கலிங்கத்துப்பரணி (மூலமும் விளக்கக் குறிப்புரையும்) 1. கடவுள் வாழ்த்து [கலிங்கப் போரைப் பாடவந்த ஆசிரியர்சயங்கொண்டார், முதலாவதாகக் கலிங்கப்போர்த் தலைவனான குலோத்துங்கன் நெடிது நின்று வாழவேண்டிக் கடவுளரைத் துதிக்கின்றார். சிவன், திருமால், நான்முகன், ஞாயிறு, யானை முகன், அறுமுகன், நாமகள், உமையவள், அன்னைமார எழுவர் ஆகிய கடவுளரைத் துதிப்பவர், அவர்களோடு இயைபுறுத்திக் குலோத்துங்கனையும் ஒப்ப உரைக்கும் திறம் பெரிதும் நயம் பொருந்த அமைந்துள்ளது. சிவன், உலகில் வாழ்க்கை முறைமையைக் காட்டவேண்டி மலைகளைப் புணரக், குலோத்துங்கன் அருமறையின் நெறிகாட்டவேண்டி மண்மகளைப் புணர்ந்தான் என்றும், திருமால் உலக முழுதும் வயிற்றுள் அடக்கக் குலோத்துங்கன், வெண்கொற்றக்குடையால் நில முழுதும் அடக்கினான் என்றும், நான்முகன் நால்யுகம் முதலியவற்றைப் படைக்கக், குலோத்துங்கன் நானிலம் முதலியவற்றைக் காத்தான் என்றும், கதிரவன் ஓராழித் தேர் நடத்திச் செல்லக், குலோத்துங்கன் உலகனைத்தும் ஓராழியே நடைபெறச் செய்தான் என்றும், யானைமுகன் யோகியர் உள்ளத்துக் கட்டுண்டு கிடக்கக், குலோத்துங்கன் புகழால் திசை யானைகளாகிய வெற்றித் தூண்களில் நிலைபெற்று நின்றான் என்றும், அறுமுகன் ஆறிரண்டு கண் படைத்திருக்கக், குலோத்துங்கன் ஈரிரண்டு கடலும் திசையும் படைத்திருந்தான் என்றும், நாமகள் வெள்ளாடை உடுக்கக் குலோத்துங்கன் மண்மகட்குப் புகழாகிய வெள்ளாடையை உடுத்தினான் என்றும், உமை,காமன் கைக்கணையின் மலர் அடையப் பெறாத திருவடியினளாகக், குலோத்துங்கன் |