பக்கம் எண் :

9

2. வான்செய்த நன்றிக்கு வையகம் என் செய்யும்?

கூன்செய்த பிறையணியும் தண்டலையார்
     கருணைசெய்து, கோடி கோடி
யான்செய்த வினையகற்றி நன்மைசெய்தால்
     உபகாரம் என்னால் உண்டோ?
ஊன்செய்த உயிர்வளரத் தவம்தானம்
     நடந்தேற உதவி யாக
வான்செய்த நன்றிக்கு வையகம்என்
     செய்யும்? அதை மறந்திடாதே.

      (தொ-ரை.) ஊன்செய்த உயிர்வளர - இவ்வுடம்பை உண்டாக்கிய
உயிர்  வாழவும்;  தவம்  தானம்  நடந்து ஏற - (துறவிகளின்) தவமும்
(இல்லறத்தாரின்) கொடையும் நடைபெற்று ஓங்கவும், உதவி ஆக வான்செய்த
நன்றிக்கு - ஆதரவாக முகில் செய்த நன்மைக்கு, வையகம் என செய்யும் -
உலகம் என்ன (கைம்மாறு) செய்ய இயலும்? அதை  மறந்திடாது - அந்த
நன்றியை மறவாமல் மட்டும்  இருக்கும், (அவ்வாறே), கூன்  செய்த பிறை
அணியும் தண்டலையார் கருணை செய்து - கூனலான பிறைமதியைச் சூடிய
தண்டலையிறைவர் அருள்புரிந்து, கோடி கோடி யான் செய்த வினை அகற்றி
- அளவின்றி யான் சேர்த்த வினைகளை நீக்கி, நன்மை செய்தால் என்னால்
உபகாரம் உண்டோ - நலம் அருளினால் (அதற்குப் பிரதியாக) என்னால்
என்ன உதவி உண்டு? (ஒன்றும் இல்லை.)

      (வி-ரை.) கோடி கோடி : அடுக்குத்  தொடர்;  மிகுதியென்னும்
பொருள்பற்றி வந்தது. ‘விசும்பின் துளிவீழின் அல்லலால்மற் றாங்கே -
பசும்புல் தலைகாண்ப தரிது' ‘தானம் தவம் இரண்டும் தங்கா வியன்
உலகம் - வானம் வழங்கா(து) எனின்'
என்னுந் திருக்குறள்  களின்
கருத்தை உட்கொண்டு ‘ஊன் செய்த உயிர் வளரத் தவம்  தானம் நடந்தேற
உதவியாக வான் செய்த நன்றி' என்றார்.
‘கைம்மாறு வேண்டா கடப்பாடு;
மாரிமாட்(டு) - என் ஆற்றுங் கொல்லோ உலகு'
என்னுந்  திருக்குறளை
நினைந்து, ‘வான் செய்த நன்றிக்கு வையகம் என் செய்யும்?' என்றார்.