பக்கம் எண் :

194

ஸ்ரீராமர் சடாயுவின்மேல் விழுந்து இரங்கல்

விருத்தம்-24

இவர் இப்படியோ சனைபண்ணி இருயோசனை தூரம் போனார்
     எதிரேவில் ஒன்றதுகண்டார் அற்றுக்கிடந்த தூணிகண்டார்
கவசம்கிடந்த தொன்றுகண்டார் கண்டார்சூலம் கொடிகண்டார்
     கடுந்தேரோடு சாரதிமுடியை கண்டார் இந்தப்படிதோற்ற
அவசம் பிறக்கராவணனை அடித்துத்துறத்தும் இடங்கண்டார்
     அவனாயுதங்கள் ஒடிந்ததெல்லாம் அங்கேகண்டார் பிறவற்றின்
விவரங்கண்டார் ராமன்வந்து வீழ்ந்த சடாயுகிடைகண்டான்
வெள்ளிமலைமேல் கருமலைபோல் விரைந்தான் விழுந்து கரைந்தானே

தரு-14

புன்னாகவராளி ராகம்                          ஆதிதாளம்

பல்லவி

     இந்தவிதி காணவோ வந்தேன்-சடாயு அய்யா
     இதுக்கோ நான் பிள்ளை பிறந்தேன்              (இந்த)

அநுபல்லவி

தந்தை தகப்பனைக் கொல்லச் சமைந்தேன் அதென்ன சொல்ல
இந்தநாள் உனையும்நல்ல எமன்போலே கொன்றேன் அல்லோ(இந்த) 

சரணங்கள்

1. வண்ணமான் சீதையை நீக்கினேன்-நானும் ஒருசே
     வகன்போல வில்லும் தூக்கினேன்-ஐயோ இப்போதென்
  கண்முன்னே உன் னையும் போக்கினேன்-மரமீதேறி
     கைவிட்டோன் போல்என்னை ஆக்கினேன்-நான் செய்வேன்
  எண்ணின எண்ணமெல்லாம்போய் இளக்காரமாய்த் தளர்ந்தேன்
  பெண்ணுமல்ல ஆணுமல்ல பெருமரம்போல் வளர்ந்தேன் (இந்த)

2. வையகம் தன்னையும்          விடுத்தேன்-வனத்தில் வந்து
     மலைபோலே உன்னை அடுத்தேன்-தம்பி சொன்னதை
  ஐயையோ கேளாமல்      தடுத்தேன்-என்புத்திதன்னை
     அநியாயத்திலே       மடுத்தேன்-கபடஞ்செய்த
 பொய்யரக்கனைக் கொல்லாமல் புறம்போய் அல்லோ கெடுத்தேன்
 கையில் ஆகாதவன்போல் கண்டோர் பழிக்க உடம்பெடுத்தேன்(இந்த)