பக்கம் எண் :

66

     62. அரிசியுண்டேல் வரிசையுண்டாம்!

பிரசம்உண்டு வரிபாடும் தண்டலையார்
     வளநாட்டிற் பெண்க ளோடு
சரசம்உண்டு! போகம் உண்டு! சங்கீதம்
     உண்டு! சுகம் தானே உண்டிங்
குரைசிறந்த அடிமையுண்டோ? இடுக்கணுண்டோ?1
     ஒன்றும்இல்லை! உலகுக் கெல்லாம்
அரிசியுண்டேல் வரிசைஉண்டாம்!அக்காளுண்
     டாகில்மச்சான் அன்புண் டாமே!

      (தொ-ரை.) வரிபிரசம் உண்டு பாடும் தண்டலையார் வள நாட்டில் -
வண்டுகள் தேனைப் பருகிப் பாடுகின்ற தண்டலையாரின் வளம் பொருந்திய
நாட்டிலே, பெண்களோடு - பெண்களாலே, சரசம் உண்டு - இனிய பண்பு
உண்டாகும், போகம் உண்டு - பொருள் உண்டாகும், சங்கீதம் உண்டு -
இசையின்பம் உண்டாகும், சுகம்தானே உண்டு - நலமும் கிடைக்கும், இங்கு
உரைசிறந்த அடிமை உண்டோ? - இவ் வாழ்விற் பேச்சிற் சிறந்த அடிமைத்
தன்மை உண்டோ?, இடுக்கண் உண்டோ? - துன்பம் உண்டோ?, ஒன்றும்
இல்லை - யாதும் இல்லை, உலகுக்கு எல்லாம் அரிசி உண்டேல் வரிசை
உண்டாம் - உலகத்திற்கெல்லாம் அரிசி யிருந்தாற் சிறப்பு உண்டு, அக்காள்
உண்டாகில் மச்சான் அன்பு உண்டாம் - தமக்கை யிருந்தால் (அவள் மூலம்)
மைத்துனன் அன்பு கிடைக்கும்.

      (வி-ம்.) பிரசம் - தேன். வரி - வண்டு. போகம் : அனுபவப்
பொருள்கள், இல்லாளே இல்லத்துக்கு வேண்டியவற்றை ஒழுங்குசெய்து
வைப்பவளாகையால் அவளிருந்தாற் பொருள் உண்டு என்றார். அரிசி
செல்வத்தைக் குறிக்கும்.
‘அக்காள் இருந்தால் மச்சான் உறவு உண்டு'
என்பது பழமொழி. ‘உரை சிறந்த அடிமை' என்பது வஞ்சப் புகழ்ச்சி
(புகழ்வதுபோலப் பழித்தல்)

__________________________________________________
1. ‘இடுக்கம் உண்டோ' என்றும் பாடம்.