைத்த செங் கரடிகை மலக்க,  
எரியகல் ஏந்தி, வெம் புயங்கம் மிசை ஆக்கி,  
எரி தளிர்த்தன்ன வேணியில் குழவிப்  
பசும் பிறை அமுதொடு நிரம்பியதென்ன  
மதுக் குளிர் மத்தமும் மிலைத்து, ஒரு மறு பிறை
35
மார்பமும் இருத்தியதென்னக் கூன் புறத்து  
ஏனக்கோடு வெண் பொடிப் புறத்து ஒளிர,  
பொலன் மிளிர் மன்றப் பொதுவகம் நாடித்  
தனிக்கொடி காண, எவ்விடத்து உயிர் தழைப்ப,  
ஆடிய பெருமான் அமர்ந்து நிறை கூடல்
40
கனவிலும் வினவாதவரினும் நீங்கி,  
சூளும் வாய்மையும் தோற்றி,)  
நீளவும் பொய்த்தற்கு அவர் மனம் கரியே!  
உரை
   
86. ஐயம் உற்று ஓதல்
 
   
பாசடைக் கருங் கழி படர் மணல் உலகமும்  
எழு மலை பொடித்தவர்க்கு இசைத்தல் வேண்டி  
வரை உலகு அனைத்தும் வருவது போல,  
திரை நிரை திரைத்துக் கரை கரைக் கொல்லும்  
வையை நீர் விழவு புகுந்தனம் என ஒரு
5
பொய்யினள் அன்றி மெய்யினை நீயும்;  
பொலம்பூண் பெயர்ந்து உறை பூணை; அருள்தரும்  
மலர்ச்சி நீங்கிக் கொடுங்கோல் வேந்து எனச்  
சேக்கொள் கண்ணை; செம்மொழிப் பெயர்தந்து  
ஒன்றுடன் நில்லா மொழியை; மதுத்த
10
முதிரா நாள் செய் முண்டகம் மலர்ந்து  
கவிழ்ந்த முகத்தை; எம் கண் மனம் தோன்ற  
அரும்பிய நகையை அன்றே? நின் கெழு  
என்கண் கண்ட இவ் இடை, என் உளம்  
மன்னி நின்று அடங்காக் குடுமிஅம் பெருந்தழல்
15
பசுங் கடல் வளைந்து பருகக் கொதித்த  
தோற்றமும் கடந்தது என்றால், (ஆற்றல் செய்  
விண்ணகம் புடைத்து, நெடு வரை கரக்கும்  
கொடுஞ் சூர்க் கொன்ற கூர் இலை நெடு வேல்  
குன்றக் குறவர் கொம்பினுக்கு இனியோன்,
20
குருகு ஒலி ஓவாப் பனி மலர் வாவி  
வயிறு வாய்த்த குழவிஅம் கிழவோன்,  
வாழ் பரங்குன்று எனும், மணி அணி பூண்ட  
நான்மறை புகழும் கூடல் எம்பெருமான்  
வான்முதல் ஈன்ற மலைகள்தன்னொடும்,
25
முழுது உணர் ஞானம், எல்லாம் உடைமை,  
முழுது அனுக்கிரகம், கெழு பரம், அநாதி,  
பாசம் இலாமை, மாசு அறு நிட்களம்,  
அவிகாரக் குறி, ஆகிய தன் குணம்  
எட்டும் தரித்து; விட்டு, அறு குற்றமும்;
30
அருச்சனை, வணக்கம், பர உயிர்க்கு அன்பு அகம்,  
பேர் அருள் திரு நூல், பெருந் துறவு, எங்கும்  
நிறை பொருள் அழுந்தல், அருளினர்க் கூட்டம்,  
இருள் பவம் நடுங்கல், எனும் குணம் எட்டும்,  
தமக்கும் படைத்த விதிப் பேற்று அடியவர்
35
நிலை அருள் கற்பு என,) நெடுங் கற்பு உடையோள்  
முன் உறின், அவள் மனம் ஆங்கே  
நன்னரில் கொண்டு குளிரும் பெறுமே?  
உரை
   
87. தலைவனோடு ஊடல்
 
   
மாயமும் இன்பும் மருட்சியும் தெருட்சியும்  
நகைத்தொகை கூட்டிக் கவைத்து எழு சொல்லும்,  
அமுதமும் கடுவும் விழியில் வைத்து அளிக்கும்  
இருமனப் பொய் உளத்து ஒரு மகள்தன்னை  
கரியோன் கடுப்பத் துகில் கவர்ந்து, ஒளிர்அலர்
5
விதியினும் பன்மை செய்முகன் படைத்து, அளவாச்  
சோதியின் படைக்கண் செல உய்த்து, அரும்புசெய்  
முண்டக முலையில் சாந்து அழித்து, அமைத் தோள்  
எழுதிய கழைக் கரும்பு எறிந்து, நூல் வளர்த்த  
கோதை வகை பரிந்து, மணிக்கலன் கொண்டு,
10
கழைத் தோள் நெகிழத் தழை உடல் குழையத்  
திரையினைத் தள்ளி, மலர்த்துகில் கண் புதைத்து,  
ஒள் நிற வேங்கையின் தாதும் பொன்னும்  
சுண்ணம்-அவை கலந்து திமிர்ந்து உடல் தூற்றி,  
வண்டொடு மகிழ்ந்து அவிழ் தோட்டலர் சூட்டி,
15
இறால் புணர் புதுத் தேன் ஈத்து, உடன் புணரும்  
அவ்வயின், மறித்தும் அன்னவள்தன்னுடன்  
கெழுமிய விழவுள், புகுமதி நீயே--  
(கவை நாக் கட்செவி அணந்து இரை துய்த்த  
பாசுடற் பகுவாய்ப் பீழைஅம் தவளையும்,
20
பேழ்வாய்த் தழல்விழித் தரக்கு அடித்து அவிந்த  
நிலம் படர் தோகைக் குலம் கொள் சேதாவும்,  
அவ்வுழி மாத்திரை அரை எழு காலை,  
திரு நுதற்கண்ணும் மட மகள் பக்கமும்  
எரி மழு நவ்வியும், பெறும் அருள் திரு உருவு
25
எடுத்து, உடன் அந்தக் கடுக் கொலை அரவினை,  
தீவாய்ப் புலியினை, திருந்தலர் நகைப்ப  
எடுத்து அணிபூண, உரித்து உடை உடுப்ப,  
முனிவரும் தேவரும் கரமலர் முகிழ்ப்ப,  
தருவன அன்றி--மலரவன்-அவன் தொழில்,
30
நாரணன் ஆங்கு-அவன் கூருடைக் காவல்,  
சேரத் துடைக்கும் பேர் அருள் நாளினும்,  
முத் தொழில் தனது முதல் தொழில் ஆக்கி,  
ஒரு தாள் தாரைகொள் முக் கவைச் சுடர் வேல்-  
தலை இருந்து, அருங்கதி முழுது நின்று அளிக்கும்
35
திரு நகர்க் காசிப் பதியகத்து, என்றும்  
வெளியுறத் தோன்றிய இருள் மணி மிடற்றோன்)  
நேமியங்குன்று அகழ் நெடு வேற் காளையன்-  
தன் பரங்குன்றம் தமர் பெறு கூடற்கு  
இறையோன் திருவடி நிறையுடன் வணங்கும்
40
பெரும் புனல் ஊர! எம் இல்  
அரும் புனல் வையைஅம் புது நீர் அன்றே.
உரை
   
88. உடன்பட உரைத்தல்
 
   
வேலிஅம் குறுஞ் சூல் விளைகாய்ப் பஞ்சினம்  
பெரு வெள்ளிடையில் சிறுகால் பட்டென,  
நிறை நாண் வேலி நீங்கி, தமியே  
ஓர் உழி நில்லாது, அலமரல் கொள்ளும் என்  
அருந் துணை நெஞ்சிற்கு உறும் பயன் கேண்மதி:
5
மண்ணுளர் வணங்கும் தன்னுடைத் தகைமையும்,  
இருள் அறு புலனும், மெய்ப்பொருள் அறி கல்வியும்,  
அமரர் பெற்று உண்ணும் அமுது உருக் கொண்டு  
குறுஞ் சொல் குதட்டிய மழலை மென் கிளவியில்  
விதலை உள் விளைக்கும் தளர்நடைச் சிறுவனும்,
10
நின் நலம் புகழ்ந்து உணும் நீதியும் தோற்றமும்  
துவருறத் தீர்ந்த நம் கவர் மனத்து ஊரன்,  
'பொம்மல்அம் கதிர் முலை புணர்வுறும்கொல்?' எனச்  
சென்றுசென்று இரங்கலை; அன்றியும், தவிர்மோ--  
(நெட்டுகிர்க் கருங் கால் தோல்முலைப் பெரும் பேய்
15
அமர் பெற்று ஒன்னலர் அறிவுறப் படர,  
பேழ்வாய் இடாகினி கால் தொழுது ஏத்திக்  
கையடை கொடுத்த வெள் நிண வாய்க் குழவி,  
ஈமப் பெரு விளக்கு எடுப்ப, மற்று-அதன்  
சுடு பொடிக் காப்பு உடல் துளங்க, சுரிகுரல்
20
ஆந்தையும் கூகையும் அணி ஓலுறுத்த,  
ஓரி பாட்டு எடுப்ப, உவணமும் கொடியும்  
செஞ் செவிச் சேவல் கவர் வாய்க் கழுகும்  
இட்ட செய்பந்தர் இடைஇடை கால் என,  
பட்டு உலர் கள்ளிஅம்பால், துயில் கொள்ளும்
25
சுள்ளிஅம் கானிடை, சுரர் தொழுது ஏத்த--  
மரகதத் துழாயும், அந் நிறக் கிளியும்,  
தோகையும், சூலமும்; தோளில், முன்கையில்,  
மருங்கில், கரத்தில், வாடாது இருத்தி,  
போர் வலி அவுணர் புகப் பொருது உடற்றிய
30
முக் கண், பிறை எயிற்று, எண் தோட் செல்வி,  
கண்டு உளம் களிப்ப--கனைகழல் தாமரை  
வானக-வாவியூடு உற மலர,  
ஒரு தாள் எழு புவி உருவ, திண் தோள்  
பத்துத் திசையுள் எட்டு அவை உடைப்ப--
35
ஒரு நடம் குலவிய திருவடி உரவோன்)  
கூடல்அம் பதியகம் போற்றி  
நீட நின்று எண்ணார் உளம் என நீயே.
உரை
   
89. பாணனொடு வெகுளுதல்
 
   
உளம் நகைத்து உட்க ஊக்கும் ஓர் விருந்தினை,  
குவளை வடி பூத்த கண் தவள வாள் நகைக்  
குறுந் தொடி மடந்தை நம் தோழியும் கேண்மோ!  
கவிர் அலர் பூத்த செஞ் செம்மை வில் குடுமி,  
மஞ்சு அடை கிளைத்த வரிக் குறு முள்-தாள்
5
கூர்அரிவாளின், தோகைஅம் சேவற்  
கொடியோன் குன்றம் புடைவளர் கூடல்,  
கணிச்சி அம் கைத்தலத்து அருட் பெருங் காரணன்,  
உலகு உயிர் மகவுடைப் பசுங் கொடிக்கு ஒருபால்  
பகுத்து, உயிர்க்கு இன்பம் தொகுத்த மெய்த் துறவினன்,
10
முளரி நீர்ப் புகுத்திய பதமலர்த் தாள்-துணை  
மணி முடி சுமந்த நம் வயல் அணி ஊரர் பின்,  
வளர் மறித் தகர் எனத் திரிதரும் பாண்மகன்  
எனக் குறித்து அறிகிலம் யாமே: எமது  
மணி ஒளிர் முன்றில் ஒரு புடை நிலை நின்று,
15
அன்ன ஊரர் புல்லமும், விழுக் குடிக்கு  
அடாஅக் கிளவியும், படாக் கரும் புகழும்,  
எங்கையர் புலவியில் இகழ்ச்சியும், நம்பால்  
தனது புன் புகழ் மொழி நீளத் தந்தும்,  
ஒன்று பத்து ஆயிரம் நன்று பெறப் புனைந்து
20
கட்டிய பொய் பாப் புனைந்து நிற்கு உறுத்தின்--  
பேர் எழிற் சகரர் ஏழ் எனப் பறித்த  
முரிதிரை வடிக்கும் பரிதிஅம் தோழம்  
காட்டையுள் இம்பரும் காணத்  
தோட்டி நின்று அளக்கும் தொன்மை-அது பெறுமே.
25
உரை
   
90. பாணன் புலந்து உரைத்தல்
 
   
இலவு அலர் தூற்றி, அனிச்சம் குழைத்து,  
தாமரை குவித்த காமர் சேவடித்  
திருவினள் ஒரு நகை அரிதினின் கேண்மோ:  
எல்லாம் தோற்ற இருந்தன தோற்றமும்,  
தன்னுள் தோன்றித் தான் அதில் தோன்றாத்
5
தன்னிடை நிறையும் ஒரு தனிக் கோலத்து,  
ஒரு வடிவு ஆகிய பழ மறை வேதியன்;  
(நான்மறைத் தாபதர் முத் தழற்கனல் புக்கு  
அரக்கர் துய்த்து உடற்றும் அதுவே மான,  
பாசடை மறைத்து எழு முளரி அம் கயத்துள்
10
காரான் இனங்கள் சேடு எறிந்து உழக்கும்  
கூடற்கு இறையவன்;) காலற் காய்ந்தோன்;  
திரு நடம் குறித்த நம் பொரு புனல் ஊரனை,  
எங்கையர் குழுமி, "எமக்கும் தங்கையர்ப்  
புணர்த்தினன் பாண் தொழில் புல்லன்" என்று, இவனை,
15
கோலின், கரத்தின், தோலின், புடைப்ப--  
கிளை முள் செறித்த வேலிஅம் படப்பைப்  
படர் காய்க்கு அணைந்த புன் கூழைஅம் குறு நரி,  
உடையோர் திமிர்ப்ப, வரும் உயிர்ப்பு ஒடுக்கி  
உயிர் பிரிவுற்றமை காட்டி, அவர் நீங்க
20
ஓட்டம் கொண்டன கடுக்கும்--  
நாட்டவர் தடைய, மற்று, உதிர்த்து நடந்ததுவே!  
உரை