பக்கம் எண் :

70

      (தொ-ரை.) துன்பு அறியாக் கதி அருளும் தண்டலை நீள் நெறியாரே
- துன்பம் காணாத நற்கதியைக் கொடுக்கும் தண்டலைநீள் நெறியாரே, முன்
பெரியோர் தொண்டு பட்டு நடந்த வழிதனைப் பின் பழித்து முரணே பேசி -
முற்காலத்திற் பெரியோர்கள் பழைமையாக ஒழுகிய நெறியைப் பிற்காலத்தே
இகழ்ந்து மாறு கூறி, பலரை உடன் கூட்டி நூதனம் ஆ(க) நடத்துவது
பிழைபாடு எய்தில் - பலரை ஒன்றாகச் சேர்த்துக் கொண்டு புதுமையாக
ஒன்றைச் செய்வது கைகூடாவிட்டால், தூயள் ஆகி அன்பு உள தாயைப்
பழித்து - நன்னெறியுடையவளும் அன்புடையவளும் ஆன அன்னையை
இகழ்ந்து கூறி, மகள் ஏதோ செயத் தொடங்கும் அறிவு தானே - (அவள்)
மகள் தவறான நெறியிலே செல்லத் துவக்கும் அறிவு போலவே ஆகும்.

      (வி-ரை.) காலநிலைக் கேற்பப், ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல' ஆயினும் முன்பு தூயதாக இருந்த பெரியோர் நெறி இப்போதும்
தூயதாக இருந்தாற் பழைமையை விரும்பாதவர்கள் அதை யிகழ்ந்து கூறுவதும்
புதுநெறி புதுப்பிப்பதும் தகாதென்பது கருத்து. தொண்டு - பழைமை
. ‘தாயைப்
பழித்து மகள் அவிசாரி யானாளாம்'
என்பது பழமொழி.

 

     67. வெண்ணெய் இருக்க நெய்தேடல்!

தண்ணமரும் மலர்ச்சோலைத் தண்டலைநீள்
     நெறியே! நின் தன்னைப் பாடில்
எண்ணமிக இம்மையினும் மறுமையினும்
     வேண்டியதுண் டிதையோ ராமல்,
மண்ணின்மிசை நரத்துதிகள் பண்ணியலைந்
     தேதிரிபா வாணர் எல்லாம்
வெண்ணெய்தம திடத்திருக்க நெய்தேடிக்
     கொண்டலையும் வீணர் தாமே.

     (தொ-ரை.) தண் அமரும் மலர்ச்சோலைத் தண்டலைநீள் நெறியே -
குளிர்ச்சி பொருந்திய மலர்க்காவினையுடைய