| 
 உ 
நளவெண்பா 
மூலமும் உரையும் 
பாயிரம் 
கடவுள் வாழ்த்து 
பிள்ளையார் 
நேரிசை வெண்பா 
1. நேசரிதங் கூர நிலவலயம் தாங்குநளன் 
மாசரிதங் கூற வருந்துணையா - ஈசன் 
கரியா னைத்தான் கருதுபுகழ் பூண்ட 
கரியா னனத்தான் கழல். 
 
(இதன் பொருள்) ஈசன் - சிவபெருமானும்,
கரியான் - திருமாலும், அ(ன்)னத்தான் - நான்முகனும்,
கருது - எண்ணி வணங்குகின்ற, புகழ்பூண்ட - புகழினை ஏற்ற,
கரி ஆனனத்தான் - யானைமுகக் கடவுளின், கழல் - திருவடிகளானவை,
நேசர் - தன்பால் அன்புடையார், இதம்கூர - நன்மை
மிகுதிப்பட, நிலைவலயம் - இம் மண்ணுலகத்தை, தாங்கும்
நளன் - பாதுகாக்கின்ற நளவேந்தனது, மாசரிதம் -
பெருமைமிக்க வரலாற்றினை, கூற - பாடுதற்கு (சொல்வதற்கு),
அரும்துணைஆம் - சிறந்த துணையாக முன்னின்றருள்
புரியும். (ஆதலால் அவைகளை வணங்குவாம்) 
(கருத்து) நளன் சரிதம்கூறப்
பிள்ளையார் வடிகள் துணையாகும். 
 |