பக்கம் எண் :

தஞ்சைவாணன் கோவை
54

 
     (இ-ள்.)  மேற்சென்று   பகையை  வென்ற  திண்ணிய   சேனையையுடைய
வாணனது  வளவிய  தஞ்சையைச் சூழ்ந்து வந்து 1நன்றே தரப்பட்ட  வையைநாடு போன்றவளே,   யான்  ஒரு  சொல்   சொல்லுகின்றேன்,   அது   கேட்பாயாக;
நம்மிருவர்க்கும் அரியவுயிர் ஒன்றாயதுபோல என் சொல்லும் ஒன்றே;  யாதெனின்,
உவ்விடத்துயர்ந்த    சோலையினுள்   ஒளித்து  நின்று  வருவேன்,  இவ்விடத்து
சிறிதுபோது விளையாடுக என்றவாறு,

`சென்றே   பகைவென்ற`  என்றது, வஞ்சித்  திணைப்பொருள்: அது  மேற்சென்று பகைபொருதல்.

  2`வெட்சி நிரைகவர்தல் மீட்டல் கரந்தையாம்
வட்கார்மேற் செல்வது வஞ்சியாம் - உட்கார்
எதிரூன்றல் காஞ்சி யெயில்காத்தல் நொச்சி
அதுவளைத்த லாகு முழிஞை`

என்னும் வெண்பாவானும்,

  3`வஞ்சி தானே முல்லையது புறனே`
4`எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன்
அஞ்சுகத் தலைச்சென் றடல்குறித் தன்றே`

என்னுஞ்  சூதிரங்களானும்,  பகைவேந்தனை  வேந்தன்  மேற்சென்று  பொருவது
வஞ்சித்திணை.  மேற்சேறல்  எனினும்,  தலைச்சேறல்  எனினும்  ஒக்குமாதலான்,
`சென்றே பகைவென்ற திண்படை வாணன்` என்றார்.

நன்று - நன்மை.  ஆருயிர் - அரிய  வுயிர்.  ஊங்கு : சுட்டு  நீண்டது.   `சிறிது`
என்றது  காலத்தின்மேல்  நின்றது.  காலத்திற்  சிறிது கணமாதலின்  கணப்போது
விளையாடுக  என்றவாறாயிற்று. ஆயின், இங்ஙனம் பிரியின், இவன் அன்பிலனாம்,
தலைவி  யாற்றாளாம்; மற்றென்னை  பிரிந்தவாறு  எனின்,  பிரியாவிடின்   களவு
பிறர்க்குப்     புலனாம்;  புலனாகவே,    இவள்   பெரு      நாணினளாதலால்
இறந்துபடுமாதலின்,  பிரியவேண்டுமென்று கருதிப் பிரிந்தான் என்பது.  தலைமகள் பிரிவுக்கு இயைந்து ஆற்றுமோவெனின்.ஆற்றும் :எங்ஙனமெனின், ஆற்றாமையான்
இறந்துபட்டுழி எம்பெருமானும்  இறந்துபடும்  என்று கருதிப் பிரிவினை  ஆற்றல் வேண்டுமென்று ஆற்றினளாம்.

(24)    

1. (பாடம்.) நன்மை. 2. சேந். திவா. 12 ஆம் தொகுதி.
3. தொல். பொருள் புறத் - 6. 4. தொல். பொருள். புறத். 7.