30.
‘தானொன்று நினைக்கத் தெய்வம் ஒன்று
நினைக்கும்'
மானொன்று வடிவெடுத்து மாரீசன்
போய்மடிந்தான்! மானே யென்று
தேனொன்று மொழிபேசிச் சீதைதனைச்
சிறையிருக்கத் திருடிச் சென்றோன்
வானொன்றும் அரசிழந்தான்! தண்டலையார்
திருவுளத்தின் மகிமை காணீர்!
தானொன்று நினைக்கையிலே தெய்வம்ஒன்று
நினைப்பதுவும் சகசந் தானே. |
(தொ-ரை.)
தண்டலையார்
திருவுளத்தின் மகிமை காணீர் - தண்டலை
யிறைவருடைய திருவுளப் பெருமையைப் பாருங்கள்!, மான் ஒன்று வடிவு
எடுத்துப்போய் மாரீசன் மடிந்தான் - மானைப்போல் ஒன்றிய வடிவை
யெடுத்துச் சென்று (இராமனை ஏமாற்றச் சென்ற) மாரீசன் இறந்தான்,
மானே
என்று தேன் ஒன்றும் மொழிபேசிச் சீதைதனைச் சிறையிருக்கத் திருடிச்
சென்றோன் - மானே எனக் கூப்பிட்டுத் தேனைப்போல இனிக்கும்
மொழிகளை மொழிந்து, சீதையைத் திருடிச் சிறைக்குக் கொண்டுசென்ற
இராவணன், வான் ஒன்றும் அரசு இழந்தான் - (நிலத்துடன்) வானையும்
சேர்த்த தன் ஆட்சியைப் பறிகொடுத்தான், (ஆகையால்) தான் ஒன்று
நினைக்கையிலே தெய்வம் ஒன்று நினைப்பதுவும் சகசந்தான் - (உலகில்
ஒருவன்) தான் ஒரு வேலையை எண்ணும்போது தெய்வம் மற்றொன்று
எண்ணுவது இயல்பே!
(வி-ரை.)
‘தானொன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைத்தது'
என்பது
பழமொழி. மேலே காட்டிய எடுத்துக் காட்டுகளைக் கொண்டு
தீவினை நினைத்தல் கூடாதென்றும், அது தெய்வத்திற்குப்
பிடித்தமானதன்றென்றும், அவ்வாறு தீவினை செய்தால் அதன் பயன் நன்றாக
இராதென்றும் தெரிகின்றனவே ஒழிய நல்ல முயற்சியையும் அதன் பயனையும்
இச் செய்யுள் குறை கூறவில்லையென்று அறிக.
|