பக்கம் எண் :

13

   6. கொக்கெனவே நினைத்தனையோ?

முக்கணர்தண் டலைநாட்டிற் கற்புடைமங்
     கையர்மகிமை மொழியப் போமோ!
ஒக்கும்எரி குளிரவைத்தாள் ஒருத்தி! வில்வே
     டனையெரித்தாள் ஒருத்தி! மூவர்
பக்கம்உற அமுதளித்தாள் ஒருத்திஎழு
     பரிதடுத்தாள் ஒருத்தி! பண்டு
‘கொக்கெனவே நினைத்தனையோ? கொங்கணவா!'
     என்றொருத்தி கூறி னாளே!

      (தொ-ரை.) முக்கணர் தண்டலை நாட்டிற் கற்புடை மங்கையர்
மகிமை மொழியப் போமோ - முக்கண்ணர் எழுந்தருளிய தண்டலை யென்னுந்
திருப்பதியை உடைய  நாட்டிலே  கற்புடைய  மாதரின்  பெருமை  விளம்ப
முடியுமோ?, ஒருத்தி  ஒக்கும் எரி  குளிர வைத்தாள் - ஒருத்தி  (தன்னைப்)
போன்ற நெருப்பைக் குளிரச் செய்தாள், ஒருத்தி வில்வேடனை எரித்தாள் -
ஒருத்தி வில்லையுடைய வேடனைச் சாம்பலாக்கினாள், ஒருத்தி மூவர் பக்கம்
உற  அமுது  அளித்தாள் - ஒருத்தி  முத்தேவரையும்  தன்  பக்கத்தில்
(குழந்தைகளாக) அமரச் செய்து பாலூட்டினாள், ஒருத்தி எழுபரி தடுத்தாள் -
ஒருத்தி (கதிரவனுடைய) ஏழு குதிரைகளையும் தடுத்தாள், பண்டு ஒருத்தி,
‘கொங்கணவா!  கொக்கு  எனவே நினைத்தனையோ' என்று  கூறினாள் -
முற்காலத்தில் ஒருத்தி, ‘கொங்கணவா! (என்னையும் நீ யெரித்த) கொக்கு
என்று நினைத்தாயோ?' என்று கூறினாள்.

      (வி-ரை.) அச்சம்  உண்டாக்குந்  தோற்ற  முடையோன்  என்பது
தோன்ற ‘வில் வேடன்' என்றார்.

      எரி குளிரவைத்தவள் சீதை : அநுமான்  இராமன் ஆணைப்படி
சீதையைத் தேடிச் சென்று இலங்கையிற் கண்டான். அவனை அரக்கர் பற்றிச்
சென்று அவன் வாலிலே தீயிட்டனர். இதனை அறிந்த சீதை தீக்கடவுளை
வேண்டி அநுமானைச் சுடாதிருக்குமாறு செய்தாள்.