பக்கம் எண் :

97

  98. நாழி நெல்லுக்கு ஒரு புடைவை

ஆழியெல்லாம் பாலாகி அவனியெல்லாம்
     அன்னமயம் ஆனால் என்ன?
சூழவரும் இரவலர்க்குப் பசிதீர
     உண்டிருக்கும் சுகந்தான் உண்டோ!
ஏழுலகும் பணியவரும் தண்டலையா
     ரே! சொன்னேன்! எந்தநாளும்
நாழிநெல்லுக்கு ஒருபுடைவை விற்றாலும்
     நிருவாணம் நாய்க்குத் தானே.


      (தொ-ரை.)
ஏழு  உலகும்  பணியவரும்  தண்டலையாரே - ஏழுலக
மக்களும்  வணங்கத்  தேடிவரும்  தண்டலையாரே!, எந்த  நாளும் நாழி
நெல்லுக்கு  ஒரு  புடைவை  விற்றாலும்  நாய்க்கு  நிருவாணந்தான் -
எக்காலத்திலும் ஒரு படி நெல்லுக்கு ஒரு புடைவை விற்றபோதிலும் நாய்
ஆடையின்றித்தான் இருக்கவேண்டும், (அதுபோல), ஆழியெல்லாம் பாலாகி
அவனியெல்லாம்  அன்ன மயம் ஆனால் என்ன - எல்லாக்  கடல்களும்
பாற்கடல்களாய் உலகம் முற்றும் சோற்றுக் குவியலாய் ஆயினும் என்ன
பயன்?, சூழ்வரும் இரவலர்க்குப் பசிதீர உண்டிருக்கும் சுகந்தான் உண்டோ -
(உலகைச்) சுற்றியலையும் பிச்சைக்காரர்களுக்குப் பசி நீங்க உண்டு களிக்கும்
நலம் உண்டாகுமா? (உண்டாகாது)

      (வி-ரை.) ஆழமாக இருப்பது ஆழி (கடல்). உலகம் எங்கும் சோற்றுப்
பெருக்கும்  கடலெங்கும்  பாலுமாக  இருந்தாலும்  அவ்வாறு  இருப்பதைப்
பார்த்துவரும்   இரவலர்க்கு  அவர்கள்  அவ்வுலகில்  இருந்தாலும்  பசிதீர
உண்ணும் உரிமையில்லை  யென்பதனை  விளக்கச், ‘சூழவரும்  இரவலர்'
என்றார்.
‘நாழி  நெல்லுக்கு ஒரு புடைவை  விற்றாலும்   நாய்
நிருவாணந்தான்'
என்பது பழமொழியாய் இருந்திருத்தல் வேண்டும்.