பக்கம் எண் :

69

      (தொ-ரை.) தென்னவன் சோழன் பணியும் தண்டலைநீள் நெறியாரே
- பாண்டியனும் சோழனும் வழிபடும் தண்டலைநீள் நெறியாரே; மண்ணுலகில்
பிறர்  குடியை  வஞ்சனையிற்  கெடுப்பதற்கு - நிலவுலகிலே  மற்றவர்
குடும்பத்திற்கு  வஞ்சனையாலே  கெடுதி  செய்வதற்கு,  மனத்தினாலே
உன்னிடினும்  உரைத்திடினும்  அவன்தானே  கெடுவன்  என்பது உண்மை
அன்றோ - உள்ளத்திலே நினைத்தாலும், (வாயினாற்) கூறினாலும் அவனே
அழிவான் என்பது வாய்மையாகும்; தெரிந்து செய்யும் தன்வினை தன்னைச்சுட
- (தீமை என)  அறிந்தும்  செய்கின்ற  தன்வினை  தன்னை  எரிக்கவும்,
ஓட்டப்பம்  வீட்டைச்  சுடவும்தான்  கண்டோம் -  ஓட்டடை  வீட்டை
யெரிக்கவும் கண்டிருக்கிறோம்.

      (வி-ரை.) ஓட்டப்பம் வீட்டைச்சுடல் : பட்டினத்தார் துறவு
பூண்டபின், வெறியர்போல ஊரைச்சுற்றிக் கொண்டிருந்தாராம். அவருடைய
உடன்பிறந்தாள் அவருடைய அந் நிலையின் உயர்வை உணராதவளாய்,
தங்களைப் பிறர் பழிப்பதாக நினைத்து, இவரைக் கொன்றுவிட நினைத்தாள்.
தன் வீட்டிற்கு வந்தபோது நஞ்சு கலந்து சுட்டுவைத்திருந்த ஓட்டடையை
அவருக்குக் கொடுத்தாள். அவர் அந்த
அடையை வீட்டின்மீது எறிந்து,
‘தன்வினை தன்னைச்சுட! ஓட்டப்பம் வீட்டைச்சுட!'
என மொழிந்தார்.
உடனே வீடு எரிந்ததாம். அன்றுமுதல் இது பழமொழியாக வழங்குகிறது
என்பர். ‘கெடுவான் கேடு நினைப்பான்' என்னும் பழமொழியும் இங்குப்
பொருந்தும்.

 

     66. தாயைப் பழித்து மகள் .....

முன்பெரியோர் தொண்டுபட்டு நடந்தவழி
     தனைப்பழித்து, முரணே பேசிப்
பின்பலரை உடன்கூட்டி நூதனமா
     நடத்துவது பிழைபா டெய்தில்
துன்பறியாக் கதியருளும் தண்டலைநீள்
     நெறியாரே! தூயள் ஆகி
அன்புளதா யைப்பழித்து மகள்ஏதோ
     செயத்தொடங்கும் அறிவு தானே.