பக்கம் எண் :

98

     99. அச்சியிலே போனாலும் ...

கொச்சையிலே பாலுமுண்டோ? கூத்தியர்கள்
     தம்மிடத்திற் குணந்தான் உண்டோ?
துச்சரிடத் தறிவுண்டோ? துச்சரெங்கே
     போனாலும் துரையா வாரோ?
நச்சரவத் தொடையாரே! தண்டலையா
     ரே! இந்த நாட்டல் லாமல்
அச்சியிலே போனாலும் அகப்பைஅரைக்
     காசதன்மேல் ஆர்கொள் வாரே?

      (தொ-ரை.) நச்சு அரவத் தொடையாரே - நஞ்சையுடைய பாம்பை
மாலையாக அணிந்தவரே! தண்டலையாரே!, இந்த நாட்டு அல்லாமல்
அச்சியிலே போனாலும் அகப்பை அரைக்காசதன் மேல் யார் கொள்வாரே
- இந்த நாட்டிலே அன்றி அச்சிக்குச் சென்றாலும் அகப்பை அரைக் காசுக்கு
மேல் விலை போகாது, (ஆகையால், எங்கே சென்றாலும்) கொச்சையிலே
பாலும் உண்டோ - வறட்டாட்டிலே பால் கிடைக்குமா?, கூத்தியர்கள்
தம்மிடத்திற் குணம்தான் உண்டோ - கூத்தாடும் மாதரிடம் நற்பண்பைக்
காண முடியுமா?, துச்சர் இடத்து அறிவு உண்டோ - தீயருக்கு அறிவு
உண்டாகுமா?, துச்சர் எங்கே போனாலும் துரை ஆவரோ - தீயர் எங்கே
சென்றாலும் தலைமைக் கேற்றவர் ஆவாரோ?

      (வி-ரை.) கூத்தியர் என்பவர் முற்காலத்தில் கூத்தாடுந் தொழிலையே
மேற்கொண்டு,  ஒழுக்கமின்றி  ஊருராகச்  சென்று  கொண்டிருந்தவர்.
அத்தகையாரையே இங்குக் கொள்ளுதல் சாலும். இந்நாளில் சில ஊர்களிற்
‘கூத்தாடிக்' குடும்பங்கள் உள்ளன. ‘துச்சர் துரை ஆவாரே' என்றது
அவரிடத்துத் துரைக்குரிய  பண்பிராது  என்றபடி.  துச்சர்  தலைவராக
இருத்தலைக் காண்கிறோமாகையால் அப் பண்பிராது என்றலே பொருத்தம்.
‘அச்சிக்குப் போனாலும் அகப்பை அரைக்காசுதான்' என்பது பழமொழி.