முற்றட் செய்த குழலையுடைய மடவீர், நும்மிடத்துக் குற்றேவல் செய்து தொழுது சஞ்சரிக்கும் ஆயக் கூட்டத்தோடு விளையாடிச் சுனைகுடையாது எழுதிய சித்திரப் பாவைபோல, நீர் நின்றவாறு யாது காரணம்? என்னைக் காக்கவோ? சொல்லும் இப்போதே என்றவாறு.
`வழுதியர் நாமம் வளர்க்கின்ற வாணன்` என்பது, பாண்டியனுக்கு அமைச்சனாதலால் என்று கொள்க. வழுதி யென்னாது வழுதியர் எனப் பன்மையாற் கூறியது என்னையெனின் வழுதி குலத்து முன்னுள்ளோர் படைத்த புகழும், இப்பாண்டியன் படைத்த புகழும் எல்லாம் வளர்ப்பவனாதலின் பன்மையாற் கூறப்பட்டது.
நாமம் - புகழ். தென் - அழகு; தெற்குத் திசையிலுள்ள மாறையென்றுமாம். கொழுதுதல் - கோதுதல். இயல் - இலக்கணம். ஆர் - நிறைய; ஆர என்னுஞ் சொல் விகாரத்தால் ஆர் என நின்றது இயலுதல் - சஞ்சரித்தல். தொகுதி - கூட்டம், குடைதல் - குளித்தல். இன்னே - இப்பொழுதே, `என்னைக்காக்கவோ` என்னுஞ் சொல் வருவித்து உரைக்க: இச்சொல் உரையாவிடின் முன்னிலையாக்கற் பொருள் தோன்றாமையுணர்க. இலக்கணமெல்லாம முற்றச்செய்த குழல என்றது, திருமுருகாற்றுப்படையில்,
1`துவர முடித்த துகளறு முச்சி`
என்பதற்கு, `முற்ற முடித்த வுச்சி` எனப் பொருள் கொண்டவாறு உணர்க. (7)
மெய்தொட்டுப் பயிறல்:
மெய்தொட்டுப் பயிறல் என்பது, தலைவன் தலைவி மெய்யினைத் தீண்டி நெருங்குதல்.
தீண்டுமாறு என்னை, மெய்யைத் தொடக் கொடுக்கின் நாணிலளாம்; நாணுடையள் எனின் தொட்டது இன்றாம். மற்றென்னையெனின், நாணும் உடையள், தொட்டதும் உண்டு எனல் வேண்டும். எவ்வாறு எனின் புனல் ஓடும் வழிப் புல் சாய்ந்து புறங்கிடப்பதுபோல, வேட்கை மீதூரப்பட்டு நாணம் ஒருபாற் சாய்ந்து கிடப்ப நின்றாளென்க. அக்காலத்தில் தலைவன் தீண்டற்கஞ்சி நின்று, குழலில் வண்டை யோட்டுவதுபோலத் தொட்டான் என்க. அங்ஙனம்தீண்டிற் பயனெ்னையெனின், இவனுக்கு ஊற்றின்பமும், தலைவி நாணைத் தன்வசப்படுத்தலும் பயனென்றுணர்க. பயிறல் என்பதறகுப் பழகுதல் என்றுரைப்பாரும், உளர். நெருங்கி நிற்றலால் பழகுதலுமாம்.