பக்கம் எண் :

18

 10. சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி

பொற்குடையும் பொற்றுகிலும் பொற்பணியும்
     கொடுப்பதென்ன பொருளோ? என்று
நற்கமல முகம்மலர்ந்தே உபசாரம்
     மிக்கஇன்சொல் நடத்தல் நன்றே;
கற்கரையும் மொழிபாகர் தண்டலையார்
     வளநாட்டிற் கரும்பின் வேய்ந்த
சர்க்கரையின் பந்தலிலே தேன்மாரி
     பொழிந்துவிடும் தன்மை தானே!

      (தொ-ரை.) கல் கரையும் மொழி பாகர் தண்டலையார் வளநாட்டில்
- கல்லும்  கரையும்  இனிய  மொழியையுடைய  உமையம்மையாரை
இடப்பக்கத்திலுள்ள தண்டலை  யிறைவ  நின் வளம்பொருந்திய  நாட்டிலே,
பொன் குடையும்  பொன்  துகிலும்  பொன்  பணியும்  கொடுப்பது  என்ன
பொருளோ - பொன்னாலான  குடையும்  ஆடையும்  அணிகலன்களும்
கொடுப்பது என்ன சிறப்புடையதோ?, என்று - என அறிந்து, நல் கமலம்
முகம்மலர்ந்தே உபசாரம் மிக்க இன்சொல் நடத்தல் நன்றே - அழகிய
தாமரை மலர் போலும் முகத்திலே மலர்ச்சியுடன் ஆதரித்து மிகுந்த இனிய
மொழி  கூறுதலே  நல்லது, (அவ்வாறு  செய்வது)  கரும்பின்  வேய்ந்த
சர்க்கரையின் பந்தலிலே தேன்மாரி பொழிந்துவிடும் தன்மை - கரும்பினால்
ஆக்கப்பட்ட  சர்க்கரைப்  பந்தலிலே  தேன்மழை  பொழிந்து  விடுவது
போல ஆகும்.

      (வி-ரை.) தான்,ஏ : அசை  நிலைகள். சர்க்கரைப்  பந்தலில்
தேன்மாரி பொழிந்தாற் போல'
என்பது  பழமொழி.  கமல முகம் :
கமலம் : பொருளாகு பெயர்.

      இனிய மொழியில்லாத கொடை  பயனளிக்காது  என்பது  கருத்து.