பக்கம் எண் :

43

      (தொ-ரை.) ஆரியக்கூத்து ஆடுகினும் காரியம்மேல் கண் ஆவது அறிவு
- ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தின் மேற் கண்ணாக இருப்பது அறிவுடைமை,
(ஆகையால்)  பேர்  இசைக்கும்  சுற்றமுடன்  மைந்தரும்  மாதரும்  சூழ -
புகழ்ந்தோதும்  உறவினருடன்  மக்களும்  பெண்டிரும்  சூழ்ந்திருக்குமாறு,
பிரபஞ்சத்தே பாரியை  உற்று  இருந்தாலும் - உலகத்திலே  மனைவியுடன்
வாழ்ந்தாலும், திருநீற்றில் கழல்காய் போல் பற்று இல்லாமல் - திருநீற்றில் உள்ள
கழற்காய் (திருநீற்றில்  படாது  இருப்பது)  போல  ஆசையின்றி,  சீர் இசைக்கும்
தண்டலையார் அஞ்சு எழுத்தை நினைக்கின் முத்தி சேரலாகும் -  சிறப்புப்
பொருந்திய தண்டலையாரின் (சிவாயநம எனும்) ஐந்தெழுத்தினையும் நினைத்தால்
வீடு பெறலாகும்.

      (வி-ரை.) ‘பாரியை' எனப் பின்னர் வருவதால் முன்னர் ‘மாதரும்' என்பது
மனைவியரல்லாத  காதற் கிழத்தியரைக் குறிக்கும். ‘பாரியைபு' என்று  கூறுவது
(உலகத் தொடர்பு) பொருத்தமாக இருக்கும். ஆரியக்கூத்து : ஆரியர்களால்
ஆடப்படும் ஒரு வகைக் கூத்து; கழைக் கூத்தென்றுங் கூறுவர்.
ஆரியக்
கூத்தாடினாலும் காரியத்தின்மேற் கண்ணாயிரு'
என்பது பழமொழி. அறிவு
தானே : தான், ஏ : ஈற்றசைகள்.

 

37. மரம் வைத்தவர் தண்ணீர் வார்ப்பார்.

இரந்தனையித் தனைநாளும் பரந்தனைநான்
     என்றலைந்தாய்! இனிமே லேனும்
கரந்தைமதி சடையணியும் தண்டலைநீள்
     நெறியாரே காப்பார் என்னும்
உரந்தனைவைத் திருந்தபடி இருந்தனையேல்1
     உள்ளவெலாம் உண்டாம்! உண்மை!
மரந்தனைவைத் தவர்நாளும் வாடாமல்
     தண்ணீரும் வார்ப்பர் தாமே.


_________________________________________________________
1. ‘இருந்தவருக்கு' என்றும் பாடம்.