பக்கம் எண் :

15

 7. பன்றி பல ஈன்றும் என்ன?

நன்றிதரும் பிள்ளைஒன்று பெற்றாலும்
     குலமுழுதும் நன்மை உண்டாம்;
அன்றிஅறி வில்லாத பிள்ளைஒரு
     நூறுபெற்றும் ஆவ துண்டோ?
மன்றில்நடம் புரிவாரே! தண்டலையா
     ரே! சொன்னேன்! வருடந் தோறும்
பன்றிபல ஈன்றும்என்ன? குஞ்சரம் ஒன்
     றீன்றதனாற் பயன்உண் டாமே;

      (தொ-ரை.) மன்றில்  நடம்  புரிவாரே - அம்பலத்திற்  கூத்தாடும்
பெருமானே!, தண்டலையாரே! - தண்டலையில் எழுந்தருளியவரே!, பன்றி
வருடந்தோறும்  பல  ஈன்றும் என்ன - பன்றி ஒவ்வோராண்டினும் பல
குட்டிகளை யீன்றாலும் பயன் என்ன?, குஞ்சரம்  ஒன்று  ஈன்றதனால் பயன்
உண்டாம் - யானை  ஒரு கன்றை யீன்றாலும்  மிக்க  பயன் உண்டாகும்.
(ஆகையால்), நன்றிதரும் பிள்ளை ஒன்று பெற்றாலும் குலம் முழுதும் நன்மை
உண்டாம் - நலம் தரும் ஒரு மகவைப் பெற்றாலும் மரபுக்கெல்லாம் நலம்
கிடைக்கும், அன்றி - அல்லாமல், அறிவு இல்லாத பிள்ளை ஒருநூறு பெற்றும்
ஆவது உண்டோ - அறிவு அற்ற நூறுபிள்ளைகளைப் பெற்றாலும் ஏதாவது
நன்மையுண்டோ? (இல்லை).

      (வி-ரை.)

      "பொற்பறிவில் லாதபல புத்திரப்பே றெய்தலின்ஓர்
      நற்புதல்வ னைப்பெறுதல் நன்றாமே - பொற்பிலாப்
      பன்றிபல குட்டி பயந்ததனால் ஏதுபயன்?
      ஒன்றமையா தோகரிக்கன் றோது"

என்னும் நன்னெறியோடு இதனை ஒப்பிடுக.

      அறிவே சிறப்புடையது என்பது கருத்து.