பக்கம் எண் :

53

பற்றுளதண் டலைவாழும் கடவுளென்றும்
     பாராமற் பயப்ப டாமல்
நெற்றிவிழி காட்டுகினும் குற்றமே
     குற்றம்என நிறுத்தி னாரே.

      (தொ-ரை.) வெற்றிபுனை மீனாட்சிசுந்தர நாயகர் அடுத்து விளம்பும்
போதில் - வெற்றியையுடைய  மீனாட்சி  சுந்தரேசர்  வந்து  கூறியபொழுது,
நக்கீரர்  வலியராகி - நக்கீரர்  மொழித்திறன் உடையவராய், பற்று  உள
தண்டலை வாழும் கடவுள் என்றும் பாராமல் பயப்படாமல் - (தமக்குப்)
பற்றாக  உள்ள  தண்டலை  இறைவரென்று  நினையாமலும், அஞ்சாமலும்,
நெற்றிவிழி காட்டுகினும் குற்றமே குற்றமென நிறுத்தினார் - நெற்றி விழியைக்
காட்டினாலும் குற்றம் குற்றமேயாகும் என நிலை நிறுத்தினார்.

      (வி-ரை.) ஏ : ஈற்றசை. ‘நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே'
என்பது பழமொழி. ‘குற்றமே குற்றம்' என்பதைக் குற்றம் குற்றமே என மாற்றிக்
கொள்க.

      தருமியென்னும் அந்தணனுடைய வறுமையைத் தீர்க்கச் சோமசுந்தரக்
கடவுள் ‘கொங்குதேர் வாழ்க்கை' என்னும் செய்யுளை யெழுதிக் கொடுத்தார்.
அதனைக் கொண்டுசென்று பாண்டியனிடம் காட்டினான் தருமி. பெண்களின்
கூந்தலுக்கு இயற்கை  மண  முண்டென்று  தான்  நினைத்த  கருத்து  அச்
செய்யுளில் இருப்பது கண்ட பாண்டியன் அதற்கென முடித்திருந்த பொன்
முடிப்பைச் சங்கத்தாரிடம் பெற்றுக்கொள்ளச் சொன்னான். சங்கத் தலைவரான
நக்கீரர்  அச்  செய்யுள்  குற்றமுடையது  என்று  திருப்பிவிட்டார். தருமி
சோமசுந்தரரிடம் முறையிட்டான். அவர் ஒரு புலவனாக வந்து வினவியபோது
‘பெண்களின் கூந்தலுக்கு இயற்கைமணம் உண்டு' என இருப்பதால் அச்
செய்யுள் குற்றமுடையது என்றார் நக்கீரர். சிவபிரான் தம் நெற்றிவிழி காட்ட,
நெற்றிவிழி காட்டினும் குற்றம் குற்றமே என வாதித்தார். பிறகு, நெற்றிவிழியின்
வெம்மையால் தாக்கப்பெற்றுப் பொற்றாமரையில் வீழ்ந்தார். புலவர்கள்
வேண்ட, அருள்கூர்ந்து நக்கீரரை வெளியேற்றி அகத்தியரால் இலக்கண
முணரச் செய்து திருத்தினார் சிவபிரான்.