பக்கம் எண் :

85

இருப்பதுவே முறைமையல்லால் ஏழையென்றும்
     சிறியரென்றும் இகழ்ந்து கூறின்
நெருப்பினையே சிறிதென்று முன்றானை
     தனின்முடிய நினைந்த வாறே.

      (தொ-ரை.) தண்டலைவாழ்  அருபயிலும்  சிவன்  அடியார் -
தண்டலையில்  எழுந்தருளிய  அருவமாகிற  சிவபிரான்  தொண்டர்கள்,
எக்குலத்தார் ஆனால்  என்ன - எந்தக்  குலத்தவரானாலும் குறையில்லை,
உரு  பயிலும்  திருநீறும்  சாதனமும்  கண்டவுடன் - வடிவிலே  விளங்கும்
திருநீற்றினையும் மற்றைச் சின்னங்களையும் பார்த்தவுடன், உகந்து போற்றி
இருப்பதுவே முறைமை அல்லால் - சிறப்பித்து வாழ்த்தி யிருப்பதே தகுதி
யன்றி, ஏழை என்றும் சிறியர் என்றும் இகழ்ந்து கூறின் - வறியவரெனவும்
உருவத்திலும் அறிவிலும் சிறியவர் எனவும் பழித்துரைத்தால், நெருப்பினையே
சிறிது என்று முன் தானை தனில் முடிய நினைந்த ஆறு - தீயின் வடிவம்
சிறியது என எண்ணி முன் தானையில் முடியநினைத்தற்குச் சமமாகும்.

      (வி-ரை.) அரு : உருவமில்லாத நிலை. சாதனம் : சிவ
வழிபாட்டுக்குரிய சின்னங்கள். உகப்பு - உயர்வு (சிறப்பு).
‘நெருப்பைச்
சிறிதென்று நினைக்கலாமா!'
என்பது பழமொழி.

 

85. ‘பெண் என்றவுடன் பேயும் இரங்கும்'

உரங்காணும் பெண்ஆசை கொடிதாகும்!
     பெண்புத்தி உதவா தாகும்!
திரங்காணும் பெண்வார்த்தை தீதாகும்!
     பெண்சென்மம் சென்மம் ஆமோ?
வரங்காணும் தண்டலைநீள் நெறியாரே!
     பெண்ணிடத்தின் மயக்கத் தாலே
இரங்காத பேருமுண்டோ? பெண்என்ற
     வுடன்பேயும் இரங்குந் தானே.