பக்கம் எண் :

16

 8. நல்லது நாயகனுக்கு

அல்லமரும் குழலாளை வரகுணபாண்
     டியராசர் அன்பால் ஈந்தார்!
கல்லைதனில் மென்றுமிழ்ந்த ஊன்அமுதைக்
     கண்ணப்பர் கனிவால் ஈந்தார்!
சொல்லியதண் டலையார்க்குக் கீரையும்மா
     வடுவும்ஒரு தொண்டர் ஈந்தார்!
நல்லதுகண் டாற்பெரியோர் நாயகனுக்
     கென்றதனை நல்கு வாரே.

      (தொ-ரை.) அல்அமரும்  குழலாளை  வரகுண  பாண்டிய  ராசர்
அன்பால்  ஈந்தார் - இருள்போலும்  கரிய  நிறம்  பொருந்திய  கூந்தலை
யுடையவளை வரகுண பாண்டிய மன்னர் அன்புடன் அளித்தார், கல்லைதனில்
மென்று  உமிழ்ந்த  ஊன்  அமுதைக்  கண்ணப்பர்  கனிவால்  ஈந்தார் -
தேக்கிலைக்கலத்திலே  மென்று  உமிழ்ந்த  இறைச்சியாகிய  உணவைக்
கண்ணப்ப நாயனார் அன்புடன் காளத்தி யிறைவருக்குக் கொடுத்தார்,
சொல்லிய தண்டலையார்க்குக் கீரையும் மாவடுவும் ஒரு தொண்டர் ஈந்தார் -
புகழ்பெறுகிற தண்டலையாருக்குச்  செங்கீரையும்  மாவடுவும்  ஓரடியார்
படைத்தார், பெரியோர்  நல்லது கண்டால்  அதனை  நாயகனுக்கு  என்று
நல்குவார் - சான்றோர்கள்  நல்ல  பொருளைப்  பார்த்தால்  அது  நம்
இறைவனுக் காகட்டும் எனக்  கொடுப்பார்கள்.

      (வி-ரை.) வரகுணபாண்டியர் தாம்  மணந்த மனைவி அழகா
யிருந்ததனாற்  சிவபிரானுக்கென்று  படைத்தார்; அந்த  அம்மையார்
சிவலிங்கத்தில்  மறைந்தார். ஆனால்;  இவர்  பற்றிய  கைமட்டும்
மறையாதிருந்தது வரகுணர்  வருந்திச்  சிவபிரானை  வேண்ட  அக்கையும்

மறைந்தது.
வேடரான திண்ணனாா காளத்தியப்பரைக் கண்டவுடன் தம்மை
மறந்து தாயினும் அன்புடையராய்க், கான விலங்குகளின் ஊனை நெருப்பில்
வதக்கி வாயிலிட்டுச் சுவை பார்த்துக் கல்லையில் வைத்துக் கொண்டுவந்து
ஊட்டினார்.