பக்கம் எண் :

24

      (தொ-ரை.) கொச்சையில் பிள்ளைக்கு உதவும் தண்டலையார் வள
நாட்டில் - சீகாழியில் தோன்றியருளிய திருஞானசம்பந்தருக்கு அருள்புரிந்த
தண்டலை யிறைவரின் செழிப்புமிக்க நாட்டிலே, முனம் வச்சிரப் பிள்ளைக்கு
மாதவனே  புத்தி  சொன்னான் - முற்காலத்தில்  வச்சிரப்படை யேந்திய
இந்திரனுக்குப் பெருந்தவமுடைய துருவாசனே அறிவு புகட்டினான், வகையும்
சொன்னான் -  நடந்துகொள்ளும்  முறையையும்  கூறினான்,
அச்சுதப்பிள்ளைக்கும் அந்த ஆண்டவரே புத்தி சொன்னார் - திருமாலுக்கும்
தண்டலையாராகிய  இறைவரே  அறிவூட்டினார், ஆதலால்- ஆகையால்,
துர்ச்சனப் பிள்ளைக்கு ஊரார் புத்தி சொல்லுவார் என்றே சொல்லுவார் - தீய
நெறியிலே செல்லும்  பிள்ளைக்கு  ஊரார் அறிவு  புகட்டுவார்  என்று
அறிவுடையோர் கூறுவார்கள்.

      (வி-ரை.) இந்திரன் பல முனிவர்களால் திருந்தியிருக்கிறான். இந்
நூலாசிரியர் சைவராகையால், இக் கதையெடுத்துக் காட்டப் பட்டது இந்திரன்
ஒருமுறை துர்வாசர் கொடுத்த  சிவ நிர்மாலியமான  மாலையை  யானை
மீதிருந்தவாறு அங்குசத்தால் ஏற்று யானையின் தலைமீது வைத்தான். அஃது
அம் மாலையை உடனே தன் துதிக்கையால் எடுத்துக் காலில் இட்டு மிதித்தது.
அதனைக் கண்ட துர்வாசர் சினந்து இந்திரன் தன் பதவியிழக்கவும்,
வெள்ளானை காட்டானையாகவும் சபித்தார். அவரே மதுரையிற் சொக்கநாதரை
வழிபட்டால் சாபம் நீங்குமென அவனுக்கு வகையுங் கூறினார். இது வச்சிரப்
பிள்ளைக்கு மாதவன் புத்தி கூறியது. திருமால் எடுத்த பத்துப் பிறப்புக்களில்
மீன், வராகம், ஆமை, நரசிங்கம், வாமனம் எனும் ஐந்தினும் அவர் கொண்ட
செருக்கைச் சிவபிரான் அடக்கினார் என்பது அச்சுதப் பிள்ளைக்கு
ஆண்டவன் புத்தி சொன்னது ஆகும்.
‘வீட்டில் அடங்காத பிள்ளை
ஊரில் அடங்கிவிடும்'
என்பது பழமொழி.

 

   17. பொறுத்தவரே அரசாள்வார்

கறுத்தவிடம் உண்டருளும் தண்டலையார்
     வளநாட்டிற் கடிய தீயோர்
குறித்துமனை யாளரையில் துகிலுரிந்தும்
     ஐவர்மனம் கோபித் தாரோ!