பக்கம் எண் :

84

     83. ‘வழுவழுத்த வுறவதனின் ...'

இழைபொறுத்த முலைபாகர் தண்டலையார்
     வளநாட்டில் எடுத்த ராகம்
தழுதழுத்துப் பாடுவதின் மௌனமாய்
     இருப்பதுவே தக்க தாகும்!
குழைகுழைத்த கல்வியினும் கேள்வியினும்
     கல்லாமை குணமே! நாளும்
வழுவழுத்த உறவதனின் வயிரம்பற்
     றியபகையே வண்மை யாமே.

      (தொ-ரை.) இழை  பொறுத்த முலை  பாகர்  தண்டலையார்
வளநாட்டில் -  அணிதாங்கிய  முலைகளையுடைய  உமையம்மையாரை
இடப்பாகத்திற் கொண்ட  தண்டலையாரின்  வளம்பொருந்திய  நாட்டிலே,
எடுத்த ராகம் தழுதழுத்துப்  பாடுவதின்  மௌனமாய்  இருப்பதுவே  தக்கது
ஆகும் - தொடங்கிய இசையைத் தடுமாற்றத்துடன் பாடுவதைக்  காட்டினும்
பாடாமல் இருப்பதே நலந்தரும்; குழை குழைத்த கல்வியினும்  கேள்வியினும்
கல்லாமை குணமே - தெளிவற்ற  கல்வி  கேள்விகளைவிடக்  கல்லாமையே
நன்றாகும்; நாளும் வழுவழுத்த உறவதனின் வயிரம் பற்றிய பகையே வண்மை
ஆம் - எப்போதும் மனத் தெளிவற்ற நட்பைக் காட்டினும் நீங்காத செற்றம்
பொருந்திய பகையே வளமுடையதாகும்.

      (வி-ரை.) தெளிவில்லாத எச் செயலும் நலந்தராது. வயிரம் - நீங்காத
சினம்.

 

84. நெருப்பினைச் சிறிதென்று முன்றானையில் ...

அருப்பயிலும் தண்டலைவாழ் சிவனடியார்
     எக்குலத்தார் ஆனால் என்ன?
உருப்பயிலும் திருநீறும் சாதனமும்
     கண்டவுடன் உகந்து போற்றி,