பக்கம் எண் :

11

4. நன்மைசெய்தால் நலம் பெறுவர்

தன்மமது செயல்வேண்டும்; தண்டலைநீள்
     நெறியாரே தயவு செய்வார்!
வன்மவினை செயல்வேண்டாம்; பொய்வேண்டாம்
     பிறரையொன்றும் வருத்தல் வேண்டாம்;
கன்மநெறி வரல்வேண்டாம் : வேண்டுவது
     பலர்க்கும்உப காரம் ஆகும் :
நன்மைசெய்தார் நலம்பெறுவர்! தீமைசெய்தார்
     தீமைபெற்று நலிவர் தாமே.

      (தொ-ரை.) நன்மை செய்தார் நலம் பெறுவர் - (பிறருக்கு) நலம்
புரிந்தவர் (தாமும்) நலம் அடைவர், தீமை செய்தார் தீமை பெற்று நலிவர்
- (பிறருக்குத்) தீமை  செய்தவர் (தாமும்)  தீமை  அடைந்து வருந்துவர்,
(ஆகையால்) வன்மவினை செயல்  வேண்டாம் - (உள்ளத்திலே)  வஞ்சம்
வைத்திருந்து (பிறருக்குத்) தீங்கு செய்தல் கூடாது,  பொய்  வேண்டாம் -
பொய் பேசுதல் கூடாது, பிறரை ஒன்றும் வருத்தல் வேண்டாம் - மற்றோரைத்
துன்புறுத்தல் கூடாது, கன்மநெறி வரல் வேண்டாம் - தீவினை யீட்டும்
வழியிலே நடத்தல் கூடாது, பலர்க்கும் வேண்டுவது உபகாரம் ஆகும் -
யாவருக்கும் (செய்ய) வேண்டுவது நன்றியே ஆகும். (ஆகையால்) தன்மமது
செயல் வேண்டும் - அறத்தையே புரிதல் வேண்டும், (அவ்வாறு செய்தால்)
தண்டலை நீள் நெறியாரே தடவு செய்வார் - தண்டலை நீள் நெறியில்
எழுந்தருளிய இறைவரே அருள் புரிவார்.

      (வி-ரை) ‘தினைவிதைத்தவன் தினையறுப்பான்; வினை
விதைத்தவன் வினையறுப்பான்'
என்பது பழமொழி. ‘தண்டலை நீள்நெறி'
என்பது தண்டலை என்னும் திருப்பதியின் பெயராகும். ‘வேண்டா' என்பது
‘வேண்டாம்' என மருவியது.

      பிறருக்கு நலமே செய்தல் வேண்டும் என்பது கருத்து.