பதிப்புரை

     நம் செந்தமிழ்மொழி பழங்காலத்து மொழிகளுள் ஒன்றாகப்
பண்பட்டுச் சிறந்து விளங்குவது: இதன்கண் காலத்துக்கேற்ப எழுந்த
இலக்கியச் செல்வங்கள் பல. அவைகளுள் ‘சதகம்' என்னும் வகையும் ஒன்று.
சதம் என்னும் சொல் வடசொல். அது ககரம்பெற்றுச் சதகம் என்றாயிற்று.
சதகமாவது நூறு என்னும் பொருளது. குமரேச சதகம் என்பது குமரேசர்மீது
நூறு செய்யுட்களால் ஆக்கப்பட்ட நூல் எனப் பொருள் தரும்.

     பிற்காலப் புலவர்கள் சதகவகை நூல்கள் யாத்து அதன்கண்,
மக்கட்கு மக்களாக வாழவேண்டிய உலகியல் நெறி அறம் முதலியவற்றைச்
செம்பாகமான எளிய இனிய தொடர்களைக் கொண்டமைத்து விளக்கி
வருவாராயினார்.

     அதுபோன்றே இந்நூலும் திருப்புல்வயலில் எழுந்தருளியிருக்கின்ற
குமரேசர்மீது வாழ்த்தாகப் பாடி இறுதி யடிகளில் இறைவன் பெயரை ஒரே
மகுடமாக அமைத்து மேல் அடிகளிலெல்லாம் அறனும் மறனும் பண்பும்
பழக்கவழக்க ஒழுக்க முறைகளும் பொதுள அமைத்துப் பாடப்பெற்
றிலகுறுகின்றது.

     இத்தகைய அரிய நூலுக்கு எல்லோரும் நன்கு பொருள் தெரிந்து
பயிலும்பொருட்டு திரு. புலவர் அரசு அவர்களைக் கொண்டு
நன்முறையில் உரையெழுதுவித்துச் செப்பமுற வெளியிட்டுள்ளோம்.
தமிழ்மக்கள் வாங்கிக் கற்று நற்பயன் எய்துவார்களென நம்புகின்றோம்.

                          சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.