தில்லைவனம் : சிதம்பரத்தின்
மற்றொரு பெயர். தில்லை மரங்கள்
நிறைந்திருந்ததால் அப் பெயர் சிதம்பரத்திற்கு வந்தது. நாளடைவில்
‘தில்லைவனம்' என்பது ‘தில்லை' ஆயிற்று.
காப்பு
- 2
வேதநெறி விளம்பியசொல்
ஆகமநூல்
விளம்பியசொல் மிகுபு ராணம்
ஏதுவினிற் காட்டியசொல் இலக்கணச்சொல்
இசைந்தபொருள் எல்லாம் நாடி,
ஆதிமுதல் உலகுதனில் விளங்குபழ
மொழிவிளக்கம் அறிந்து பாடச்
சோதிபெறும் மதவேழ முகத்தொருவன்
அகத்தெனக்குத் துணைசெய் வானே. |
(தொ-ரை.)
வேதநெறி
விளம்பிய சொல் - மறைவழி கூறிய
சொற்களையும், ஆகமநூல் விளம்பியசொல் - ஆகம நூல்கள் கூறிய
சொற்களையும், மிகுபுராணம் ஏதுவினில் காட்டிய சொல் - மிகுதியான
புராணங்கள் காரணத்துடன் விளக்கிய சொற்களையும், இசைந்த பொருள்
எல்லாம் நாடி - இவற்றிற் பொருந்திய பொருள்கள் எல்லாவற்றையும்
ஆராய்ந்து, உலகுதனில் ஆதிமுதல் விளங்கு பழமொழி விளக்கம் அறிந்து
பாட - உலகத்தில் தொன்றுதொட்டு வழங்கிவரும் பழமொழிகளுக்கு
விளக்கத்தைத் தெரிந்து பாடுவதற்கு, சோதிபெறும் மதவேழ முகத்து ஒருவன்
அகத்து எனக்குத் துணைசெய்வான் - ஒளி பொருந்திய மதயானை
முகத்தையுடைய ஒப்பற்ற முதல்வன் என் உள்ளத்திலிருந்து துணை செய்வான்.
(வி-ரை.)
வேதம் : நான்மறைகள். ஆகமம் : மறையின் உறுப்பாக
உள்ளவை. ஏது - காரணம், ஆதாரம். வேத, ஆகமம், புராணங்களிலே
கூறப்பட்ட சொற்களையும் பொருள்களையும் நாடிப் பழமொழிகளுக்கு
விளக்கம் கூறுவதாகக் குறிப்பிட்டார். ஒருவன் - ஒப்பற்றவன்.
செய்வானே
: ஏ : ஈற்றசை. புராணம் - பழைமை.
|