பக்கம் எண் :

65

இல்லை, பிச்சைச் சோற்றினுக்குப் பேச்சு இல்லை - இரந்து உண்ணும்
உணவுக்கு எந்தப் பேச்சும் இல்லை.

      (வி-ரை.) பேச்சுத்தானே : தான், ஏ : அசைநிலைகள். திருடுதல்,
பொய்சொல்லல் முதலான தொழில்கள் பிறரை வஞ்சிப்பவை ஆகையாலும்
அவற்றினும், பிச்சை யெடுத்தல் இழிவானதாகக் கருதப்படாமையாலும்,
‘பிச்சைச் சோற்றினுக்கில்லை பேச்சுத்தானே' என்றார். ஆகவே, ‘நல்லாறு
எனினும் கொளல் தீது' என்ற வள்ளுவர் வாக்குக்கும் ‘ஏற்பது இகழ்ச்சி'
என்ற ஒளவையார் கூற்றுக்கும் முரண்பட்ட தாகாது.

 

     61. குரங்கின் கையில் நறும் பூமாலை

பரங்கருணை வடிவாகும் தண்டலையார்
     வளநாட்டிற் பருவம் சேர்ந்த
சரங்குலவு காமகலை தனையறிந்த
     அதிரூபத் தைய லாரை
வரம்புறுதா ளாண்மையில்லா மட்டிகளுக்
     கேகொடுத்தால் வாய்க்கு மோதான்?
குரங்கினது கையில்நறும் பூமாலை
     தனைக்கொடுத்த கொள்கை தானே!

      (தொ-ரை.) பரங்கருணை வடிவு ஆகும் தண்டலையார் வளநாட்டில் -
உயர்வான அருள் உருவாகிய தண்டலையாரின் வளமிக்க நாட்டினில், பருவம்
சேர்ந்த  காமசரம்  குலவு  கலைதனை  அறிந்த  அதிரூபத்  தையலாரை -
(மங்கைப்) பருவம் அடைந்த இன்பக் கணை  பழகும்  கலையைத் தெரிந்த
பேரழகுடைய பெண்களை, வரம்பு உறு தாளாண்மை இல்லாமட்டிகளுக்கே
கொடுத்தால்  வாய்க்குமோ - கட்டுப்பாட்டில்  அடங்கிய  முயற்சியற்ற
மூடர்களுக்குத் துணைவியராக்கினாற் பொருத்தமாகுமோ?, குரங்கினது கையில்
நறும் பூமாலைதனைக் கொடுத்த கொள்கைதானே - (அவ்வாறு ஆக்கினால்)
குரங்கின் கையிலே மணமுள்ள மலர் மாலையை அளித்த கொள்கையைப்
போலாகும்.

      (வி-ரை.) பரம் - உயர்வு. தாளாண்மை - முயற்சி. வரம்பு என்பது
ஒழுக்கத்தினைக் குறிக்கிறது.
‘குரங்கின் கையிற்கொடுத்த பூமாலை' என்பது
பழமொழி.