12.
தினையளவு பனையளவாகும்!
துப்பிட்ட ஆலம்விதை சிறிதெனினும்
பெரிதாகும் தோற்றம் போலச்
செப்பிட்ட தினையளவு செய்த நன்றி
பனையளவாய்ச் சிறந்து தோன்றும்!
கொப்பிட்ட உமைபாகர் தண்டலையார்
வளநாட்டிற் கொஞ்ச மேனும்
உப்பிட்ட பேர்கள்தமை உளவரையும்
நினைக்கும் இந்த உலகந் தானே! |
(தொ-ரை)
கொப்பு
இட்ட உமைபாகர் தண்டலையார் வளநாட்டில்
- கொப்பு எனும் காதணியை அணிந்த உமையம்மையை இடப்பாகத்திற்
கொண்ட தண்டலை யிறைவரின் வளம் பொருந்திய நாட்டில், துப்பிட்ட
ஆலம்வித்து சிறிது எனினும் பெரிது ஆகும் தோற்றம் போல - துப்பிவிட்ட
ஆலம்வித்து சிறியதாயினும் பெரிய மரம் ஆகும்
காட்சியைப் போல,
செப்பிட்ட தினை அளவு செய்த நன்றி பனை அளவாய்ச் சிறந்து தோன்றும்
- கூறப்பட்ட தினையின் அளவாகச் செய்த நன்மை (ஏற்கும் இடத்தால்)
பனையின் அளவாகச் சிறப்புடன் காணப்படும், இந்த உலகம் கொஞ்சமேனும்
உப்பிட்ட பேர்கள்தமை உளவரையும் நினைக்கும் - இந்த உலகம்
சிறிதளவாக உப்பு இட்டவரையும் உயிருள்ள வரையும் நினைத்துப்
பார்க்கும்.
(வி-ரை.)
கொப்பு - ஒரு காதணி.
‘துப்பிவிட்ட' என்பது ‘துப்பிட்ட'
என வந்தது; செய்யுள் (தொகுத்தல்) விகாரம். செப்பு :
சொல்;
(தொல்காப்பியத்தில்) விடை என்னும் பொருளில் வந்துள்ளதால்
இது
தெலுங்கன்று. உலகம் : இடவாகு பெயர்.
‘தினைத்துணை
நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.'
என்பது திருக்குறள்.
‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்பது
பழமொழி.
|