பக்கம் எண் :

68

வாசம்மிகுந் தண்டலைநீள் நெறியாரே!
    அபிடேக மலிநீ ராட்டிப்
பூசைபண்ணும் வேளையிலே கரடியைவிட்
    டோட்டுவது போலுந் தானே.

      (தொ-ரை.) வாசம் மிகும் தண்டலைநீள் நெறியாரே - மணம் சிறந்த
தண்டலைநீள் நெறியிறைவரே!, சபையில் வந்தால் நிருபர் முன்னே நேசமுடன்
வேளை அறிந்து இங்கிதம் ஆ - அரசவையிலே சென்றால் அரசருக்கு எதிரில்
அன்பையும் காலத்தையும் அறிந்து குறிப்பாக, பேசுவதே உசிதம் - (தன்
வேண்டுகோளை) விண்ணப்பித்துக் கொள்வதே நலந்தரும்; அல்லால் நடுவில்
ஒருவன் குழறிப் பேசல் எல்லாம் - அவ்வாறின்றி இடையிலே ஒருவன்
தடுமாறிக் கூறுவன யாவும், அபிடேகம் மலிநீர் ஆட்டிப் பூசைபண்ணும்
வேளையிலே - திருமஞ்சனமாக நிறைந்த நீரை ஆட்டி வழிபாடு செய்யும்
நேரத்தில், கரடியை விட்டு ஓட்டுவதுபோலும் - கரடியை (அவிழ்த்து) விட்டு
ஒட்டுவது போலாகும்.

      (வி-ரை.) இங்கிதம் - குறிப்பு ‘இங்கிதம் ஆக' என்பது ‘இங்கிதம் ஆ'
எனக் கடைக் குறையாயிற்று.
‘சிவபூசை வேளையிற் கரடி வந்ததுபோல'
என்பது பழமொழி.

 

     65. தன்வினை தன்னைச் சுடும்

மண்ணுலகிற் பிறர்குடியை வஞ்சனையிற்
     கெடுப்பதற்கு மனத்தி னாலே
உன்னிடினும் உரைத்திடினும் அவன்றானே
     கெடுவன்என்ப துண்மை அன்றோ?
தென்னவன்சோ ழன்பணியும் தண்டலைநீள்
     நெறியாரே! தெரிந்து செய்யும்
தன்வினைதன் னைச்சுடவோட் டப்பம்வீட்
     டைச் சுடவும் தான்கண் டோமே.