2.
வான்செய்த நன்றிக்கு வையகம் என் செய்யும்?
கூன்செய்த பிறையணியும் தண்டலையார்
கருணைசெய்து, கோடி கோடி
யான்செய்த வினையகற்றி நன்மைசெய்தால்
உபகாரம் என்னால் உண்டோ?
ஊன்செய்த உயிர்வளரத் தவம்தானம்
நடந்தேற உதவி யாக
வான்செய்த நன்றிக்கு வையகம்என்
செய்யும்? அதை மறந்திடாதே. |
(தொ-ரை.)
ஊன்செய்த உயிர்வளர
- இவ்வுடம்பை உண்டாக்கிய
உயிர் வாழவும்; தவம் தானம் நடந்து ஏற - (துறவிகளின்) தவமும்
(இல்லறத்தாரின்) கொடையும் நடைபெற்று ஓங்கவும், உதவி ஆக வான்செய்த
நன்றிக்கு - ஆதரவாக முகில் செய்த நன்மைக்கு, வையகம் என செய்யும் -
உலகம் என்ன (கைம்மாறு) செய்ய இயலும்? அதை மறந்திடாது - அந்த
நன்றியை மறவாமல் மட்டும் இருக்கும், (அவ்வாறே), கூன் செய்த பிறை
அணியும் தண்டலையார் கருணை செய்து - கூனலான பிறைமதியைச் சூடிய
தண்டலையிறைவர் அருள்புரிந்து, கோடி கோடி யான் செய்த வினை அகற்றி
- அளவின்றி யான் சேர்த்த வினைகளை நீக்கி, நன்மை செய்தால் என்னால்
உபகாரம் உண்டோ - நலம் அருளினால் (அதற்குப் பிரதியாக) என்னால்
என்ன உதவி உண்டு? (ஒன்றும் இல்லை.)
(வி-ரை.)
கோடி கோடி : அடுக்குத்
தொடர்; மிகுதியென்னும்
பொருள்பற்றி
வந்தது.
‘விசும்பின் துளிவீழின் அல்லலால்மற் றாங்கே -
பசும்புல் தலைகாண்ப தரிது' ‘தானம் தவம் இரண்டும் தங்கா வியன்
உலகம் - வானம் வழங்கா(து) எனின்' என்னுந்
திருக்குறள் களின்
கருத்தை உட்கொண்டு ‘ஊன் செய்த உயிர் வளரத் தவம் தானம்
நடந்தேற
உதவியாக வான் செய்த நன்றி' என்றார்.
‘கைம்மாறு வேண்டா கடப்பாடு;
மாரிமாட்(டு) - என் ஆற்றுங் கொல்லோ உலகு'
என்னுந்
திருக்குறளை
நினைந்து, ‘வான் செய்த நன்றிக்கு வையகம் என் செய்யும்?' என்றார்.
|