|
பெருநயப் புரைத்தல்: |
|
பெருநயப் புரைத்தல் என்பது, மீண்டும் இவன் வருவன் கொல்லோ! வாரான்கொல்லோ! என்றெண்ணி முகம் வேறுபட்டளாக, அவ் வேறுபாட்டைத் தலைவன் குறிப்பான் உணர்ந்து, தனது மிகுந்த காதலை உரைத்தல். |
நாவி - மான்மதம். தோய்குழல்: ஆகுபெயர்; தாழ்குழல் என்பது போல அன்மொழித்தொகை யாகாதோ எனின், ஆகாது. என்னை, தாழ்குழல் என்பது வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. தோய்குழல் அவ்வண்ணமாகாது. மற்றுமொரு சொல்லை நோக்கி நிற்றலான் ஆகுபெயர் ஆயிற்று. காவி - நீலப்போது. சேல் - கயல். இனியார் - ஈண்டுத்தோழிமார்.
|
| மன்னா உலகத்து மன்னிய சீர்த்தஞ்சை வாணன்வெற்பில் என்னாவி யன்ன இவளிடை மேலிணை கொண்டெழுந்த பொன்னா ணணிகொங்கை போலவண் டீருங்கள் பொய்கையுண்டோ நன்னாள் அரும்பொரு தாளிரண் டீனு நளினங்களே.
|
(இ-ள்.) நிலையில்லாத உலகத்தினிடத்து நிலைபெற்ற கீர்த்தியையுடைய தஞ்சைவாணனது வெற்பிடத்து வண்டுகாள், என் ஆவியையொத்த இவளிடைமேல் இரண்டு என்னும் கண்ணைக் கொண்டெழுந்த பொன்னாண் என்னும் பூணை அணிந்த கொங்கைபோல், நல்லநாட் கொண்ட அரும்புகள் ஒரு தாள் இரண்டினுந் தாமரைகளை உங்கள் பொய்கைக் கண் கண்டதுண்டோ என்றவாறு.
|
வண்டுகாள், நீர் எவ்விடத்து வாவிகளினுஞ் சென்று எல்லாப் பூக்களையுங் கண்டறிதிரன்றே? அவ்வாவிகளில் ஒரு தாள் இரண்டு அரும்பு ஈனுந் தாமரைகளைக் கண்டதுண்டேல் சொல்லுவீராக என்று கூறியது, வயிற்று ரோமரேகை ஒரு தாளாகவும், முலையிரண்டும் அத்தாளிலே பிறந்த அரும்பாகவும், தன் காதலாற் றோன்றியதென்று தன்னயப்பு உரைத்த வாறுணர்க அன்றியும், `என்னாவி யன்ன விவள்` என்பதனான், இவள் நீங்கும்போதில் உயிர் நீங்கும் உடம்பாகுவேன் என்பது தோன்றலானும், தன்னயப்பு உணர்த்தியவாறு உணர்க.
|
சீர் - கீர்த்தி. பொய்கையுண்டோ என்புழி ஏழனுருபு தொக்கு நின்றது `வெற்பகத்து வண்டீர்` எனக் கூட்டுக. இக்கிளவிக்கு வண்டு முன்னிலையாகப் பாடவேண்டு மென்பது. |
(21) |
தெய்வத்திறம் பேசல்: |
தெய்வத்திறம் பேசல் என்பது, இங்ஙனம் கூறியும் தெளிந்திலளால் என ஊழ்வலியினது திறத்தைக் கூறல்.
|
| மன்னிய பார்புகழ் வாணன்தென் மாறையின் மாந்தளிர்போல் மின்னிய மாமை விளர்ப்பதென் னேவிதி கூட்டநம்மில் பின்னிய காதல் பிரிப்பவர் யாரினிப் பேரருவி இன்னிய மாக இளமயி லாடும் இரும் பொழிற்கே. |